Wednesday, October 24, 2018

அழகின் விதிகள் :Law of Beauty

அழகின் விதிகள் :Law of Beauty- தோழர் காரல் மார்க்ஸ்
******************************** 
விலங்குகள் தாம் உயிர்வாழ்வதற்குச் தேவையான அளவிற்கே செயல்களில் ஈடுபடுகின்றன. பறவைகள் கூடு கட்டுகின்றன. எறும்புகள் புற்று அமைக்கின்றன. மனைதனும் செயற்படுகின்றான். ஆனால், அவன் உணர்வுள்ள ஜீவன். அவன் தன் வாழ்க்கைச் செயலையே தன் சித்தத்திற்கும் உணர்வுக்கும் உட்படும் பொருளாக ஆக்குகிறான். புற உலகின் பல்வேறு குணங்களை அதாவது புற உண்மைகளைக் கண்டறியும் அதே நேரத்தில் வெறும் உயிர்வாழ்வதற்கு வேண்டிய செயல்களுக்கான திறன்களுக்கும் அப்பால் தனுள் வேறு சில திறன்களும் அடங்கி உள்ளன. என்க் காண்கிறான். எனவே, தான் உயிர் வாழ்வதற்க்கான தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான செய்லகளோடு மட்டும் அவன் நின்று விடுவதில்லை. அந்தத் தேவையில்லாத பொழுதும், ஏன் அந்தத் தேவையில் இருந்து விடுதலை பெற்ற பின்னரே, அவன் உண்மையான படைப்புத் தொழிலில் ஈடுபடுகிறான். விலங்கு தன்னைத் தானே மறுபடைப்பு செய்கிரது. மனிதனோ இயற்கை முழுவதையும் மறுபடைப்பு செய்கிறான். விலங்கின் படைப்பு உடனேயே அதன் உடலிற்கு உரித்தாகிறது. மனிதனோ சுதந்திரமாக தன் படைப்பை எதிகொள்கிறான். விலங்கு தன் உயிரினத்டின் தேவையையும் குணத்தையும் பொருத்தே பொருட்களை ஆக்குகிறது. மனிதனோ எல்லா உயிரினங்களின் குணங்களுக்கும் ஏற்றப்படி எப்படி படைப்பது என்பதை அறிவான். எனவே, அழகின் விதிகளுக்கேற்பப் படைக்கிறான்.......(K.Marx., Economic and philosophic Manuscripts, 1844, progress publishers, 1977 pp 73-74)

அழகை உனர்தல் என்பது ஒரு பொருளின் வடிவமைதி, குறிப்பிட்ட பயன்பாட்டை மட்டுமல்லாது புற உலகின் மீது மனிதன் செயலாற்றுவதன் மூலம் ஏற்படும் புலனுணர்வுகளின் விழிப்பு, கண்டு பிடிப்பில் அவன் பெறும் ஆனந்தன் ஆகியவற்றையும் தனக்குள் கொண்டு உள்ளது என்பதை உணர்ந்து கொள்வதே ஆகும். அது மனிதனில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது: அவன் புற உலகை எதிர்கொள்ளும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

அழகு என்பது ஒரு பொருளின் நிறை, பரிமாணம், நிறம் போன்ற பெளதீக பண்பல்ல. மேலும், அழகை உணர்வது என்பது வெறும் தன்னிச்சையான அகவயமான செயல் அல்ல.மாறாக, அது மனிதனுக்கும் புற உலகிற்க்கும் இடையில் உள்ல ஒரு செயல் ஊக்கம் உடைய உரவே ஆகும் . அது பழங்கால சமூகத்தில் உழைப்பு கருவிகளுடன் இணைந்தே தோன்றியது. ஏனெனில், இக்கருவிகளும் கூட மனிதனுக்கும் புற உலகிற்கும் இடையே ஒரு செயல் உறவையே ஏற்படுத்துகின்றன. இப்படைப்புகளில் காணப்படும் அழகு சுட்டு காட்டுவது என்னவெனில் உழைப்பு கருவியை படைக்கும் செயல், அதை இய
க்குவதற்க்கு தேவையான திறன்களை மட்டுமல்ல, அவற்றிற்கும் அப்பால் அவனுக்குள் அடங்கிய வேறு திரன்களையும் விழித்தெழச்செய்துள்ளது என்பதைத்தான்.- ஸிட்னி பிங்கெல்ஸ்டெய்ன் , மார்க்சிய விமர்சகர்

Wednesday, October 17, 2018

மார்க்சிய-லெனினிய கட்சியின் முழுநேர போராளியின் கள அனுபவங்கள், கிராமத்து உழைக்கும் பெண்களின் பாடுகள் சிறுகதைகளாக மிளிர்கிறது


தோழர் சி. மதிவாணன் சிறுகதைகள்
1.மகளிர் காவல்
அவளின் காதில் அமிலத்தைப் பாய்ச்சியது போலிருந்தது எஸ்ஐயின் கேள்வி.
கன்னத்தில் அறைந்துசுற்றிவிட்டு, புடவையை உருவி தெருவில் விரட்டியது போலத் தோன்றியது மகாவுக்கு. குபுக்கென்று கண்ணில் நீர் வந்தது.
போடி.. போயி வெளியில ஒக்காரு’, என்ற எஸ்ஐயின் குரல் கேட்டதுதான் தாமதம், மகா கால்கள் தள்ளாட வெளியேறினாள். ஸ்டேஷனுக்கு வெளியே அரச மரமிருந்தது. அதன் நிழலில் பிள்ளையார் சிலையிருந்தது. அப்படியே உட்கார்ந்தவள் கண் மூடிக்கொண்டாள். தலையை கால் முட்டிகளின் இடையே பதித்துக்கொண்டாள். கட்டியிருந்த புடவை இல்லாததுபோல இருந்தது.
மகா எத்தனையோ சொல்லிப் பார்த்தாள். இந்த ஸ்டேஷனெல்லாம் வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தாள். ‘இப்புடியே இருந்திடறேன்என்று சொல்லிப் பார்த்தாள். இதனை அவள் மூன்று வருங்களுக்கு முன்பும் சொல்லியிருந்தாள். என்ன பிரயோஜனம்? இவள் சொல்லி யார் கேட்கிறார்கள்?
அது பொம்பள போலீஸ் ஸ்டேஷனாம்’. என்று சொல்லித்தான் அம்மா மகாவை அழைத்து வந்திருந்தாள். பெண்கள் பிரச்சனையைத் தீர்க்க பெண் போலீஸ் மட்டும் உள்ள காவல்நிலையமாம். பெண்ணுக்கு எந்தப் பிரச்சனையும் வராதாம்.
அந்த எஸ்ஐ இராட்சசி பெண்தானா என்று மகாவுக்குச் சந்தேகம். சேர் நிறைய உட்கார்ந்திருந்தார் அந்த பெண் எஸ்ஐ. மகா பத்து வரை படித்தவள். எஸ்ஐயின் சட்டையில் இருந்த பேஜ்ஜைப் படித்துப் பார்த்து பாண்டியம்மாள் என்று தெரிந்து வைத்திருந்தாள். ஆனால், மகாவுக்குப் பாண்டியம்மாளைப் பிடிக்கவில்லை. சேரில் ஆடிக்கொண்டே அந்த அம்மா பேசியது, பெண் தோற்றத்தில் ஓர் ஆண் உட்கார்ந்திருப்பதாகத்தான் மகாவுக்குத் தோன்றியது.
மகா என்ற மகாலெட்சுமிக்கு இப்போது பதினெட்டு வயது. பதினைந்து வயதில் கல்யாணம் முடிந்திருந்தது. பள்ளிக்குச் சென்று வந்தவளை பெண் பார்க்க வந்திருந்தார்கள். மகா அன்று பள்ளியிலிருந்து வர லேட். கோக்கோ விளையாட்டுப் போட்டியிருந்தது. மகாவுக்கு கோகோ மிகப் பிடிக்கும். உட்கார்ந்திருப்பளை எப்போது தொடுவார்கள் என்று காத்திருப்பாள். தொட்டவுடனே அம்பு போல நேர் கோட்டில் விரைந்து, எதிரி விலகக் காத்திருந்து, மான் போலத் தாவி, அப்புறம் எதிரி அவுட்டு ஆகியே இருக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த தொடுகை கிடைக்கும்போது வேகம் இன்னும் அதிகரிக்கும். நிதானம் அதைவிட அதிகரிக்கும். எதிரி ஆட்டம் காட்டும்போதெல்லாம் மகாவுக்கே தொடுகை கிடைக்கும். மகா அணிதான் ஜெயிக்கும். மகாவுக்கு அத்தனை வேகம், அத்தனை நிதானம்.
ஆனால், அவள் அம்மா தனத்திற்கு நிதானம் இல்லை. சொந்தத்தில் பெண் கேட்டு வந்திருக்கிறார்கள். 5 ஏக்கர் நிலம் இருக்கிறது. சிறுமலையில் கருப்புக் கோவிலின் அருகே மிளகு தோட்டமும் இருக்கிறது.. நடையாக நடக்கிறார்கள்இன்னும் இரண்டு பெண்ணிருக்கும் போது மாப்பிள்ளை கிடைத்தால் தள்ளிவிட வேண்டியதுதானே என்று மகாவின் அம்மா தனம் நினைத்தாள்.
மகாவின் அழுகையும் ஆர்ப்பாட்டமும் ஒன்றும் கதைக்காகவில்லை. வாடிப்பட்டி பெருமாள் கோவிலில் கண்ணன் மகாவுக்குத் தாலி கட்டினான்.
ஒரு பக்கம் மகாவுக்கு வேடிக்கையாக இருந்தது. ஊர்காரர்கள், உறவுக்காரர்கள், அப்புறம் இவளின் பத்தாம் வகுப்பு தோழிகள் எல்லாம் வந்திருந்தனர். பட்டுப் புடவை சரசரசவென்று சத்தம் போட்டது. இவளின் கையில் ஏதேதோ பரிசெல்லாம் கொடுத்தார்கள். இவளின் தோழிகள் அவ்வப்போது இவளைப் பார்த்து இரகசியமாகச் சிரித்தார்கள்.
வேடிக்கையெல்லாம் மாலை வரைதான். இரவு இவளை வீட்டின் உள்ளே விட்டு அம்மா கதவைச் சாத்திக்கொண்டாள். அந்த இரவையும் வலியையும் மகா இன்று வரை மறக்கவில்லை. கண்ணனைப் பார்க்கும்போதெல்லாம் கடித்துக் குதறுவதுதான் நினைவுக்கு வந்தது.
மறுநாள் அம்மாவிடம் சொல்ல நினைத்தாள். வெட்கம் பிடுங்கித் தின்றது. பக்கத்து வீட்டு செல்வியக்காவிடம் இவள் இஷ்டம்போல பேசுவாள். இவள் சொன்னதைக் கேட்ட செல்வியக்கா, ‘போடி இவளே.. ஆம்பளன்னா அப்டித்தான் செய்வாங்க’, என்று சொன்னதும் இவளுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.
அப்புறம் திருப்பூர் பயணம். கண்ணன் அங்கே மெஷின் மெக்கானிக்காக இருந்தான். அந்த தெருவுக்குச் செல்லும் வழி இன்று வரை மகாவுக்கு நினைவில் இல்லை. சாலை, தெரு, சந்து பொந்து என்று நுழைந்து அந்த வீட்டிற்குள் அவளை அழைத்துச் சென்றார்கள். அதற்குள் மகா நிறையத் தெரிந்து கொண்டிருந்தாள். ஊரில் இருந்த ஐந்து நாளில் செல்வி நிறைய சொல்லிக்கொடுத்திருந்தாள்.
அவளை அழைத்துச் சென்று திருப்பூரில் விட்ட அன்று மாலையே அம்மா புறப்பட்டுவிட்டாள். தானும் கண்ணனும் வாழ அந்த அறை போதும் என்றுதான் மகா நினைத்தாள். அப்புறம்தான் தெரிந்தது கண்ணனின் அம்மாவும் தம்பியும் கூட அந்த அறையில்தான் தூங்குவார்கள் என்றுஅந்த அறைக்கு அந்தப் பக்கம் சமையல் அறை. அவ்வளவுதான்.
சமையல் அறைக்குப் போய்விடலாம் என்று, பலமுறை கண்ணனிடம் சன்னமான குரலில், அவன் இரவுகளில் தொடும்போது மன்றாடியிருக்கிறாள். ஆனால், அவன் அதைக் கேட்டால்தானே.. அவளின் மனம் உணர்வற்றுப் போனதுஉடல் மரத்துப்போனது.. எப்போதும் தள்ளியே படுக்க ஆரம்பித்தாள்.
கண்ணன் மெஷின் ரிப்பேரான ஒவ்வொரு கம்பெனியாகப் போய்க்கொண்டிருப்பான். விசைத்தறி இருக்கும் ஊருக்கெல்லாம் போய்த் தங்கி வேலை பார்த்து வருவான். அவனுக்கு ஜோடியாக இன்னொரு மெக்கானிக். அவனுக்குச் சொந்த ஊர் வாடிப்பட்டி. அவனின் மனைவி ஊரில் இருந்தாள். பதினைந்து நாளுக்கு ஒரு முறை அவன் ஊருக்குப் போய் மனைவிக்குப் பணம் கொடுத்து வருவான். அவன் போக முடியாதபோது கண்ணன் போவான். போனால், இரண்டு மூன்று நாள் தங்கிவிட்டுத்தான் வருவான். கண்ணனும் அவன் நண்பனும் வேலையை மட்டுமல்ல மனைவியையும் பகிர்ந்துகொள்கிறார்கள் என்று தெரிந்தபோது மகா துடித்துப்போனாள். மனதுக்குள் சிறுத்துப்போனாள். அம்மா வீட்டுக்குப் புறப்பட்டுப்போனாள்.
ஆறு மாதம் ஆனபின்பும் கண்ணன் அழைக்க வரவில்லை. ஏன் வரவேண்டும்? இளமையும் இளமைக்கான துணையும் இருக்கும்போது ஏன் வரவேண்டும்?
ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்துப் பேசியும் கண்ணன் ஒப்புக்கொள்ளவில்லை. தாலியை அறுத்துக்கொடுத்துவிட்டுப் போய்க் கொண்டேயிருங்கள் என்று சொல்லிவிட்டு எழுந்துபோய்விட்டான்.
அப்புறம்தான் இந்த அனைத்து மகளிர் காவல்நிலைய பஞ்சாயத்து ஆரம்பித்தது.
எத்தனை நேரம் மகா பிள்ளையாருக்கு முன்பு அப்படியே உட்கார்ந்திருந்தாள் என்று தெரியாது. கண்ணீர் மட்டும் நிற்கவேயில்லை. தோலை உரித்து வெய்யிலில் போட்டது போல உணர்ந்தாள். கிழிந்த நைட்டி போட்டுக்கொண்டு மகாவின் ஊரில் சுற்றும் பைத்தியக்காரி போல தன்னை உணர்ந்தாள். ஆனால், பைத்தியக்காரி கொடுத்து வைத்தவள். தன் உடல் பற்றிய உணர்வு அந்த பைத்தியத்துக்கு இல்லை. மகாவுக்கோ அந்த எஸ்ஐ ஸ்டேஷனில் வைத்து தன்னைத் தோலுரித்துவிட்டதாகப் பட்டது. அந்த எஸ்ஐயின் கழுத்தைக் கடித்துக் குதறவேண்டும் என்று தோன்றியது.
எழுந்திரும்மா’, என்ற சண்முகம் தோழரின் குரல் கேட்டு மகா நிமிர்ந்தாள். தோழரின் தலைக்கு மேலே அரச மர இலைகளின் வழியே சூரியன் கண்களைக் கூச வைத்தான். அப்படியே திரும்பி தோழரைப் பார்த்து உட்கார்ந்துகொண்டாள்.
சண்முகம் இவளுக்கு எதிரேயிருந்த கல்லில் அமர்ந்தார். சண்முகம் என்றாலே வெள்ளை வேட்டி வெள்ளை சட்டைதான் நினைவுக்கு வரும். மகா சின்ன பெண்ணாக இருந்த காலத்தில் சிவப்புத் துண்டு போடுவார். இப்போதெல்லாம் போடுவதில்லை. ஏனென்று கேட்டால், ‘மேக் அப் போடாதீங்க.. வேலையில செவப்பு இருக்கட்டும்’, என்று புதிதாக வந்த மாவட்ட செயலாளர் சொல்கிறார் என்று பதில் சொல்வார். ஆனபோதும், இப்போதெல்லாம் சிவப்புப் பையொன்றைத் தோளில் மாட்டிக்கொள்ள ஆரம்பித்திருந்தார். அதில் புத்தகங்கள், பேப்பர் என்று நிறைந்திருக்கும்.
அந்த அம்மா கேட்ட கேள்விக்கு உஷாத் தோழர் இருந்திருந்தாங்கன்னா, அந்த அம்மா தொப்பி கழன்றிருக்கும்.. நாங்களும் சும்மா உடல, கத்திக் காதறுத்துட்டுத்தான் வந்தோம்’, என்று மகாவை ஆறுதல் படுத்த ஆரம்பித்தார். தனம் அருகாமையில் நின்றிருந்தாள். தனத்திற்கு மகளின் முகத்தைப் பார்க்கத் தெம்பில்லை. ரோட்டைப் பார்ப்பவள் போலத் திரும்பி நின்று கொண்டிருந்தாள்.
தோ பாரு மகா.. ஸ்டேஷனுக்கு பணத்தை அள்ளி விட்டுருக்கானுங்க.. அந்தக் கண்ணன் ஊருல இல்லன்னு சத்தியம் பன்றாரு அம்மாக் கட்சி கவுன்சிலரு. அம்மாக் கட்சிக்காரங்க எப்போதும் அய்யாக்களுக்குத்தான் சப்போர்ட் பன்னுவானுங்க.. பத்தாதுன்னு ரெண்டு தொத்த வக்கீலுங்கள அழைச்சிகிட்டு வந்திருக்கானுங்க.. இப்ப பேசி காரியம் நடக்காது.. எஸ்பி ஆபீசுக்குப் போறம்னு மெரட்டிட்டு வந்துட்டோம்..எதுக்கும் செயலாளரையும் பார்த்துட்டு, அப்புறம் போவம்’, என்றார் சண்முகம்.
மகாவுக்கு எதுவும் புரியவில்லை. செத்துப் போவது நல்லது என்று மட்டும் தோன்றியது. அப்புறம் அவர்கள் பஸ் நிறுத்தம் போனது, பஸ்சைப் பிடித்துக் கட்சி ஆபீஸ் போனது எதுவும் கவனத்தில் இல்லை.
கட்சி ஆபீசில் அந்தத் தோழர் கம்யூட்டரில் எதோ வேலை பார்த்துக்கொண்டிருந்தார். இவர்கள் நுழைந்ததும் திரும்பி அமர்ந்தார். அந்த அறையில் மூன்று பிளாஸ்டிக் சேர்கள் மட்டுமே இருந்தன. வந்தவர்கள் எல்லாம் அமர்ந்துவிட மகா தரையில் அமர்ந்தாள்.
இரும்மா..’ என்றபடி எழுந்து சென்ற தோழர் பக்கத்து அறையில் இருந்து ஒரு சேரை இழுத்து வந்து போட்டார். போலீஸ் ஸ்டேஷனில் கால் கடுக்க நின்றிருந்த மகாவுக்கு உட்காரத் தோன்றியது. ஆனாலும், தயக்கமாக இருந்தது. எல்லோருக்கும் சமமாக உட்கார முடியுமா என்று யோசித்தாள்.
சும்மா உட்காரும்மா.. இது நம்ம ஆபீசு’, என்று சண்முகம் வற்புறுத்தி உட்கார வைத்தார்.
சொல்லுங்க சண்முகம்..’, என்று தோழர் ஆரம்பித்தார். சண்முகம் பிரச்சனையைச் சொல்லி முடித்தார். எந்த வார்த்தையும் பேசாமல் தோழர் கேட்டுக்கொண்டிருந்தார். கேட்டு முடிப்பதற்குள் இரண்டு சிகெரட்களைப் புகைத்திருந்தார்.
சற்று நேரம் மௌனம் நீடித்தது.
ஒனக்கு அந்தக் கண்ணனோட சேர்ந்து வாழ ஆசையா?’, என்று மகாவைக் கேட்டார் தோழர்.
மகா தலையசைத்தாள்.
சேர்ந்து வாழனுமா?... வேண்டாமா? வாயைத் தொறந்து சொல்லுத் தாயி.. தலைய எப்புடி ஆட்டுறன்னு யாருக்கு என்னத் தெரியும்?’, தோழரின் கண்கள் மகாவைப் பார்த்தபடியே இருந்தன.
மகா மெலிந்த உடம்புக்காரி. நல்ல உயரம்.. கருகருவென்று முடி. மாநிறம். அவள் உதட்டைச் சுழித்தபடி யோசித்தது இன்னும் பள்ளிச் சிறுமியாக இருக்கிறாள் என்பதைச் சொல்லியது.
வாழனும் தோழர்’, என்று மெல்லிய குரலில் சொன்னாள் மகா.
ஏன்?’
மகாவிடம் வெகு நேரம் பதிலில்லை. தலைகுனிந்தபடியே இருந்தாள். கை விரலில் முந்தனை முனையை சுருட்டுவதும் விரிப்பதுமாக இருந்தாள்.
ஏன்இவனை வுட்டுட்டு இன்னொருத்தனைக் கட்டிகிட்டா நல்லாருக்காதுன்னு யோசிக்கிறியா?’ தோழர் எந்தத் தயக்கமும் இன்றி கேட்டார்.
ஆமாந்தோழர்’, என்றாள் மகா பளிச்சென்று.
தோழர் சிறிது நேரம் யோசித்தார். ‘கல்யாணம் பண்ணிக்கிறது கெணத்துல உழற மாதிரிதான். எல்லா ஆம்பளையும் சனியன்தான்ரெண்டாவது ஆம்பளன்னா ரொம்பப் பெரிய சனியன்னு யோசிக்கிறா..’ என்று தனக்குள் பேசுவது போல பேசினார்.
அப்புறம், ‘சரி, கண்ணனுக்கு ஏறக்குறைய பத்து ஏக்கர் நெலம் இருக்கு.. அப்புறம் ஏனவன் திருப்பூர் வேலைக்குப் போனான்?’, என்று தனத்தைப் பார்த்துக் கேட்டார்.
கண்ணனுக்குக் கல்யாணம் செய்து வைக்க வந்திருந்த அப்பா அப்புறம் வரவில்லை. பையனின் போக்கு சரியில்லை என்று விலக்கி வைத்துவிட்டாரம். கண்ணனுக்கு ஆதரவாக அம்மா இருக்கிறாள் என்பதால் கண்ணனின் அம்மாவையும் விலக்கி வைத்து விட்டாராம். அந்த விவரங்களை தனம் விளக்கமாகச் சொன்னாள்.
அது சரி கண்ணன் இவள வேணாமுன்னு சொன்னா, யாரு நஷ்ட ஈடு தர்றது? அவனோட சொத்துல பங்கு கேக்க வேண்டியதுதான்’, என்றார்.
மகாவுக்குப் புரியவில்லை. கண்ணனோடு மறுபடியும் சேர்ந்த வாழ முடியாதா? அப்புறம் பணத்தை வாங்கிக் கொண்டுவிட்டால் வாழ்க்கை இனித்துவிடுமா என்ன?
மகளிர் காவல் நிலையம்னு பேசிறதெல்லாம் சும்மா.. எல்லாருகிட்டயும் காசு புடுங்கிறது சாதா போலீசு. பெண்களை பெண்கள் மெரட்டி காசு புடுங்கிறது மகளிர் போலீசு.. அவ்வளவுதான் வித்தியாசம்பெண்கள் சங்கமா ஆகாட்டுனா எதுவும் நடக்காது.. நம்ம பெண்கள் அமைப்பாளர் வேற இப்ப ஊருல இல்ல..’, என்றவாறு தோழர் யோசிக்க ஆரம்பித்தார்.
அப்புறம் முடிவு செய்தவராக, ‘சரி.. நாளைக்கிக் காலைல மகளிர் காவல் நிலையம் போயிட்டு அந்த பாண்டியம்மா எஸ்ஐ வந்துடிச்சின்னா என்னக் கூப்பிடுங்க’, என்று முடித்துக் கொண்டார்.
மறுநாள் காலையில் போன் போட்ட இருபதாவது நிமிடத்தில் தோழர் காவல்நிலையம் வந்து இறங்கினார். இவர்கள் வணக்கம் சொன்னார்கள். பைக்கை நிறுத்தியவாறு கையை உயர்த்தியவர், மகாவைக் கைகாட்டி அழைத்துக்கொண்டு நிலையத்திற்குள் நுழைந்தார். எதிரே ஒரு பெண் காவலாளி உட்கார்ந்திருந்தார். தோழர் நின்றவாறு இன்ஸ்பெக்டர் அறைக்குள் பார்த்தார்.
அம்மா இல்ல’, என்றார் அந்தக் காவலாளி.
எங்க போயிட்டாங்க..?’, என்றார் தோழர்.
கூடங்குளம் ஸ்பெஷல் டூட்டி’, என்றார் அந்தப் பெண் காவலாளி.
தோழர் சிரித்தார்.. ’பெண்கள் பிரச்சனையெல்லாம் ஊருல முடிஞ்சு நல்லா இருக்காங்கன்னு அரசாங்கம் நெனக்கிதோ? கூடங்குளந்தான் இப்போ பிரச்சனையோ?’, என்றார் அந்தக் காவலாளியைப் பார்த்து. பாவம் அந்தப் பெண் காவலாளி.. பேந்தப் பேந்த விழித்தார்.
தோழர் எஸ்ஐ அறைக்குத் திரும்பினார். தோழர் நுழைந்தது முதல் பாண்டியம்மா தோழரையே கவனித்துக்கொண்டிருந்தார். தோழர் நேரே சென்று எஸ்ஐக்கு முன்னுள்ள சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
எங்க பெண்கள் அமைப்புத் தோழர் சென்னை போயிருக்காங்க.. அதனால நா வந்தேன். புரோக்கர்னு நெனச்சிக்காதிங்க..’, என்றார்.
பாண்டியம்மாவுக்கு சற்று குழப்பம் வந்தது. வழக்கம்போல சிவப்புத் துண்டுடன் வரும் ஆளில்லை என்று தெரிந்தது.
இந்தப் பொண்ணுக்கு 15 வயசுல கல்யாணம் நடந்திருக்கு.. அதாவது குழந்தைத் திருமணம்..’
சார்அது பழைய கத’, என்று பாண்டியம்மாள் குறுக்கிட்டார்.
தோழர் வலது கையை உயர்த்திநிறுத்துஎன்பது போல பிடித்துக் கொண்டு, ‘தெரியும்.. அது அந்தக் கண்ணன் செஞ்ச மொதல் தப்பு. அதுக்கே சட்டம் நடவடிக்கை எடுத்திருக்கனும்’, என்றார்.
பாண்டியம்மாவுக்குப் புரியவில்லை. மூன்று வருடம் கழித்த பின்னர் எப்படி நடவடிக்கையென்று யோசிக்க ஆரம்பித்ததார்.
இப்போ இவளை வெரட்டி விட்டுட்டு இன்னோரு பொண்ணோட தொடர்பு வைச்சிருக்கானாம்.. வாழறதுக்குப் பணங் கேக்குறான்னு சொல்றாங்க.. இப்புடி அடுத்தடுத்த தப்பு செய்யற ஆம்பளய காப்பாத்தன்னு பெண்கள் போலீஸ் ஸ்டேஷன் வைச்சிருக்கிங்களா..?’
பாண்டியம்மா பதில் சொல்லவில்லை.
திருப்பூர்ல இவங்க வாழ்ந்த ரூமு என்ன சைசுன்னு தெரியுமா? அந்த ரூமுல எத்தனை பேரு இருப்பாங்கன்னு தெரியுமா?’ என்றவர் சற்று நிறுத்தினார்.
ஒங்க குவார்ட்டர்சுல எத்தன ரூமு?’. மறுபடியும் சற்று நேரம் நிறுத்தினார்.
அப்புறம் இவ படுக்காததால வெரட்டிட்டான்னு சொன்னிங்களாமே? ஒங்களுக்கு கொழந்தையத் தெரியுமா? பொண்ணுங்களத் தெரியுமா?’
பாண்டியம்மா உறைந்து போயிருந்தார். இந்த ஆள் பச்சை பச்சையாகத் தன்னைக் கேள்விக் கேட்கிறான் என்று தெரிந்தது. ஆனால், மனது சுட்டது. அந்த அம்மாவின் தலைக்கு மேலிருந்த பெண் முதலமைச்சர் படம் வெட்கமேயில்லாமல் சிரித்துக்கொண்டிருந்தது.
சரிஅவன புடிச்சு உள்ள போடனும்தொத்த வக்கீல் புரோக்கருங்க சொன்ன மாதிரி கேட்டிங்கன்னாஒங்க ஸ்டேஷன் மானம் போயிடும்அடுத்த வாரம் ஆர்ப்பாட்டம் நடக்கும்பொம்பளைங்க ஸ்டேஷன்தானே இது? அதனால பொம்பளங்க ஆர்ப்பாட்டம்..’, என்ற தோழரின் குரலில் கிண்டல் இருந்தது.
அப்புறம் அவர் எழுந்து புறப்பட்டார்.
அடுத்த நாள் மகாவும் தனமும் கட்சி ஆபீஸ் போனார்கள். தோழரிடம் நடந்தைச் சொன்னார்கள். நேற்று இரவே கண்ணனும் கண்ணனின் அக்காவும் கைதாம். பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று ஆள் வந்திருக்கிறதாம். பாண்டியம்மாள் எஸ்ஐ அனுப்பி வைத்தாரம்.
தோழர்சரி’, என்றார்.
இல்லத் தோழர் பேசிக்கலாம்னா.. அவனுங்க 30 ஆயிரம் தாரேங்கிறானுங்க.. ஒங்க கிட்ட கேக்காம
என்னத்தைக் கேக்குறது.. கட்சி தலையிட்டதால அந்த ஆளுங்க அரெஸ்ட்.. ஆனா.. பாண்டியம்மாவோட வருமானமுல்ல ஏறிகிட்டு போவுது..’ என்று தோழர் யோசித்தார்.
மகாவின் முகத்தைப் பார்த்தபடி இருந்தார். இந்தப் பெண்ணின் வாழ்க்கையை உத்திரவாதம் செய்வதா, பாண்டியம்மாவுக்கு வேட்டு வைப்பதா என்று யோசித்தார்.
சரி.. அவனோட அப்பன் நெலத்துல ஏக்கர் என்ன வெல போகும்?’, என்று கேட்டார்.
தனத்துக்குப் புரியவில்லை.. ஆனாலும், 'ஏக்கரு ரெண்டு மூனு லெட்சம் போகுந்தோழர்.. ஆனா வெசாரிக்கனும்’, என்றாள்.
அந்தத் தொகைய கேளுங்க.. அதவுட முக்கியமா, சாயங்காலம் நம்ம கிராமத்துப் பெண்களைக் கூப்பிட்டு ஒக்கார வைங்க.. நான் வரேன்’, என்றார்.
மகாவுக்கும் தனத்துக்கும் தோழர் ஏதோ திட்டம் போடுகிறார் என்று புரிந்தது. இனம் புரியாத நம்பிக்கையுடன் புறப்பட்டார்கள்.
தோழரின் திட்டம் மிகச் சுருக்கமானது. திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம்.. ஆனால், மதுரையில். பெண்கள் காவல் நிலையத்தின் ஆண்கள் ஆதரவுப் போக்குக்கு எதிராக..
ஆர்ப்பாட்டம் நடந்தது. பேச்சி, செல்வி என்று நிறைய பெண்கள் பேசினார்கள். பெண்கள் காவல் நிலையத்தில் தங்களுக்கு என்ன நடந்தது என்பதையெல்லாம் புட்டுப்புட்டு வைத்தார்கள்.
இரண்டு நாட்கள் கழித்த பின்னர் மகா வேலை செய்யும் தேங்காய் நார் கம்பெனிக்கு தனம் ஓடி வந்தாள். மகளைக் கையோடு அழைத்துகொண்டு வீட்டுக்குச் சென்றாள். போகும் வழியிலேயே பதட்டத்துடன், கண்ணனின் அப்பா தேடி வந்திருப்பதைச் சொன்னாள்.
மகாவின் தலையெல்லாம் தேங்காய் நாறு தூசு படிந்திருந்தது. மட்டையை அள்ளி மெஷினுக்குள் கொட்டும் வேலை அவளுக்கு. காற்றில் எங்கும் தூசு இருக்கும். வேலைக்குச் சேர்ந்த போது மிகவும் சிரமப்பட்டாள். அப்புறம் பழகிவிட்டது.
எதற்கு வந்திருக்கிறார் அந்த ஆள் என்று மகாவுக்குப் புரியவில்லை. மறுபடியும் கண்ணனோடு வாழக் கூப்பிடுவாரோ? என்ன நடந்து கொண்டிருக்கிறது?
தனத்தின் வீடு, தென்னந்தோப்பில் உள்ள ஒரு குடிசைதான். அவளின் அப்பா அந்தத் தோட்டத்திற்கு காவலாளி. மாதம் இருநூறு ரூபாய் சம்பளம். அதற்கப்புறம் விழுகின்ற மட்டைகளைப் பொறுக்கி விற்றுக்கொள்ளலாம். அவர் வேலைக்குச் சேர்ந்தபோது இருபது ரூபாய் சம்பளம். இருபது வருங்கள் கடந்துவிட்டன.
தென்னந்தோப்புக் குடிசையின் முன்னே கயிற்றுக்கட்டிலில் கண்ணனின் அப்பா உட்கார்ந்திருந்தார். அவருடன் ஊர் பெரிய மனிதர் ஒருவர் வந்திருந்தார். தனம், மகா, அவளின் அப்பா எல்லோரும் கீற்றுகளைத் தரையில் போட்டு அமர்ந்தனர். மோட்டார் ஓடும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்ருந்தது. குடிசைக்குள் அடை காத்த கோழி குபுக் குபுக் என்று ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது.
இன்னும் யார் வரனும்?’ என்று பேச்சைத் துவங்கினார் ஊர் பெரியவர்.
கட்சிக்காரரு வருனும்ல.. அவங்க இல்லாட்டி எம்பொண்ணு வாழ்க்கை ஒன்னுமத்துப் போயிருக்கும்ல’, என்றார் மகாவின் அப்பா.
யார் அந்தக் கட்சிக்காரர் என்று பெரியவர் கேள்வி கேட்க, தனம் விளக்க ஆரம்பித்தாள். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே சண்முகம் சைக்கிளில் வந்துவிட்டார்.
அவருக்கென்று ஒரு கல்லை உருட்டிப் போட்டார் மகாவின் அப்பா.
கோச்சிக்காதீங்க.. திடீர்னு போனு போட்டிங்க.. அப்ப நான் ஆபீசுல இருந்தேன்’, என்று ஆரம்பித்தார்.
கண்ணனையும், அவன் அம்மாவையும் கைது செய்து விட்டார்களாம். இன்னும் நாலைந்து பேருக்கு பெயில் வாங்க அலைகிறார்களாம். கிடைக்கவில்லையாம். போலீஸ் தேடுகிறதாம். வேறுவழியில்லை; பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று புறப்பட்டு வந்திருக்கிறார்களாம். கதைச் சுருக்கத்தைக் கேட்ட தோழர் சண்முகம், ‘அப்ப என்ன செய்லாம்னு சொல்லுங்கய்யாஎன்றார் கண்ணனின் அப்பாவைப் பார்த்து.
அவர் தொண்டையைச் செறுமிக்கொண்டார். அமைதியான பேர்வழி என்பது போல தெரிந்தது.
எனக்கு இந்த நெலம வந்துருக்கக் கூடாதுஆகாதப் புள்ளையப் பெத்தா தேடாத எடம் தேடித்தா போகனும்’, என்றவர் தான் பெற்ற மகனைத் திட்டித் தீர்த்தார்.
மகாலெட்சுமிய நாங்கொற சொல்ல மாட்டேன். அது பச்ச மண்ணு..’ என்றார். ‘அதனால, எம் பையங்கிட்ட பேசிட்டேன். எதுவும் கதைக்காகல.. பேசமா அவனுக்குப் போற பங்குல ரெண்டு ஏக்கர மகா பேருக்கு எழுதிடரேன்.. நீங்க வைச்சிக்கிட்டாலும் சரி. இல்லை வித்து பணமாக் கேட்டிங்கன்னா வித்துக் கொடுக்கறேன்.. என்ன மட்டும் சிக்கல்லேந்து எடுத்துவுடுங்க.. அதுபோதும்’, அவரின் குரல் உள்ளொடுங்கி ஒலித்தது. வேட்டி மடிப்பிலிருந்து வெற்றிலையை எடுத்து தயார் செய்ய ஆரம்பித்தார்.
மறுபடியும் மௌனம் சூழ்ந்தது.
தோழர் சண்முகம், ‘சொல்லு மகா.. ஒனக்குச் சம்மதமா?’, என்றார்.
தோழரே நா அப்பாகிட்ட ஒரு வார்த்தை பேசிக்கிறனே?’ என்றாள் மகா. இத்தனை நாளுக்குள் செயலாளர் அவளுக்கு அப்பாவாகியிருந்தார்.
சண்முகத்தின் செல்லில் இருந்து தோழரை அழைத்தாள் மகா. தோழர் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். மகாவுக்குச் சம்மதம் என்றாள் முடித்துக்கொள்ளலாம் என்றார்.
அது சரிப்பா.. எப்புடி எங்க மாமா இப்புடி தேடி வந்தாரு.. என்ன செஞ்சிங்க..?’, என்று சந்தேகத்தைக் கேட்டாள்.
நா என்ன செஞ்சேன்எல்லா நீங்கதான். ஒங்க ஆர்ப்பாட்டம் முடிஞ்சு எங்கிட்ட டிபார்ட்மெண்ட்லேந்து கேட்டாங்க.. பாண்டிம்மா பணம் வாங்கினதையும், கைது பண்ணிட்டு பேசிப் பிரிஞ்சுக்குங்கன்னு பேரம் பேசுனதையும் சொன்னேன். அவ்வளவுதான். சமயத்துல எங்கோ அடிச்சா எங்கோ பல்லு போகும்பாங்களே அது நடந்துடிச்சிஅவ்வளவுதான்’, என்றார்.
சரிப்பா.. நானு அம்மாகிட்ட கொடுக்கிறே’, என்றவளை தோழர் தடுத்தார்.
இன்னொரு சேதி தெரியுமா.. பாண்டிம்மா எஸ்ஐ சஸ்பெண்டு.. அனேகமா இனி இந்த ஸ்டேஷன்ல போட மாட்டாங்க
சூப்பரப்பா’, என்றாள் மகா குதூகலத்துடன். போனை அம்மாவிடம் கொடுத்தவளுக்கு தலை கால்புரியவில்லை.
தொப்பிய கழட்டிட்டம்ல’, என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

2.கொள்ளை
ஈஸ்வரி மட்டையைப் பிண்ணிக்கொண்டிருந்தாள். காலையிலிருந்து இரண்டு கீற்று கூட முடியவில்லை. குத்து வைத்து எத்தனை நேரம் வேலை பார்ப்பது? அடிவயிற்றில் வலி பொறுக்கமுடியவில்லை. எழலாம் என்றாலோ காலும் இடுப்பும் ஒத்துழைக்கவில்லை. கைகளைத் தரையில் ஊன்றி எழப்பார்த்தாள்.
அடிவயிற்றுக்கும் கீழே வலித்தது. அந்த இடத்தில் அரிப்பெடுத்தது. நசநசவென்றிருந்தது. பாழாய் போன வெள்ளை மறுபடியும் வந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டாள்.
ஈஸ்வரிக்கு வயது முப்பத்தியைந்துதான். ஆனாலும் அவளைப் பார்க்கும் யாரும் அவளை நாற்பது நாற்பத்தைந்து வயதுக்காரி என்றுதான் நினைப்பார்கள். காதோரத்தில் கனத்த நரை ஓடியிருந்தது. எலும்புக்கூட்டுக்கு புடவை சுற்றிதுபோல அவளிருந்தாள். உட்பாவாடையும் புடவையும் நழுவி கீழே இறங்கும் அளவுக்கு இடுப்புக்குக் கீழே இளைத்திருந்தாள்.
பின் என்னதான் ஆகும்?
இரண்டு பிள்ளைகள். பெரியவனுக்கு 21 வயதாகிறது. இரண்டாவது பெண். 18 வயது. அடுத்தடுத்த குழந்தைகளைக் கலைத்துவிட்டாள். எப்போதாவது தனிமையில் சோர்ந்து அமர்ந்திருக்கும் போது கணக்குப் போட்டுப் பார்ப்பாள். ஆறு அல்லது ஏழு குழந்தையைக் கலைத்திருக்கிறாள். ஒவ்வொரு முறை கலைக்கும்போதும் உடல் ஒடுங்கிப்போகும். இரத்தம் வற்றிப் போகும். ஆனால், வேலைகள் மட்டும் அப்படியே நீளும்.
காலை எழுந்தவுடன் வாசலில் மாடு கட்டியிருக்கும் இடத்தைச் சுத்தம் செய்து தீவனம் வைக்க வேண்டும். கல்லுடைக்கப் போகும் கணவனுக்கு சமைத்து, சாப்பிட வைத்து கொடுத்தனுப்ப வேண்டும். அப்புறம் பிள்ளைகளை அனுப்பி வைக்க வேண்டும். அதற்கப்புறம், அள்ளிப் போட்டுக்கொண்டு தூக்கு வாளியைத் தூக்கிக்கொண்டு ஓட வேண்டும்.
பெரியாற்றுக் கால்வாயில் தண்ணீர் வந்துவிட்டால் பத்து இருபது நாளைக்கு கருப்பட்டி துவங்கி ஆண்டிப்பட்டி வரை வேலைகிடைக்கும். களையெடுப்பு, நாற்று நடவு என்ற முப்பது முப்பத்தைந்து நாள் கூட ஓடும். அதற்குள் சம்பாதித்துவிட வேண்டும் என்ற வெறியில் ஓடுவாள். அப்புறம், உடம்புக்கு காய்ச்சல் வந்து சீதாலட்சுமி டாக்டருக்குக் காசு கொடுப்பாள்.
அது இல்லையேன்றால் தென்னை மட்டை வாங்கி கீற்று முடைவாள். மட்டைக்கும் பஞ்சம் வந்துவிட்டால், ஓடை வேலைக்குப் போவாள். அந்த அறுபதுக்கு யார் போவார்கள் என்று நொந்துகொண்டே போவாள். இதற்கிடையில் மாட்டுக்குப் புல் அறுத்துக்கொண்டும் வரவேண்டும்.
இப்படியாக இவளின் பொழுது முடியும்போது தொலைக்காட்சியில் நாடகங்களெல்லாம் முடிந்திருக்கும். எப்போதாவது ஒரு நாள் கணவனின் கை இவள் மேல் ஊரும். ஒத்துழைக்க வேண்டும்.
அவனின் மனைவி இறந்த பின்னர் பாறையில் வேலை பார்த்த பழக்கத்தில் இவளைச் சேர்த்துக்கொண்டான். இரண்டு பிள்ளை பிறந்த பின்னர் பேசுவது கூட இல்லை. எப்போதாவதுகஞ்சி என்னாச்சிடி’, என்று உறுமல் கேட்கும். அவ்வளவுதான்.
அவன் கை ஊர்ந்தால் நிச்சயம் பிரச்சனைதான். கலைக்க வேண்டிவரும். அவள் எத்தனையோ முறை சாடை மாடையாகச் சொல்லிப் பார்த்தாள். அவன் தயராக இல்லை. ஆண்மை போய்விடுமாம். அப்புறம் கடைசிமுறை கலைக்கும்போது டாக்டரே இவளுக்குக் கருத்தடை செய்து வைத்தார்.
எழுந்து நின்ற ஈஸ்வரிக்குக் காலெல்லாம் நடுங்கியது. அடிவயிற்றில் வலி தீப்பிடித்தது போல பரவியது. மெல்ல நடந்துபோய் திண்ணையில் படுத்துக்கொண்டாள்.
அலங்காநல்லூர் போகும் பஸ் சத்தம் கேட்டு எழுந்தாள். அந்த டாக்டரம்மா வந்திருக்கும் என்று நினைத்தவளாக மினி பஸ் பிடிக்கப் புறப்பட்டாள். துணைக்கு மகள் காளியையும் அழைத்துக்கொண்டாள்.
டாக்டரம்மா சொன்னதைக் கேட்டவளுக்கு தலையில் இடி இறங்கியது போல இருந்தது. கண்ணில் இறங்கிய கண்ணீரை மறைத்துக்கொண்டு 500 ரூபாய் ஒரே தாளாகக் கொடுத்துவிட்டு மகளுடன் திரும்பினாள்.
வீட்டுக்கு வந்தபோது மணி 9 ஆகிவிட்டது. இவளுக்குப் பசிக்கவில்லை. நல்ல வேளையாக, காலையில் மிச்சமிருந்ததைச் சாப்பிட்டுவிட்டு கணவன் படுத்திருந்தான். சாராய வாடை அடித்தது. இனி எழுந்திருக்க மாட்டான். ஒரு பிரச்சனை முடிந்தது. பையனைக் காணவில்லை.
இவளை அறியாமல் அழுகை வந்தது.
வலிக்குதாம்மா?’ என்றாள் காளி.
ஆமாம். வலித்தது. போட்ட ஊசியும் கொடுத்த மாத்திரைக்கும் கேட்காமல் வலியெடுத்தது. ஆனால், ஈஸ்வரி அதனால் அழவில்லை.
டாக்டர் சொன்னதைச் சொன்னாள். கர்ப்பப் பையை எடுக்க வேண்டும் என்று சொன்னதை மகளிடம் சொன்னாள். பின் வீட்டு சீதாக் கிழவி வந்து அமர்ந்திருப்பதை அப்போதுதான் கவனித்தாள்.
போச்சுஎன்று நினைத்துக்கொண்டாள். சீதா கெழத்துக்குத் தெரிந்தால் அது ஊருக்கே தெரிந்த மாதிரி.
அத எடுத்துட்டா அப்புறம் என்ன பொம்பளடி நீயி’. என்றாள் சீத்தாப் பாட்டி. ஈஸ்வரிக்கு ஈரக்கொலை அறுந்தது போல இருந்தது. அழுதாள். வாய்விட்டு அழுதாள்.
எதுக்குடி இப்புடி அழுவுற’, என்று குரல் கொடுத்தாள் முத்தம்மா. அவர்கள் கீற்று முடையும் இடத்திலிருந்து குரல் வந்தது. ஈஸ்வரி பதில் சொல்லவில்லை.
உரத்துச்சொல்ல உடலில் தெம்பில்லை. மனதிலும் தெம்பில்லை.
முத்தம்மா எழுந்து வந்தாள். திண்ணைக்கு அருகே நின்று கொண்டு இவளைப் பார்த்தாள். ‘சொல்லுடி.. அடக் கழுதசொல்லிட்டு அழுதாத்தானே என்னான்னு தெரியும்’, என்றாள்.
முத்தம்மா பக்கத்து வீட்டுக்காரி மட்டுமல்ல, தலைவியும் கூட.
ஈஸ்வரி சொல்வதற்கு முன்பு கெழவி முந்திக்கொண்டாள். ‘ஈசுக்குக் கர்ப்பப்பைய அறுத்துடனுமாம்’.
யாருடி சொன்னா?’, என்றாள் முத்தம்மா.
சீதாலட்சுமி டாக்டரு சொன்னாங்களாம்.. போயிருந்தோம்’, என்று காளியிடமிருந்து பதில் வந்தது.
அடிப்பாதகத்தி.. எத்தனை மொற சொன்னேன்டி நானு.. கலைக்காதடி.. கலைக்காதன்னு எத்தனை மொறச் சொன்னே... இப்ப ஆப்பரேஷனு ஆச்சின்னா எத வித்துடி செஞ்சிப்ப?’ என்று கோபப்பட்டாள் முத்தம்மா.
முத்தம்மாவுக்கு ஈஸ்வரியின் கதை முழுக்க அத்துபடி. கர்ப்பப் பை ஆப்பரேஷன் என்றால் அந்த டாக்டரம்மா பத்து ரூபாய்க்கு மேல் கேட்கும் என்றும் முத்தம்மாவுக்குத் தெரியும்.
சரி நான் பொறப்படறேன்’, என்று தோழரின் குரல் கேட்டது. அவரும் கீற்று முடையும் இடத்தில்தான் இருந்திருப்பார் போல.
அட இரு தோழருஈசு அழுதுகிட்டு கெடக்கிறா.. நீ போறங்கற’, என்று முத்தம்மா திரும்பிப்பார்த்து குரல் கொடுத்தாள்.
தோழர் எழுந்து வந்தார். ஈஸ்வரி வாரிச்சுருட்டிக்கொண்டு, முணகிக்கொண்டே எழுந்து உட்காரப் பார்த்தாள்.
தோழர் திண்ணையில் அமர்ந்துகொண்டார். குண்டு பல்பு வெளிச்சத்தில் அவரின் முன்னந்தலை வழுக்கைத் தெரிந்தது. இவளையே பார்த்துக்கொண்டிருந்தார்.
சரி டாக்டர் என்ன சொன்னாங்க’, என்று ஈஸ்வரியைப் பார்த்து கேட்டார்.
ஸ்கேன் எடுத்ததையும், கர்ப்பப் பையில புண் என்றும் டாக்டர் சொன்னதைச் சொன்னாள்.
சரி.. ஸ்கேனக் காட்டு’, என்றார் தோழர்.
ஸ்கேனு கொடுக்கல’, என்றாள் ஈஸ்வரி ஈனசுரத்தில்.
சொல்லி முடிப்பதற்குள் தோழர் கேட்டார், ’ஏன் கொடுக்கல?’.
கம்பியூட்டர்ல காட்னாங்க.. ரொம்ப மோசமா இருக்குன்னு சொன்னாங்க’, என்றாள் ஈஸ்வரி.
ஓஹோ.. அப்புடியா?’ தோழர் குரலில் கிண்டல் இருந்ததாகப் பட்டது.
ஒனக்கு கம்யூட்டர் காட்டி வௌக்கம் கொடுத்தாங்களாங்காட்டியும்’, என்றார் தோழர். அவர் உதடு பிரியாமல், வழக்கம்போல, சிரிக்கிறார் என்று தெரிந்தது.
மருந்து சீட்டைக் காட்டு’, என்றார்.
மருந்து சீட்டெல்லாம் இல்லை. டாக்டர் கிளீனிக்கிலேயே கடையும் இருந்தது. நேரடியாக மருந்துதான் கொடுத்தார்கள் என்பதைச் சொன்னாள். அப்புறம் தோழர் அந்த கேரி பேக்கைத் திறந்து, கண்ணாடி போட்டுக்கொண்டு குண்டு பல்பு வெளிச்சத்தில் மாத்திரைகளைத் திருப்பித் திருப்பிப் படித்துப் பார்த்தார்.
ஆண்டி பயாடிக், பெயின் கில்லர்.. சத்து மாத்திரை’, என்றவர் முழம் உயரத்துக்கு இருந்த டானிக் பாட்டிலைப் பார்த்தவர் வாய்விட்டு சிரித்தார்.
என்னா தோழர்.. ஒனக்கு எங்க பாடு கிண்டலா இருக்கா?’, என்று முத்தம்மாள் பொய்க் கோபத்துடன் கேட்டாள்.
லூசுங்களா.. லூசுங்களா..’, என்றார் தோழர். லூசு என்பது அவருக்குப் பிடித்த வார்த்தை.
லூசுங்களா.. இது எதுக்க இருக்கிற பாண்டியன் தென்னந் தோப்புல இருக்கிற கீர.. அத சாறாக்கி.. ஒங்ககிட்ட’, என்றவர் டானிக் பாட்டில் அட்டையைப் பார்த்துவிட்டு, ‘நூத்து நாப்பது ரூபா புடுங்கிட்டாங்க.. அந்த டாக்கடரம்மாவுக்கு எப்படியும் இந்த வகையில நாப்பது ரூபா வரவுஎன்று சிரித்தார்.
அப்புறம் எழுந்தவர் முத்தம்மாவைத் தனியே அழைத்துச் சென்றார்.
இதல்லாம் ஆம்பள பேசுனா தப்பாச் சொல்வானுங்க.. ஊருல.. நாங்கேக்குறத ஈசுகிட்ட கேட்டு சொல்லுஎன்றவர் முத்தம்மாவிடம் சில கேள்விகளைச் சொல்விட்டு பைக்கருகே சென்று சிகெரெட் பிடிக்கத் துவங்கிவிட்டார்.
முத்தம்மா திரும்பி வந்து ஈஸ்வரியிடம் கேட்டதைத் தோழரிடம் சொன்னாள்.
சரிதான்.. நாளைக்கு ஆறு மணிக்கு அப்புறம் ஈச கூப்பிட்டுட்டு வா. மந்த கிட்ட வேல்முருகன் டாக்டர் இருக்காரு.. அவருகிட்ட காட்டுஈசுக்கு கர்ப்பப்பையெல்லா எடுக்க வேண்டி வராது’, என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
முத்தம்மா சொன்னதை ஈஸ்வரியால் நம்ப முடியவில்லை. அவளுக்குத் தோழரைத் தெரியும். ரொம்பப் படித்தவர். ஆனால், டாக்டர் பொய் சொல்வாரா? கம்யூட்டருமா பொய் சொல்லும்?
மறுநாள் மாலையில் தோழர் சொன்னபடி மந்தைக்குப் போய் சேர்ந்தாள். துணைக்கு முத்தம்மாவை அழைத்து வந்திருந்தாள். போன் போட்டு தோழரையும் வரச்சொல்லும்படி முத்தம்மாவை நச்சரித்தாள்.
தோழர் வந்து சேர்ந்தவுடன் மூவருமாக டாக்டர் வீட்டுக்குச் சென்றார்கள். டாக்டர் வீட்டு வராந்தாதான் கிளினிக். வழக்கம்போல மூலையில் மருந்து கடையிருந்தது. பென்ஞ்சில் உட்கார்ந்து கொண்டனர். இரண்டு மூன்று பேர் காத்துக்கொண்டிருந்தனர்.
மருந்துக் கடைக்காரரிடம் தோழர் ரொம்பப் பழகியவர் போல ஏதோ பேசிக்கொண்டிருந்தார். ஏதோ ஒரு மருந்து பேரைச் சொல்லி இப்போது என்ன விலை என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு மேல் ஈஸ்வரிக்குப் புரியவில்லை.
இவர்கள் முறை வந்தபோது தோழர் முன்னே சென்று நின்றுகொண்டே ஏதோ இங்கிலீசில் பேசினார். அப்புறம் வெளியே போய்விட்டார்.
அப்புறம் டாக்டர் இவளின் அடிவயிற்றை அழுத்திப் பார்த்தார். லேடி டாக்டர் கொடுத்த மாத்திரைகளைப் பார்த்தார். தோழர் முத்தம்மாவை அனுப்பி கேட்கச் சொன்ன கேள்விகளையெல்லாம் டாக்டரும் கேட்டார்.
ஒன்னுக்குப்போற எடம் வீங்கிட்டு வலிக்குதுன்னு சொல்றா டாக்டரு’, என்று முத்தம்மா கூடுதல் விவரம் சொன்னாள்.
யூரின் டெஸ்ட், பிளட் டெஸ்ட் எடுத்தாங்களா?’, என்று கேட்டார்.
இல்ல டாக்டரு.. நேர ஸ்கேன் எடுத்தாங்களாம்’, என்றாள் முத்தம்மா முந்திக்கொண்டு.
அந்த டாக்டர் தலையைக் குனிந்துகொண்டு முகத்தை மறைத்துக்கொண்டு பின் தலையைச் சொறிந்துவிட்டுக்கொண்டு விறுவிறுவென்று எழுதினார்.
இந்த மாத்திரையெல்லாம் சரியா சாப்பிடுங்க.. நல்லா சாப்பாடு சாப்பிடுங்க.. சரியாயிடும்.. சாதாரண இன்பெக்ஷன்தான்.. சரியாயிடும்.. ஆகலன்னா.. யூரின் டெஸ்ட், பிளட் டெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் பார்க்கலாம்’, என்றார்.
இல்ல டாக்டரு.. கர்ப்பப் பைய எடுக்கனும்னு டாக்டரு சீதா..’, என்று ஆரம்பித்த முத்தம்மாள் முடிப்பதற்குள் டாக்டர் குறுக்கிட்டு,‘அதெல்லா வேணாம்மா.. அப்புடி ஒன்னும் பெரிசா இல்ல.. புரியலன்னாஒங்க தோழரக் கேளு’, என்றபடி இவர்களை அனுப்பி வைத்தார்.
மருந்துக் கடையில் 130 ரூபாய் வாங்கிக்கொண்டார்கள். ‘டாக்டருக்கு?’ என்று ஈஸ்வரி இழுத்தபோது, ‘எல்லாஞ் சேத்துத்தாம்மா’, என்றார் மருந்துக் கடைக்காரர்.
இப்புடி ஒரு டாக்டரா.’ என்றிருந்தது ஈஸ்வரிக்கு. நேற்று 500… அதற்கு முன்பு 500 என்று அந்த லேடி டாக்டருக்குக் கொட்டிக்கொடுத்திருந்தாள். தவணைக்கு எடுத்து வைத்திருந்தப் பணத்தை டாக்டருக்குக் கொடுத்திருந்தாள். ஆனால், சரியாகவில்லை.
அவர்கள் வெளியே வந்தபோது தோழர் சிகெரெட் பிடித்தபடியே நின்று கொண்டிருந்தார்.
ந்தா தோழர்.. இப்புடி சிகெரட் புடிச்சன்னா இதே டாக்டருகிட்ட நீ வரணும்’, என்று முத்தம்மா தோழரை மிரட்டினாள்.
அவர் பதிலேதும் சொல்லாமல்சரி வரட்டா’, என்று புறப்பட்டார்.
இரு தோழரே ஒரு டீ சாப்பிட்டுப் போ’, என்று முத்தம்மா அவரை நிறுத்தினார். ‘ கே’, என்றார் தோழர்.
டீயின்னா எப்பவும் மாட்டேன்னு சொல்லமாட்டியே’, என்று முத்தம்மா கிண்டல் செய்தாள்.
ஓசி டீய விட முடியுமா’, என்றார் தோழர் பதிலுக்கு.
அப்புறம் யோசித்தபடியே, ‘முத்தம்மா.. போலீஸ் ஸ்டேஷன்ல காசு கேட்டா குடுப்பியா’, என்று கேட்டார்.
இப்ப கொடுக்க மாட்டேன். ஆனா.. கட்சிக்கு வரதுக்கு முன்னடி கொடுத்திருக்கே’, என்றவள், ‘எனக்கு அப்ப வெவரம் தெரியதுல்லஎன்று சேர்த்துக்கொண்டாள்.
அதாம் பிரச்சனையே.. ஒங்களுக்கு வெவரம் தெரியாதுன்னுதா போலீசும் கொள்ளையடிக்குது.. அந்த டாக்டரம்மாவும் கொள்ளையடிக்குது..’, என்றபடி நடந்தார். மூவரும் பேசிக்கொண்டே நடந்தார்கள். தோழர் நிறைய பேசினார். அரசு மருத்துவத் துறையை பணக்காரர்களுக்கு தானம் செய்துவிட்டது என்று துவங்கி பேசிக்கொண்டே நடந்தார்.
தோழர் சொல்வதெல்லாம் அவர்களுக்குப் புதிதாக இல்லை.. ஆனால், பழகிப்போன விஷயங்களுக்கு என்ன பொருள் என்று புரிந்தது.


3..சொல்ல முடியாத பிரச்சனை


காளிக்கு வயிற்றைக் கலக்கியது. வேறு ஒன்றும் பிரச்சனையில்லை. இயற்கை உபாதைதான். இருட்டு சூழும் நேரத்தில் வயிற்றைக் கலக்கும். ஒரு நாள் அடைத்து வைத்ததெல்லாம் வெளியேறும் நேரம் அது.
அவளது வீட்டில் கீற்றால் அடைத்த மறைப்பு உண்டு. அங்குதான் குளிப்பாள். அது மாலை ஆறு மணிக்கு. அப்போதுதான் கீற்று முடையும் வேலை முடியும். கருவை மரத்தின் கீழே அவளும் இன்னும் சில பெண்களும் கீற்று முடைவார்கள். எரிக்கும் வெயிலுக்கு கருவை உதவாது. வேர்த்துக் கொட்டும். ஆனால், அதுதான் வீட்டின் அருகே வளர்ந்திருந்தது. அதன் நிழலில் இருப்பது பெண்ணுக்கு பெரும் உதவி. ஒன்றுக்கு இருக்க வேண்டிய தேவை அடிக்கடி வராது. அப்படியே வந்தால் கீற்றுத் தடுப்பில் ஒதுங்கிக் கொள்ளலாம். வேர்வையில் நனைந்த உடம்பை மாலையில் அங்குதான் குளிப்பாட்டுவாள். அப்புறம்தான் வயிற்றைக் கலக்கும். கலக்கினால் போய் விட முடியுமா? அதற்கு இருட்டு வர வேண்டும்.
அவள் வாழ்ந்த கிழக்குத் தெருதான் ஊரின் கடைசித் தெரு. இரண்டு பக்கம் ஊர். ஒரு பக்கம் ஓடை. மற்றொரு பக்கம் சுடுகாட்டுக்குச் செல்லும் சாலை. சாலைக்கும் இவள் வீட்டின் பின்புறத்திற்கும் இடையில் இருக்கும் தோட்டமும் புறம்போக்கும்தான் இவர்களின், அதாவது இவள் சாதிப் பெண்களின் கழிப்பிடம். தென்னந்தோப்பு, கருவை முள் என்று கலப்படமான இடம். ஆண்கள் சுடுகாட்டுச் சாலையில் நடந்து ஓடைக்குப் போவது கண்ணுக்குத் தெரியும் இடம். இவள் சாதி ஆண்கள் ஒற்றையடிப் பாதையில் நடந்து இவர்களைக் கடப்பார்கள். ஓடைக்கோ ஒடையைத் தாண்டியோ வெளிக்கியிருக்கப் போவார்கள்.
குளித்து முடித்தவள் வேகமாக அந்த இடத்தை நோக்கி நடந்தாள். இன்று நேரமாகிவிட்டது. 7 மணிக்குக் கூட்டம். தோழர் வருவார். அந்த கூட்டம் துவங்கும் முன்பு வயிற்றுப் பிரச்சனையைச் சரி செய்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் கூட்டத்தில் உட்கார முடியாது.
அவள் வீட்டின் பின்புறம்தான் அந்த இடம். அங்கு இருந்து, காது கொடுத்துக் கேட்டால், கீற்று முடையும் இடத்தில் நடக்கும் கூட்டத்தில் பேசுவதெல்லாம் கேட்கும். தோழர் வந்துவிட்டார் என்று தெரிந்தது.
சீக்கிரம் உட்காருங்கம்மா.. இன்னிக்கு ரெண்டு கூட்டம், நொச்சிப்பட்டிக்கும் போவனும்’, என்ற தோழரின் குரல் கேட்டது.
அய்யோ என்றிருந்தது இவளுக்கு. இவளைத் தவிர எல்லோரும் வந்து விட்டார்கள் என்பதை அங்கேயிருந்து வந்த பேச்சு சப்தத்தில் உணர்ந்தாள். போகவேண்டும். ஆனால், அதுஅந்த பாழாய் போன வயிற்றுக்குத் தெரியவில்லை. பொறுமிக்கொண்டேயிருந்தது.
எல்லாம் வந்துட்டாங்களா?’, என்ற தோழரின் குரல் கேட்டது.
வந்துட்டாங்க’, என்று வெள்ளையம்மாள் பதில் சொன்னதும் கேட்டது.
‘..ம்.. காளியைக் காணோம்..?’ என்றார் தோழர். காளிதான் கிளையின் முக்கியமான நபர் என்று தோழர் நினைப்பது காளிக்குத் தெரியும்.
காளி.. தோப்புக்குப் போயிருக்கா’, என்ற சடச்சியின் குரல் கேட்டது.
தோப்புக்கா..? இந்த நேரத்திலா? மட்டைத் தூக்கவா?’ என்றார் தோழர்.
அவரின் பரிவு இவளுக்கு இதமாக இருந்தாலும், எரிச்சலாக வந்தது. வெட்கக் கேடாக இருந்தது. அவசரமாக எழுந்தாள்.
சரி.. ஆரம்பிக்கலாம்.. தோழர் காளி வந்து சேந்துகிட்டும்’, என்று தோழர் கூட்டத்தை ஆரம்பித்தார்.
இவள், தெருவிளக்கு வெளிச்சம் படாமல் மறைந்து கீற்றுத் தடுப்புக்குள் சென்று சுத்தம் செய்துகொண்டு, சத்தம் எழுப்பாமல் போய் கூட்டத்தின் கடைசி நபராக உட்கார்ந்துகொண்டாள்.
வயிறு இன்னும் அடங்கவில்லை. என்ன சாப்பிட்டோம் என்று யோசித்தாள். அப்புறம் கவனத்தை மாற்றிக்கொண்டு தோழர் பேசுவதைக் கேட்க ஆரம்பித்தாள். வாய்ப்பில்லை என்றால் வயிறு அடங்கிக்கொள்ளும் என்பது காளிக்குத் தெரியும். பெண்ணாகிய இவள் வேறென்னதான் செய்ய முடியும்? இவளுக்குப் பழகிவிட்டது.
தோழர் என்பது அவர்களின் கிளைப் பொறுப்பாளர். ஏரியா கமிட்டியிலிருந்து வருகிறார். ஆள் வாட்டசாட்டமாக இருப்பார். ஆனால், குழந்தை போல பேசுவார். சின்னப் பிள்ளைகள் எப்போதும் அவரைச் சுற்றிக்கொள்ளும்.
சரி.. கிராமத்துல வேறென்ன பிரச்சன?’, என்றார் தோழர்.
சொல்லியே ஆக வேண்டும் என்று காளிக்குத் தோன்றியது. ஆனால், எப்படி சொல்வது? அதுவும் ஓர் ஆணிடம்?
காளியெல்லாம் தீண்டத்தகாத சாதிக்காரர்கள். அது என்னவோ தெரியவில்லை. தோழர் இவர்கள் இடத்தில் தவமா தவமிருந்து கட்சிக் கிளையை உருவாக்கியிருந்தார். அவர் பி.சி. தெருவுக்கெல்லாம் போவதில்லை. ஏனென்று இவள் யோசித்திருக்கிறாள். ஆனால் புரிந்ததில்லை.
காளி 12 வரை படித்தவள் தீண்டாமை என்பது குற்றம் என்று துவங்கி பாடப்புத்தகத்தில் எழுதியிருந்ததைப் பார்க்கும் போதெல்லாம் இவளுக்கும் கோபம் வரும்.. ‘அப்புறம் ஏண்டா உட்டு வச்சிருக்கிங்க?’ என்று மனதுக்குள் கத்துவாள்.
இவள் பள்ளர் சாதி. பள்ளியில் படிக்கும் போது கள்ளர் சாதிப் பையன்கள் இவளைப் பற்றி, இவள் சாதியைச் சேர்ந்த மற்ற பெண்களப் பற்றிப் பேசுவதெல்லாம் இவளுக்குக் கேட்கும். ஆனால், வெளியே சொல்ல முடியாது. அப்படிப் பேசுவார்கள் பாவிகள்.
அதெல்லாம் பரவாயில்லை என்று இப்போது தோன்றியது. அந்த நிலத்தை காவேரியம்மா விற்றுவிட்டாள். அவரும் கள்ளர் சாதிதான். அந்த அம்மா அடாவாடிப் பேர்வழி, வீட்டுக்காரர் எப்போதோ செத்துப்போய்விட்டார். ஆனால், மூன்று ஆண் பிள்ளைகள். பிள்ளைகளை காவிரியம்மாதான் வளர்த்தாள். வீட்டுக்காரரைப் போலவே அடவாடி செய்து விவசாயம் செய்து பிள்ளைகளை வளர்த்தாள். எல்லா சாதிக்காரர்களின் பாத்திரம் பண்டம் முதல் அனைத்தையும் அடகு பிடிப்பாள். அடகு பிடித்த பாத்திரங்களைப் போட்டுவைக்கவென்றே அவளுக்குத் தனியே ஒரு வீடு இருக்கிறது. வீட்டுக்காரர் பிடித்து வைத்திருந்த புறம்போக்கில் தென்னையை நட்டுவைத்தாள். அது இவளின் சாதிக்காரப் பெண்களுக்குப் பிரச்சனையில்லை. இருட்டின பின்தானே ஒதுங்கப் போக வேண்டும். கருவையைக் காட்டிலும் தென்னை நல்லது என்று நினைத்தார்கள். இருட்டும் இருக்கும். முள்ளும் இருக்காது என்று நினைத்தார்கள்.
பத்துப் பதினைந்து வருஷம் போனபின்பு அதுதான் பிரச்சனை ஆயிற்று.
யாரோ முகம் தெரியாத ஆட்கள் வந்து தென்னையை வெட்டினார்கள். புறம்போக்கில் இருந்த தென்னையையும் காவிரியம்மாவின் பட்டா நிலத்தில் இருந்த தென்னையையும் வெட்டினார்கள். இவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.
அப்புறம் புறம்போக்கை மறித்து மண் கொட்டினார்கள். இவர்களுக்குப் பதைபதைத்தது. என்ன நடக்கிறது?
காளிதான் விசாரித்தாள். புறம்போக்கையும் சேர்த்து எல்லா நிலத்தையும் திண்டுக்கல்காரருக்கு, காவிரியம்மா விற்றுவிட்டாளாம்.
பிளாட் போட்டு விற்பது வாங்கியவரின் நோக்கமாம். சாலையை ஒட்டி கிழக்குப் பக்கத்தில் விற்கப்பட்ட நிலத்தில் நுழையலாம். ஆனாலும், இடத்தை வாங்கிய திண்டுக்கல்காரர் மேற்குப் பக்கத்தில் உள்ள புறம்போக்கில் பாதை போடுகிறார். பட்டா இடத்தில் பாதை போட்டால் மனை எண்ணிக்கை குறையும் என்று திண்டுக்கல்காரருக்குக் கவலையாம்.
அந்த சாலையில்தான் ஆண்கள் நடந்து போய் ஓடையில் வெளிக்கி இருப்பார்கள். ஆண்கள் கடக்கும்போதெல்லாம் பெண்கள் எழுந்து நின்று கொள்வார்கள். சாலை, கள்ள சாதிப் பெண்கள் உட்காரும் இடம். ‘இது நானில்லைஎன்பது போல முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள். இருட்டாக இருந்தாலும் வெட்கம் இருக்கிறதல்லவா? அவர்களின் நிலை இவள் சாதிப் பெண்களை விட மோசம். பல சாதி ஆண்களும் அந்த சாலையின் வழிதான் ஓடைக்கு ஒதுங்கப் போவார்கள்.
காளியின் சாதிப் பெண்கள் தென்னந்தோப்பைப் பயன்படுத்துவார்கள். அல்லது அவர்கள் சாதி சாமி அம்புக்குத்தும் புறம்போக்கைப் பயன்படுத்துவார்கள். அந்த சாலையில் இருந்து பாதை போட்டு மனை போட்டுவிட்டால் அப்புறம் எல்லாம் வீடாகிவிடும். அப்புறம் பெண்கள் எங்கே ஒதுங்கப்போவது? ஆண்களுடன் போட்டிப் போட்டுக்கொண்டு ஓடையில் போயா உட்காரமுடியும்? இதுதான் இரண்டு நாட்களாகப் பெண்களின் பிரச்சனை.
இந்தப் பிரச்சனையை தோழரிடம் சொல்லலாமா என்று காளி யோசித்தாள்.
அதற்குள் தோழர் மற்ற விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார். மன்மோகன்சிங், நூறுநாள் வேலைக்குக் குறைவாகப் பணம் ஒதுக்கியது, ஜெயலலிதா பால் விலையேற்றியது என்று ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார். வழக்கமாக தோழர் பேசுவது காளிக்குப் பிடிக்கும்.. ஆனால், இன்று ரசிக்கவில்லை.
கூலி குறையுது, சாப்பாடு குறையுது என்பதுதான் அவர் சொல்லும் செய்தி. வெளிக்குப் போக வாய்ப்பில்லாவிட்டால் சாப்பாடு குறைவது நல்லதுதானே என்று காளி யோசித்தாள். அவஸ்தை குறையுமல்லவா?
ஏதோ ஒரு போரட்டம் பற்றி தோழர் பேசிக்கொண்டிருந்தார். காளிக்கு அதிலெல்லாம் மனசு போகவில்லை. வயிறு பொறுமிக்கொண்டேயிருந்தது.
இரவில் ஒதுங்குவது பெண்களுக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. அது பழகிவிட்டது. ஆனால், வயிறு பொறுமினாலோ அல்லது பேதியாகிவிட்டாலோ பிரச்சனைதான். அது பகல் என்றால், செத்துப்போய்விடலாம் என்று தோன்றும் அளவுக்கு அவஸ்தையாக இருக்கும். பாவாடையிலேயே போய்க்கொண்டு பாவாடையிலேயே துடைத்துக்கொள்ள வேண்டும். என்ன மனுஷப்பிறவி என்று தோன்றும். மாட்டுக்கு உள்ள சுதந்திரம் கூட பெண்ணுக்கு இல்லையென்பது தெரியும்.
கூட்டம் முடியும் நேரம். இதுவரை காளி ஒன்றும் பேசவில்லை.
காளி.. என்னம்மா பிரச்சன? நீ பேசவேயில்ல?’ என்று தோழர் கேட்டார்.
காளிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால், பொறுமும் வயிறு அவளிடம் சொன்னது… ‘வாயைத் தொறடி நாய’, என்று.
என்ன வெட்கம் இருக்கிறது? ஓடைக்கு ஒதுங்கப் போகும் ஆண்கள் தென்னந்தோப்பு நடைபதையைக் கடக்கும் போதெல்லாம் பி.ட்டி வாத்தியார் ஒன் டூ திரி சொன்னது போல எழுந்து அமர்ந்திருக்கிறாள். என்ன வெட்கம் வேண்டிக்கிடக்கிறது?
சாப்பிடறது கூட எங்களுக்குப் பிரச்சனையில்ல.. ஆனா..’
சும்மா இருடி‘, என்று வெள்ளையம்மா அதட்டினாள்.
அப்ப நீ சொல்லு’, என்று காளி முடித்துக்கொண்டாள்.
சற்று நேரம் அமைதி. அந்தக் கிளையில் எல்லோரும் பெண்கள்தான். தோழர் மட்டும்தான் ஆண். ஆனால், அவர் ஆண்தானா என்று காளிக்குச் சந்தேகம் வரும். பெண்ணைப் பார்ப்பது போல அவர் என்றும் அவளைப் பார்த்ததில்லை. அவளை மட்டும் அல்ல, எவளையும் பார்த்ததில்லை. அவருடைய கண்கள் நேராகக் கண்களைப் பார்க்கும். மாராக்கு விலகி அமர்ந்திருக்கும் பெண்ணைக் கூட அவருக்குத் தெரியாது. ‘சரியான பொட்ட’, என்று இவள் சில நேரம் யோசித்திருக்கிறாள்.
இவரிடம் சொல்லிவிடலாம் என்று தோன்றியது. சொல்லிவிட்டாள்.
சடச்சி இடையில் புகுந்துச்சூ..’ என்றாள்.
அப்ப நீ சொல்லு’, என்று காளி வாயை மூடிக்கொண்டாள். அப்புறம் மௌனம். தோழர் குறுக்கிட்டுமேல சொல்லுங்க தோழர் காளி’, என்றவுடன் பேச ஆரம்பித்தாள்.
தோழர் தலையைக் கவிழ்ந்துகொண்டு உட்கார்ந்திருந்தார். அவரின் முகத்தைக் கைகள் தாங்கிக்கொண்டிருந்தன. அந்த நேரம் பார்த்து கரண்ட்டும் போய்விட்டது.
தோழர் நிமிரவேயில்லை. நேரம் போய்க்கொண்டிருந்தது.
வெள்ளையம்மா போய் மண்ணெண்ணெய் விளக்கு கொண்டு வந்தாள். தோழர் நிமிர்ந்தார். செல்லை அழுத்தி மணியைப் பார்த்துக்கொண்டார்.
நீங்க நொச்சிப்பட்டிப் போக நேரமாயிடுச்சா?’, என்று சடச்சி கேட்டாள். எப்படியாவது இந்த வெட்கக் கேட்டிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று அவள் யோசித்தாளோ..?
தோழர் நிமிர்ந்து அனைவரையும் பார்த்தார். ‘மன்னிக்கனும்.. எங்க கிராம ஆய்வுல இது வல்ல.. இந்தப் பிரச்சனை வல்ல.. நாங்கெல்லாம் ஆம்பிளைதானே’, என்று ஏதேதோ பேசினார். அவர் தடுமாறுவது அவருக்கே புரிந்தது போல, ஒரு சிகெரெட்டை எடுத்து பற்றவைத்துக்கொண்டு, ஆழ்ந்து புகையை இழுத்தார்.
இதுல யோசிக்க எதுவும் இல்ல.. தலித்துகளோடு வாழ்வாதரத்தைப் புடுங்கிறதும் வன்கொடுமைதான்.. ஒங்க பயன்பாட்டுல இருந்த பொறம்போக்கு ஒங்க வாழ்வாதாரம்தான். சாதியச் சொல்லித் திட்டுறது மட்டுமில்ல, வாழ்வாதாரத்தைப் புடுங்கறதும் வன்கொடுமைதான்’, என்றார், அவர் யோசிக்கிறாரா பேசுகிறாரா என்று காளிக்குப் புரியவில்லை. தோழர் மறுபடியும் புகையை உள்ளே இழுத்துக்கொண்டார்.
அப்புறம் அவர் பேசியதை அந்தப் பெண்கள் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். காலையில் குட்டி யானை- அதாவது டாட்டாவின் சின்ன லாரி-பிடிக்க வேண்டும். கலெக்டர் ஆபீஸ் போக வேண்டும். இரண்டு இரண்டு பேராகப் போய் கலெக்டர் அறைக்குள் நுழைந்துகொண்டு பிரச்சனை செய்ய வேண்டும். இதுதான், தோழர் சொல்ல, அவர்கள் ஒப்புக்கொண்ட திட்டம். பெண்கள் மத்தியில் நிறைய பயம் தெரிந்தது. வெட்கம் தெரிந்தது.
ஏண்டி.. என்னடி வெட்கம்? ஆம்புள போவும்போது மொகத்தை திருப்பிக்கிறம்ல? பாவாடையில போயிட்டு காலு ஒட்ட தெருவுல நடக்கிறம்ல.. அப்புறம் என்ன வெக்கம் கேக்குது?’, என்று காளி இரைந்தாள்.
தோழர் நொச்சிப்பட்டி போகவில்லை. நிறைய பேசினார்கள். அன்று இரவு அங்கேயே தங்கினார்.
மறுநாள் காலையில், நான்கு குட்டி யானைகள் நிறைய பெண்கள் கலெக்டர் ஆபீசுக்கு புறப்பட்டுப் போனார்கள்..
அவர்களோடு காளி செல்ல முடியவில்லை. பொறுமிய வயிறு பொங்கித் தீர்த்துவிட்டது. கடுமையான பேதி. அந்த பகலை அவள் கடத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.
மாலையில் ஊர் கூட்டம் நடந்தது. தோழர் வந்திருந்தார். ஆனால், வெள்ளையம்மாள்தான் நடந்ததைச் சொன்னாள். கலெக்டரைப் பார்க்க நான்கு பேரைத்தான் அனுமதித்தார்களாம். தோழர் நான்கு பேரை அழைத்துக்கொண்டு, கண்ணைக் காட்டிவிட்டுச் சென்றாராம். அதனைப் புரிந்துகொண்ட பெண்கள், அந்த வழி, இந்த வழி என்று புகுந்து கலெக்டர் அறையை நிரப்பிவிட்டார்களாம். சடச்சிதான் போட்டு உடைத்திருக்கிறாள். கலெக்டர் முகம் செத்துவிட்டதாம். நாளையே தாசில்தார் வருவார். ஆக்கிரமிப்பை அகற்றுவார் என்று சொன்னாராம்.
அதற்கிடையே பத்திரிகையாளர்கள் வெளியே திரண்டிருந்த பெண்களைப் பார்த்து கேள்வி கேட்க மறுநாள், எல்லாப் பத்திரிகையிலும் பிரச்சனை நாறியது. இவர்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் இடத்தைப் போல.
சொன்னபடி தாசில்தார் வந்தார். சர்வேயர் படையே வந்திருந்தது. ஒரு லாரி நிறைய போலீஸ் வந்திருந்தது. காவிரியம்மா வீடு பூட்டிக்கிடந்தது. அவரையோ அவரது மகன்களையோ பார்க்க முடியவில்லை.
சாமி அம்பு குத்தும் புறம்போக்கு இடத்தின் அளவு இரண்டு மடங்கு அதிகமானது. முயல் கட்டும் இடம் மூன்று மடங்காகியது. பாதைக்காக கொட்டப்பட்டிருந்த மண்ணை ஜேசிபி அள்ளி அகற்றியது. கல்லை ஊன்றிய சர்வேயர்கள், இளநீர் சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டனர். கூடமாட உதவிக்கு நின்றது இவள் தெரு ஆட்கள்தான். கள்ள சாதி ஆட்கள் வேடிக்கைப் பார்த்ததோடு சரி.
இவள் யோசித்தாள். ‘ஒதுங்குறது எல்லாருக்கும் பொது.. ஆனா.. பள்ளச் சாதி ஆளுங்களத்தவிர ஏன் வேற யாரும் அளக்கும்போது வரல?’.
அப்புறம் ஒரு வாரம் எந்தப் பிரச்சனையும் இல்லை. எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போதுதான் பிரச்சனை வந்தது.
காவிரியம்மா வீடு திறந்திருந்தது. அப்போதே காளி யோசித்தாள். ‘இந்த அம்மா எங்க போயிருந்தது? இன்னிக்கு ஏன் வந்துச்சி?’
பத்து மணி வாக்கில் பதில் கிடைத்தது. இரண்டு லாரிகளில் மண் வர, ஒரு ஜேசிபி அவற்றை நிரவி பாதை சமைத்தது. காவிரியம்மா வீட்டு வாசலில் அண்ணா கைகாட்டும் கொடி பறந்த கார் நின்று கொண்டிருந்தது.
இவளுக்குப் புரிந்துவிட்டது. தோழரை அழைத்தாள்.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட தோழர் ஒரு கேள்வி கேட்டார். ‘பெண்கள் என்னா செய்யிறாங்க?’.
எல்லாரும் கூட்டமா இருக்காங்க தோழர்.. நீங்க வரணும்
வரேன்.. அதுக்கு முன்னாடி ஸ்டேஷனுக்கு போன் போட்டுட்டு, என்னா சொல்றாங்கன்னு சொல்லு’, என்றார் தோழர்.
அவர் சொன்னபடியே செய்தாள். தோழரின் மூளையைப் புரிந்து கொள்ளமுடியாது என்று காளிக்குத் தெரியும். போன் போட்டு முடித்து விட்டு தோழரை அழைத்தாள்.
அவர் போனை எடுத்தபோது நிறைய வண்டி சப்தம் கேட்டது. தோழர் வந்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்தது.
தோழர் நேரடியாக கேள்வி எழுப்பினார். ‘ஸ்டேஷன்ல என்ன சொன்னாங்க?’ இவள் சொன்னாள். ‘ஸ்டேஷன்ல ஆளேயில்லையாம்’.
எல்லாரும் சாணாம்பட்டி திருவிழா பந்தோபஸ்த்து போயிருக்கிறார்கள் என்று சொன்னதைச் சொன்னாள்.
அவர் சிரித்தார். ‘நானும் தாசில்தாரைக் கூப்பிட்டேன்.. அந்த அம்மா லீவுல இருக்காங்களாம். ஏதாவது புரியுதா?’.
அப்ப என்ன செய்யிறது?’, என்று கேட்டாள் காளி பதட்டத்துடன்.
பதிலுக்கு தோழர் கேட்டார், ‘என்ன ஆயுதம் கையில இருக்கு?’
வூட்ல அருவா இருக்கு தோழர், தென்ன மட்ட வெட்டுற அருவா
அதெல்லாம் இவனுங்களுக்குத் தேவையில்லை, வௌக்குமாறு இருக்கா..? எடுத்துட்டு போ, நம்ம தோழர்கள கூப்பிட்டுக்க.. எல்லாப் பெண்களையும் கூப்பிட்டுகிட்டு.. அவுங்க வந்தாலும் வராட்டாலும் முன்னாடி போயி ஜெசிபி முன்னாடி நில்லு.. நா அதுக்குள்ள அங்க வந்துடுவேன்”.
காளிக்குப் புரியவில்லை. ஆனால், தோழர் சொன்னது நினைவுக்கு வந்தது. போராட்ட களத்தில் கட்டளையை அமுல்படுத்த வேண்டும். அதுதான் கம்யூனிஸ்ட்டின் அடையாளம்.
புறப்பட்டாள். வெள்ளையம்மாவுக்குக் குரல் கொடுத்தாள். சடச்சியைக் கூப்பிட்டுக்கொண்டாள். தெருமுனையைக் கடந்து இடது பக்கம் திரும்பியபோது கவனித்தாள். அவர்களுக்குப் பின்னே பத்து நூறு பெண்கள் வந்து கொண்டிருந்தனர். அனைவர் கையிலும் துடைப்பம் இருந்தது. சிலர் கையில் அருவாளே இருந்தது.
காளி வலது பக்கத் திருப்பத்தைத் தாண்டி நடந்து, ஜேசிபியை பார்த்தபோது அதிர்ந்துபோனாள். ஜேசிபியை கள்ள சாதிப் பெண்கள், இவர்களுக்கு முன்னதாக, சூழ்ந்துகொண்டிருந்தனர்.
அதானே.. நம்ம பாடு பரவாயில்ல.. அவளுக சுடுகாட்டுப் சாலையிலல்ல உட்காரனும்’. என்று சடச்சியிடம் காளி சொன்னாள்.
அண்ணா படம்போட்ட கொடி பறந்த அந்த காரைக் காணவில்லை. காவிரியம்மா வீடும் பூட்டிக்கிடந்தது. ஏன் பயந்து ஓடிவிட்டார்கள்?
கள்ளசாதிப் பெண்களுடன், பள்ள சாதிப்பெண்களும் ஜேசிபியை மறித்து நின்றனர். சடச்சி ஜேசிபியில் ஏறி டிரைவரை விளக்குமாற்றால் விளாசினாள். அவளோடு கள்ள சாதிப்பெண் கண்மணியும் சேர்ந்துகொண்டாள். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இடம் களேபரம் ஆகிவிட்டது. ஆண்கள் பலரும் இவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினார்கள். மற்ற பல ஆண்கள் குழுமி நின்று வேடிக்கைப் பார்த்தார்கள்.
அப்புறம் போலீஸ் வந்து டிரைவரையும் ஜேசிபியையும் மீட்டுச் சென்றது. தோழர், அருகாமை மந்தையில் அமர்ந்து எல்லாவற்றையும் பார்த்து, உதடு பிரியாமல் சிரித்துக்கொண்டிருந்தார்.

4.
dalit girl lovers
ஆமாம்... வெகு நாட்களுக்கு முன்பே சொல்லியிருக்க வேண்டும். சொல்லாததற்கு, எனது சோம்பேறித்தனம், சம்பந்தப்பட்டவர்களின் அந்தரங்கம் என்று இரண்டு காரணங்கள் இருக்கின்றன. இப்போது சொல்வதற்குக் காரணம் வெட்டிக் கொல்லப்பட்ட சங்கரும், இன்னமும் உடலளவில் சாகாத கௌசல்யாவும்தான்.
இந்தக் கதையில் சொல்லப்பட்ட நிகழ்வுகளின் சாரம் உண்மை. சம்பந்தப்பட்ட தம்பதியினரின், குறிப்பாக, அந்தப் பெண்ணின் அந்தரங்கத்தை மறைப்பதற்காக சம்பவங்கள், இடம், காலம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பையனைப் பார்த்தபோது எனக்கு எந்தக் கருத்தும் தோன்றவில்லை. ஒடிசலாக இருந்தான். முகம் ஒட்டிப் போயிருந்தது. கருப்பாக இருந்தான்.‘இன் செய்த‘ சட்டைக்குள் அவன் வயிறு ஒட்டியிருப்பது தெரிந்தது. பேராசிரியன் ஆகிய எனது ஆய்வுக்குத் துணையாக அவனை பல்கலைக்கழகம் அனுப்பியிருந்தது. பருவ நிலை மாற்றமும், கடற்பாசி எடுக்கும் பெண்களின் வாழ்வாதாரமும் என்றதொரு தலைப்பில் கடற்கரை ஆய்வுக்கு என் துணையாக அவன் வந்திருந்தான்.
நான் பேருக்குத்தான் ஆசிரியன்; மற்றபடி கம்யூனிஸ்ட். பாடம் எடுப்பதை கொஞ்சமும், கலகம் செய்வதை நிறையவும் செய்யும் நபர். என் மீது கை வைக்க நிர்வாகம் பயந்ததால் பிழைப்பு ஓடிக் கொண்டிருந்தது. இப்போது இல்லை என்பது வேறு கதை.
நிற்க.. ஆய்வு முடியும் சமயத்தில் என்னில் இருந்த கம்யூனிஸ்டை அவன் அடையாளம் கண்டுகொண்டான். ஒரு உதவி கேட்டான். வழக்கம் போல, ‘அதற்கென்ன... செய்யலாம்‘, என்று சொல்லிவிட்டு அதன் பின், ‘என்ன உதவி?‘ என்று கேட்டு மாட்டிக் கொண்டேன்.
அவன் தன்னோடு கல்லூரியில் படித்த பெண்ணை நேசிக்கிறானாம். அவளும் நேசிக்கிறாள் என்றான். 9 வருட காதலாம். அவளை அழைத்துக் கொண்டு ஓடி வருவதாகவும், கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்றும் சொன்னான். அவர்களின் காதல் அவளின் அப்பனுக்குத் தெரியுமாம்.
நான் பின் சிந்தனையாக அவளின் அப்பன் பற்றிக் கேட்டேன். அப்பன் தேசியக் கட்சி ஒன்றின் மாவட்டத் தலைவராம். உரக் கடை வைத்திருக்கிறானாம். எட்டுப்பட்டியும் அந்த மனிதனின் கையிலாம்.
‘சிக்கினான் சிக்கந்தர்’ என்று என் நிலையைப் பற்றி எனக்குத் தோன்றியது. இருந்தாலும்,‘நாம பெரிய ஆளுள்ள‘ என்று நினைவு படுத்திக்கொண்டு, அப்புறம் ‘இப்ப ச்சும்மாவாச்சியும் சொல்லி வைப்போம்... வந்துடவாப் போராங்க‘ என்று நம்பியபடி... ‘அழைத்து வா.. முடித்து வைக்கிறேன்‘ என்று சொல்லிவிட்டேன்.
அந்தப் பாவிப் பயல் ஆறு மாதத்தில் அழைத்தான். ‘சார் நாளைக்கு அவ தப்பிச்சி வரா சார். நேரா உங்கள் வீட்டுக்குத்தான் வரோம்’, என்றான்.
நமக்கு மீசை சின்னது, ஆனாலும் வீரம் பெரியது என்பதால் வரச் சொல்லிவிட்டேன். ஆனால், அவளின் அப்பன் பற்றி விசாரித்து வைத்திருந்தேன். மேற்கு மாவட்டங்களில் ஆட்டம் போடும் சாதிச் சங்கத்தில் இருந்தான், அந்த அப்பன். பண்ணை வீடு வைத்திருக்கிறான். அடியாள்கள் அதிகம். வட்டிக்கு விட்டு வசூலிப்பவன்.
அப்புறம் சொல்ல மறந்துவிட்டேன். நமது கதாநாயகன் கன்னியாகுமரியைச் சேர்ந்தவன். தாழ்த்தப்பட்ட சாதிக்காரன். அவன் சாதி பெயர் சொன்னால் உங்களுக்கு இனம் காண முடியாது. தமிழகத்தில் அவர்கள் சொற்ப எண்ணிக்கையினர். அதனால்தான், அவளின் அப்பன் படித்து ஆய்வு வேலையில் இருக்கும் பையனை ஏற்றுக் கொள்ளவில்லை.
அப்புறம் அந்த உயர் சாதி அப்பனுக்கு செல்வாக்கு அதிகம். எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும், மந்திரிகள் வந்து அவன் பண்ணை வீட்டில் இரகசியமாகத் தங்குவார்கள்… எதற்காக என்று நான் சொல்ல வேண்டுமா?
எல்லாவற்றையும் கணக்குப் போட்டு ஒரு திட்டம் வகுத்தோம், நானும் என் தோழர்களும்.
வந்து நின்ற பெண்ணைப் பார்த்தவுடன் இவனுக்கு நேர் எதிராக இருந்தாள். நல்ல நிறம். உடல் செழுமையாக இருந்தது. சாதாரண உடையில் இருந்தாலும் இவனுக்குப் பொருத்தமற்ற பேரழகி என்று பட்டது. காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள், அது தவறு. காதலுக்கு அகக்கண் உண்டு. அவள் தன் பணக்கார உயர் சாதி வாழ்க்கையில் பெறாததை, இந்த தாழ்த்தப்பட்ட சாதி இளைஞனின் அன்பில் பெற்றிருக்கிறாள் என்பதை எனக்குப் புரிய வைத்தாள்.
நான் வழக்கம் போல எதிர்க்கட்சி வக்கீல் வேலை பார்த்தேன். ‘நீங்க உருப்படாம போகத்தான் வாய்ப்பிருக்கு ... உன் அப்பன் போலீசுடன் வந்து உன்னைக் கடத்திக் கொண்டு போய், உன்னை உன் காதலன் கடத்தினான் என்று புகார் செய்ய வைப்பான்’, என்றெல்லாம் அவளை மிரட்டிப் பார்த்தேன். அவள் என் கண்ணைப் பார்த்துச் சொன்னாள்... ‘மனுஷியா ஒரு நாள் நான் வாழ்ந்தா போதும். அப்புறம் செத்துப் போறேன்‘.
அவள் கண் அசையவில்லை. அதன் உக்கிரம் தாளாமல் நான்தான் கண்களைத் தாழ்த்திக் கொண்டேன்.
அப்புறம் என்ன? ஒரு காரில் ஒரு தொலை தூர கோவிலுக்குப் பயணம். அங்குத்தான், அப்போது - இப்போது இல்லை- கல்யாணம் ஆனால், கல்யாணச் சான்றிதழ் உடனே கிடைக்கும். அந்த கோவில் அர்ச்சகரைக் கையாளும் திறன் உள்ள கட்சியமைப்பு எமக்கிருந்தது.
கல்யாணம் முடிந்தது. அவர்களை எமது கட்சியின் செல்வாக்கில் உள்ள ஒரு கிராமத்தில் தங்க வைத்தேன். எதிர்பார்த்தது நடந்தது. அவனின் பெற்றோரை சுற்றி வளைத்த காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. அந்த தகவல் வந்தவுடன் நான் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் சென்றேன். அதிகாரியிடம் பேசினேன். என்னுடன் எமது கட்சி மாவட்டச் செயலாளர் வந்திருந்தார்.
‘சார். பெரிய இடத்துப் பெண் சார், மந்திரி போன் பன்றார். அவன் ஏதோ ஒரு கீழ் சாதியாமுல்ல.. அந்தப் பெண் ... சாதி சார்.. எப்படி ஒத்துப்போகும்’, என்றார் இன்ஸ்பெக்டர். நான் சில உடலியல் உண்மைகளைச் சொல்ல நினைத்தேன். அப்புறம் கெட்ட வார்த்தை பேசியதாக ஆகும் என்பதால் அதைப் பேசவில்லை.
வேறு ஒன்றைச் சொன்னேன். “அவள் மேஜராகி 10 வருஷம் ஆகுது. கல்யாணச் சான்றிதழ் என் கையில் இருக்கிறது. அவர்களைச் வரச்சொல்கிறேன். அத்துடன் பத்திரிகையாளர்களும் வருவார்கள். உங்கள் மந்திரியையும் வரச் சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு அவர் எதிரில் அமர்ந்து போன் செய்தேன்.
அவர்கள் வந்த பின்னர், சான்றிதழ்களைச் சரிபார்த்த காவல் அதிகாரி அப்பனையும் அவளையும் அழைத்துப் பேசினார். பின்னர் பையனை அழைத்து மனைவியை அழைத்துக் கொண்டு போகச் சொன்னார்.. நான் அவர்கள் பாதுகாப்பிற்கு தோழர்களை உடன் அனுப்பினேன்.
தனியாக நின்ற என்னிடம் அவள் அப்பன் வந்தான்... ‘ஒரு நாளு என் துப்பாக்கி உன் கணக்கைத் தீர்க்கும்’, என்றான். நான் சிரித்தபடியே அவருக்குக் கை நீட்டினேன். அந்த கதர் சட்டை போட்ட, கோபக்கார நாட்டாமை... திரும்பி பார்க்காமல் நடந்தார். இந்தக் கதை எழுதும்வரை நான் துப்பாக்கியால் சுடப்பட வில்லை என்பது மட்டும் உண்மை.
ஆனால், கதையின் கிளைமாக்ஸ் இன்னமும் வரவில்லை. சரியாக ஒரு மாதம் கழித்து அவன் மதுரை மருத்துவமனையில் அட்மிட் ஆனான். சில கோடி பேர்களில் ஒருவருக்கு வரும் நோய்த் தொற்று அவனுக்கு. அது என்ன என்பது பிரச்சனையில்லை. அவன் செத்துப்போனான் என்பதுதான் பிரச்சனை.
அவனது பல்கலைக்கழக நண்பர்களை அழைத்து விசாரித்தேன். அவனின் பெற்றோர் அவளை ஏற்றுக் கொள்ளவில்லையாம். அவளைக் கல்யாணம் செய்ததுதான் அவனின் மரணத்துக்குக் காரணமாம். அவள் ஜாதகம் சரியில்லையாம். அவனின் பிணத்தை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்குப் போய்விட்டார்களாம். ஜாதகம் எல்லாம் பொய் என்று எனக்குத் தெரியும். அந்த உயர் சாதிப் பெண்ணை, பல்கலைக்கழக சம்பளம் வாங்கும் பையன் இல்லாத நிலையில் தாழ்த்தப்பட்ட சாதி, கூலித் தொழிலாளி எப்படிப் பராமரிப்பார்கள்?
அப்புறம் அவள் கதி என்று அவர்களைக் கேட்டேன். ‘எங்களோட இருக்காங்க தோழர். நாங்கதான் பாதுகாப்பு‘ என்றார்கள் அந்த அறிவுள்ள ஆசிரியர்கள்.
அப்புறம் ஓர் ஆண்டு கழித்து அவள் தன் பெற்றோரோடு சென்றாளாம். தமது சாதியில் பணக்கார பையனைப் பார்த்து கல்யாணம் செய்து வைத்தார்களாம், அவள் பெற்றோர்கள். இப்படி தகவல் சொன்னது அவளின் தோழிகள்.
அவள் நல்ல வாழ்க்கை வாழ்கிறாளா என்று நான் கேட்கவில்லை. காதலன்றிப் போனால், சாதல் நன்று என்று எனக்குத் தெரியும். அவள் செத்த பின் வாழும் வாழ்க்கை பற்றி நான் யோசிக்க விரும்பவில்லை.
- சி.மதிவாணன்



பாரதிக்கு வயது 22தான். அவன் வாழ்க்கையில் எல்லாமே பாதி கிணறு தாண்டிய கதைதான். இன்றும் அப்படித்தான் ஆகிவிட்டிருந்தது. ஒரு குவாட்டரை முடித்திருந்தான். இன்னும் போதை போதவில்லை. அம்மாவிடம் பிடுங்கிக்கொண்டு வந்திருந்த 100 ரூபாயில் 75 ரூபாய் சரக்குதான் வாங்க முடிந்திருந்தது. 65 ரூபா சரக்கை 75 என்று விற்றுக் கொண்டிருந்தார்கள் பாவிகள்.
வாட்டர் பாக்கெட்டும் காலியாகியிருந்தது. கொறித்த பயிரும் காலியாகியிருந்தது. கரட்டுப்பட்டியின் டாஸ்மாக் பார் மின்வெட்டில் இருண்டிருந்தது. ரீசார்ஜ் லைட்தான் போட்டிருந்தார்கள். அது அழுதுகொண்டிருந்தது. இவனோ தன்னை நினைத்து மனதுக்குள் அழுதுகொண்டிருந்தான். தனக்கு அந்த விபத்து மட்டும் ஏற்பட்டிருக்கக் கூடாது என்று நினைத்தான்.
அந்த விபத்துக்கு முன்பு அவன் வெகுநாள் வேலைக்குப் போகவில்லை. அம்மா திட்டிக் கொண்டிருந்தாள். அவள் கட்டுமான வேலைக்குப் போய் சம்பாதித்து வருவதில் எப்படியும் 50 ரூபாய் பிடுங்கிக் கொள்வான். மிச்சம் மீதியை நண்பர்களுடன் சமாளித்து அன்றைய ‘தண்ணி தேவையை’த் தீர்த்துக்கொள்வான். அந்த 50 ரூபாயைக்கூட அன்று பிடுங்க முடியவில்லை. இரவு தூக்கம் வரவில்லை.
மறுநாள் காலையில் சேகர் வந்து இவனை வேலைக்குக் கூப்பிட்டான். வீடு இடிக்க வேண்டுமாம். 300 ரூபாய் சம்பளமாம். உடனே ஒப்புக்கொண்டு புறப்பட்டான். ஒரு பெரிய பாட்டில் போக கையிலும் காசு நிற்கும் என்று மனது கணக்குப் போட்டது.
சேகர் இவனை விட சில வயது மூத்தவன். 14 வயதில் கரண்டி பிடிக்க ஆரம்பித்து இன்று கொத்தனார் ஆகிவிட்டான். சேகரின் ஸ்பெலண்டரில் இவனும் மற்றொரு பையனும் சேகரின் பின் அமர்ந்து சாணாம்பட்டி சென்று சேர்ந்தார்கள். சேகர் இவனையும் பையனையும் இறக்கி விட்டு இடிக்க வேண்டிய வீட்டைக் காட்டினான்.
அதனை கிராமத்தில் தொகுப்பு வீடு என்பார்கள். எம்ஜிஆர் கொடுத்த வீடு என்றும் சொல்வார்கள். தலித்துகளுக்கு வீடு கட்டுவதற்குக் கொடுத்த சொற்ப பணத்தில் காண்ட்ராக்டர்ளும் தலைவர்களும் அதிகாரிகளும் சுருட்டியது போக மீதமுள்ளதில் கட்டியது. இத்தனைக் காலம் சமாளித்த பின்னர், இனி பெய்யும் மழைக்கு தாங்காது என்று வீட்டுக்காரர் வீட்டுக்கு வெளியே குடியிருக்க குடிசைப் போட்டுக்கொண்டார். மழைக்கு உள்ளே படுத்தால் மரணம் நிச்சயம். தளத்தை உடைத்து தகரம் போடலாம் என்று யோசித்து இடிக்க அழைத்திருந்தார். இந்த வீட்டுக்காரனிடம் சம்பளம் தேறுமா என்று பாரதிக்குச் சந்தேகம் வந்தது.
இருந்தாலும் என்ன செய்ய? சேகர் வாங்கித் தராமலா போய்விடுவான் என்று யோசித்தவாறு சம்மட்டியைத் தூக்கிக்கொண்டு வீட்டின் மேலே ஏறினான்.
ஒரு மணி நேரம் போயிருக்கும். உச்சி வெயிலில் வேர்த்துக்கொட்ட இவன் மேலே நின்று சம்மட்டியால் அடித்துக் கொண்டிந்தான். சின்னவன் மற்றொரு பக்கம் உடைத்துக் கொண்டிருந்தான். என்ன நடந்தது என்று தெரியவில்லை. சரிகிறது என்று தெரிந்து பாரதி தாவித் தரையில் குதிக்க அவன் மீது சுவர் சரிந்தது.. கண்கள் இருண்டன. நினைவுத் தப்பியது. நினைவு திரும்பியபோது வலி உயிர்போனது.. ஊரே திரண்டு கான்கிரீட்டுகளைத் தூக்கி, இவனை மீட்டெடுத்து, 108ஐ அழைத்தார்கள்.
அப்புறம் 6 மாதங்கள் ஆஸ்பத்திரியில் இருந்து, ஐந்து ஆப்பரேஷன்கள் முடிந்து, பிழைத்து வந்தான். வீட்டுக்கு வரும்போதும் கையிலும் காலிலும் மாவுக் கட்டு இருந்தது. அம்மாதான் ஆஸ்பத்திரியில் அருகே இருந்து பார்த்துக்கொண்டாள். தங்கைகள் வருவார்கள் போவார்கள். அவர்களுக்கென்ன காலேஜில் படிக்கிறார்கள். அப்பாவோ நோயாளி. வேலைக்குப் போகாதவர்.
அன்று இடிக்கக் கூப்பிட்டுக் கொண்டு சென்ற சேகர்தான் இன்று வருவதாகச் சொல்லியிருந்தான். அவன் வந்தால் அடுத்த குவார்ட்டர் வரும்.
அது என்ன ‘இந்த மொசக்கெட்ட பய இம்புட்டு லேட்டாக்கிறான்’, என்று முனகியபடியே பாட்டிலைத் தலைகீழாகக் கவிழ்த்து சிந்திய சொட்டுகளை நாக்கில் வாங்கிக் கொண்டான். 75 ரூபாய் சரக்கு சுர்ரென்றது.
இவன் குடிக்குப் பழகியது ஹாஸ்டலில்தான். அப்பாவுக்கு டிபி வந்து வேலைக்குப் போகமுடியவில்லை, அம்மாவின் சம்பாத்தியம் மட்டும்தான். இவனை எஸ்சி ஹாஸ்டலில் சேர்த்துவிட்டாள் அம்மா. அதுதான் அவன் முதன்முறையாக வீட்டுக்கு வெளியே சென்று தங்குவது. பயமாக இருந்தது. ஆனால், மூன்று வேளை சோறு கிடைக்கும் என்று அம்மா சொன்னது சின்னதாக ஆசையை மூட்டியது.
இவன் வீட்டில் இரவு உணவு உத்திரவாதம். காலையில் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு வீட்டில் வேலை முடிந்திருக்காது. சாப்பாடு கிடைக்காது. இரவு அம்மா வந்து சமைத்துப் போடுவதற்குள் ‘மேங்கொடல கீழ்க்கொடல் தின்னுடும்’
அந்தச் சாப்பாட்டு ஆசையிலும் மண் விழுந்தபோதுதான் பாரதிக்கு வெறுப்பு உச்சத்துக்குப் போனது. அந்த ஹாஸ்டல் சமையலறை இந்த டாஸ்மாக் பார் போல நாறிக்கிடக்கும். பிளாஸ்டிக் வாளிகளில் சாம்பார் இருக்கும். மற்றொரு வாளியில் ரசம் இருக்கும். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது. முந்திக்கொண்டவர்கள் காய்களைச் சாப்பிட்டு விடுவார்கள். சோறு பழுப்பு நிறத்தில் கட்டி கட்டியாகச் சில்லிட்டுக் கிடக்கும்.
அம்மாவின் சாப்பாட்டைச் சாப்பிட்டவனுக்கு இந்த சோறு ஒத்துவரவில்லை. அன்று இரவு சாப்பிடப் பிடிக்காமல் மாடிக்குச் சென்றவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பேச்சு சத்தம் கேட்டது. யார் இந்த இருளில்?
அந்த மாடியின் மீது அரச மரம் கவிழ்ந்திருக்கும். அந்த இருளில் இவனின் மூத்த மாணவர்கள் இருப்பது தெரிந்து, என்ன நடக்கிறது என்று பார்க்கச் சென்றான். வெள்ளை பிளாஸ்டிக் டம்ளர்கள் மெல்லிய வெளிச்சத்தில் பளிச்சென தெரிந்தன. ஒரு பாட்டில் மையத்தில் இருந்தது. இவன் அவர்கள் அருகே அமர்ந்துகொண்டான். மயக்கத்தில் இருந்த அவர்கள் இவனைக் கவனிக்காமல் ஏதோ ஒரு சினிமா பற்றி சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
ஒருவன் அந்த கதாநாயகியை வர்ணிக்க சுவாரசியம் பற்றிக்கொண்டது. இவன் இடையில் புகுந்து, ‘அண்ணே அது நமக்கெல்லாம் அக்கா மாதிரியிலண்ணே’, என்று குறுக்கிட, அவர்கள் திரும்பினார்கள்.
‘ஒன்னோட வயசுக்கு அவ அக்காடா… எங்க வயசுக்கு… அதுலயும் பெரிய பொண்ணுன்னா…’, என்று அவன் விளக்கம் அளிக்கத் துவங்கினான். இவனுடைய அறியாப்பிள்ளை குறுகுறுப்பு, அங்கே அமர்ந்து அதனைக் கேட்கச் சொன்னது. அப்படி ஆரம்பித்து அப்புறம் ஜோதியில் கலந்து கொண்டான். முதலில் பிடிக்கவில்லை. கொஞ்சம் உள்ளே போனதும், தலை வேசானது… இறுக்கம் குறைந்தது.
தலை லேசானவுடன் பாரதி கேட்ட முதல் கேள்வியே, ‘எப்புடிண்ணே இதுக்கெல்லாம் காசு?’ என்பதுதான். அம்மா இவனுக்குக் காசு தர மாட்டாள். பசிக்கும்போது பன் வாங்கிச் சாப்பிடக் கூட வழியிருக்காது. இவனை மாதிரிப் பையன்கள் எப்படி காசு சம்பாதித்தார்கள்?
‘வார்டனோட சேர சாய்ங்காலம் தூக்கிப் போயி வித்திட்டோம்.. அந்த ஆளு வரதே வாரத்துக்கு ஒரு நாளு… அவனுக்கு எதுக்கு சேரு?’, என்றான் ஒருவன்.
அன்று சுவைக்க ஆரம்பித்தவன் நிறையச் சுவைத்துவிட்டான். அந்த அரச மரத்து நிழலில் கஞ்சாவும் இழுத்திருக்கிறான்.
பாரதிக்குக் கஞ்சா இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அது வேண்டாம் ஒரு சிகெரெட்டாவது கிடைத்தால் நல்லது.
இன்னமும் சேகரைக் காணவில்லை. பாரில் சிகெரெட் கேட்டால் ஒரு ரூபாய் கூட கேட்பார்கள். பாக்கெட்டில் கைவிட்டபடி வெளியே நடந்தான். பார் அட்டன்டருக்குக் காசு கொடுப்பது அவன் வரலாற்றிலேயே இல்லை. பாட்டில் வாங்கிக்கொண்டு வாட்டர் பாக்கெட்.. அப்புறம் பிளாஸ்டிக் கப். அவ்வளவுதான். பார் கடைக்காரர் இவன் போன்ற ஆட்களை ‘மூஞ்சை’ப் பார்த்தவுடன் கண்டுபிடித்து விடுவார். ‘காசில்லாத குடிகாரக் கேசு’, என்று இவர்கள் முகத்தில் எழுதி ஒட்டியிருக்கும்.
வெளியே இருந்த பெட்டிக் கடையில் ஒரு சிகெரெட் வாங்கிப் பற்ற வைத்துக்கொண்டு சாலையைப் பார்த்தான். சேகர் பைக்கில்தான் வருவான்.
லாரியை முந்திக்கொண்டு ஒரு பைக் சென்றது. லாரியின் வெளிச்சத்தில் ஒரு சுடிதார் பெண் ஓட்டுபவனை இறுக்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. இவனுக்கு வெறுப்பு மேலிட்டது. ‘…ளுக’ என்று திட்டிக் கொண்டான்.
உடல் தேறி இவன் திருப்பூரில் வேலைக்கு சேர்ந்தபோதுதான் அவளைச் சந்தித்தான். இவனுடைய உடைந்துபோன காலுக்கும் கைக்கும் நோவு கொடுக்காத வேலை. திருப்பூரின் வெளியே ஒரு கிராமத்தில் அந்த கோழிப்பண்ணை இருந்தது. அங்கே கோழிகளுக்குத் தீவனம் போடுவது உள்ளிட்ட வேலைகள்தான் இவனுக்கு. அங்கேதான், சரண்யாவைச் சந்தித்தான்.
வெளுத்த நிறம். இவனுக்குச் சமமான உயரம். பளீர் சிரிப்பு. சுடிதார் அழகு என்று இவன் வியக்க, நம்ம உயரத்துக்கு ஒரு ஆளு, கள்ளச் சிரிப்பு என்று அவள் சிரிக்க காதல் பற்றிக் கொண்டது.
அப்புறம் சில நாட்களில், இவனின் ‘தண்ணி' விவகாரம் காதல் தீயை அணைத்துவிட்டது. அவளைக் கைபிடித்தவுடன் தண்ணியை விட்டுவிட வேண்டும் என்று இவன் தீர்மானித்திருந்தான். அவளோ, ‘ ஒரு நாளைக்குத் தண்ணி போட்டவேன். என்னிக்கு நிறுத்துவானாம்..?... போடா..போ’, என்று போய்விட்டாள்.
இவன் ஊருக்கே திரும்பி வந்துவிட்டான்.
அதன் பின் இவன் தண்ணி போடுவதும் சாலையில் சவால் விடுவதும் அதிகரித்தது. இவன் சிறுவயதிலிருந்தே அமைதியானவன். யாருடனும் பேசமாட்டான். தண்ணி போட்டுவிட்டால் எல்லாப் பேச்சும் வெளியில் வரும். நிச்சயம் தகராறு வரும்.
பாரதி பெருமூச்சு விட்டுக்கொண்டான். இவனுக்கு எல்லாமே பாதி கிணறுதான். இரண்டு தங்கைகளும் நன்றாகப் படிக்கிறார்கள் என்று காலேஜில் சேர்த்தார்கள். எஸ்சி ஹாஸ்ட்டல்.. அப்புறம்.. கோடையில் 100 நாள் வேலை, இல்லாவிட்டால், தண்ணி பாட்டில் கம்பெனியில் வேலை, அதுவும் இல்லையென்றால், மண்புழு உரக் கம்பெனியில் வேலை என்று சம்பாதித்துக்கொண்டு படித்தார்கள்.
இவன் 11 தாண்டவில்லை.
சின்ன தங்கை காதலிக்கிறாள் என்று தெரியும். இவனுக்குத் தெரிந்தவன்தான்… இவனின் சாதிக்காரன்தான். ஆர்ம்டுபோர்சில் இருந்தான். இவனோ கைகால் உடைந்ததால் போலீஸ் இண்டர்வியூவுக்கே போக முடியவில்லை. தங்கை கூட காதலிக்கும் நிலைக்கு வந்துவிட்டாள். இவனைப் பார்த்தாலே எந்தப் பெண்ணும் ஓடிப்போகிறாள் என்று இவனுக்குத் தன் மீதே வெறுப்பு வந்தது.
‘எல்லாமே… பாதிதான்… இன்னிக்கு போதையும் பாதிதான்’ என்று முனக ஆரம்பித்தபோது சேகர் வந்து சேர்ந்தான்.
‘கோச்சுக்காதடா, பைக் பன்ஞ்சராயிடுச்சி’, என்று காரணம் சொன்னான். மட்டக் கம்பு, கொத்துக் கரண்டி எல்லாம் வண்டியிலேயே ஆங்காங்கு இருந்தன.
பைக்கை நிறுத்திவிட்டு சேகர் பாருக்குள் நுழைய இவனும் பின்னால் சென்றான். பார் பையனிடம் சேகர் 500 ரூபாய் தாளை எடுத்து நீட்டி விவரம் சொன்னான். மறக்காமல் சிக்கன் சொன்னான்.
சேகரை ரொம்ப நாளாகத் தெரியும், நன்றாகப் பழகியவன் என்றாலும் பாரதிக்கு சேகர் மேல் வருத்தம் இருந்தது. அன்று அழைத்துப்போய் சிக்க வைத்துவிட்டான் என்று வருத்தம். அதைவிட பெரிய வருத்தம் மருத்துவமனை செலவுக்கென்று 1000 ரூபாய் கொடுத்துவிட்டுப் போனவன் அப்புறம் வரவேயில்லை என்பது.
மருத்துவமனையில் இருந்தபோதே பாரதி முடிவு செய்து வைத்திருந்தான். ‘இருடி… ஒனக்கு வைச்சிருக்கேன்’, என்று மனதுக்குள் முனகிக்கொண்டான்.
பாரதி ஒரு வகையில் பார்த்தால் நல்லவன். யாருடனும் சண்டை போடமாட்டான். அனாவசியமாக சுற்ற மாட்டான். இதெல்லாம் பள்ளிக் காலத்தில்தான். அந்த ஹாஸ்டலுக்குப் போனபின்புதான் வாழ்க்கை மாறிப்போனது. இப்போதும் கூட அம்மாவிடம் சண்டை போடுவான். தங்கைகளை மிரட்டுவான். ஆனால், ஊருக்குள் தலையை நிமிர்ந்து பேசமாட்டான். ஆனால், தப்பு செய்துவிட்டு மறைத்தால் அவனுக்குப் பிடிக்காது. தப்பு செய்துவிட்டால் முதல் மிரட்டலுக்கே சரணடையும் ஆள்.
ஆனால், டாஸ்மாக் போய்விட்டு வந்தான் என்றால், கதை தலைகீழ். அரக்கன் போல நடப்பான். வீரன் போல கூவுவான். முடிந்தால் அடிப்பான். முடியாவிட்டால் அடியை வாங்கிக் கொண்டு முக்காமல் முனகாமல், ஓடாமல் அப்படியே அமர்ந்து விடுவான். ‘ஆம்பளயாடா… வாடா.. வந்து அடிடா..’, என்று கூவியபடி, கையைக் காட்டி அழைப்பான்.
அதற்குள், சேகர் பாட்டிலைத் திறந்து பிளாஸ்டிக் கப்பில் நிரப்பியிருந்தான். துணைக்கு கோக்கை நுரை பொங்க ஊற்றி, இவன் முன்பு நீட்டினான். டம்ளர்களை மோதிவிட்டு சற்றே உறிஞ்சிவிட்டு இருவரும் கீழே வைத்தனர்.
சேகர் சிரித்தபடியே, ‘இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம்..’, என்று இவனைப் பார்த்தான். பாரதி தலையைச் சற்றே சாய்த்துக்கொண்டு அரைக்கண்ணைத் திறந்தபடி கோண வாய் தெரிய சிரித்தான். ஆனால், அவன் மூளை சிரிக்கவில்லை.
சட்டென்று சரண்யா வந்து போனாள். யாரையோ பார்ப்பது போல.. சலனமற்ற கண்களால் பாரதியைப் பார்த்தபடி, சுழித்த உதடுகளில் வெறுப்புத் தெறிக்க, கைகளைக் கட்டிக்கொண்டு, ‘போடா… போ’, என்று திரும்பி நடந்தாள்.
சட்டென்று தலையைக் குலுக்கியபடி சேகரைப் பார்த்தவனை சேகர் கேட்டான், ‘என்ன ஆச்சு?’.
‘ஒன்னும் ஆகல… எல்லாமே பாதிதான் ஆவுது மாமு… எனக்கு.. ஒனக்காவது முழுசா ஆவட்டும்’, என்றபடி டம்ளரை எடுத்து உறிஞ்ச ஆரம்பித்தான்.
சேகருக்குப் புரியவில்லை. ‘என்னா சொல்ற நீயி? மொதல்லயே தண்ணி போட்டுட்டியா?’, என்றான்.
பாரதி சரண்யா கதையைச் சொன்னான். சேகருக்கு சிரிப்பு பிய்த்துக்கொண்டு வந்தது. ‘தோ பாரு… காதல்ங்கறது சினிமா… முடிஞ்ச வரைக்கும் போயிட்டு அப்புறம் வந்துடனும்… என் கதையைக் கேளு’.
சேகருக்கு நிறைய அனுபவங்கள் இருந்தன. அவற்றையெல்லாம் கேட்கக் கேட்க பாரதிக்குத் தான் பாதிக் கிணறு கூட இல்லையென்று தோன்றியது. எதிலும் பாதி கூட தாண்டவில்லை என்று சொல்வது தப்பு… நெருங்கக்கூட இல்லை என்று தோன்றியது.
பாட்டில் குறையக் குறைய பாரதி தடுமாற ஆரம்பித்தான். அவன் மனதில் மருத்துவமனை வந்தது. இரத்தம் ஏற்றிக்கொண்டிருக்கும்போது சேகர் வந்து போனது நினைவுக்கு வந்தது. அப்புறம் வராமற்போனது நெஞ்சைச் சுட்டது. எதிரேயிருந்த கோக் இரத்த பாட்டிலாகத் தெரிந்தது.
‘ஏன்டா… அப்புடிச் செஞ்ச?’, என்று கேட்டான். தலையைச் சாய்த்தபடி பாதிக் கண்ணை மூடியபடி, உதடுகளில் குரூரம் தெரிய கேட்டான்.
சேகருக்கு மரியாதைக் குறைவது தெரிந்தாலும், ‘சரி தண்ணி’ என்று நினைத்தபடி ‘என்னிக்கு?’, என்று கேட்டான்.
’வூடு இடிச்ச அன்னிக்கு… நான் இடுப்புல அடிபட்டு கெடந்த அன்னிக்கு… எனக்கு ரெத்தம் ஏத்துன அன்னிக்கு..?’ சற்றே நிதானித்த பாரதி, ‘கொஞ்சம் மாறியிருந்தா… நான் பொட்டையாயிருப்பனாம்… டாக்டரு சொன்னாரு… ஏன்.. அப்புடி செஞ்ச?’
‘இல்லடா… அன்னிக்கு நா ரொம்ப கஷ்டத்துல இருந்தேன்.. போலீசு கேசாயிடுச்சி… கேச சரிகட்ட பத்து ரூபா ஸ்டேஷன் செலவு.. அப்புறம் ஆளுங்க கட்சிக்காரனுங்க செலவுத் தனி… சம்பாதிச்சதெல்லாம் போயிடுச்சி… ஒனக்கு செய்ய முடியலன்னு வருத்தந்தான்..’, என்று சொன்னான். அவன் கண்ணில் உண்மையிருந்தது.
அது சரி… காசில்லாட்டுனா என்னா? வந்து பாக்கலாம்ல.. பாரதியின் குரல் பார்காரனைத் திரும்ப வைத்தது. அவருக்குப் புரிந்துவிட்டது. இனி அடிதடிதான்.
‘தம்பிங்களா.. பொறப்படுங்க… மணி பத்தத் தாண்டுது’, என்று வந்து நின்றார், தாடி நரைத்த அந்த பார்காரர்.
‘போவோம்ல, என்னாத்துக்கு வெரட்டுற? நாங்க நாயிங்களா?’, என்று பாரதி எழுந்திருக்க முயன்று தடுமாற, சேகருக்குத் திடுக்கென்றிருந்தது. அளவு தாண்டிவிட்டோமோ என்று யோசித்தபடியே பாட்டிலைப் பார்த்தான். காலியாகியிருந்தது. எப்படி? பாரதி எடுத்து ஊற்றிக்கொண்டானோ.? சரி.. வில்லங்கம்தான் என்று நினைத்தபடி, ‘வாடா.. போவலாம், என்று பாரதியின் கையைப் பிடித்தான்.
‘வுடு சேவுரு… அன்னிக்கு கைவிட்டுட்டு போனல்ல… அப்புறம் எதுக்கு கையப் புடிக்கிற..? என்றபடி பாரதி எழுந்தான்.
‘இல்லடா.. நானு அன்னிக்கு.. சரி வா..’, என்றபடி பாரதியின் தோள் மீது கைபோட்டான். தள்ளியபடி, அணைத்தபடி நடந்தான்.
பார் வாசலில் நின்றுகொண்ட பாரதி, தனக்கு சிகெரெட் வேண்டும் என்று அடம்பிடித்தான். மின்சாரம் இன்னும் வரவில்லை. அந்த சாலையில் எந்த நடமாட்டமும் இல்லை. பெட்டிக் கடைக்காரன் கடையை மூடிக் கொண்டிருந்தான்.
‘இரு வாங்கியாரேன்’, என்று சேகர் விலகி பெட்டிக் கடையை நோக்கி நடக்க, பாரதி நேரே சேகரின் பைக்கருகே சென்றான்.
‘மயிரு.. நானு நட நடன்னு நடக்க இவனுக்கு பைக்கு… … மவுனுக்கு, அன்னிக்கு மதுரை ஆசுபத்திரிக்கு வர பைக் இருந்திச்சு கொடுக்க காசில்லாம போயிடுச்சா..?’ என்றபடி பைக்கை எட்டி உதைத்தான். சைடு ஸ்டேண்ட் போட்டிருந்த பைக் அப்படியே தரையில் சாய்ந்தது.
பெட்டிக்கடைக்குச் சென்றிருந்த சேகர் பாதியிலே ஒடி வந்தான்.. ‘டேய் பாவி.. என்னாடா செய்யிற?’
‘ஒனக்கு என்னோட ஆசுபத்திரிய செலவைப் பார்க்க பணமில்ல.. அப்புறம் எதுக்கு பைக்கு?’, என்று கேட்டவன் மனதுக்குள் ‘இருடி… ஒனக்கு வைச்சிருக்கேன்’ என்று சொல்லிக் கொண்டான்.
‘சரி மாமு.. மன்னிச்சிக்க.. வா போவலாம்’.
‘என்ன மன்னிச்சிக்க?’, என்று பாரதி சேகரை நெட்டித் தள்ளினான். பைக் மீது சரிந்த சேகர் சுற்றியும் பார்த்தபடி எழுந்தான். யாரும் இல்லை.
‘சரிடா… தப்புத்தான் உட்டுடு..’
‘எப்புடி உடுறது? அன்னிக்கு எனக்கு உயிர் நாடியில அடிபட்டிருந்தா.. நானு பொட்டயாயிருப்பன்ல.. இன்னிக்கு எனக்கு கல்யாணமும் இல்ல கருமாதியும் இல்ல.. ஒனக்குக் கல்யாணமா?’
சேகருக்கு கோபம் தலைக்கேறியது. உழைத்துக் கனத்த கையால் ஒரு அறைவிட்டான். அப்படியே சரிந்த பாரதிக்கப் புரிந்துவிட்டது. இவனை அடிக்க முடியாது. இந்த உடைந்த கையை வைத்துக்கொண்டு அடிக்க முடியாது.
அப்படியே உட்கார்ந்து கொண்டான். ‘நானு எல்லாத்துலயும் பாதிடா… சேவுரு. அடிடா சேவுரு அடி. ஆம்பளன்னா அடி… அத்தனைப் பொட்டச்சி கதை சொன்னல்ல.. ஆம்பளன்னா அடிடா.. நீ பொட்டபபய இல்லாட்னா அடிடா’
சேகருக்குத் தலையில் இரத்தம் ஏறியது. அடித்த சரக்கெல்லாம் இறங்கி விட்டதுபோலத் தோன்றியது. சுற்றி முற்றி பார்த்தான். பைக்கிலிருந்து விழுந்திருந்த மட்டக் கம்பு கண்ணில்பட்டது. நான்கு பக்கமும் மட்டம் செய்யப்பட்டு தரையை மெழுகி மட்டமாக்கும் கம்பு. விளிம்புகள் எல்லாம் கூர்மையான ஆறு அடி நீள புத்தம் புதிய மட்டக் கம்பு.
ஓடிச் சென்று மட்டகம்பை எடுத்த சேகர் அப்படியே ஓங்க பாரதியின் நடு மண்டையில் இறக்கினான். தடுக்க முயன்ற பாரதியின் கையில் விழுந்தது. அப்படியே சுருண்டு பாரதி வலியில் துடிக்க அடுத்த அடி பாரதியின் உச்சந்தலையில் இறங்கியது.
பாரதிக்குத் தன் தலைக்குள் வெளிச்சம் தெரிந்தது. தலையை இரத்தம் நனைப்பது தெரிந்தது. வெளிச்சம் பெரிதாகி அப்புறம் இருண்டது.
சேகர் மட்டக்கம்பை கையில் வைத்தபடி அதிர்ந்து நின்றிருக்க பாரதி, அடிபட்ட நாய் போல… தரையில் சரிந்தான்.
அப்புறம் அவன் எழுந்திருக்கவில்லை.

சாப்பிட்டுவிட்டு, அப்படியே முகத்தைக் கழுவி, பொட்டு வைத்துக்கொண்டு புறப்பட்டாள். மட்டை எடுக்கப் போகும்போது நல்ல புடவையெல்லாம் கட்டிக்கொள்ள முடியாது. ஆனால், அவளுக்கு ஆசையாக இருந்தது. மஞ்சள் பொட்டு போதும் என்று முடிவு செய்து புறப்பட்டாள். செல்லப்பாண்டி வருவான். பாலமேடு போகும் சாலையில் நான்கு மணிக்குத் காத்திருப்பான். அவன் தண்டல் வசூல் செய்யப் போகும் வழி அதுதான். பாலமேட்டை முடித்துவிட்டு அப்படியே அலங்காநல்லூர் வழியாக மதுரை போய்ச் சேர்வான்.
இவளுக்குப் பயமாக இருக்கும். இப்படி பைக்கில் சுத்துகிறானே? எத்தனை லாரிகள் போகும் வரும்? லாரிக்காரர்கள் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவார்கள் என்பதை டிரைவராக இருக்கும் தன் மாமன் மூலம் தெரிந்து வைத்திருந்தாள். மாமன் வண்டியில் ஏறினாலும் குடிப்பான். இறங்கினாலும் குடிப்பான். 15 நாட்கள் டூட்டி. அவன் வீட்டில் இல்லாத அந்த நாட்கள்தான் இவளின் சுதந்திர நாட்கள். இவளுக்கு மட்டுமல்ல இவளின் அக்கா பாண்டீஸ்வரிக்கும் அவைதான் சுதந்திர நாட்கள்.
வேகமாக நடந்தாள். செல்லப்பாண்டி இவளுக்கு இரண்டு ஆண்டாகப் பழக்கம். கோடாங்கிப் பட்டியின் காலனிக்கு அவன் வருவான். ஒரு நாள் பழைய ஆள் வந்து அறிமுகம் செய்து வைத்தான். ஓனரின் மருமகனாம். இவள் முழங்காலிட்டு உட்கார்ந்து முடிந்த மட்டையின் பிசிறுகளை வெட்டிக்கொண்டிருந்தாள். நிமிர்ந்து பார்த்தவளுக்கு செல்லப்பாண்டி தன்னையேப் பார்க்கிறான் என்று தெரிந்தது. அதுதான் அவனைப் பார்த்த முதல் நாள். மாராப்பை சரி செய்துகொண்டு எழுந்தாள். புடவையைக் கால் வரை இழுத்துவிட்டுக்கொண்டு திரும்பினாள்.
இனி செல்லப்பாண்டிதான் வசூலுக்கு வருவான் என்று வழக்கமாக வருபவர் சொல்லிக் கொண்டிருந்தது கேட்டது. வேப்ப மரத்துக்கு அந்தப் பக்கம் சென்று மறைவாக உட்கார்ந்து கீற்றை இழுத்துப் போட்டுக் கொண்டாள். பைக் புறப்பட்டுச் சென்ற சப்தம் கேட்டு எட்டிப் பார்த்தாள். பைக்கை ஓட்டியபடியே செல்லப்பாண்டி திரும்பிப் பார்ப்பது தெரிந்தது. கவனிக்காதவள் போலத் திரும்பிக் கொண்டாள்.
வழக்கமாக பணம் வசூல் செய்ய வரும் ஆள் போல செல்லப்பாண்டி இல்லை. பேண்ட்டும் சர்ட்டும் அப்படிப் பொருத்தமாக இருக்கும். இன் செய்து பெல்ட் போட்டிருப்பான். காதில் செல்போன் வயர் தொங்கும். ஒரு தடவை அவன் செல்போனை இவள் பார்த்தபோது அது பெரிதாக அழகாக இருந்தது தெரியவந்தது.
‘என்ன பார்க்குறீங்க?’ என்றான் செல்லப்பாண்டி.
‘இல்ல.. இது எங்க போனுங்க மாதிரியில்ல.. பெரிசா.. அழகா இருக்கு’ என்றாள். ’எவ்வளவு?’ என்று ஆர்வம் தாங்காமல் கேட்டாள்.
அவள் சொன்னபோது இவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘இம்புட்டு காச போட்டா போன் வாங்குவாங்க?’ என்று ஆச்சரியப்பட்டாள்.
‘இது போன் மட்டும் இல்ல… சின்ன கம்ப்யூட்டர்’ என்று அவன் விளக்கம் சொல்ல, சுற்றி நின்ற பெண்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டார்கள். ஆனால், அவர்களுக்குப் புரியவில்லை. ‘சரி, நில்லுங்க எல்லாரையும் படம் எடுக்கலாம்’ என்று போன் வழியே படம் எடுத்துக் காட்டினான். படம் பளிச்சென்றிருந்தது. முருகேஸ்வரி முகத்தைப் பெரிதாக்கிக் காட்டினான்.
இப்படித்தான் அவர்களின் பழக்கம் ஆரம்பமாயிற்று. முதலில் செல்லப்பாண்டியை இவளுக்கும் பிடிக்கவில்லை. செல்லப்பாண்டியை என்ன, எந்த ஆணையும் பிடிக்கவில்லை. இவளின் மாமன், அதான் பாண்டீஸ்வரியின் வீட்டுக்காரன் வந்துவிட்டால், இவளுக்குச் சிக்கல் ஆரம்பிக்கும். அக்கா வெளியே போயிருக்கும்போது சீண்டுவான். குடித்துவிட்டு படுத்திருப்பவன், படுத்தபடியே இவளின் மீது பார்வையை ஒடவிடுவான். இவளுக்கு உடல் மீது கரப்பான் பூச்சி ஊர்வது போல இருக்கும்.
ஒரு நாள் பாண்டி அலங்காநல்லூருக்கு டாக்டரைப் பார்க்கச் சென்றிருந்தாள். நடு அக்காவான நாகேஷ்வரி அழைத்துப் போயிருந்தாள். மட்டையை முடைந்து போட்டுவிட்டு வீட்டுக்கு இவள் வந்து சேர்ந்தாள். ஊரே வெறிச்சோடியிருந்தது. நிறைய பேர் 100 நாள் வேலைக்குப் போயிருந்தார்கள். மாமா தூங்கிக்கொண்டிருந்தான். சப்தம் போடாமல் பானையைத் திறந்து சோற்றைப் போட்டுக்கொண்டு வெளியே வந்து தெருவில் உட்கார்ந்து சாப்பிட்டாள். தட்டைக் கழுவிக்கொண்டு உள்ளே சென்றவளை அவன் மறித்துக்கொண்டு கதவைச் சாத்தினான். அவளுக்குப் புரிந்துவிட்டது.
‘வேணா மாமா… இது தப்பு’ என்று அவன் கண்ணைப் பார்த்துச் சொன்னாள்.
‘எது? இதுவா? ஒனக்கு எதுடி தப்பு? ஓடிப்போயிட்டு வந்தவதானே.. அவங்கிட்ட தப்பு செய்யிலியா?‘, என்று அவன் நெருங்க, இவள் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடினாள். அன்று துவங்கி நெருப்பில் வாழ்வது போல அக்கா வீட்டில் இவள் இருக்கும்படி ஆனது.
இவளோடு பிறந்த மூன்று பேர் பெண்கள். ஒரு ஆண் பிள்ளை. கடைசியாக இவள் பிறந்தாள். எட்டு பிள்ளை பெற்று மூன்றைப் பறிகொடுத்த அம்மா சீக்காளி ஆகியிருந்தாள். மூன்றுப் பெண்களைக் கட்டிக்கொடுப்பதற்குள் அப்பா கடன்காரர் ஆகியிருந்தார். இருந்த ஒரு ஏக்கர் காட்டையும் விற்றுவிட்டு மாடுகளை வாங்கி மேய்த்துக் கொண்டிருந்தார். காடு நல்ல விலைக்குப் போகவில்லை. ஊரைச் சுற்றி கிரசர்கள் வந்திருந்தன. அவை விட்ட தூசு படிந்து விவசாயம் செத்துப்போயிருந்தது. கிரசர்காரர்கள் எல்லாம் மதுரைக்காரர்கள்… கட்சிக்காரர்கள். இவளின் அப்பா நாகலிங்கம் போன்ற ஏழைகள் என்ன செய்ய முடியும்? விளையாத நிலத்தை வாங்க ஆளில்லை. விற்றுத் தீர்த்த பின்னரும் கடன் தொல்லை முடியவில்லை.
எல்லா அக்காக்களுக்கும் பதினைந்து பதினாறு வயதிலேயே கல்யாணம் ஆனது. எல்லாம் சொந்தத்தில்தான். இவள் அப்பனின் வீட்டிலும், அவர்கள் வீட்டிலும் என்று மூன்று அக்காக்களும் வாழ்ந்தார்கள். அப்பாவுக்கு இரண்டு வீடு இருந்தது. வீடு என்றால் வீடில்லை. மண் சுவர் ஓட்டுக் குடிசைகள். ஒரு வீட்டில் அப்பாவும் அண்ணனும் இருக்க இவள் அக்கா பாண்டி வீட்டில் தூங்குவாள். கதவை மூடிவிட்டால் காற்று உள்ளே வராது. விளக்கில்லாவிட்டால் ஓட்டு இடைவெளியில் நட்சத்திரங்கள் தெரியும். இவள் இந்த சுவற்றோரத்தில் படுத்திருப்பாள். அந்த சுவற்றின் ஓரத்தில் மாமா.. இடையில் அக்கா. அதற்கு மேல் அந்த வீட்டில் இடமில்லை.
சில நாட்களில் இரவில் விழிக்கும்போது விக்கித்துப் போயிருக்கிறாள். திரும்பிக் கொண்டு, சுவற்றைப் பார்த்து, கண்ணை இறுக்கி மூடிக்கொள்வாள். ஆனால், காதுகள் திறந்திருக்குமே.. சப்தம் கேட்கும். ஆர்வம் அதிகரிக்கும்.. ஆனால், என்ன செய்ய முடியும்?
இவள் பத்தாவது பெயில், அப்புறம் மாடு மேய்க்கப் போனாள். சில நாட்கள் மட்டை முடைவாள். இப்படி இவள் உழைத்துச் சேர்த்து வைத்திருந்த நான்கு பவுனுக்கு மேல் கையில் ஏதுமில்லை. மாடு சினை பிடிக்கட்டும் என்று அப்பா காத்திருந்தார். நல்ல விலைக்கு விற்று கடைசிப் பெண்ணுக்கு கல்யாணம் என்று இரண்டு வருஷமாக சொல்லிக் கொண்டிருக்கிறார். மாடு சினை பிடித்தாலும் அவரின் திட்டம் பலிக்கவில்லை. கல்யாணம் நடக்கும் என்ற நம்பிக்கையே முருகேஸ்வரிக்குப் போய்விட்டது.
அக்கா மாமாவோடு உள்ளே படுத்தாள்தானே பிரச்சனை என்று வெளியே அம்மாவுடன் தெருவில் படுக்க வந்தால், அம்மா விரட்டுவாள்.
‘வயசுப் பொண்ணுடி.. நீ அப்புடி இப்புடின்னு தூங்கிட்டா.. போடி உள்ளே’ என்று விரட்டுவாள்.
இப்படியே அல்லாடிய முருகேஸ்வரி ஒரு நாள் ஓடிப்போனாள். ஓடிப்போனவள் ஒரே வாரத்தில் தனியாளாகத் திரும்பி வந்தாள். போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் பிரச்சனை போனது. அந்தப் பையனையும் பிடித்து வந்தார்கள். ஏதோ பஞ்சாயத்து நடந்து, அவன் ஒரே வாரத்தில் வெளியே வந்துவிட்டான். அய்யா கட்சியும் அம்மா கட்சியும் அவனுக்கு ஆதரவாக நின்றன. பையனின் அப்பா செலவு செய்தே நொடித்துப் போனார். அப்புறம், கட்சிக்காரர்கள் பாட்டில் இல்லாமல், பிரியாணி இல்லாமல், கைநிறைய காசு கொடுக்காமல் எப்படி ஸ்டேஷன் வருவார்கள்? ஸ்டேஷன் செலவுக்குப் பணம் வேறு கொடுத்திருந்தார் அந்தப் பையனின் அப்பா.
அவன், அந்தப் பையன் ஆறு மாதத்தில் இன்னொரு பெண்ணுடன் ஒடிப்போனான்.
ஆனால், முருகேஸ்வரி யாரிடமும் பேசவில்லை. எதுவும் சொல்லவில்லை. ஏன் அவனுடன் போனாள், ஏன் திரும்பி வந்தாள், என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. அப்பா தென்னை மட்டையை எடுத்துக்கொண்டு நாயை அடிப்பது போல அடித்துப்போட்டார். பாதகத்தி வாயைப் பொத்திக்கொண்டு அழுதாளே தவிர ஒரு வார்த்தைப் பேசவில்லை. அவள் போகும்போது எடுத்துச்சென்ற நான்கு பவுன் நகையும் கூட பத்திரமாக இவளுடன் வந்திருந்தது.
பாண்டி ஒரு நாள் முருகேஸ்வரியைத் தனியே அழைத்துச் சென்று கேட்டாள். இவள் அதற்கும் அசையவில்லை. ‘பொம்பளயா பொறந்திருக்கக் கூடாதுக்கா’, என்று அழுததோடு சரி. அதற்கப்புறம் அவள் அனேகமாக பேசுவதில்லை. எந்த ஆணையும் பார்ப்பதில்லை. ஏன் நினைப்பதேயில்லை.
அப்படியிருந்தவளைத்தான் பைனான்சுக்கார செல்லப்பாண்டி மாற்றிப் போட்டிருந்தான். கீற்று முடையும்போது பணம் வசூலுக்கு வருபவன் இவளைப் பேச்சுக்கு இழுப்பான். யாரோடும் பேசாத இவளா பேசுவாள்..? ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, செல்லப்பாண்டி வரும் நேரத்திற்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள். இருந்தாலும் இவளுக்குப் பிடிக்கவில்லை… எத்தனை முறை அடித்தாலும் வாலைக் குழைக்கும் நாய் போல, ஆணுக்குக் காத்திருப்பது பிடிக்கவில்லை. ஆனாலும் செல்லப்பாண்டி வரும் வழியைப் பார்க்க ஆரம்பித்திருந்தாள். இபபோதெல்லாம், இவள் மட்டை தூக்கப் போகும்போது பாதையை மறித்து பேச ஆரம்பித்திருந்தான். இவளும் புறப்படுவதற்கு முன்பு பொட்டு வைத்துக்கொள்ள துவங்கியிருந்தாள்.
சும்மாடு கட்டுவதற்கான துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு நடந்தவளுக்கு தூரத்தில் செல்லப்பாண்டி பைக் வருவது தெரிந்தது. சிவப்பு கலர் பைக். சைடு பெட்டியில் கணக்கு நோட்டு துருத்திக்கொண்டிருக்கும் தோளில் தொங்கும் பையில் தண்டலுக்குக் கொடுக்க வேண்டிய பணமும் வசூலித்த பணமும் கனத்துக்கொண்டிருக்கும்.
இவள் அருகே வந்தவுடன் நிறுத்தியவன், ‘என்ன முருகு… அந்தக் கடனெல்லாம் முடிஞ்சுப் போச்சா’, என்று ஆரம்பித்தான். பளீரெனத் தெரியும்படி வைத்திருந்த மஞ்சள் பொட்டை அவன் பார்ப்பது தெரிந்து. நெளிந்து சுருண்டு கிடக்கும் நெற்றி முடியை அவன் இரசிப்பதை உணர்ந்தாள். தலையைக் குனிந்துகொண்டாள்.
இவளை முருகு என்று கூப்பிடுவது அவன் மட்டும்தான். ஏன் இத்தனை நாள் யாருக்கும் அப்படித் தோன்றவில்லை என்று இவள் யோசித்திருக்கிறாள். தெரியவில்லை. ஆனால், சுகமாக இருந்தது. அதுவும் இவர்கள் இரண்டு பேர் இருக்கும்போது மட்டும்தான் ‘முருகு’ என்று உருகுவான்.
இவள் சாலையைத் திரும்பிப் பார்த்துக்கொண்டாள். பாலமேடு செல்லும் சாலையின் மேடு வரைக்கும் யாரையும் காணோம். இந்தப் பக்கம் இவள் கிராமத்துக்கு செல்லும் சரிவிலும் ஈ காக்கா இல்லை. சாலை ஓரத்து தென்னந்தோப்பை ஊடுருவிப் பார்த்தாள். காய் சுமக்க இவள் ஊரிலிருந்தும் ஆட்கள் வந்திருப்பார்கள். நல்லவேளை… யாரும் இல்லை.
‘என்ன பதிலக் காணோம்?’, என்று மறுபடியும் கேட்டான் செல்லப்பாண்டி.
‘முடிஞ்சிடுச்சி… எதுக்கு அவ்வளவு பணத்தைக் கொடுத்த நீயி..? ஒங்க மாமா கணக்கு கேக்க மாட்டாரா?’ என்று அவன் முகத்தைப் பார்த்தாள்.
அவன் களையான முகத்துக்குச் சொந்தக்காரன். நெற்றியில் எப்போதும் சந்தனப் பொட்டிருக்கும்.
‘நானென்ன ஒரே தடவையாவா கொடுத்தேன்…? நீ வாங்குன தவணைய வரவு வைச்சேன். என்னோட ஒரு நாளு செலவு வராது ஒன்னோட ஒரு நாத் தவணை’. என்றவன் யோசித்தவாறே, ’எதுக்கு முருகு அவ்வளவு பணம் தவணை வாங்கின’, என்றவுடன் அவளுக்குத் திடுக்கென்றிருந்தது. எதைச் சொல்வாள்..? எப்படிச் சொல்வாள்?
‘போய்யா.. போ’, என்றவாறே இவள் விலகி நடந்தாள். பாலமேடு செல்லும் பஸ் சாலையில் வருவதைக் கண்ட அவன், சாலையை விட்டு விலகி இவளைப் பார்த்தான். அதற்குள் இவள் தென்னந்தோப்புக்குள் நுழைந்து விட்டிருந்தாள்.
முருகேஸ்வரி காதைத் தடவிப் பார்த்துக்கொண்டாள். அந்தத் தோடு இருந்தது. இவள் உழைத்து காசு சேர்த்து கல்யாணத்துக்கென்று எடுத்த நகையில் ஒன்று அது. ஆனால், அந்தத் தோடு இதில்லை. இது அந்த குவாரிக்காரன் வாங்கிக் கொடுத்த கவரிங் தோடு. இவள் சம்பாதித்த நான்கு பவுன் நகையும் நெட்டையன் கைக்குப் போயிருந்தது. அந்த குவாரி ஏஜெண்டை இவர்கள் நெட்டையன் என்றுதான் சொன்வார்கள். பணத்துக்காக அவனிடம் கொடுத்த நகையை மீட்க, இன்னமும் மீதியுள்ள பத்தாயிரத்தைக் கட்ட என்று இவள் கடன் வாங்கி அல்லல்பட்டுக்கொண்டிருந்தாள். ஆனால், இவளுக்கு யார் ஒரே தடவையாக ஐம்பாதினாயிரம் கடன் தருவார்கள்?
பவுனை விற்றுவிட்டு கவரிங் வாங்கி மாட்டிக்கொண்டு வீட்டை ஏமாற்றிக் கொண்டிருந்தாள். பற்றாக்குறைக்கு தவணை வேறு. எல்லாம் அக்கா பாண்டீஸ்வரியின் வேலை.
அப்போதெல்லாம் பாண்டீஸ்வரி கல்லுடைக்கப் போவாள். அங்கே வேலை பார்த்தவன்தான் அவன். நெடுநெடுவென்று வளர்ந்தவன். கயிற்றைப் பிடித்துக் கொண்டு கரட்டின் மீதேறி, துளை போட்டு வெடிவைப்பவன். அவன் உடைத்துத் தள்ளிய பாறைகளை உடைத்து கிரசருக்கு அனுப்புவது பாண்டி போன்ற பெண்களின் வேலை. அங்கேதான் நெட்டையன் பழக்கமானான். பாண்டியின் வீட்டுக்காரன் ஆக்சிடன்ட் ஆகி மதுரை ஆஸ்பத்திரியில் படுத்திருந்த நேரம். கையிலிருந்த காசெல்லாம் காணாமற் போயிருந்தது. கல்லுடைத்த காசு பற்றாக்குறை ஆனபோதுதான் பாண்டி நெட்டை மேஸ்திரி கேட்டதையெல்லாம் கொடுத்து காசு பார்க்க வேண்டியிருந்தது.
ஓடிப்போய் திரும்பி வந்திருந்த முருகேஸ்வரி அதற்குப் பின்தான் சிக்கலில் மாட்டினாள்.. அக்கா போக்கு சரியில்லை என்று கூடவே கல்லுடைக்கப் போகும் இவளுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், என்ன செய்ய? குடிகார மாமன் எழுந்தால் தானே குடும்பம் வாழும்.
மாமன் எழுந்து டூட்டிக்குச் சென்ற பின்பு பாண்டி கல்லுடைக்கப் போகவில்லை. நெட்டையன் தேடி வந்துவிட்டான். கொடுத்த பணத்தைக் கேட்டான். பாண்டி அவனிடம் நைச்சியமாகப் பேசி காசு தருவதாகச் சொல்லிவிட்டு இவளின் காலைப் பிடித்துக்கொண்டாள். ‘ஒரு வாரத்துல காசு வராட்டி, நீ வா.. இல்லன்னா தங்கச்சிய அனுப்புடி’ என்று நெட்டையன் மிரட்டிக்கொண்டிருப்பதைச் சொன்னாள் பாண்டி.
இப்படித்தான் முருகேஸ்வரியின் தோடும் நகைகளும் போய்ச் சேர்ந்தன. அந்தக் கடனைக் கட்டத்தான் முருகேஸ்வரி தண்டல் வாங்கி அதனைக் கட்ட மட்டை முடைந்து கொண்டிருந்தாள்.
நெட்டையனிடம் இருந்து வாங்கிய பணத்தில் இன்னமும் பத்தாயிரம் நிற்கிறது என்று அவன் மிரட்ட, பாண்டி நொந்துபோனாள். லாரிக்குச் செல்லும் வீட்டுக்காரனுக்குத் தெரிந்துவிட்டால், கொலைதான் நடக்கும் என்று தெரியும். நைச்சியமாகப் பேசி நெட்டையனிடம் முருகேஸ்வரியை அனுப்பி வைத்தாள்.
தோப்புக்குள் மட்டையைப் பொறுக்கிச் சேர்த்து அணைத்துக் கட்டிய முருகேஸ்வரிக்குத் தன் உடல் நாறுவதாகப் பட்டது. எத்தனை மிருகங்கள் என்று யோசித்தாள். ‘நெஞ்சுல மயிறு மொளச்ச ஒரு பயலுக்கும் நெஞ்சுல ஈரம் சொரக்க மாட்டேங்குதே’, என்று யோசித்தாள்.
அந்த நாய் அழைத்துச் சென்று செய்த காரியம், வீட்டுக்குள்ளே மாமன் ஆட்டும் வால், நெட்டையனோடு குவாரியின் ஆலமரத்து மறைவில் நாறிப்போய் கிடந்தது… தன்னைத் தானே காறித் துப்பிக்கொண்டாள். இந்த இருபத்தியெட்டு வயதில் எதையும் காணாமல் வாழ்க்கை தொலைந்து போயிருந்தது. உடல் நொந்துபோயிருந்தது.
‘இதத்தானே அந்த பைனான்ஸ் பாண்டியும் கேக்குறான்’, என்று யோசித்தபடியே சாலையில் ஏறியவள் பயந்துபோனாள். சரிவிலிருந்து ஏறிக்கொண்டிருந்த அந்த காலத்து சுசுகி பைக் சப்தம் நெற்றிப் பொட்டில் அடிப்பது போலிருந்தது. அவன்தான்… நெட்டையன்தான்.
அவள் தலைச்சுமையோடு அப்படியே நின்றுவிட்டாள். இவளைத் தேடித்தான் வருகிறான் என்று தெரிந்தது. அருகே வந்தவுடன் காலை ஊன்றிக்கொண்டு இவளின் அருகே நின்றான்.
‘என்னாடி ஆளக் காணோம்.. காசு எப்படித் தருவிங்க..? ஒங்கக்காவக் கேட்டா ஒன்னக் கை காட்டுறா?’
இவளுக்குப் பதில் பேச வாய்வரவில்லை. பொழுது இறங்கும்போது கேட்கும் சில்வண்டுகள் சப்தத்தைத் தவிர வேறு சப்தம் ஏதும் இல்லை.
‘அதான்..’, என்று இவள் இழுத்தாள்.
’என்ன அதான்ங்.. பத்தாயிரண்டி பாக்கி.. ஒன்னு பணத்தைக் கொடு இல்லாட்டி ஒங்கக்காவ அனுப்பி வையு… இல்லாட்டி நீ வா’ அவன் கறாராகப் பேசினான். அவன் பார்வை இவளின் முகத்தில் இல்லை. அதற்கும் கீழேயிருந்தது.
இவள் மாராப்பைச் சரிசெய்துகொண்டு, போன வாரந்தானே… வந்தேன்’, என்பதற்குள் அவன் குதறினான்.
’ஓகோ பத்தாயிரத்துக்கு ஒரு தடவயாடீ..? நீ என்னாடி சினிமா ஸ்டாரா?’
இவள் குறுகிப்போய் சரிவில் நடந்தாள். சரிவும் பயமும் இவளை விரட்டின. தலைச்சுமையுடன் ஓடினாள். சரீரம் நடுங்க ஓடினாள். செத்துப்போய் விட வேண்டும் என்று ஓடினாள்.
அவன் கோபத்தோடு பைக்கை மிதிக்கும் சத்தம் கேட்டது. விரட்டப்போகிறான் என்று நினைத்து இன்னும் வேகமானாள். நல்ல வேளை பைக் பாலமேடு நோக்கிச் சென்றது சத்தத்தில் தெரிந்தது.
எப்படி வீட்டுக்கு வந்தாள் என்று தெரியாது. மட்டையை தெருக்குழாய் பக்கத்தில் போட்டவள், அப்படியே வீட்டுக்குப்போய் படுத்துவிட்டாள். ஓடிவந்த ஓட்டத்தில் நொந்து போயிருந்தவள் கண் அசந்தபோது செல்போன் ஒலித்தது.
அது பாண்டீஸ்வரியின் போன். கண்ணை இறுக்கிக் கொண்டாள். போனின் ஓசை நெற்றிப் பொட்டில் அடிப்பது போல இருந்தது. ‘எங்க போனா இவ’ என்று யோசித்தபடியே போனை எடுத்தாள்.
எடுத்தவுடனேயே தெரிந்துவிட்டது அவன்தான்… செல்லப்பாண்டிதான்.
’பாண்டீஸ்வரிதானே’, என்றான் அவன்.
‘இல்ல நாந்தான்..’, என்று இவள் முனகினாள்.
‘ஒனக்குத்தான் போன் போட்டேன்.. என்ன பிடிக்கிலியா? ஒன்னுஞ்சொல்லாம ஓடிப்போயிட்ட?’
‘இல்ல..எனக்கு ஒடம்பு சரியில்ல..அதோட யாராவது பார்த்துட்டா என்னாகும்’ என்று சமாளிக்கப் பார்த்தாள்.
அவன் விடுவதாக இல்லை. அவனுக்கு மெட்ராசில் வேலை கிடைத்துவிட்டதாம். வட்டிக்கு விட்டு வசூலிக்கும் மாமனை விட்டுப் போகப் போகிறானாம்.. ’நீயும் என்னோட மெட்ராசுக்கு வாயேன்’, என்று அவன் சொன்னபோது இவள் அதிர்ந்துபோனாள்.
எப்படி இது கதைக்காகும்?
அவன் மதுரை வட்டிக்காரக் குடும்பம். முக்குலத்தில் ஒர் குலமாக இருக்க வேண்டும். இவளோ பள்ளச் சாதி. வெட்டுக்குத்துதான் நடக்கும். கல்யாணம் நடக்காது. ‘அதா அவன் ஒடியாரச் சொல்ரான்’, என்று மனம் சொன்னது.
எத்தனை முறை ஓடுவது? எங்கே ஓடுவது? அல்லது எங்கே பதுங்குவது? அன்று முருகேஸ்வரி சாப்பிடாமலேயே தூங்கிப் போனாள்.
சில வருடங்களாகவே முருகேஸ்வரிக்குத் தூக்கத்தைப் பிடித்திருந்தது. எல்லாம் செத்துப்போன அமைதி தூக்கத்தில்தான் வரும். சாவுதான் தூக்கம். ஆனால், எத்தனையோ முறை அவள் சடச்சியம்மாவை வேண்டிக்கொண்டும் ஒவ்வொரு நாளும் கண் விழித்தாள். முடங்கிப் படுத்துக்கொண்டு கண்ணை இறுக்கிக்கொண்டாலும் விடிந்த பின் தூக்கம் வராது. பாண்டியின் குரல் விரட்டும். தவணை நாளாக இருந்தால் அவள் குரல் கொடூரமாக இருக்கும். மனதைத் திடப்படுத்திக்கொண்டு முருகேஸ்வரி எழுந்திருப்பாள்.
அன்றும் அப்படித்தான் நடந்தது. ஐந்து மணிக்கெல்லாம் பாண்டி எழுப்பினாள். ‘வாடி விடிஞ்சா எப்புடிடீ ஒதுங்கிறது’, என்று இழுத்துச் சென்றாள். கருவைக் காட்டு மறைவில் பாண்டி குசுகுசு என்று சொன்னபோதுதான் இவளுக்கு விஷயம் புரிந்தது. நெட்டையன் போன் போட்டிருக்கிறான். இவளிடம் பேசியது போலவே பாண்டியிடம் பேசியிருக்கிறான். ‘அடியே.. சின்னப் புள்ள… எம்புருஷன் கோபக்காரன்டி.. ஒனக்குத் தெரியுமே. நானு அப்படின்னு அவருக்குத் தெரிஞ்சிடுமோன்னு பயமா இருக்குடி.. நெட்டையன் மெரட்ராண்டி’.
லேசான அதிகாலை வெளிச்சத்தில் பாண்டியின் முகத்தை உற்றுப் பார்த்தாள் முருகேஸ்வரி. பாண்டியின் கண்கள் கெஞ்சின.
‘இன்னொரு நாளு ஒன்ன கூப்பிடுறாண்டி.. நீ வராட்ட நானே போகனுமான்டி..’
முருகேஸ்வரி பேசவில்லை.
இவளுக்கு நேர் எதிர் பாண்டி. முருகேஸ்வரி மாநிறம். அவள் கருப்பு. இவள் ஒல்லி. பாண்டியோ குண்டு. அவளோ குடும்பப் பெண்.. இவளோ ஓடுகாலி…
‘ஆனா.. ரெண்டு பேருமே பொண்ணுங்க… ஒடம்பாள பொம்பளைங்க.. அதான் பெரச்சனையே’, என்று முருகேஸ்வரிக்குத் தோன்றியது. பேசாமல் திரும்பி நடந்தாள்.
அன்று மாலை இவள் தண்ணித்தூக்கும் குழாய்க்கே செல்லப்பாண்டி வந்துவிட்டான். கணக்கு நோட்டை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு பேசினான். அருகில் யாரும் இல்லை. தூரத்திலிருந்து பாண்டி குழாய்க்கு வந்து கொண்டிருந்தாள்.
‘முருகு.. நானு திங்கக் கெழமை மெட்ராஸ் போறேன். காலைல வைகையில டிக்கெட் போட்டுட்டேன். வந்துரு ஞாயிறு நைட்டு 12 மணிக்கு சுடுகாட்டுப் பாதையில பைக்கோட நிப்பேன் வந்துடு’, என்று சொல்லவும் பாண்டி அருகே வந்துவிட்டாள்.
‘என்ன பேச்சியிங்கே’ என்றான் அவளின் வழக்கமான குரலில்.
‘இல்லக்கா.. ஒங்க தங்கச்சி கணக்கு முடிஞ்சிடுச்சி.. அடுத்த தவண வேணுமான்னு கேட்டேன்’ என்று செல்லப்பாண்டி சமாளித்தான்.
முருகேஸ்வரி விலகி நடந்தாள். இடுப்பில் தண்ணீர் குடம் தளும்பியது. இவள் மனமும்தான்.
இரவுப் படுக்கப் போகும்போது பாண்டி மறுபடியும் கேட்டாள், ‘என்னடி நெட்டையனுக்கு என்ன சொல்ல?’
முருகேஸ்வரி யோசித்தாள். பின்னர் சொன்னாள்.‘ சந்தைக்குப் போறேன்னு சொல்லிட்டு செவ்வாய்க்கெழமை சாயுங்காலமா வாரேன்னு சொல்லுக்கா’, என்றவள் திரும்பிப் படுத்துகொண்டாள். வா வா என்றபடி சாவு போன்ற தூக்கத்துக்கு கெஞ்சினாள்.
தூக்கம் வரவில்லை. ஞாயிறா செவ்வாயா என்று தன்னையே கேட்டுகொண்டு உறங்காமல் படுத்திருந்தாள்.
மறுநாள் துவங்கி முருகேஸ்வரி ஊரை விட்டு வெளியே போகவில்லை. அந்த நெட்டையன் ஊருக்குள் வரமாட்டான். உள்ளூர் சின்ன ரெட்டியார் தோட்டத்தில் மட்டை எடுத்துக்கொண்டாள்.
ஞாயிறும் வந்தது. என்ன செய்யப் போகிறோம் என்று யோசித்தபடியே நாளைக் கழித்தாள். ’என்னடி என்னிக்கும் ரெண்டு வார்த்தை பேசுவ.. இன்னிக்கு அதையும் காணோம்' என்ற தனத்தக்காவுக்குப் புன்னகையைப் பதிலாகத் தந்தாள்.
இரவு எல்லோரும் படுத்த பின்னர் யோசித்தபடியே இருந்தவளுக்குத் தூக்கம் வரவில்லை. இப்போதெல்லாம் மின்சாரம் போகும் நேரம் பார்த்து மணி சொல்ல ஊருக்கே தெரிந்திருந்தது. 11 மணிக்கு வந்த கரெண்ட் போய்விட்டது. அப்படியனானால் மணி 12. சப்தமேயில்லாமல் எழுந்தாள். சரிதானா என்று யோசித்தாள். தெரியவில்லை.
கருவைக்காட்டு வழியாக சுடுகாட்டுப் பாதையை நெருங்கியபோது செல்லப்பாண்டியின் பைக் தெரிந்தது. இவளுக்குத் தெரியவேண்டும் என்பதற்காக பார்க்கிங் லைட் போட்டிருந்தான். இவளைச் சுற்றியிருந்த காரிருளுக்கு அது வெளிச்ச ஊற்றாகத் தெரிந்தது. நடந்தாள். அது வெளிச்சம் தானா? அல்லது மற்றொரு இருளின் தொடக்கமா?
தெரியவில்லை.. ஆனாலும் அதனை நோக்கி கால்கள் பின்னலிட நடந்தாள்.