Saturday, December 8, 2018

செம்பரம்பாக்கம் ஏரி – சென்னை பேரிடர் & குடிநீருக்கான தீர்வு


செம்பரம்பாக்கம் ஏரி – சென்னை பேரிடர் &
குடிநீருக்கான தீர்வு
பாகம்: I தமிழக நீர்நிலைகளின் சுருக்கமான வரலாறும் சென்னை பெருவெள்ளமும்

           மெல்ல கண்களை மூடிக் கொள்ளுங்கள்…. பறவைகள் இறக்கைகளை விரிப்பது போன்று கைகளை விரியுங்கள் சிறிய அழகிய வானம்பாடி பறவையை மனக்கண் முன் கொண்டு வாருங்கள்… அந்த வானம்பாடியாய் மாறுவதாக கற்பனை செய்யுங்கள்…  பறவைகளை போல உங்களுக்கு இறக்கைகள் முளைக்கின்றன. சட்டென்று வானப்பாடியாய் செங்குத்தாக வானில் உயரப் பறக்க தொடங்கி வீட்டீர்கள்..! ஆஹா.. !! பறப்பது எவ்வ்வளவு ஆனந்தமானதொரு அனுபவம்….!!!
 குளிர்ச்சியான பஞ்சுத்திரள்கள் போன்ற மேகக் கூட்டங்களில் ஒன்றில் மோதி அதிலேயே மிதக்க தொடங்கி வீட்டீர்கள்… மெல்ல கண்களை திறந்தால் செங்கல்பட்டு மாவட்டத்தின்  (இன்றைய காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்கள்) வானத்தில் மாசி மாத வெண்பொதி மேகங்களில் சுகமானதொரு சவாரியில் இருப்போம்.. உங்கள் கண்கள் ஆச்சரியத்தில் விரியும்!!
உயிர்த்துடிப்புள்ள அற்புதமானதொரு பெரும் ஜீவனை பூமியில் அங்கிருந்து உங்களால் காண முடியும்!
அடர்நீலம் பாய்ந்த உயிர்களைப் பேணிக் காக்கும் அமுதான நன்னீரால் நிரம்பிய 3700 ஏரிகள்…
அவற்றை  குறுக்கும் நெடுக்குமாக இணைக்கும் நாடிநரம்புமண்டலங்களாய் துடித்துக்கொண்டிருக்கும் எண்ணற்ற கால்வாய்கள்….
பசுமை போர்த்திய பச்சை வயல்கள், சோலைகள் விரிந்த பரப்பில் கோடிக்கணக்கான உயிர்களை  உயிர்ச்சூழலை  அணைத்துக் கொண்டிருக்கும் பாலாறு, கொற்றலை ஆறு, கூவம் ஆறு, அடையாறு, ஆரணி ஆறுகளின் அதன் சிற்றோடைகளின் அன்பொழுக்கும் கரங்கள் அலைந்து கொண்டிருக்கும்.
சுருளும் அலைகளை விரித்தும் சுருக்கியும் அதன் இதயமாய் துடித்துக் கொண்டிருக்கும் செம்பரம்பாக்கம் ஏரி…
இயற்கையும் பழந்தமிழர்களும் இணைந்து வாழ்ந்ததால் ஆயிரம் ஆண்டுகளாய் சீரிளமையுடன் வனப்பும், எழிலும் நிறைந்த ஏரிகள், ஆறுகள், கால்வாய்கள், குளங்கள், குட்டைகள் என்ற வலைப்பின்னல் அமைப்பு பேருயிர்தான் அது..!!
உற்சாகம் ததும்பி வழிய வானம்பாடியாய் இன்னிசை பொழிந்து சுற்றி சுற்றி வட்டமடித்து கொண்டு பேருவகையில் காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்களின் வலைப்பின்னல் ஏரிகளை  கொண்டாடத் தொடங்குவோம் என்பதுதான் உண்மை!!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சீரிளமையுடன், தாய்மையுடன் உயிர்களைப் பேணி பாதுகாத்த இந்த ஏரிகள் அமைப்பு என்ற  பேருயிரை, கடந்த 30 ஆண்டுகளில் மத்திய-மாநில ஆட்சியாளர்கள் சீர்குலைத்து வருகின்றனர்.
அதன் உயிர்நாடி நரம்புகளை உருவி வெட்டி நசித்து நாசம் செய்தனர். அதன் உடலின் அங்கங்களான பல ஏரிகளை அதிவேக வளர்ச்சி என்ற பெயரில் ஆக்கிரமித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், பெருமுதலாளிகளுக்கும் விற்று அழித்து கொண்டு வருகின்றனர்.  அதன் கவின்மிகுந்த மேனி எங்கும் நிறைந்து இருந்த அமிழ்தினும் மேலான நன்னீரில் இராசயன தொழிற்சாலை கழிவுகளை கலந்து அதில் இருந்த எண்ணற்ற நீர்த்தாவரங்கள், பல்வகை மீன்கள், தவளைகள், நீர்பூச்சிகள், நுண்ணுயிரிகள் என அனைத்தையும் அழித்து விட்டனர். பறவைகள் கூட அதை அருந்த முடியாமல் நன்னீரினை விஷமாக்கி வருகின்றனர். மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுக்கும் வற்றாமல் அள்ளி தந்து அன்னமிட்ட அதன் கைகளான ஆறுகளை, ஓடைகளைகளை, இணைப்பு கால்வாய்களை பேராசையால்  திமுக – அதிமுக - காங் – பிஜேபி கட்சிகளின் ஆதிக்க சக்திகள் நாசம் செய்தனர்…செய்து கொண்டிருக்கின்றனர்.
துடிதுடிக்க தனது உயிர் சிதைக்கப்படுவதற்கு எதிரான, இயற்கையின் கர்ப்பப்பையை குலைப்பதற்கு சிறு எதிர்ப்பு தான் ஏரிகள் வலைப்பின்னல் அமைப்பு  தொடுத்த சென்னை பெருவெள்ளப் பேரிடராகும்.  ஏரிகள் அமைப்பின் அங்கங்கள் அறுபட்டு, காயங்களில் வழிந்த சீழ்தான் சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளமாகும். ஏரிகள் அமைப்பு என்ற  பெரும் ஜீவன்  ஏகாதிபத்திய நலன்களுக்காக,, இந்திய பெருமுதலாளிகளின் இலாப வேட்டைக்காக வதைபடுவதை மவுனமாக பார்த்து கொண்டிருந்த சிங்கார சென்னை மக்களின் மீது  கோபம் கொண்ட மாமழை செய்த மிகச்சிறிய ( ஆமாங்க சத்தியமாய் சொல்றேன். சதாரணமான மழைதான்.) எச்சரிக்கை இந்த பேரிடராகும்.
ஆனால், அம்மா, அன்னை , தாய் .. போன்ற சொற்களின் பொருண்மையை, அன்பை, உள்ளார்ந்த அர்த்தத்தை அநர்த்தமாக்கிய அதிமுக ஆட்சி.. அம்மா ஆட்சியானது செய்ய வேண்டியதைச் செய்யாமல், சட்டக் கடமைகளை ஆற்றாமல் இருந்ததை மறைக்க ‘வரலாறு காணாத மழை’  . . . ‘ஒரேநாளில் பெய்த பேய் மழை’  . . . ‘நூற்றாண்டில் பெய்த மழை’ . . . . என இந்த 21 ஆம் நூற்றாண்டில் மக்களின் அறியாமையை முதலீடு ஆக்கி  மீண்டும் ஆட்சியை பிடிக்க ஓட்டு வாங்கும் சித்துவேலைகளில் இறங்கி உள்ளார்.
இந்த ஏரிகள் வலைப்பின்னல் அமைப்பின் இதயமாய் துடித்துக் கொண்டிருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியை பெருவெள்ளத்திற்க்கான குற்றவாளியாக,, வில்லனாக திமுக-வும், எதிர் கட்சிக்களும், பல ஊடகங்களும்  சித்தரித்து கொண்டிருக்கின்றன. அப்படியானதொரு மனநிலைக்கு, கருத்துருவாக்கத்திற்கு தமிழக மக்களை திட்டமிட்டு தள்ளி உள்ளனர்..  இயற்கையும், மாமழையும், செம்பரம்பாக்கம் ஏரியும்தான்  சில நூறு மக்கள் சாவதற்க்கும், 20 இலட்சங்களுக்கும் மேலான சென்னைவாசிகள் வாழ்வாதாரங்களை இழப்பதற்க்கும், பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மனித உழைப்பின்  செல்வங்கள், சொத்துகள் நாசமாவதற்கு காரணமாக்கப்படுவதை எப்படி நாம் புரிந்து கொள்வது..?  அதற்கான புரிதலை செழுமைப்படுத்த இந்த கட்டுரை தொகுப்பு முயற்சி … .. .
அதிலும்ம் குறிப்பாக வில்லனாக சித்தரிக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரியை பற்றிய வரலாற்று, சூழலியல், புவிவியல் கண்ணோட்டத்தை விளங்கிக் கொள்வதற்க்கான சிறு முயற்சிதான் இது!
புவி உயிர்க்கோளம்….
இயற்கைதான் மனிதனை உருவாக்கியது. மனிதன் இயற்கையை ஒர் அங்கமானவன். இயற்கைய்யின் வரலாற்று வளர்ச்சிப் போக்கின் தொடர்ச்சியில் தான் இன்றைய  மனித சமூகமும், அதன் நாகரீக வாழ்வும் தொடங்கியது. ஆகவே இயற்கையை மனிதனால் வெல்ல இயலாது.. இயற்கையை வீழ்த்தி வெற்றி கொள்ள வேண்டும் என்கின்ற கண்ணோட்டமே அடிப்படையில் தவறானது. இயற்கையை வெல்ல வேண்டும் என்கிற முதலாளித்துவத்தின் …குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்களின் பேராசையின்,, இலாபவெறியின் வெளிப்பாடாகும்.. மனித வாழ்க்கை என்பது இயற்கையில் இருந்து விலகியதாக, முற்றிலும் வேறுபட்டதாக,, பகையானதாக  இருக்க இயலாது.  இதற்கு இயற்கைக்கும் மனித சமுதாயத்திற்கும் இடையிலான முரண் இயக்கத்தினை புரிந்து கொள்வது, இயற்கைக்கும் மனித சமுதாயத்திற்கும் இடையிலான முரண்களை ( நட்பு – பகை முரண்களை ) அறிந்து செயல்களை திட்டமிடும் உலகளாவியதொரு கண்ணோட்டம் வேண்டும். இயற்கையை மனித நேயப்படுத்துவது, மனிதனை இயற்கை மயப்படுத்துவது என்பதான அந்த  கண்ணோட்டத்தினை நமது எழுத்துக்கள், படைப்புகள், விவாதங்கள் கட்டியமைக்கப்பட வேண்டும்.

இந்தக் கண்ணோட்டத்தை வளப்படுத்தும் வகையில் இன்றைய 21ஆம் நூற்றாண்டின் அறிவியல் வல்லுநர்கள், சூழலியலாளர்கள் இப்புவிக்கோளத்தை  உயிர்க்கோளம் ( BIO-SPHERE)  என்ற சொல்லாட்சிக்குள் கொண்டுவந்துள்ளனர். காற்று, நீர், தட்பவெப்பசூழல் ஆகியன இந்த உயிர்க் கோளத்தின் அடிப்படைகளாகும். இவை மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்ததும், ஒன்றுக்குள் ஒன்று இணைந்ததுமாகும். இன்னும் விரிவாக புவிக்கோளத்தை நான்கு பெரும் பிரிவுகளாக  நிலமண்டலம் (Lithosphere), நீர்மண்டலம் (Hydrosphere), வளிமண்டலம் (Atmosphre), உயிரியல் மண்டலம் (Bioshpre) என்பனவாக நாம் புரிந்து கொள்ளுவதற்கு வகைப்படுத்தலாம். இவை ஒவ்வொன்றும் சில துணைப்பிரிவுகளையும் கொண்டுள்ளன. நிலமண்டலத்தினுள் புவிச்சரிதம்(Relief), மண்(Soil), ஆகியனவும், நீர்மண்டலத்தில் மேற்பரப்பு நீர்(Surface water), தரைக்கீழ் நீர் (Underground water), கடல்கள்(Oceans) ஆகியனவும் அடங்கும். வளிமண்டலம் எனும்போது அதனுள் வானிலை காரணிகளும் (Climate) அடங்கும். உயிரியல் மண்டலத்தினுள் இயற்கைத்தாவரம் (Natural Vegetation), விலங்கினங்கள், பறவையினங்கள், பூச்சியினங்கள்,  நுண்ணுயிர்களின் வாழ்க்கை (Animals life) ஆகியனவும் மனிதனின் வாழ்வும் அடங்கும்.


இந்த உயிர்க்கோளத்தில் 50 முதல் 100 இலட்சம் வரையிலான உயிரின வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த உயிரின வகைகள் பல இலட்சம், பல கோடிகள் ஆண்டுகளில் பெற்ற படிப்படியான பரிணாம வளர்ச்சியின் இன்றைய உச்சமாக மனித உயிர் இருக்கின்றது. உயிரினப் பாரம்பரியத்தின் பரிணாமத்தில், இன்றைய நிலையில் உள்ள மனிதன் தோற்றம் பெற்று மனித வாழ்வை ஆரம்பித்ததிலிருந்து புவிக்கோளத்தின் சகல கூறுகளின் மீதும் தன் ஆதிக்கத்தைச் செலுத்திவருகின்றான். மனிதகுல சமூகவாழ்வின் வரலாற்றுப் போக்கில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்கள் வெவ்வேறுபட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே புவித்தொகுதிக் கூறுகளை தன் தேவைக்குரிய வளங்களாக மாற்றிப் பயன்படுத்திக் கொண்டு வந்ததை அறியமுடிகின்றது. புவித்தொகுதியும் மனிதர்களின் தேவைக்குரிய இயற்கை வளங்களை நீண்ட நெடுங்காலமாக அவர்களின் வாழ்வுக்காக  வழங்கி வந்தது.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் மனித குலத்தின் இயற்கைக்கு மாறான வளப்பாவனை அதிகரிப்பும் மனிதர்களின் பேராசைக்குரிய அதிவேகத்தொழில்நுட்ப வளர்ச்சிகளும் புவிக்கோளத்தின் வளங்களை பெருமளவு சுரண்டின. வீண்விரயமாக்கின.  விஷமாக்கின. இதனால் வளங்கள் அழிந்தன. தேவைக்கு அதிகமாக இயற்கைவளங்கள் பயன்படுத்தப்பட்டதால் வளப்பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டு இருகின்றது. முதலாளிய சமூக வளர்ச்சி போக்கில் அதுவும்  ஏகாதிபத்தியமாக மாற்றம் அடைந்த பிறகு நீடித்த வளர்ச்சி என்பதற்கு மாற்றாக துரித வளர்ச்சி, மிகைஅதிக இலாபம் என்பதாக திட்டமிட்டு மாற்றப்பட்டு இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டன. இதனால் புவிக்கோளத்தின் காற்று, நீர், தட்பவெப்பச் சூழல் இன்று பெரும் அபாயத்தில் உள்ளன.  இந்த பேரண்டத்தில் உள்ள கோடிக்கணக்கான கோள்களில் உயிர்ச்சூழல் உள்ள கோளம் இந்த புவி மட்டும்தான்… !! பல ஆயிரம் இலட்சம் கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள விண்மீன் மண்டலங்களில் உயிர்ச்சூழல் இருக்கலாம் என்று வானவியல் இயற்பியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவற்றை பயன்படுத்துவது என்பதும், பூமி அழிந்தால் மனிதர்கள் அவற்றில் குடியேறி விடலாம் என்பதும் எட்டா கனிக்கு கொட்டாவி விட்ட கதையாகவே இருக்கும்.. இருப்பதை விட்டுப் பறப்பதற்கு ஆசைப்படுவது முட்டாள்தனமாகும்.

எனவே, பகுத்தறிவு, வரலாற்று உணர்வு, சனநாயக விழிப்புணர்வு, சமூக உணர்வு, விடுதலை வேட்கை, அறிவியல் உளப்பாங்கு போன்றவைகளுடன் சமூக சிந்தனையுடைய நுண்ணறிவுடன்  பரிணாம வளர்ச்சியடைந்துள்ள மனிதர்களுக்கு இந்த உயிர்க்கோளத்தின் உயிர்ச்சூழலை பேணி பாதுகாக்க வேண்டிய உள்ளார்ந்த கடமையும், பொறுப்பும் உள்ளது. அதாவது  புவிக்கோளத்தின் அடிப்படையான காற்று, நீர், தட்பவெப்பச் சூழல் வருங்கால தலைமுறைகளுக்கும், உயிரினங்களுக்கும் நீடித்திருக்கும் வகையிலான, இயற்கை வளங்களை வரையறைக்கு உட்பட்டு பயன்படுத்துவதும், மீளமைப்பதுமான வகைகளில் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்க்கை முறைமைகளை, விழுமியங்களை மனித சமூகம் மேற் கொள்ளவேண்டும்.

நீர் மேலாண்மையும் பழந்தமிழர்களும்
இப்படி வளம்குன்றாமல் இயற்கையை முறைப்படுத்தி, வளப்படுத்தி பழந்தமிழர்கள்  பயன்படுத்தினர்.  21ஆம் நூற்றாண்டில்  உயிர்க்கோளம் என்பதை தனது அனுபவ பட்டறிவினால் நீரின்றி அமையாது உலகு என்று பிரகடனப்படுத்தினர்.
“நீரின்று அமையாது உலகெனில் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுங்கு”.
என்பார் நம் முப்பாட்டனார் திருவள்ளுவர்.  நீர் இல்லாமல் எத்தகையோர்க்கும் உலக வாழ்க்கை கிடையாது. வான் மழை இல்லாமல் சமூக ஒழுங்கு நிலை பெறாது என்பது இதன் பொருள்..  எவ்வளவு திண்மையான தீர்க்க தரிசனம்.!!
அறிவியல் ரீதியாக இந்த புவி உயிர்க்கோளத்தில் உயிர்ப்பின் மையமான ஆதாரமாக  இருப்பவை காற்றும், நீருமாகும்.  உயிர்களின் தோற்றத்திற்கு நீர் அடிப்படையாகும். மனிதன் தோன்றியது காடுகளில் என்றாலும் மனித குலம் நாகரிக வளர்ச்சி நோக்கி நன்னீர் நிலைகளான ஆற்றங்கரைகளிலும், ஆற்றுப்படுகைகளிலும்தான் முன்னேறியது!
மனிதர்களுக்கும் ஏனைய அனைத்து உயிர்களுக்கும் கூட தூய்மையான காற்று, நன்னீர், இருப்பிடம் மிகவும் இன்றியமையாதது ஆகும்.. காற்றையும், நன்னீரையும் மனிதனால் உற்பத்தி செய்ய முடியாது. புவிக்கோளத்தின் மொத்த நீரில்  97.4% கடல் நீர்.  மீதி 2.6% மட்டுமே நன்னீர். இந்த 2.6%  நன்னீரிலும்  ஏறக்குறைய முக்கால்வாசி பனிதுருவப் பகுதிகளில் இருக்கும் பனிக்கட்டி பறைகளாகும்(glaciers)  . இவை  எல்லாம் போக, ஆறு ஏரி,, குளம் குட்டைகளில் இருக்கும் நீர் எவ்வளவு இருக்கும் ?  இவற்றை நம்பிதான் நன்னீர் உயிரிகள் அனைத்தும் இருக்கின்றன.
நீரை வணிக சரக்காக எந்தத் தொழிற்சாலைகளும் உற்பத்தி செய்ய இயலாது. எவ்வளவுதான் பிரமாண்டமானதாக அறிவியல் - தொழில்நுட்ப வளர்ச்சிகள்  இருப்பினும் இதை சாத்தியமாக்குவது இயலாது. எனவே, இயற்கையின் கொடையான காற்றையும், நன்னீரையும் மனிதர்கள்  பலவேறு வழிகளில் சேமித்து மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதே உண்மை.  இதனை உணர்ந்து மனித குலம் செயல்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.

விட் போகல் ( Kar August Witifogel)  என்ற ஜெர்மானிய வரலாற்றாய்வாளர்  மனித நாகரிகத்தின் வளர்ச்சிப்படிகளை மூன்று  கால கட்டங்களாக பிரிக்கிறார். மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்த முதலாவது காலம் “மழை நாகரிகம்”.  மழை நீரைக்க் குளங்க்களில் தேக்கி வைத்துத் தேவைப்படும்பொழுது பயன்படுத்திய இரண்டாவது கட்டம், அது “ நீர்நிலை நாகரிகம்”.  வளர்ச்சி அடைந்த மூன்றாவது நிலையில் பாசனக் கட்டுமானங்கள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்கள் அமைக்கப்பட்டுப் பெரிய அளவில் பாசனமும், வேளாண்மையும் நடபெறும் . அது “ நீரியல் நாகரிகம் “ என்று குறிப்பிடுவதாக முனைவர் பழ.கோமதிநாயகம் தனது நூலில் விவரிக்கிறார்.
பல்வேறு சமூக அமைப்புகளின் வளர்ச்சி நிலைகளையும்  பண்டைய புராதான பொதுவுடமை சமூகத்தில் இருந்து முதலாளிய சமூகம் வரை இந்தப் பிரிவுகளில் காணலாம்.
முதலாளியம் என்பது ஏகாதிபத்தியமாக ஊதிப் பெருத்து ….  …. இன்றைக்கு  சூறையாடும் முதலாளியமாக அகோரமாக சீரழிந்து போய் கொண்டு இருக்கின்றது. கார்ப்பரேட் முதலாளியமும், அதன் எடுபிடிகளாக இருக்கும் இந்தியா போன்ற நாடுகளின் சூறையாடும் பெருமுதலாளியம் இணைந்து  “புட்டிநீர் நாகரிகம்” என்பதான சீரழிந்த நாகரிகத்தை கடந்த 30 ஆண்டுகளில் படிப்படியாக உலகம் எங்கும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தண்ணீர் ஒரு விற்பனை பண்டம்,  வணிகப் பொருள் என்பதாக திட்டமிட்டு மாற்றி வருகின்றனர்.
இந்த தண்ணீர் அரசியலை எப்படிப் புரிந்துக் கொள்வது..?

பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்காதே! என்பார்கள் நமது முன்னோர்கள். இன்றோ தண்ணீருக்காகப் பணத்தைச் தண்ணீராக செலவழிக்க வேண்டிய சூழல்!. தண்ணீர் மனிதர்களின் அடிப்படை ‘உரிமை’ என்பதிலிருந்து மாறி அடிப்படைத் ‘தேவை’ என வரையறுக்கப்பட்டுவிட்டது. பணம் கொடுத்தால் மட்டும் கிடைக்கும் பொருளாக்கி, மக்களின் இறப்பில் இலாபம் தேடுகின்றன உலகப் பன்னாட்டு நிறுவனங்கள். இனி, ‘பணம் இருப்போருக்கே தண்ணீர் உண்டு’ என்ற கொடுமையான நிலையை உலக வங்கியும், உலக வர்த்தக அமைப்பும் உருவாக்கியுள்ளன.
                உலகின் பல நாடுகளில் தங்களின் ஆதிக்கத்தையும், மூலதனச் சுரண்டலையும் மூர்க்கத்தனமாக நடத்தி வரும் பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீரையும் விட்டுவைக்கவில்லை.டப்லின்’ நகரத்தில் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாநாடு, “நீருக்குப் பொருளாதார மதிப்பு உள்ளது. எனவே, இதை ஒரு வணிகப்பண்டமாகப் பாவிக்க வேண்டும்”என  தீர்மானம் நிறைவேற்றியது.
                ‘தி ஹேக்’ நகரத்தில் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற உலக நீர்மன்ற மாநாடு, வெளியிட்ட அறிக்கையில், உலகின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்கள் கையெழுத்திட்டனர். அந்த அறிக்கையில், “நீர் ஒரு வணிகப் பொருள். அரிய நீர்வளத்தின் போட்டிமிக்க பயன்பாட்டின் அடிப்படையில் அதன் பொருளாதார மதிப்பு அங்கீகரிக்கப்படவேண்டும்” என்று தெளிவுறுத்தினர்.
                நமது இந்திய நடுவண் அரசின் தேசிய நீர்க்கொள்கை அறிக்கையின் 13 ஆவது பத்தியில், “எங்கெல்லாம் பொருத்தமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் திட்டமிடல், மேம்பாடு, மேலாண்மை எனப் பல்வேறு வகைகளில் நீராதாரத் திட்டங்களில் தனியார்துறை பங்கேற்பு ஊக்குவிக்கப்படலாம் என்றும், தனியார்துறைப் பங்கேற்பானது, புதுமையான சிந்தனைகளை அறிமுகப்படுத்தவும், நிதியாதாரங்களை உருவாக்கவும், தொழில் முறையிலான மேலாண்மையைக் கையாளவும், சேவையை திறமாக மேம்படுத்தவும், நுகர்வோரின் பொறுப்பை அதிகரிக்கவும் உதவலாம் என்றும் விளக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் குறிப்பிட்ட நிலைமைகளைப் பொருத்து நீராதார வசதிகளின் கட்டுமானம், அவற்றைச் சொந்தமாக்குதல், குத்தகைக்கு அளித்தல், மாற்றுதல் என்று பல்வேறு முறைகளில் தனியார் துறைக்கு இடமளிப்பது குறித்து ஆராயப்படும்” –என்று தண்ணீரைத் தனியார்மயப்டுத்த வக்காலத்து வாங்குகிறது.
இப்படியாக “புட்டிநீர் நாகரிகம்” என்பதான சீரழிந்த நாகரிகத்தை நோக்கி தமிழ்நாடு கடத்தப்பட்டு செல்வதை  அனுமதிக்கலாமா..?


இந்த நிமிடத்தில்  ஒரு சின்ன குழாயை திருகி நீர் பிடிக்கும்  “புட்டிநீர் நாகரிகம்”  காலத்தில் தமிழ்ச் சமூகம்  நகர்த்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. மறதி நோய் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது தமிழ்ச்சமூகத்தை..
“உலகமயமாக்கலுக்கு முன்.. உலகமயமாக்கலுக்குப் பின்” என்று தண்ணீருக்கான அரசியலை பற்றிய புரிதலை பிரித்து தமிழ்ச்சமூகத்தின் நீர் மேலாண்மை வரலாற்றை, அதன் பின்னுள்ள அரசியலை  விளங்கி கொள்ள வேண்டி உள்ளது


90களுக்கு பின்பான உலகமயமாக்கல், தனியார்மயமாக்கலுக்குப் பிறகு தமிழ்நாட்டில்  நீரை சேமிக்கும் ‘புதிய நுட்பங்களை’ கார்ப்பரேட் கம்பெனிகளுடன் திமுக- அதிமுக- காங்கிரஸ் –பி.ஜே.பி ஆட்சியாளர்கள்- பெரும்  அரசாங்க அதிகாரிகள் கூட்டுசதிகளை பின்னி, கூட்டணி வளர்ந்து  கொண்டு இருக்கின்றனர். அறிவியல்… முன்னேற்றம்.. வளர்ச்சி… வல்லரசு…தேச பக்தி என்று இவற்றைப் பற்றி கதைகளையும், பொய்களையும் அள்ளி விட்டுக் கொண்டு இருக்கின்றனர்.  அதனால்  பெரும்பணத்தை கொள்ளை அடித்து கொழுத்து உப்பியும் போயும் இவர்கள் திரிகின்றனர்..
நீரை சேமிக்கும் ‘புதிய நுட்பங்களை’ உலகமயமாக்கலுக்கு பின்:
.1. பிளாஸ்டிக் புட்டி நீர்…. பல்வேறு கார்ப்ப்ரேட் கம்பெனிகள் ஓசோன் வாட்டர், மினரல் வாட்டர் .என்று பல பெயர்களில் இந்த பாட்டில் நீர்கள்  வந்துள்ளன.
2. கேன் வாட்டர்… சென்னை உள்ளிட்ட பெரு-நிறு நகரங்களில் குடிநீர், சமையல் வேலைகளுக்கு இதைதான் பயன்படுத்துகின்றனர்.
3. லாரி வாட்டர்…. சென்னை உள்ளிட்ட பெரு-நிறு நகரங்களில் எல்லா தேவைகளும் குண்டி கழுவது உள்ளிட்ட  இந்த நீர்தான் பயன்படுத்தப்படுகிறது.
4. வாட்டர் பாக்கெட் தமிழ்நாட்டின் எல்லா பெட்டி கடைகளிலும் குறிப்பாக, டாஸ்மார்க் கடைகளிலும் கிடைக்கும் குடிநீர்
5. அம்மா புட்டிக் குடிநீர் ஜெயா அரசின் சாதனையாக  முக்கியமாக இது பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது..இனி தண்ணீர் என்பது மக்கள் உரிமை அல்ல. பணம் கொடுத்து வாங்கும் சர்வீஸ்(PAID SERVICE) என்ற பன்னாட்டு கார்ப்பரேட்- உலக வங்கி திட்டத்திற்க்கா வடிவமைக்கப்பட்ட  திட்டம். பன்னாட்டு கம்பெனி அடிவருடிகளான அம்மா ஆட்சியின் திட்டம் ‘அம்மா புட்டி குடிநீர்’.
6.டேப் வாட்டர்.. ஒரு சின்ன குழாயை திருகி நீர் பிடிப்பது..சென்னை மக்கள் தொகையில் கால் பங்கு மக்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது..
என்பதான “புட்டிநீர் நாகரிகம்” தமிழ்நாட்டில் தனியார்மயமாக்கல் விளைவாக தமிழக மக்கள் மீது திணிக்கப்பட்டு வருகின்றது.
ஆனால்…. தமிழ்நாட்டில் மழை நீரை சேமிக்க ஏரிகள் மட்டுமல்ல….அதாவது உலகமயமாக்கலுக்கு முன்.. 80 - களுக்கு முன் மழை நீரை சேமிக்கும் நுட்பங்கள்:

(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்.
(2)
அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
(3)
ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.
(4)
ஆறு (River) - பெருகி ஓடும் நதி.
(5)
இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.
(6)
உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.
(7)
ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.
(8)
ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
(9)
ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.
(10)
ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
(11)
கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்களைக் கட்டிய கிணறு.
(12)
கடல் (Sea) - சமுத்திரம்.
(13)
கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
(14)
கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
(15)
கால் (Channel) - நீரோடும் வழி.
(16)
கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம், ஊருணி இவற்றுக்கு நீர் செல்லும் வழி.
(17)
குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.
(18)
குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.
(19)
குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
(20)
குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
(21)
குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
(22)
குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.
(23)
குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.
(24)
கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
(25)
கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
(26)
வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
(27)
கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.
(28)
சிறை அல்லது நீர்த்தேக்கம் (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
(29)
சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
(30)
சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்.
(31)
தடம் (Beautifully Constructed Bathing Tank) – அழகாக  நாற்புறமும் கட்டப்பட்ட குளம்.
(32)
தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.
(33)
தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.
(34)
திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.
(35)
தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.
(36)
தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
(37)
நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.
(38)
நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.
(39)
பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) – குளம், ஏரி, முள்ளம்களின் நடுவே அமைந்த கிணறு.
(40)
பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.
(41)
பொய்கை- தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
(42)
மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
(43)
மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
(44)
மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.
(45)
மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
(46)
வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்.
(47)
வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள் ஆகும்..
.(48) முள்ளம்  ..செம்பரம்பாக்கம் ஏரி பாசன கால்வாய்களில் மீன் பிடிக்க அமைக்கப்படும்  நீர்தேங்கும் அமைப்பு தெற்கு மலையம்பாக்கத்தில் இந்த அமைப்பு இருந்தது... 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு இது படிப்படியாக விவசாயத்துடன் அழிக்கப்பட்டு விட்டது

இவற்றைத் தவிர இன்னும் தமிழ் இலக்கியங்களில், கல்வெட்டுகளில்  பலவகையான நீர் நிலைகள் , நீரை சேமிக்கும் நுட்பங்கள் விவரிக்கப்படுகின்றன.
“நீரின்றி அமையாது உலகு” .என்பதை வெற்று வாய் சவடால் சொல்லாக அல்ல..  நீரையும்,  அதை சேமிக்கும் தொழில் நுட்பங்களையும் பழந்தமிழர்கள் அறிவியல்பூர்வமாக புரிந்து கொண்டு செயல்பட்டார்கள் என்பதற்கு இந்த நுண்ணிய கட்டமைப்புகள் வரலாற்றுச் சாட்சிகளாக கட்டியம் கூறுகின்றன.
நீரை பற்றி வளமான பொருண்மை நிறைந்த வாழ்வியலை தமிழ் சமூகம் கொண்டிருந்தது… இதற்கு அடிப்படையான காரணம் இயற்கையோடு இணைந்த பழந்தமிழர் வாழ்வியல்முறை.. அய்ந்திணை கோட்பாட்டு புரிதல்கள் இருந்தன.
இந்த அனுபவ அறிவியல் நுண்ணறிவினால் ..
உலக ஆண்டு சராசரி மழையளவு 840 மில்லி மீட்டர். இந்திய ஆண்டு சராசரி மழையளவு 1170 மி.மீ. கர்நாடகம் 732 மி.மீ. ஆந்திரம் 908 மி.மீ.  தமிழகத்தில் ஆண்டு சராசரி  ஜனவரி முதல் மே மாதம் வரை பொழியும் உபரி மழை 179 மி.மீ., ஜூன் முதல் செப்டம்பர் வரை பொழியும் தென்மேற்குப் பருவ மழை 307 மி.மீ., அக்டோபர் முதல் டிசம்பர் வரை பொழியும் வடகிழக்குப் பருவ மழை 439 மி.மீ. ஆக மொத்தம் 925 மி.மீட்டராகும்.
வடகிழக்கு பருவக் காற்றினால் மூன்று மாதங்களில் அதுவும் பெருமளவு புயல் மழையினால்  தமிழ்நாட்டிற்கு  அதிக அளவு நீர் கிடைக்கிறது.. தென்மேற்கு பருவக்காற்று போல் சமச்சீராக தொடர்ச்சியாக இல்லாமல்  மிகச் சில நாட்களில் சில மணிநேரங்களில் வடகிழக்குப் பருவ மழை கொட்டி விடும் இயல்புடையது. இப்படி பொழியை பெய்யும் மழை நீர் வேகமாக ஓடி கடலில் கலந்து மனிதர்களுக்கு பயன்படாமல் போகின்றது. இந்த யதார்த்தை  உணர்ந்து வீணாக கடலில் கலக்கும் மழைநீரை சேமிக்க இத்தகைய அறிவியல் நுட்பமுடைய கட்டுமான நீரியல் அமைப்புகளை  பழந்தமிழர்கள் உருவாக்கினார்கள்.  பல நூறு ஆண்டுகளாக உழவுத் தொழிலையும், கால்நடை வளர்ப்பையும் பெருக்கி செழிப்பாக்கினர்.  இதன் மூலம் வாழ்வாதார செல்வங்களை பெருக்கி பெருவாழ்வு வாழ்ந்தார்கள். குடிநீர் தேவையையும்  பூர்த்தி செய்தனர். பல்லுயிர் இயற்கைச் சூழலை வளமாக்கி பெருக்கினர். (இவற்றில் உள்ள சாதிய, வர்க்கரீதியிலான முரண்கள், பங்கீடுகள் தனியாக புரிந்த கொள்ள வேண்டிய முக்கிய ஒன்றாகும்.)
இனி ஏரிகள் பொறியமைப்பையும் செம்பரம்பாக்கம் ஏரியை பற்றியும் காண்போம்!!

தமிழ்நாட்டின், தமிழக மக்களின், நமது முன்னோர்களின் பெருமைகள், பாரம்பரியம் என்பது கங்கை கொண்டான், கடாரம் வென்றான்  ஆக்கிரமிப்பு போர்களின் வெற்றிகளை கொண்டாடுவதல்ல.. 
மனித நாகரிக வளர்ச்சிக்கான அவசியமான சூழல் கட்டமைப்புகள், நுண்ணிய பொறியமைப்புகளை தங்கள் உழைப்புத் திறனால், அறிவு நுட்பத்தால் கண்டறிந்தது மேம்படுத்தியதுதான் கொண்டாடப்பட வேண்டும்.  மருத்துவம், கட்டிடம், விவசாயம், கால்நடை..என்று  பலப்பல அறிவார்ந்த நுண்ணிய பொறியமைப்புகள்  என எண்ணற்ற துறைகளில் நமது முன்னோர்களின் மகத்தான பங்களிப்புகள்  வரலாற்றின் வெளிச்சத்திற்கு வராமல் இருக்கின்றன.
இவற்றில் முக்கியமானது ஏரிகள், அதன் இணைப்புக் கால்வாய்கள், வடிகால்கள், நீர்நிலைகளின் ஒருங்கிணைந்த பொறியமைப்புகள் ஆகும். பெரும்பாலும் வற்றாத ஆறுகள் ஏதும் பாயாத தமிழ்நாட்டில் நிலவியல் வடிமைப்பை ஆராய்ந்தனர். தமிழ்நாட்டின் பெரும்பகுதிகள் கடினப் பாறைகளால் ஆனது. இந்தப் பாறைகளில் தண்ணீர் எளிதாக இறங்கி சென்று சேராது. அது ஒரு நீண்ட செயல். இயற்கையாகவே, தமிழகத்தின் புவியியல் அமைப்பின்படி நிலத்தடியில் நீர் இருப்பது மிகவும் குறைவு. இப்போது நாம் உறிஞ்சும் நிலத்தடி நீர் பல ஆயிரம் ஆண்டுகாலத்தில் உள்ளிறங்கி பாறைகளின் இடுக்குகளில் தேங்கியது. ஆறுகளில் ஓடும் நீரால் மட்டுமே நிலத்தடி நீர் பெரும் அளவில் தமிழ்நாட்டில் சேமிக்கப் படுவதில்லை.  மழை நீர் 26 % அளவிற்கு பூமிக்குள் சென்றால்தான் நிலத்தடி நீர் ஊறும். இந்த உண்மையை அனுபவ பூர்வமாக உணர்ந்ததால் நம் முன்னோர்கள் பயன்படுத்தி நீரை தோக்கி வைக்கும் சிறப்பான ஏரிகள் அமைப்பை  இரண்டாயிரம் ஆண்டுகளாக படிப்படியாக உருவாக்கினார்கள். ஆகவே, மனித உழைப்பின், நமது முன்னோர்களின் மாண்புறு படைப்புகளில் மகத்தான  போற்றப்பட வேண்டியது அவர்கள் உருவாக்கிய ஏரிகளும்-ஆறுகளும்-தாங்கல்களும்- கால்வாய்களும்-குளங்களும் இணைந்த நன்னீர் அமைப்பு முறைமையாகும்..
அதனினும் மகத்தானது  அவர்கள் இயற்கையை மனிதநேயமாக்கியதும்,  மனிதனை இயற்கைமயமாக்கியதுமாகும். செயற்கையான குளங்களை இயற்கையான ஆறுகளுடன், இணைத்த நல்வினைப் பயன்தான் இன்று நாம் பயன்படுத்தும் தமிழ்நாட்டின் நீராதாரங்களாக தொடர்ந்து பலனளித்து கொண்டிருக்கின்றன.

ஏரிகள் பொறியமைப்பும் செங்கல்பட்டு மாவட்டமும்
தமிழகத்தில் அரசாங்கத்தின் கணக்குப்படி 39,202 ஏரிகள் இருக்கின்றன. அவற்றில் 100 ஏக்கருக்கும் அதிகமான ஆயக்கட்டு கொண்டவை 18,789. இவை பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. 100 ஏக்கருக்கும் குறைவான ஆயக்கட்டு கொண்டவை 20,413. இவை உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இவை தவிர ஊருக்கு ஊர், கிராமத்திற்கு கிராமமென்று கோயில் குளங்கள்,  ஊருணிகள்  பல்லாயிரக்கணக்கில் இருக்கின்றன. இவற்றின் மொத்த நீர் கொள்ளளவு 390 டி.எம்.சி. இது சாதாரண அளவு அல்ல; ஒரு டி.எம்.சி. தண்ணீர் என்பது 100 கோடி கனஅடி தண்ணீர். எவ்வளவு பிரமாண்டதொரு நீர்சேமிப்பு! இது தமிழகத்தின் மொத்த அணைக்கட்டுகளின் நீர்க் கொள்ளளவான 243 டி.எம்.சியை விட அதிகம் என்பதில் இருந்து  நம் முன்னோர்கள் வெட்டிய ஏரிகளின்  சிறப்பை, பெருமதிப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சென்னை அதனை சுற்றி உள்ள பகுதிகளில் சராசரி ஆண்டு மழை அளவு 1300 மி.மீட்டராகும்.  பெரும்பாலும் வட கிழக்கு பருவ மழையையே  இது நம்பி இருக்கின்றது. ஏரிகள் மாவட்டம்  என்று அழைக்கப்பட்ட பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் (இன்றைய காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்கள்)  3700 ஏரிகள் இருந்தன. பாலாறு, கூவம் ஆறு, குசஸ்தலை (கொற்றலை) ஆறு, ஆரணி ஆறு என்று இந்த மாவட்டங்களிலும் சென்னையிலும் பாயும் ஆறுகள் இந்த 3700 ஏரிகளுடன் எண்ணற்ற வரத்து-போக்குக் கால்வாய்கள் மூலம் இயற்கையாகவும், மனித உழைப்பின் – அறிவின் பயனாக நீரியல் கட்டுமான பொறியியல் நுட்பத்தின் அடிப்படையிலும் இணைக்கப்பட்டு இருக்கின்றன.

இன்னும் குறிப்பாக,  காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் 912 ஏரிகள் உள்ளன. ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் 1,083 ஏரிகள் உள்ளன. இதில், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் குடிநீர் ஆதாரம் மற்றும் பாசனத்துக்குத் தண்ணீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக மதுராந்தகம், தென்னேரி, உத்திரமேரூர் ஏரி, திருபெருமந்தூர் ஏரி, பிள்ளைபாக்கம் ஏரி, சோமங்கலம் ஏரி, மதுரமங்கலம் ஏரி மற்றும் கொளவாய் ஏரிகள் உள்ளன.
காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தாமல் ஏரி, காஞ்சி நகரப் பகுதியில் செல்லும் வேகவதி ஆறு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட எல்லைகளில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஏரியும், பிள்ளைப்பாக்கம் ஏரியும் சவுத்திரி கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியுடன் இணைக்கப்பட்டுள்ளன..
இந்த மாவட்டத்தின் மையப்பகுதியில் செல்லும் பாலாறு நதி காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வழியாகக் கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிராமத்தில் கடலில் கலக்கிறது. ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் ஆகிய வட்டங்களில் உள்ள ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீர், தென்னேரியில் கலந்து அங்கிருந்து செங்கல்பட்டு நகரையொட்டி செல்லும் நீஞ்சல் மடுவு கால்வாயில் பயணித்துப் பழவேலி கிராமத்தில் பாலாற்றில் கலக்கிறது. திருப்போரூர் வட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தின் ஒரு பகுதி ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீர் கொளவாய் ஏரிக்குச் சென்று, புலிப்பாக்கம் கிராமத்தில் உள்ள கலங்கல் வழியாக நீஞ்சல் மடுவில் கலக்கிறது. பெருங்களத்தூர், நந்திவரம், மண்ணிவாக்கம், ஆதனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏரிகளின் உபரி நீர் மணிமங்கலம் வழியாக அடையாற்றில் கலக்கிறது.
.உத்திரமேரூர் ஏரியின் உபரி நீர் இரண்டு பகுதிகளாக வெளியேறுகின்றன. இதில் ஒரு பகுதி தண்ணீர் சங்கிலி தொடராக அப்பகுதியில் உள்ள கிராம ஏரிகளை அடைந்து கரிக்கிலி, வெள்ளப்புத்தூர், கட்டியாம்பந்தல், வேடந்தாங்கல் ஏரிகளை நிரப்பி கிளியாறு மூலம் மதுராந்தகம் ஏரியை அடைகிறது. மதுராந்தகம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் அனைத்தும் மீண்டும் கிளியாற்றில் சேருகிறது. இவ்வாறு வெளியேறும் தண்ணீர், கடப்பேரி, விழுதமங்கலம் உள்ளிட்ட 9 கிராமங்களுக்கு நடுவே பயணித்து ஈசூர் கிராமத்தில் பாலாற்றில் கலந்து கடலுக்குச் செல்கிறது.இவை தவிர திருப்போரூர் வட்டத்தில் உள்ள 17 ஏரிகள், சென்னை புறநகர் பகுதிகளாகக் கருதப்படும் கேளம்பாக்கம், தையூர், கோவளம் வழியாகப் பக்கிங்காம் கால்வாயில் கலக்கின்றன.
தற்போதைய தொடர் மழையில் ( 2015, டிசம்பர் ) முழு கொள்ளளவை எட்டிய நிலையில் இந்த அனைத்து ஏரிகளும் உள்ளன.. 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஏரிகள் மராமத்து செய்து சீரமைக்கப்படாததால் இவைகளின் கரைகள் பலவீனமாக இருக்கின்றன. இந்த மாமழையினால் சில ஏரிகளில் உடைப்புகள்  ஏற்பட்டன.  மேலும் இந்த மாவட்டங்களில் மத்திய-மாநில அரசுகளின்  புதிய பொருளாதார கொள்கை காரணமாக இந்த ஏரிகள் பெரும்பாலும்  கார்ப்பரேட் கம்பெனிகள் அல்லது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு உதிரிபாகங்கள் செய்யும் தொழிற்சாலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதிலும் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில்  திட்டமிட்டு இந்த தொழிற்சாலைகள் கட்டப்பட்டு உள்ளதை சாதாரணமானது என்று கடந்து செல்ல முடியாது. 1.ஏரிகளில் உள்ள நீரை இலவசமாக எடுத்துப் பயன்படுத்தவும், 2.ஆலைகள் கழிவுநீரை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஏரிகளில் கலக்கவும், 3.நாளடைவில் ஏரிகளை ஆட்சியாளர்கள் – அதிகாரிகளின் துணையுடன் ஆக்கிரமிப்பது என மூன்று சதிதிட்டங்கள் இதில் இருக்கின்றன..
இந்த  மாமழையில் ( 2015, டிசம்பர் ) ஏரிகள் நிரம்பியதால் நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள தங்கள் தொழிற்சாலைகளை பாதுகாக்க,  தங்கள் சுயநலனுக்காக  இந்த ஏரிகளில் திட்டமிட்டு செயற்கையாக உடைப்புகளை ஏற்படுத்தினர். அல்லது  ஏரி நீரை பல வழிகளில் வரைமுறை இல்லாமல் அதிகாரிகள், உள்ளூர் நிர்வாகத்தின் துணையுடன் திறந்து விட்டனர்.  சென்னை பெருவெள்ளத்திற்கு பின்னணியில் தொழிற்சாலைகள் நிர்வாகங்கள் இருந்ததைப் பற்றி ஓட்டு கட்சிகளோ, ஊடகங்களோ தப்பி தவிறியும் வாயை திறக்க வில்லை.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கீழ் 587 ஏரிகள், ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 649 ஏரிகள் என 1,236 ஏரிகள் உள்ளன. மாவட்டப் பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள ஏரிகளில் 337 ஏரிகள் கொற்றலை ஆறு வடிநிலக் கோட்டத்தின் கீழ் உள்ளன. ஆரணி ஆற்றின் வடிநில உப கோட்டத்தின் கீழ் 250 ஏரிகள் உள்ளன. சென்னைக்குக் குடிநீர் தரும் பூண்டி, சோழவரம், புழல் ஆகிய 3 ஏரிகள் தவிர மற்ற ஏரிகள், மழைக்காலத்தில் சங்கிலி தொடர் ஏரிகளாக நிரம்பி உபரி நீர் கூவம், கொற்றலை, ஆரணி, நந்தியாறு நதிகள் மூலம் எண்ணூர், நேப்பியர் பாலம், பட்டினப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடலில் கலக்கின்றன.
செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரி சென்னைக்கு சுமார் 30 கி.மீ. தொலைவில் இருக்கின்றது, காஞ்சிபுரம் மாவட்டத்தில்  திருப்பெருமந்தூர் வட்டத்தில் பூந்தமல்லி, குன்றத்தூர் அருகில் உள்ள பழம் பெரும் ஏரியாகும். புவியியல் அமைப்பின்படி காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்களின் கிழக்கு திசை கடைகோடி மையத்திலும் , சென்னை மாவட்டத்தின் தென்மேற்கின் துவக்கத்திலும் இந்த ஏரி அமைந்துள்ளது. , பாலாறு, கூவம், ஆரணி, கொற்றலை ஆறுகளும், காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்களின் 3700 ஏரிகளும் இறுதியில் நேமம் ஏரி, திருபெரும்ந்தூர் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரி ஆகியவற்றுடன்  அனைத்து திசைகளிலும் வலைப்பின்னல்களாய் இணைக்கப்பட்டு உள்ளன. , பின் அங்கிருந்து அதாவது திருபெரும்ந்தூர் ஏரி, நேமம் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரி ஆகியவற்றின் உபரி நீரானது முறையே 1.சவுத்திரிகால்வாய் 2. புதிய பங்காரு கால்வாய் 3.கம்ப கால்வாய்  மூலம் செம்பரம்பாக்கம் ஏரியுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேட்டு நிலப்பரப்பில் இருந்து  கடற்கரை நோக்கி சரியும் நில அமைப்பினைப் புரிந்து,  எந்த செயற்கையான உந்துவிசையும் செலுத்தாமல் இயற்கையாக பள்ளத்தை நோக்கி பாயும் நீரின் இயல்பை திறமையாகப் பயன்படுத்தி இந்த பெரும் வலைப்பின்னல் நீர்மேலாண்மை அமைப்பு இயக்கப்பட்டன. இந்த இணைப்பு பல்லாயிரம்  ஆண்டுகளுக்கு முன்பான இயற்கை நிகழ்வாக இருந்திருக்க வேண்டும். இயற்கையான நீரோடும் விசையை தன்வயப்படுத்தி மாபெரும் இந்த நீர்பாசன கட்டமைப்பை பழந்தமிழர்கள் உருவாக்கி பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தி வந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்து ஏரிகளின் உபரிநீர் திருபெரும்ந்தூர் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரிகளின் மூலமும், திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பல ஏரிகளின் உபரிநீர் நேமம் ஏரி வழியாகவும் செம்பரம்பாக்கம் ஏரியுடன்  இணைக்கப்பட்டு உள்ளன.  இப்படியாக தங்கள் அனுபவத்தினால் புரிந்து முறைப்படுத்தி இயற்கையை தன்வயப்படுத்தி வளமும், வாழ்வையும் செம்மையாக்கும்  அறிவியலை கண்டார்கள் நம் பழந்தமிழர்கள்..ஆனால் இன்றைய மத்திய-மாநில ஆட்சியாளர்கள் தங்களது ஏகாதிபத்திய ஆதரவு கொள்கைகளால், தீங்கான கார்ப்பரேட் அறிவியல் முறைமையினால் இயற்கையை நாசப்படுத்தி  நீராதாரங்களை ஆக்கிரமித்து சென்னையில் பெரு வெள்ளத்தை - பேரிடரை ஏற்படுத்தியுடன் மட்டுமல்ல   அந்த பேரிடரிலும் உதவி, மீள்கட்டுமானம், மீள்குடியமர்வு என்ற பெயர்களில் பெரும் கொள்ளை இலாபம் பார்க்க முயல்கின்றனர்.


சென்னை நகரின் குடிநீர்த் தேவையை முக்கியமாக பூர்த்தி செய்யும் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 364.5 கோடி கனஅடி (3645 மி.க.அடிகள் mcft) ..அதாவது 24 அடி உயரத்துக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் தேக்கப்படும்.. .இந்த ஏரியினுடைய  பரப்பளவு 13 ஆயிரம் ஏக்கர். இதன் கரையின் நீளம் 9.5 மைல்கள்..இதன் நீர்பரப்பளவு 9.5 சதுர மைல்கள் (John P. Mencher, Agriculture and Social Structure in Tamil Nadu, Bombay, நூல்) இதில் சுதந்திரமான நீர்பிடிப்பு பகுதி 77.13 சதுர கிலோமீட்டர்களும், துணை நீர்பிடிப்பு பகுதி 357.42 சதுர கிலோமீட்டர்களும் கொண்டுள்ளது என ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. கடல் மட்டத்தில் இருந்து  செம்பரம்பாக்கம் ஏரி 85 அடி உயரத்தில் இருக்கின்றது. 

செம்பரம்பாக்கம் ஏரியில் எட்டு நீர்பாசன மதகுகளும், இதிலிருந்து செல்லும் பதினைந்திற்கும் மேற்ப்பட்ட பாசன கால்வாய்களும் இருந்தன. அவை பூந்தமல்லி மதகு, மேப்பூர் மதகு, செட்டி மதகு அல்லது மணப்பாக்கம் மதகு, கோண மதகு அல்லது மலையம்பாக்கம் மதகு, பெரிய மதகு, குன்றத்தூர் மதகு, நத்தம் மதகு, சிறுகளத்தூர் மதகு போன்றவைகளாகும். இந்த நீர்பாசன மதகுகள் இன்று எந்த பராமரிப்பும் இன்றி சிதிலமடைந்து கொண்டிருக்கின்றன..  இந்த பாசன கால்வாய்கள் அனைத்து கட்சிகளிலும் உள்ள அதிகாரம் படைத்தவர்களால், அல்லக்கைகளால் குறிப்பாக திமுக, அதிமுக க்ட்சிகளின் உள்ளூர் மட்ட தலைவர்க்ளால் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி சுருங்கி வருகின்றன. ஒரு சில கால்வாய்கள் காணாமலே போய் விட்டன. பொதுபணித்துறை நிர்வாகமும் இந்த ஆக்கிரமிப்பிற்கு துணை போகின்றன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இவைகளில் இருந்து சென்ற பதினைந்து பாசனகால்வாய்கள் 37 கிராமங்களில் உள்ள 13,223 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு  சென்றன.  இவற்றின் பயனாக மறைமுகமாக பல ஆயிரம் மானாவாரி நிலங்கள் பலன் பெற்றன. பல ஆயிரம் டன்கள் உணவுப்பொருள்களை உற்பத்தி செய்தன. முப்போகமும் செந்நெல் விளையும் இந்த பூமி இன்று வளர்ச்சியின் பெயரில் கான்கிரீட் காடுகளாக மாற்றப்பட்டு விட்டன.

இயல்பாகவே கடினப் பாறை நிறைந்த இப்பகுதி முழுவதும் நிலத்தடி நீர் நிலத்திற்குள் ஊருவதற்கு செம்பரம்பாக்கம் ஏரியின் பிரமாண்டமான நீர்பிடிப்புத் தொகுப்பு காரணமாக இருந்து கொண்டிருக்கின்றது. தொண்டை மண்டலத்தின் வளமான பகுதியான செம்பரம்பாக்கம் ஏரி,,  நேமம் ஏரி, திருபெரும்ந்தூர் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரிகளின்  நீர்பாசன மிகுந்த பல்லாயிரம் ஏக்கர்கள் விரிந்த விவசாய பகுதிகளாகும்.  சென்னை  மக்களுக்கு பல நூற்றாண்டுகளாக சோறு போட்டது  தஞ்சை தரணி அல்ல. இந்த ஏரிகளின்  இந்த விவசாய பகுதிகளாகும். இந்த வரலாறும், உண்மையும் இன்று மறக்கடிக்ப்பட்டு, மழுங்கடிக்கப்பட்டு வருகின்றன.

2015 சென்னைப் பேரிடர் செயற்கையானது

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் பரப்பு பகுதி திருவள்ளுவர் மாவட்டத்திலும், நீர்பாசன பகுதி காஞ்சிபுரம் மாவட்டத்திலும், உபரிநீர் வடிகால் பகுதி சென்னை மாவட்டத்திலும் இருக்கின்றன. செம்பரம்பாக்கம் ஏரி கொசஸ்தலை ஆறு வடிகால் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலும், ஏரியின் நீர் சென்னை குடிநீர் வழங்கல்துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழும் உள்ளன. இப்படி பல நிர்வாகங்கள் இதில் இணைந்துள்ளதால் காஞ்சிபுரம் , சென்னை மாவட்டங்களின் ஆட்சியாளர்கள் இணைந்துதான் உபரிநீர் வெளியேற்றம் பற்றி திட்டமிட வேண்டி உள்ளது.


தற்பொழுது செம்பரம்பாக்கம் ஏரிக்கு  ஆறு கலங்குகள் உள்ளன. இதில் ஐந்து கண்கள் கொண்ட புதிய கலங்கு 80களின் ஆரம்பத்தில் கட்டப்பட்டது. 19 கண்கள் கொண்ட கலங்கும் உள்ளது. இந்த இரு கலங்குகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர்தான் வழுதலம்பேடு வழியாக திருநீர் மலை அருகில் அடையாறில் கலக்கின்றது. அங்கிருந்து அனகாபுத்தூர், விமான நிலையம், மணப்பாக்கம், ஈக்காடு தாங்கல்,  சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் வழியாக கடலில் சென்று இந்த உபரிநீர் கலக்கின்றது.

செம்பரம்பாக்கம் ஏரியின் இரண்டு தரைமட்ட கலங்குகள் வெங்காடு ஏரி அருகில் குன்றத்தூர் – திருபெருமந்தூர்  நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி குறிப்பிட்ட ( 23 அடிகள் )கொள்ளளவு வந்தவுடன் இந்த இரண்டு தரைமட்ட கலங்குகள் வழியாக தானாகவே உபரிநீர் வெளியேறும். இந்த உபரிநீரும், சோமங்கலம் ஏரி உபரி நீரும் வேறு இரு ஓடைகள் வழியாக  திருமுடிவாக்கம் வழியாக அடையாற்றில் கலக்கும்.. இந்த இரண்டு தரைமட்ட கலங்குகள் வெளியேற்றிய உபரி நீரை இந்த 2015 பேரிடரில் செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீராக அரசோ, பொதுப்பணிதுறையோ, எதிர்கட்சிகளோ,  ஏன் எந்த ஊடகங்களும் கூட  ஒரு பொருட்டாக கணக்கில் கொள்ளவில்லை.. விவாதத்தில், செய்திகளில் வரவில்லை. ஏனெனில் செம்பரம்பாக்கம் ஏரியின் பரந்திருந்த நீர்பிடிப்பு பகுதிகள் புறம்போக்கு நிலங்கள் என்ற பெயரில் ஹீண்டாய் பன்னாட்டு கம்பெனிக்கும்,  பன்னாட்டு கம்பெனிகளின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதிக்கு தமிழக அரசால் ஆக்கரமிக்கப்பட்டு தாரைவாக்க்கப்பட்டு விட்டது. போருர் இரட்டை ஏரிகளில் ஒன்றை இராமசந்திரா மருத்துவ கல்லூரிக்கு உடையார் என்ற தனிநபர் ஆக்கிரமிக்க எம்.ஜி.ஆர் ஆட்சி எப்படி துணை போனதோ அதேபோல்தான் இங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இந்த உண்மையை மக்களுக்கு தெரியாமல் பொதுபணிதுறையும், தமிழக அரசும் தொடர்ந்து மறைத்து வருக்கின்றன.

ஐந்து கண்கள் கொண்ட புதிய கலங்கும், 19 கண்கள் கொண்ட கலங்கும் வெளியேற்றிய 30 ஆயிரம் கனஅடி உபரிநீர் மட்டுமே செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீராக கணக்கில் கொள்ளப்பட்டு இன்றுவரை விவாதத்தில், செய்திகளில் இருப்பது, தகவல்கள், புள்ளிவிவரங்கள் போதாமையை உணர்த்துவதாக இருக்கிறன..  எப்படி 30 ஆயிரம் கனஅடி உபரிநீர்  ஒரு இலட்சம் கன அடிநீராக .. …. ஒன்றரை இலட்சம் கன அடிக்கும் மேலானதாக மாறியது..? பெரு வெள்ளம் அடையாற்றில் எப்படி வந்தது. என்பன ஆயிரம் டாலர் கேள்விகளா என்ன..? உண்மையை பகுத்தறிவுடன், நேர்மையுடன் அணுக  வேண்டும்..அவ்வளவே..!!
 சில பொறியாளர்கள் செம்பரம்பாக்கம் ஏரி மொத்த கொள்ளளவு பற்றி  தவறான தகவல்களை அளிக்கின்றனர். செம்பரம்பாக்கம் ஏரி மொத்த  கொள்ளளவு 364.5 கோடி கனஅடி (3645 மி.க.அடிகள் mcft)  என்பது  பொதுபணித்துறை செம்பரம்பாக்கம் ஏரியில் நிரப்பி வைக்கும் அளவைத்தான் குறிக்கின்றது. அதாவது செம்பரம்பாக்கம் ஏரி 24 அடிகள் என்பதும் ஏரியில் நிரப்பி வைக்கும் அளவைக் குறிக்கின்றது.. உண்மையில் செம்பரம்பாக்கம் ஏரி  40 அடிகள் வரை உயரம் உடையது.. 30 அடிகளுக்கு மேல் செம்பரம்பாக்கம் ஏரி நீரை தேக்கி வைக்க முடியும்… 1976 க்கு முன்பு வரை 22 அடிகள் நீர் தேங்கி வைக்கப்பட்டது. பின்பு ஏரியின் கரைகளை உயர்த்துமாறு மக்கள்  விடுத்த கோரிக்கைகள், போராட்டங்களை அடுத்து ஆட்சியாளர்களால் பலமுறை பலப்படுத்தப்பட்டு, அகலப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டது. ஆனாலும் கூட 24 அடிகளுக்கு மேல் நீரை தேக்கி வைக்க பொதுப்பணித்துறை இன்றுவரை முயற்சி செய்ய வில்லை. உண்மையில் 30 அடிகளுக்கு மேல் நீரைத் தேக்கி வைக்கமுடியும்.என்பது செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள சின்ன குழந்தைக்குக் கூட தெரியும்..

நீர் தேக்கம் - நீர்பிடிப்பு பகுதிகளில் (சுதந்திரமான நீர்பிடிப்பு பகுதி 77.13 சதுர கிலோமீட்டர்கள், துணை நீர்பிடிப்பு பகுதி 357.42 சதுர கிலோமீட்டர்கள்) ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள ஹூண்டாய் மோட்டார் கம்பெனி போன்ற  பெரும் கம்பெனிகள், சிப்காட் வளாகம், ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் இருப்பதால் 24 அடிகளுக்கு மேல் நீரை தேக்கி வைத்தால் அவை நீரில் மூழ்கி விடும். அதனால்தான் 24 அடிகளுக்கு மேல் நீரை தேக்கி வைத்தால் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து விடும் என்ற பச்சை பொய் திட்டமிட்டு இந்த ஆக்கிரமிப்பாளர்களா பரப்ப படுகின்றது. ஊடகங்கள் இதற்கு துணை போகின்றன . முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்தினால் உடைந்து விடும் என்ற கேரள அரசின் கதைதான் இங்கும் தமிழக அரசால் கடைபிடிக்கப்படுகின்றது. 30 அடிகள் வரை நீரை தேக்கினால்  இந்த கார்ப்பரேட தொழிற்சாலைகள் ஆக்கிரமித்துள்ள நீர்பிடிப்புப் பகுதிகள் மூழ்கும் என்பதால் ஆட்சியாளர்கள்-அதிகாரிகள் கார்ப்பரேட் லாபிக்கு அடிபணிந்து நீரைத் தேக்க மறுக்கிறார்கள்.. இதனால் சென்னை மக்களின் பலகோடி கன அடிகள்  குடிநீரை  விரயம் செய்கின்றனர்.. இயற்கை அளிக்கும் பெருமதிப்புள்ள மழைநீர் வளத்தை வீணாக உபரிநீராக்கி கடலில் கலக்க விடுகின்றனர். கோடை காலங்களில் சென்னை மக்கள் குடிநீருக்கு அலைய காரணமாக ஆட்சியாளர்கள்-அதிகாரிகள் கார்ப்பரேட் லாபியர்கள் இருக்கின்றனர்.

அரசு எந்திரத்தின் செயலற்ற தன்மைக்கு சப்பைக்கட்டும் விதமாக முன்னாள் பொறியாளர்கள் சிலர் செம்பரம்பாக்கம் ஏரி 29 ஆயிரம் கன அடிகள் மட்டும் வெளியேற்றும் திறன் உடையது என்கிறார்கள். 23 அடி கொள்ளளவு இருக்கும் பொழுது ஏரி 29 ஆயிரம் கன அடிகள் வெளியேற்றும். ஆனால், 25, 27 அடி கொள்ளளவு இருக்கும் பொழுது செம்பரம்பாக்கம் ஏரி 29 ஆயிரம் கன அடி நீரா வெளியேற்றும்…? விசையும் அதிகரிக்கும் அதிக அளவு நீரும் வெளியேறும் என்பதுதான் உண்மை.. நீரின் உயரம் அதிகமானால் வெளியேறும் நீரின் அளவு மாறுபடும் 16 அடி கொள்ளளவு இருக்கும் பொழுது திறந்தால் 29 ஆயிரம் கன அடிகளுக்கு  குறைவாகவே  உபரி நீர் வெளியேறும்.. ஏனெனில் செம்பரம்பாக்கம் ஏரி இரு கலங்குகளிலும் ( 25 வழிகள்)  25 அடிகள் வரை  உயரம் உடையது கிடையாது.. நீரின் கன அடிகள் வெளியேற்றம் (உயரம் X  அகலம் X நீளம் = ) கன அளவு பொறுத்து மாறுபடும் என்பது  எட்டாம் வகுப்பு பாடம்.  2015 டிசம்பரில் இரு கலங்குகளின் வெளிபுறத்தில் ஏற்பட்ட மண்சரிவுகள் இந்த அதிகப்படியான 29 ஆயிரம் கன அடிகளுக்கு மேல்  நீர் வெளியேற்றப்பட்டதற்குச் சாட்சிகளாக  உள்ளன. மேலும் வெங்காடு இரண்டு தரை கலங்குகள் வழியாக தானாகவே பல ஆயிரங்கள் கன அடிகள் உபரிநீர் வெளியேவதை பொதுபணித்துறையும், கட்சிகளும், ஊடகங்களும் எந்த கணக்கிலும் கொண்டு வருவதில்லை.. இப்படி மக்களிடம் உண்மையை விளக்க வேண்டிய ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் அரை உண்மைகளை, புளுகுகளை, புள்ளிவிவர திசை திருப்பல்கள் சித்து வேலைகளை செய்கின்றனர்.

செம்பரம்பாக்கம் ஏரி பழைய வரலாறு

1000 ஆண்டுகளாக மனிதர்களுக்கு, தமிழர்களுக்கு சோறு போட்ட செம்பரம்பாக்கம் ஏரி  எப்பொழுது யாரால் கட்டப்பட்டது என்ற தெளிவான வரலாறு நம்மிடம் கிடையாது. பல்லவர் ஆண்ட காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாம் என்று தமிழ் வளர்ச்சி கழகம் வெளியிட்டுள்ள தமிழக நீர்வளம் என்ற நூலிலும், இன்னும் சிலர் 12 ஆம் நூற்றாண்டில் சோழர்காலத்தில் கட்டப்பட்டதாகவுமான  குறிப்புகள் உள்ளன.. அதுவும் முழுமையான வரலாற்று தகவல் இல்லை. நடிகை பிறந்த நாளை அறிந்துள்ள சமூகம்  நடிகன் பிறந்த நாளுக்கு பெருவிழா எடுக்கும் ஊடகங்கள் செம்பரம்பாக்கம் ஏரியின்  வரலாற்றை கற்றுக் கொடுப்பது கிடையாது.. இதுவரை எந்த பொதுப்பணிதுறை அதிகாரிகளும், வரலாற்று ஆய்வாளர்களும் எழுத வில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் வரலாறு- சூழலியல் கல்வியின் யாதார்த்த நிலைமையாக  உள்ளது. இந்த அளவிற்குதான் நமக்கு கற்பிக்கப்ப்டும் கல்விமுறை நடைமுறைகளோடு இணையாது தனியாக அந்தரத்தில் தொங்கி கொண்டு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு தேம்ஸ், அமோசான், கங்கை நதிகளைப் பற்றிய பாடங்கள் உண்டு. ஆனால் இங்குள்ள இயல்பு வாழ்வியலோடு இணைந்த செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி ஏரி, அடையாறு, ஆரணியாறு, பாலாறு, கொற்றலை(குசஸ்தலை ஆறு)  போன்றவைகளின் வரலாற்றை, உயிர்சூழலை, நீராதாரத்தை கற்பிக்கும் பாடங்கள்  பாட நூல்களில் உள்ளதா?  எந்தப் பாட திட்டத்திலும் உள்ளதா?  இல்லை… இதுதான் இன்றைய பரிதாபகரமான தமிழக கல்வி முறை.. பேரிடரின் பொழுது பெருவெள்ளம் இயற்கையால் நிகழ்ந்தது என்று அனைவரும் நினைப்பதற்கு இந்த வாழ்வியலோடு பொருந்தாத கல்வி முறையும் ஒரு காரணியாக உள்ளது.
 பாலாறு நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் அதன் பாசனப் பகுதிகளுக்கு வளம் சேர்த்ததாக இலக்கிய வரலாற்று குறிப்புகள் உண்டு. எடுத்துக்காட்டாக 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த பெரியபுராணம் என்ற நூலை எழுதிய பெரும்புலவர் சேக்கிழார் செம்பரம்பாக்கம் ஏரியின் தலைவாசலில் உள்ள குன்றத்தூரில் பிறந்து வாழ்ந்து… மறைந்தவர். இவர் கட்டிய சிவாலயமும், அதில் ஏராளமான கல்வெட்டுகளும் உள்ளன.  இவரை புகழ்ந்து சேக்கிழார் புராணம் எனும்திருத்தொண்டர் புராண வரலாறு”  என்ற   நூலை பதிமூன்றாம்  நூற்றாண்டை சேர்ந்த கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார்  எழுதி உள்ளார்.  அந்த  நூலில் குன்றத்தூரில் பாலாறு பாய்ந்து வளம் சேர்த்த வரலாற்றுத் தகவல் உள்ளது.

பாலாறு வளம்சுரந்து நல்க மல்கும்
பாளை விரி மணம்கமழ்பூஞ் சோலைதோறும்
காலாறு கோவியிசை பாட நீடு
களிமயில் நின்று ஆடுமியல் தொண்டை நாட்டு
நாலாறு கோட்டத்துப் புலியூரக் கோட்ட
நன்றிபுனை குன்றைவள நாட்டுமிக்க
சேலாறு கின்றவயல் குன்றத் தூரில்
சேக்கிழார் திருமரபு சிறந்ததன்றே!
 
இப்பாடல் பாலாற்று நீரினால் வளம் சுரந்து வயல்கள் செழித்த குன்றத்தூர் என்கின்றது.. புலியூர் கோட்டம் என்பது இந்த பகுதிகளின் பெயராகும். செம்பரம்பாக்கம் ஏரிக்கு  கடந்த நூற்றாண்டுகளில் வேறு பெயர் இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஏனெனில், நடைமுறையில் செம்பரம்பாக்கம் கிராமத்திற்கு இந்த ஏரியினால் பயன் பெரிதளவு கிடையாது. பிற்காலத்தில் .. ஆங்கிலேயர் காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரி என்று பெயர் மாற்றப்பட்டு இருக்கலாம்

பல நூற்றாண்டுகளாக பாலாற்று நீரை காவிரிப்பாக்கம் ஏரிக்கு கொண்டு செல்ல நம் முன்னோர் கால்வாய் வெட்டி பயன்படுத்தினர். வெள்ள காலங்களில் கொரம்பு  போன்ற தற்காலிக தடுப்பணைகளை அமைத்து பாலாற்று நீரை இந்த ஏரிக்கு கொண்டு சென்றனர். இதை கிழக்கிந்திய கம்பெனியர் 1858ஆம் ஆண்டில் 8,66,144 ரூபாய் செலவில்   நிரந்தர அணையாக கட்டி மேம்படுத்தினார்கள். இந்த அணையில் இருந்து காவிரிப்பாக்கம் ஏரி, மகேந்திரவாடி ஏரி, தூசி மாமண்டூர் ஏரி, சக்கரமல்லூர் ஏரிகளுக்கு பாலாற்று நீர் கொண்டு செல்வதற்கு அப்பொழுது கால்வாய்கள் வெட்டப்பட்டன. பாலாற்று நீரும், வடகிழக்கு பருவ மழையும் பெருகி இந்த ஏரிகள் நிரம்பும்.  தொடர்ந்து இந்த உபரிநீர் சங்கிலி தொடராக 324 ஏரிகள் நிரம்புமாறு  வலைப்பின்னல் கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டன. இந்த பாலாற்று அணை நீரானது கம்பகால்வாய் மூலம் திருபெருமந்தூர் ஏரி வரை பாய்ந்தது. இந்த திருபெருமந்தூர் ஏரியின் உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு  சவுத்திரி கால்வாய் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

பாலாற்று அணைக்கட்டு நீர் மற்றொரு கால்வாய் மூலம் திருவள்ளுர் மாவட்டத்தின் பல ஏரிகளை நிரப்பி இறுதியில் கொற்றலை ஆற்றில் கலக்கும்படி இணைக்கப்பட்டு இருந்தது. இந்த கொற்றலை ஆறு பூண்டி நீர்தேக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இப்படி பாலாற்று நீர் இரு வழிகளில் செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி நீர்தேக்கத்துடன் இணைந்து சென்னைக்கு குடிநீராக பயன்படுகின்றது.

பாலாற்றில் மணற்கொள்ளை அடிக்காமலும், இணைப்பு கால்வாய்களை சிதைத்து பட்டா போட்டு விற்க்காமலும், இந்த பிரமாண்டமான் நீர்மேலாண்மை பொறியமைப்பை முறையாக பராமரித்துக் கொண்டும் இருந்தால் சென்னைக்கு எக்காலத்திலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்காது. அண்டை மாநிலங்களில் பிச்சை எடுக்கும் அவசியம் நேரிட்டு இருக்காது. இதை நீரியியல் வல்லுநர் ஜனகராகஜ் அவர்கள் தனது பல்வேறு கட்டுரைகளில் விரிவாக எடுத்துரைக்கிறார்.

ஆங்கிலேய அதிகாரிகளால் 1877 - ல் வரையப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரியின் வரைபடமும்..இன்றைய செம்பரம்பாக்கம் ஏரி அமைப்பிலும் உள்ள வேறுபாடுகள் இதை நமக்கு உணர்த்துவதாக இருக்கின்றன.  ஆங்கிலேயர் காலத்தில் இருந்த செம்பரம்பாக்கம் ஏரியில் ஆறு கலங்குகள் இருந்துள்ளதாக இந்த வரைபடம் காட்டுகின்றன.. எம்.ஜி.ஆர் பங்களா தோட்டத்தின் அருகில் ஓடும் மணப்பாக்கம் ஓடையுடனும், போருர் ஏரியுடனும் இணைக்கப்பட்டிருந்த கலங்கு பிற்காலத்தில் பாசன மதகாக மாற்றம் கண்டது.  16 கண்கள் கொண்ட கலங்கு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்து. இது தானியியங்கி கலங்கலாக இப்பொழுது மாற்றப்பட்டு உள்ளது. மேலும், எண்பதாம் ஆண்டுகளில் ஐந்து நீர்வெளிபோக்கி கண்கள் கொண்ட தானியிங்கி புதிய கலங்கு ஒன்று கட்டப்பட்டன. 2006 - யில் சிப்காட்டிற்க்கும், சென்னை குடிநீருக்கும் ஒரு நீர்வெளிபோக்கி கோபுரம் கட்டப்பட்டு உள்ளன. ஆந்திராவில் இருந்து வரும் கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரியில் இருந்து  கிருஷ்ணா நீர் கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியுடன் இணைக்கப்பட்டு உள்ளது. 13,223 ஏக்கர் பரப்பளவு அளவிற்கு விவசாய பாசன நிலங்களுக்கு நீர் வழங்கிய இந்த ஏரி இன்று முழுமையாக குடிநீருக்கான ஏரியாக, ஹீண்டாய் பன்னாட்டு கம்பெனிக்கும்,  பன்னாட்டு கம்பெனிகளின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதிக்கான ஏரியாக நடைமுறையில் மாற்றப்பட்டு விட்டது. அத்துடன் இந்த தொழிற்சாலைகளின் எல்லாவிதமான இரசாயன கழிவுகளும் இந்த ஏரியின் குடிநீரில்தான் கலக்கப்படுகின்றன.

போருர் இரட்டை ஏரிக்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்குமான உறவு
பழைய பிரித்தானிய ஆவணங்கள் 1920யில் எடுக்கப்பட்ட வரைபட ஆதாரத்தின்படி 823 ஏக்கர் பரப்பளவுடன் போருர் இரட்டை ஏரி இருந்தது.  சென்னை-பெங்களுர் பூந்தமல்லி நெடுஞ்சாலையின்  இரு புறங்களிலும் நீர் பரப்பி நின்றதால் இதை இரட்டை ஏரி என்று காரணத்துடன் அழைத்தனர். இந்த ஏரிக்கு இரண்டு வழிகளில் நீர் வரத்துக்கள் இருந்தன. ஒன்று போருர் இரட்டை ஏரயின் மேற்கு முகமாக பரந்து விரிந்த அய்யப்பந்தாங்கலில் இருந்து பூந்தமல்லி வரை இருந்த நீர்ப்பிடிப்பு பகுதி. இந்த பகுதி குடியிருப்பு பகுதியாகி விட்டதால் இங்கு பொழியும் மழைநீர் போருர் இரட்டை ஏரிக்கு வருவதில்லை.. ஆனால் அரசு திட்டமிட்டு செயலப்டுத்தினால் நீர்ப்பிடிப்பு பகுதியை வேறுவகையில் புணரமைக்க முடியும். மற்றொன்று செம்பரம்பாக்கம் ஏரியின் பிரதான கால்வாய்களான மாங்காடு கால்வாய், மணப்பாக்கம் கால்வாய்களின் இணைப்பின் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் போருர் இரட்டை ஏரிக்கு வருகிறது. இந்த போருர் இரட்டை ஏரி நிரம்பினால் கலங்கு மூலம் நீர் வளசரவாக்கம் ஏரிக்கு ..பின்  இராமபுரம் ஏரிக்கு செல்லும்படி இணைப்பு கால்வாய்களை நமது முன்னோர் வடிவமைத்து இருந்தனர். வடபழனி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில் குளங்கள், குட்டைகளும் இதில் அடக்கம். இந்த ஏரி நீர் போருர், மவுளிவாக்கம், முகலிவாக்கம், மணப்பாக்கம் வரை பாய்ந்து இந்த பகுதிகளை நீர்வளம் மிகுந்த விவசாய பகுதிகளாக செழித்து விளங்க செய்திருந்தது. இந்த வலைப்பின்னல் நீரியல் முறையினால் பரந்து விரிந்த தென்சென்னை பகுதி முழுவதும்  நன்னீர் நிலத்தடி நீர்வளம் மிகுந்ததாக இருந்தது.   ஆனால் கருணாநிதி ஆட்சி காலத்தில்  திமுக அரசியல்வாதிகளால்,உள்ளூர் தலைவர்களால் படிப்படியாக வளசரவாக்கம் ஏரி, இராமபுரம் ஏரி ஆக்கிரமிக்கப்பட்டு பட்டா போட்டு விற்கப்பட்டது.
தன் பங்கிற்கு எம்.ஜி.ஆர்  ஆட்சியில் இந்த ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தன.  அறக்கட்டளை என்ற பெயரில் மருத்துவ கல்லூரி தொடங்கி பெரும் பணத்தை கொள்ளை அடிக்க  சாராய உடையார் போருர் இரட்டை ஏரியின் வடக்கு பகுதி முழுவது சிலநூறு ஏக்கர் பரப்பளவு ஏரியை ஆக்கிரமித்தார் . அதற்கு எம்.ஜி.ஆர்   சட்டங்களை எல்லாம் வளைத்து திரித்தி  போருர் இரட்டை ஏரியின் ஒன்றை பட்டா  போட்டு கொடுத்தார்.. போருர் இரட்டை ஏரி உள்ளிட்ட சென்னை மாநகருக்குள் இருந்த எட்டு ஏரிகள் பயன்பாடற்ற ஏரிகள் என சட்ட ஆணையை 80களில் எம்.ஜி.ஆர் ஆட்சி பிறப்பித்தது..இதற்கு தடையாக இருந்த இராமசந்திரன் போன்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளை வேறு இடங்களுக்கு மாற்றி விட்டு தனக்கு ஜால்ரா போடும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை எம்.ஜி.ஆர் ஆட்சி நியமித்தது. விவசாயத்திற்காக இந்த ஏரிகள் இருந்தாலும் நகரமயமாதலில் விவசாயம் மெல்ல அழிந்து  போனாலும் விவசாயத்தை விட அதிக தேவை நகரமயமாதல் விளைவாக மக்கள்தொகை அதிகமாகும் பொழுது அவர்களுக்கு குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கு நன்னீர் அவசியமாகிறது.. இந்த எட்டு ஏரிகள் அதன் இணைப்பு கால்வாய்கள் பாதுகாக்கபட்டு இருந்தால் சென்னை மாநகர் சுயதேவைக்கான நீர் தராளமாக கிடைத்திருக்கும்.  ஆந்திரா மாநிலத்திடம் கிருஷ்ணா நீருக்கு கையேந்தி இருக்க தேவை இருந்திருக்காது..கடல்நீரை குடிநீராக்குகிறோம் என்று கோடிக்கணக்கில் மக்கள்பணம் வீணக்கடிப்பட்டு இருக்கிறாது.
“போருர் இரட்டை ஏரி” ஒற்றை ஏரியாக  மாற்றப்பட்ட சுருக்கமான வரலாறு.
போருர் இரட்டை ஏரி என்பது சொல் பொதுமக்கள் பொதுபுத்தியில் இருந்து கடந்த 30 ஆண்டுகாலத்தில் ஆட்சியாளர்களால், ஊடகங்களால்  படிப்படியாக மறக்கடிக்கப்பட்டு விட்டது.
2015 ஜீன் மாதத்தில் 300 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஒற்றை போருர் ஏரிக்குள் உள்ள 17 ஏக்கர்  பரப்பளவு பகுதி இராமசந்திரா மருத்துவமனைக்கு சொந்தமானது என்று பொதுபணித்துறை அதிகாரிகள் பாகம் பிரித்து கொடுக்க 20 கோடி ரூபாய் செலவில் ஏரியின் குறுக்கே மண்ணை கொட்டி தூர்க்க முயன்றனர். சுற்றுசூழல் ஆர்வலர் தயாளன் இதை சமூக வலைத்தளங்களில் பதிய, பின் அது  செய்தியாக விரிவாக பகிரப்பட்டு ஊடகங்கள் கவனத்திற்கு சென்றது. அதிமுக கட்சியையும், பொதுப்பணித்துறை அதிகாரிகளையும்  தவிர மற்ற அனைத்து கட்சிகளும், குறிப்பாக கம்யுனிஸ்ட் கட்சிகளும், மக்கள் இயக்கங்களும் போருர் இரட்டை ஏரி அழிவில்  இருந்து காப்பாற்ற களத்தில் இறங்கி போராடி வருகின்றன.
 பசுமை தீர்ப்பாயம் பொதுப்பணித்துறை ஏரிக்குள் மண்ணை கொட்ட இடைக்கால தடை விதித்துள்ளது.  2015, ஜீலை மாதம்  30 ஆம் தேதி பொதுபணித்துறை அதிகாரி பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த பதில் ம்னுவில், “போருர் இரட்டை ஏரிக்குள் நீரில் அமிழ்ந்துள்ள  இந்த 17 ஏக்கர்  இராமசந்திரா மருத்துவமனை கல்லூரிக்கு சொந்தமானது என்றும் 1920யில் இருந்தே இந்த நிலம் தனியாருக்கு சொந்தமாக பட்டா போட பட்டுள்ளது என்றும், ஏரி நீர் பகுதிகள் எல்லாம்  ஏரி அல்ல..” என்று அயோக்கத்தனமாக கயவாளித்தனமாக கூறி உள்ளனர்.    ஆளும் அதிமுகவிற்கும் இராமசந்திரா மருத்துவமனை கல்லூரிக்கும் பொதுபணித்துறை உயர் அதிகாரிகளுக்குமான கள்ளக்கூட்டு அம்மணமாகி உள்ளது.
ஆனால் 2015 டிசம்பர் பெருவெள்ளம் ஏற்படுத்திய பேரிடர் நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதால், இந்த 17 ஏக்கர் ஏரி நிலம் இராமசந்திரா மருத்துவமனை கல்லூரிக்கு சொந்தமானது கிடையாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. சென்னை மக்கள் விழிப்புடன் இருந்து தொடர்ந்து இதை கண்காணிக்க வேண்டும்.. இல்லையெனில் போருர் இரட்டை ஏரி காணாமல் போனது போல இந்த ஒற்றை ஏரியும் ஆக்கிரமிக்கப்பட்டு விடும்.

அடையாறு -- செம்பரம்பாக்கம் ஏரிக்குமான பிணைப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாறு என்ற நதி பிறப்பதாக  தமிழக மக்களுக்கு சொல்லப்பட்டு  வருகின்றது.  இது  அரை உண்மைதான். அடையாறு மற்ற ஆறுகளைப் போல் ஒரு குறிப்பிட்ட மலையில், ஒரு குறிப்பிட்ட ஏரியில் உற்பத்தியாவதில்லை.. சென்னைக்கு மேற்கே கூடுவாஞ்சேரி அருகில் உருவாகும் ஒடை, சோமங்கலத்தில் இருந்து உருவாகும் மற்றொரு ஓடை, செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் ஓடை, மலைப்பட்டு ஏரியின் உபரிநீர் ஓடை, போருர் ஏரியின் உபரிநீர் பாயும் மணப்பாக்கம் ஓடை ஆகியனவைகள் இணைந்துதான் அடையாறு என்ற நதி மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இத்துடன் மணிமங்கலம்,ஏரி, பெருங்களத்தூர் ஏரி , நந்திவரம் ஏரி, மண்ணிவாக்கம் ஏரி, அத்தனூர் ஏரி, அத்தனேசேரி ஏரி, சோமங்கலம் ஏரி, அமரம்பேடு ஏரி, வெங்காடு ஏரி, வண்டலூர் ஏரி, ஊரப்பாக்கம் ஏரி, இரும்புலியூர் ஏரி, கூடுவாஞ்சேரி ஏரி, நாட்டரசன்பட்டு ஏரி, ஒரத்தூர் ஏரி, கண்ணந்தாங்கல் ஏரி, மாம்பாக்கம் ஏரி இன்னும் பிற ஏரிகளில் இருந்து வெளியேற்றப்ப்படும் உபரிநீரும் , இப்பகுதியில் உள்ள  மலைக்குன்றுகளில் மழைகாலங்களில் பெருகும் நீரும் இந்த அடையாற்றில் சிறு சிறு ஓடைகள் மூலம் வந்து சேருகின்றன. இதனால்தான் அடை மழை பெய்தால் உருவாகும் ஆறு என்பதால் அடையாறு என்ற காரணப்பெயரை நம் முன்னோர் சூட்டி இருக்கின்றார்கள். இந்த ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் அனைத்திலும் தொழிற்சாலைகள் உள்ளன என்பதை ஏற்கனவே சுட்டி காட்டி உள்ளோம்.

அடையாற்றில் ஒரு இலட்சம் கன அடிநீர் எப்படி பெருக்கெடுத்தது என்பதற்கு மேற்கண்ட அனைத்தையும் ஒருங்கிணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  அடையாற்றில் பெருவெள்ளம் வந்ததற்கு . செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீர் திறப்பு ஒரு காரணி மட்டுமே…   அதுவே முழுமையானது அல்ல !!

எனவே,
@ செயலற்ற அதிமுக ஆட்சியை, அதிகார வர்க்க நிர்வாகத்தை கடுமையாக விமர்சிக்க வேண்டும்.

@ ஏரிகள் வரலாற்றை , இந்த ஆறுகளின் முழுமையாக தொகுத்து இன்றைய  பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும்..

@ செம்பரம்பாக்கம் ஏரி என்பது ஒற்றை ஏரி அல்ல..3,700 ஏரிக்குழைந்தைகளின் தாய் என்பதை  மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
,இல்லையெனில் ஒரே ஒரு நாள் மழையில் வெள்ளம் வந்து சென்னை நகரை மூழ்கடித்து விட்டது என்று ஜெயா அம்மையாரும், அதிமுக ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் சொல்கின்ற பொய்களை மக்கள் நம்பத்தான் செய்வார்கள். அதிமுக – திமுக லாவணி கச்சேரிகளை ஊடகங்களும் அரங்கேற்றி  மக்கள் விரோத கொள்கைகளை, ஆட்சி அவலங்களை மறைத்து திசை திருப்பி மக்கள் உணர்வுகளை மழுங்கடிக்கவே செய்யும்.

@ 80களுக்கு பின்பு உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற பெயரில் விவசாயம் புறக்கணிக்கப்பட்டு இன்று முற்றிலுமாக காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்களில் அழிக்கப்பட்டு விட்டது. செம்பரம்பாக்கம் ஏரி உட்பட பல ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், வரத்து – போக்கு கால்வாய்களை ஆக்கிரமித்து  இருங்காட்டு கோட்டை சிப்காட், பிள்ளைப்பாக்கம் சிப்காட், திருமுடிவாக்கம் சிப்காட், ஒரகடம் சிப்காட்..என்று பத்திற்க்கும் மேற்பட்ட சிப்காட்கள் சங்கிலி தொடராக கட்டப்பட்டு உள்ளன. ஏராளமான குடியிருப்புகளும் இந்த ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், வரத்து – போக்கு கால்வாய்களின் பகுதிகளிலும் வரைமுறையற்றுக் கட்டப்பட்டு உள்ளன.
@ அதோடு இந்த ஏரிகள் அனைத்திலும் கடந்த 30 ஆண்டுகளுக்கு எந்த மராமத்து பணிகளும்  தூர்வார்தல்களும் நடைபெற வில்லை. செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி ஏரி, புழல் ஏரி, நேமம் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரிகளில் தூர்வாருவதற்க்காக ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்கள் பணம்  திமுக – அதிமுக ஆளும் கட்சியினரின் ஊழல்கள் காரணமாக அரைகுறையாகவே நடைபெற்றன என்பதற்கு ஊடக சான்றுகள் பல உள்ளன.

@ இத்துடன் அடையாறு முகாத்துவாரத்தில் தூர்வாராதது, உபரிநீரை வெளியேற்றுவதில் ஜெயா அரசின் அதிகார செருக்கு- அலட்சியம்.

@ பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளால் உண்டான செயற்கை அடைப்புகள்.

@ விமான நிலைய விரிவாக்கம் – வெளிவட்ட சாலை கட்டுமானங்கள்
… என்று பலவும் இணைந்து கொண்டன. ஓருங்கிணைந்த இந்த  முழு பின்னணியையும் முழுமையாக இணைத்து புரிந்து கொண்டால்தான்  சென்னை  பேரிடருக்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியும்.. வரலாறுகாணாத மழை’,, ‘இயற்கையின் சீற்றம்’, ‘மூன்று மாத மழை மூன்று நாளில்’ என்று  கதையாடல்களுக்குள் புதைந்து விட்டால் விதி விட்ட வழி என்று மக்கள் கருதும் துர்பாக்கிய நிலைக்குதான்  கொண்டு போக முடியும்

பேரிடர் குற்றவாளிகள் யார்?
எனவே, செம்பரம்பாக்கம் ஏரி தனது மடியில் உறங்கிய சென்னை மக்களின் உயிர்களை, உடைமைகளை, செல்வங்களை நாசம் செய்ய வில்லை. 
தமிழ்நாட்டை, டில்லியை ஆண்ட, ஆளும் கட்சிகளும் அவர்களின் நாசாகார உலகமயமாக்கல் கொள்கைகளும் தான் சென்னை பெருவெள்ளத்திற்கு உண்மையான காரணம்.
அம்மா, அன்னை , தாய் .. போன்ற சொற்களின் பொருண்மையை, அன்பை, உள்ளார்ந்த அர்த்ததை அநர்த்தமாக்கிய அதிமுக ஆட்சி.. அம்மா ஆட்சி அல்ல..ஸ்டிக்கர் ராணி ஆட்சியானது, செய்ய வேண்டியதைச் செய்யாமல், சட்டக் கடமைகளை ஆற்றாமல் இருந்ததை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
 வரலாறுகாணாத மழை’ என்று 21 ஆம் நூற்றாண்டில் மக்களின் அறியாமையை முதலீடாக்கி  மீண்டும் ஆட்சியை பிடிக்க ஓட்டு வங்கி சித்துவேலைகளில் இறங்கி உள்ளதை அம்பலப்படுத்த வேண்டும்.
மாமழையை போற்றுவோம் என்ற தமிழ்சமூகத்தின் முழக்கத்தை கொச்சைப்படுத்தி  மாமழையைப் பேரிடராக்கி, சூழலியல் படுகொலை செய்த ஜெயா அரசை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.
பேரிடரை சாக்காக பயன்படுத்தி எளிய குடிசைப்பகுதி மக்களை சென்னையில் இருந்து துரத்தும் கொடும்செயலை நிறுத்தப்பட வேண்டும்.
கோடிகளில், மாட மாளிகைகளில் புரண்டவர்களை  மூன்று பொட்டலம் புளியோதர சோற்றுக்கும் கையேந்த வைத்த நிலமையை கோட்டைவாசிகளும். கோபாலபுர கோமான்களும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
மானுடம் தழைத்த, மனித உறவுகள் ஓங்கிய, சாதி-மதம் கடந்து மக்கள்திரள் ஒற்றுமை வளர்ந்த, மக்கள் இயக்கங்களின் மாண்புகளை வெளிச்சம் போட்ட அந்த பேரிடர் நாட்களை ஆவணங்களாக எழுத்தில், படைப்புகளில் வடிக்க வேண்டும்
இல்லையெனில்……    மீண்டும் மீண்டும் மாமழை பெய்யும்…கோபுரங்களை, கோட்டைகளைச் சாய்த்து மண் மேடாக்கும் !!
நீரின்றி அமையாது உலகு!    மாமழை போற்றுவோம்!!
                                          பாகம்: 2
சென்னை பெருநகர குடிநீர் வரலாறு - சென்னை குடிநீர் தாகத்தின் தீர்வு
சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்களின்  மக்கள் தொகை இரண்டு கோடியாக இன்னும் சில ஆண்டுகளில் அதிகரிக்கப் போகின்றது.  இந்தியாவில் பரிந்துரைக்கப்படும் நகர நீர் பயன்பாட்டு அளவு குளிப்பதற்க்கு 55 லி, டாய்லேட்க்கு 30 லி, துணி துவைக்க  20 லி, வீட்டை தூய்மையாக்க 10 லி, பாத்திரங்கள் கழுவ 10 லி, சமைக்க 10 லி, குடிக்க 5 லி என்று ஆக மொத்தம் 135 லிட்டர்களாக இருக்க வேண்டும் என்கிறது. அதாவது, 270 கோடி லிட்டர்கள் சென்னை பெரு நகர மக்களின் வீட்டு உபயோகத்திற்கு மட்டும் தேவைப்பட போகின்றது.  (ஒரு டிஎம்சி TMC (Thousand Million Qubic Feet) என்றால் ஆயிரம் மில்லியன் கன அடி என்று பொருள். ஒரு கன அடி நீரில் 28.3 லிட்டர் இருக்கும்) இதோடு பெரும் தொழிற்சாலைகள், சிறு பட்டறைகள், வணிக நிறுவனங்கள், மகால்கள், பூங்காங்கள், இன்னும் பிறவற்றுக்கும் நீர் தேவை உள்ளது. கால்நடைகள், பறவைகள், பல்லுயிர்களுக்கும் நன்னீர் தேவை உள்ளது. இதற்கு எத்தனை கோடி நன்னீர் தேவைப் படும். இந்த நீர் தேவையை  எப்படி தீர்க்க போகின்றோம். நன்னீரை எந்த தொழிற்சாலையிலாவது உற்பத்தி செய்யப் போகின்றொமா? அல்லது ஆந்திராவிடம் பிச்சை எடுக்க போகின்றோமா?  விவசாயிகளுக்கு பயன்பட வேண்டிய வீராணம் ஏரி நீரை திருடி சென்னைக்குக் கொண்டு வரப்போகிறோமா..?
வரலாற்றை பின்னோக்கி பார்ப்போம்! இன்றைய சிக்கல்களை புரிந்து கொள்ள…!!
ஆங்கிலேயர்கள் தங்கள் வணிக நோக்கங்களுக்காகவும், நாடு பிடிக்கும் பேராசைக்காகவும்  பிரெஞ்சு வணிகர்களுடன் போரில் ஈடுபடவும்  கோட்டை கட்டுவதுடன்  சென்னை நகரின் வரலாறு தொடங்குவதாகப் பல வரலாற்று ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் எழுதுகின்றனர். இது பகுதி உண்மை மட்டுமாகும்.  கூவம், கொற்றலை, ஆரணியாறு, அடையாறு இதனுடன் இணைக்கப்பட்ட பாலாறு- என்ற ந்து ஆறுகளில்  ஆற்று படுகைகளின், முகத்தூவாரப்பகுதிகளின் நிலவியல் தொகுப்புகள் தான் இன்றைய சென்னை மாநகரம் ஆகும். பல ஆயிரங்கள் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இங்கு வாழ்ந்ததற்க்கான தொல்லியல், இலக்கிய சான்றுகள் பல உள்ளன. பழைய, புதிய கற்கால தொல்லியல் சான்றுகள் பல்லாவரம், குத்தம்பாக்கம், மற்றும் கொற்றலை, பாலாற்று படுகை பகுதிகளில் உள்ள ஊர்களில் ஏராளமாக கிடைத்துள்ளன. ஏன்..அய்ந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆதிமனிதர்கள் வாழ்ந்த குடியம் குகைகள் கொற்றலை ஆற்றின் கரையில் இன்றும் இருக்கின்றன. இவை, பூண்டியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றன. இங்கு மொத்தம் 16 குகைகள் உள்ளன. இந்த ஆற்றங்கரைகளில் உழவுத் தொழிலும்,  ஆறுகளில் முகத்தூவாரப்பகுதிகளில் மீன்பிடித் தொழிலும் செழித்து வளர்ந்த்தற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. வளமான கிராமங்களில் பழந்தமிழர்கள் தொடர்ந்து வாழ்ந்த பகுதிகள் இது. அதற்க்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன். இந்த தொன்மையான வரலாற்றுடன் இணைத்து ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னரான நவீன சென்னை நகரின் வரலாற்றை புரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாததாகும். ஆங்கிலேயர்களால் மட்டுமே இங்கு நகர நாகரிகம் வளர்ந்தது என்பது நமது கடந்தகால வரலாற்றை குறுக்கி பார்க்கும் கண்ணோட்டத்திற்கு அழைத்துச் சென்று விடும் அபாயம் உள்ளது.. 

பிரான்சிஸ் டே என்ற ஆங்கிலேயர்  கடற்கரை ஓரப்பகுதியை சந்திரகிரியின் அரசருக்கு சொந்தமான இடத்தை அந்த அரசரின் பிரதிநிதிகளான தாமர்லா சகோதரர்களிடம் இருந்து  வாங்கினர். அந்த தாமர்லா சகோதரர்கள்  தங்கள் தந்தையார் பெயரான சென்னப்ப நாயக்கர் பெயரை இங்கு உருவாக்கப்படும் ஊருக்கு சூட்ட வேண்டும் என்ற சரத்துடன் ஆவணத்தின் ஒரு கூறாகவே எழுதி பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனிக்கு விற்றனர்.  இந்த பகுதியில் ஆங்கிலேயர் 1641-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டை என்ற கோட்டையை  கட்டினர்.  வணிகத்தில் ஈடுபட்ட ஆங்கிலேயர்கள் தங்கள் குடும்பங்களுடன் ஒர் ஊராகவே இதை பாதுகாப்பு அகழியுடன் வடிவமைத்ததை இன்றும் காணலாம். ஏழு கிணறு என்ற இடத்தில் பத்து பெரிய கிணறுகள் தோண்டி நீரேற்று கருவிகளை பொருத்தி குழாய்கள் மூலம் இந்த புனித ஜார்ஜ் கோட்டைக்கு நன்னீர் கொண்டுவரப்பட்டது.  அதில் மூன்று கிணறுகள் ஊற்று சரியாக சுரக்காததால் ஏழு கிணறுகள் மட்டும் பயன்படுத்தப்பட்டன்ன. பிரட்டிஷ்காரர்களுடன் வணிகங்கள் செய்தவர்கள், அதற்க்கான துணிகளை  நெய்தவர்கள், பிரட்டிஷ்காரர்களிடம் வேலையாட்களாக இருந்தவர்கள் இராயபுரம், தண்டையார் பேட்டை, கொருக்குப்பேட்டை இடங்களில் குடியேறினார்கள்.

இத்துடன் திருவல்லிக்கேணி, மைலாப்பூர், எழும்பூர், புரசைவாக்கம் போன்ற சிற்றூர்கள் இணைந்து சென்னை நகரப்பகுதிகளாக உருவெடுத்தன. சென்னை நகர மக்கள்தொகை கூடிக் கொண்டேஇருந்தன.  பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப நன்னீர் தேவைகள் அதிகமாகின. 1866 ஆம் ஆண்டில்   சென்னை மக்கள்தொகை 4.7 இலட்சங்களாகும் .  இதற்க்கான முதல் திட்டம் பொதுப் பணித்துறை செயற்பொறியாளராக இருந்த பிரேசர் அவர்களால், 1866-யில் தொடங்கப்பட்டு 1872 ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. 
சென்னைக்கு வடக்கே பாயும் கொற்றலை ஆற்றில் தாமரைப்பாக்கம் ஊரின் அருகில் ஒரு அணையைக் கட்டி, அதிலிருந்து கால்வாய் வெட்டி சோழவரம் ஏரி, புழல் ஏரியுடன் இணைத்தனர். புழல் ஏரியில் நீரேற்று நிலையம் அமைத்து அங்கிருந்து கீழ்ப்பாக்கம் நீர்வழங்கல் இடத்திற்கு நீரை  திறந்த கால்வாய், பின்பு மூடிய குழாய் வழியே நீர் கொண்டு வரப்பட்டது. அங்கு சுத்தம் செய்யப்பட்டு சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.
1901யில் சென்னை மக்கள் தொகை 5.10 இலட்சமாக பெருகிற்று. 1904- 1909 ஆம் ஆண்டுகளில்  பொறியாளர்கள் ஜோன்ஸ்யும்,  ஹர்முன்ஷி நவுரோஜியும்  சென்னை மக்களின்  அனைத்து தேவைகளுக்குமான நீர் என்ற திட்டத்தை நடைமுறை படுத்தினர். குடிக்க, சமைக்க, குளிக்க, துவைக்க என அனைத்து தேவைகளுக்குமான நீரை  கீழ்ப்பாக்கம் நீர்சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வழங்கினர். சாதிரீதியாக பிரிக்கப்பட்டிருந்த நீர்பகிர்வு முறையை முடிவுக்கு கொண்டுவர ஆங்கிலேயர்கள் முயன்றனர்.  

1909 – 32 ஆம் ஆண்டுகளில் மெட்ராஸின் புதிய குடிநீர் வழங்கல் திட்டத்தை பிரிட்டிஷ்காரர்கள் நடைமுறை படுத்தினர்.   இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில்  நீர் தொற்று நோய்களான காலரா , வாந்தி பேதி மெட்ராஸில் கொள்ளை நோயாக பரவி மனிதர்களை காவு வாங்கி பலி ஆவதை தீர்க்கவும்,  பெருகி கொண்டிருந்த மெட்ராஸின் மக்கள் வாழ்வாதார தேவை கருதியும் 1911 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  " மெட்ராஸ் நகர குடிநீர் வழங்கல் திட்டம் " பிரிட்டிஷ் பொறியாளர் ஜே.டபுள்யு.மேன்டிலி என்பவரால் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டது. அன்றைய மெட்ராஸ் நகராண்மை கழகத்தினரால் (Corporation Of Madras ) 17.12.1914 யில் சென்னை மக்களின்  தேவைக்கு இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது..

1939 - 44 ஆம் ஆண்டுகளில் சென்னை மேயர் சத்திய மூர்த்தி அவர்களின் முன்முயற்சியில்  பூண்டி நீர்தேக்கம் கட்டப்பட்டது. அப்பொழுதைய கடும் வறட்சியும், நீர்பற்றாக்குறையும், வளர்ந்து கொண்டிருக்கும் மக்கள்தொகை பிரச்சனையை தீர்க்க இந்த திட்டம் பயன்பட்டது. இதன்பின்பு எந்த பெரிய குடிநீர் திட்டங்களும் இங்குள்ள நீர்வளத்தை பயன்படுத்தி இன்றுவரை ஆட்சியாளர்களால் செய்யப்பட வில்லை.
1964யில் சோழவரம், புழல் ஏரிகளில் இருந்து விவசாயத்திற்கு பாசனம் செய்யப்படுவது நிறுத்தப்பட்டு அந்த ஏரிகளின் நீர் முழுவதும் சென்னை குடிநீருக்கானதாக மாற்றப்பட்டது. அந்த நன்செய் நிலங்களுக்கான  ஆயக்கட்டுக்கான பணம் அளிக்கப்பட்டு புன்செய்நிலங்களாக ஆக்கப்பட்டது என்பதை இங்கு குறிப்பிட வேண்டியது. இந்த ஏரிகளின் கரைகள் உயர்த்தப்பட்டு  நீர்மட்டம் அதிகரிக்கப்பட்டது. 1975 சென்னைக் குடிநீர் தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 111.95 மில்லியன் கன மீட்டர் அதாவது 3.95 டி.எம்.சி ஆகும். இதன்பின் நிலத்தடி நீர்தான் பெருகிவரும் மக்கள்தேவைக்காக பயன்படுத்தப்பட்டது.
சென்னையிலும், அதை சுற்றியுள்ள  காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்களிலும் உள்ள நீராதாரங்கள் முற்றிலும் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக நினைத்து கொண்டு  அன்றைய தமிழக குடிநீர் பொறியாளர்கள், ஆட்சியாளர்கள் கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு நீரை கொண்டு வரும் திட்டத்தினை முன் மொழிந்தனர்.. நான்கு மாநிலங்கள் இந்த கிருஷ்ணா நதி நீர் பிரச்சனையில் இருந்தது.  பல்வேறு விவாதங்கள், சிக்கல்களை கடந்து 1983, ஏப்ரல் , 8ஆம் தேதி எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் இந்த தெலுங்கு கங்கா திட்டம் தொடங்க பட்டது.  1996 செப்டம்பர், 29 ஆம் தேதி கருணாநிதி ஆட்சி காலத்தில்  கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதிநீர்   பூண்டி நீர்தேக்கத்திற்கு வந்து சேர்ந்தது. ஓப்பந்தத்தின் படி 15 டி.எம்.சி  ஒவ்வொரு ஆண்டும் தரப்பட வேண்டும். இன்றுவரை  அதிகப்பட்சமாக 7 டி.எம்.சி கள்தான் கிருஷ்ணா நதிநீர்  சென்னைக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஆட்சியாளர்களின் , அதிகாரிகளின் குறுகியசுயநலன்கள், குறுக்கீடுகள் இதற்கு பிரதான காரணங்களாகும்..
WATER TREATMENT PLANT
CAPACITY (IN MLD)
Kilpauk (1914 / 2005)
270
Puzhal (1996)
300
Vadakuthu (Veeranam Lake Source) (2004)
180
Chemabarambakkam(2007)
530
K.K.Nagar(1972)
4
Surapet(2009)
14
Minjur Desalination Plant
100
Total
1,398

இதற்கிடையில் திருபெருமந்தூர் சட்ட மன்ற தொகுதியில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி நீர்  உழவர்களின் எதிர்ப்புகளுக்கு இடையில் ஹீண்டாய் கார் தொழிற்சாலைக்காகவும், இருங்காட்டு கோட்டை சிப்காட்டிற்க்காவும் 90களில் கொண்டு செல்லப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியால் பாசனம் பெறும் திருபெருமந்தூர் சட்ட மன்ற தொகுதி கிராமங்களில் உழவுதொழிலும், கைத்தறி நெசவுத்தொழிலும் பிரதானமாக இருந்தன. இந்த கிராமங்களை அருகில் இருந்த  திருமழிசை, பூந்தமல்லி, அனகாபுத்தூர் பகுதிகளிலும் கைத்தறி நெசவுத்தொழில் செழித்திருந்தது.  திருபெருமந்தூர் சட்ட மன்ற தொகுதியில் விளைநிலங்கள் வெள்ளாள முதலியார் சாதியினரிடமும், கைத்தறி நெசவுத்தொழில் செங்குந்தர் முதலியார் சாதியினரிடமும் கடந்த நூற்றாண்டு வரை பெருமளவில் இருந்தன. இந்த இரண்டு தொழில்களுக்கும் குறைந்த கூலிக்கு ஆட்கள் தேவைப்பட்டதால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை முதலியார் சாதி லாபியினால் சென்னை நகரின் விரிவாக்கமோ. தொழிற்சாலைகளோ இந்த பகுதிகளில் நடைபெறவில்லை. தவிர்க்க இயலாத முதலாளிய வளர்ர்ச்சியும், நகர விரிவாக்கமும் இணைந்து இந்த இரண்டு தொழில்களையும் நசுக்கி இல்லாமல் செய்து விட்டன. நிலம் வன்னியர் சாதியிடமும், தலித்துகளிடம், பல்வேறு ரியல் எஸ்டேட் மற்றும், பெரு முதலாளிகளிடம் படிப்படியாக கடந்த நூற்றாண்டின் இறுதியில் கைமாறியது. இன்று செம்பரம்பாக்கம் ஏரி நீர் முழுவதும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் சென்னைக் குடிநீருக்கான, இருங்காட்டு கோட்டை சிப்காட்டிற்க்கான நீராக மாற்றப்பட்டு விட்டது.

செம்பரம்பாக்கம் ஏரியுடன் திருபெருந்தூர் ஏரி, பிள்ளைபாக்கம் ஏரியை இணைக்கும் சவுத்திரி கால்வாய்
செம்பரம்பாக்கம் ஏரி நீரை (அதில் சேர்க்கப்படும் கிருஷ்ணா நீரையும் சேர்த்து..) சுத்திகரித்து சென்னைக்கு வழங்க 2007 யில் 530 MLD கொள்ளளவு நீரை சுத்தகரிக்கும் மிகப் பெரிய சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்பட்டது.  அடுத்தாக 180 MLD  குடிநீர்  வீராணம் ஏரியில் இருந்து 230 கி.மீ தொலைவு குழாய் மூலம் செலுத்தப்பட்டு சென்னைக்கு கொண்டு வரும் வீராணம் திட்டம் 2004 யில் நடைமுறை படுத்தப்பட்டது. மேலும், கடல்நீரை குடிநீராக்கும் இரண்டு திட்டங்கள் ஆயிரக்கணக்கான கோடிகள் செலவில் காட்டுப்பள்ளியிலும், நெமிலியிலும்  2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன.
திருபெருமந்தூர் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரி, சோமங்கலம் ஏரி. எனப் பல ஏரிகளின் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பன்னாட்டு கம்பெனிகளுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் சிப்காட்டிற்க்காக திமுக, அதிமுக ஆட்சிகளில் கையகப்படுத்துப்பட்டு விட்டன.
சென்னை மக்கள் தொகை இன்று ஒரு கோடியை நெருக்கி கொண்டிருக்கிறது. காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்களின் மக்கள்தொகையும்  ஒரு கோடியை நெருக்கி கொண்டிருக்கிறது.  தமிழகம் முழுவதும் பரவலாக தொழிற்சாலை மூலதனங்களை செய்வதற்கு மாற்றாக பெருமுதலாளிகளின் மிகை இலாப வெறிக்காக  சந்தை படுத்துதல்,, போக்குவரத்து,, துறைமுக வசதிகளுக்காக சென்னையை சுற்றி உள்ள பகுதிகளில் மட்டுமே மூலதனங்கள் குவிக்கப்பட்டன. எனவே, தாறுமாறாக சென்னையிலும், அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம் (திருபெருமந்தூர் தொகுதி, காஞ்சிபுரம் தொகுதிகள் ….), திருவள்ளுர் மாவட்டங்களில் மக்கள்தொகை அதிகரித்தன. காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்களில் செழித்திருந்த ஏரிப்பாசன விவசாயம் படிப்படியாக அழிக்கப்பட்டன. சூறாயாடும் முதலாளிய கொள்கை 90 களில் அறிமுகமாகி கடந்த 15 ஆண்டுகளில் தாறுமாறாக காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்களில் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டன.  இதனால் ஏரிகள் அதன் இணைப்பு கால்வாய்கள், நன்செய் நிலங்கள் அழிக்கப்பட்டன. இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் முற்றிலுமாகவும் விவசாயம் அழிக்கப்பட்டும், திருவள்ளுர் மாவட்டத்தில் குற்றுயிருமாக விவசாய தொழில் உள்ளது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி நீர் குடிநீருக்காக மாற்றப்பட்டது. ஆனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்களில் அனைத்து ஏரிகளின் நீர்வளம் பயன்படுத்தப்படாமல் வீணாகி வருகின்றன. இதன் பின்னணியில் திருபெருமந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த காங்கிரஸ், அதிமுக, திமுக கட்சியினர், அவர்களின் பினாமி அடியாட்களும் இருக்கின்றனர். இவர்கள் அதிகார ஆணவ பலத்தில் அலட்சியத்தில்தான் திருபெருந்தூர் சட்டமன்ற தொகுதி இன்று பன்னாட்டு கம்பெனிகள் வேட்டைகாடாக உள்ளது.  பன்னாட்டு கம்பெனிகள் தரும் கையூட்டுகளால் பல நூறு கோடிகளில் இந்த தொகுதி எம்.எல்.ஏகள், அமைச்சர்கள் சொத்துக்களை வாங்கி பினாமி பெயர்களில் குவித்து விட்டனர். மக்களிடம் ஓட்டு பிச்சைகளில் வந்த இவர்கள் மக்களை குடிநீருக்கு அலைய விட்டு ஊழல் பணத்தில் குளித்து கொண்டிருக்கின்றனர்.
சிங்கார சென்னைக்கு நன்னீர் எங்கிருந்து வருகின்றது?                     
நகரமயமாதல், அதிவேக வளர்ச்சி, சிங்கார சென்னை, ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் மேலும் மேலும் நன்னீர் ஏரிகளை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இணைந்து அழித்து வருகின்றனர்.  காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்களில்  விவசாயத்திற்காக ஏரிகள் இருந்தது என்பது உண்மை.. ஆனால் இன்று காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்களில்  விவசாயம் இல்லை அல்லது வெறும் பத்து சதவீதம் மட்டும்தான் நடைபெறுகின்றது. இருப்பினும் விவசாயத்தை விட நகரமயமாதலால்  அதிகரித்துவரும் மக்கள்தொகையின் குடிநீர் மற்ற இதர தேவைகளுக்கு நன்னீர்  மிகுதியாகத் தேவை படும். இயற்கையை முற்றிலுமாக அழித்து விட்டு கான்கிரீட் காட்டிற்குள் சிங்கார சென்னை  இருக்க  போகின்றதா என்ன?
தண்ணீரை உற்பத்தி செய்ய முடியாது..அதனால் இயற்கை அளிக்கும் கொடையான நீரை  சேமிக்கும் ஏரிகளை அதன் இணைப்பு கால்வாய்களை கட்டாயம் பாதுகாக்க வேண்டும்..  இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிக்கும் கதையாகி விடக்கூடாது.. 
ஆனால், உலகமயமாக்கல், சூறாயாடும் பெருமுதலாளிய கொள்கைகளை நடைமுறை படுத்தும் ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கு பறப்பதை பிடிப்பதாக மக்களிடம் சொன்னால்தான் மிகஅதிக இலாபம் என்று தெரியும். அதனால்தான் திமுக ஆட்சியில் வீராணம் திட்டம், அதிமுக ஆட்சியில் மீண்டும் புதிய வீராண திட்டம், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் என்று  பல ஆயிரம் கோடிகளை செலவுகளை செய்து மந்திரத்தில் நீரை தயார் செய்து சென்னை மக்களுக்கு வழங்குகின்றனர். கடல்நீரை குடிநீராக்கும் தொழிற்சாலைக்கு ஒவ்வொன்றுக்கும் 1000 கோடிகள் மூலதனம் செலவழிக்கப் படுகிறது. ஆண்டுதோறும் இதனை நடைமுறை படுத்த பல கோடிகள் செலவழிக்கப்பட வேண்டும்.
வீராணம் நீர் வரும் நீண்ட நெடிய பாதை
1923 ஆம் ஆண்டில் வீராணம் ஏரியின் கொள்ளளவு 41 மில்லியன கன மீட்டராகும். 1991 யில் இதைக் கணக்கிட்ட பொழுது 29 மில்லியன் கன மீட்டராக குறைந்திருந்தது.  சோழர் காலத்தில் வெட்டப்பட்ட இந்த ஏரியின் கொள்ளளவு பல நூற்றாண்டுகளாக, பல மன்னர்கள் ஆட்சிகளில் குறைய வில்லை. ஆனால், நம்முடைய ஒரு தலைமுறைக்குள் மூன்றில் ஒரு பகுதி மண் மேடிட்டு விட்டது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு பதம் என்பது போல தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ்-திமுக-அதிமுக கட்சிகள் ஏரிகளை, குளங்களை பராமரிக்கும் விதம் இதுதான்! செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம்  ஏரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான  காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்களில் ( திருபெருமந்தூர் தொகுதி உட்பட )  உள்ள ஆயிரக்கணக்கான ஏரிகளின் யதார்த்த நிலைமை இதுதான்.
ஏரிகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட பாசனப்பரப்பு 1.01 மில்லியன் ஹெக்டேர் நிலங்களாகும். இன்று அது பாதியாக 0.625 மில்லியன் ஹெக்டேராக சுருங்கி விட்டது.  டாக்டர், இஞ்சினியர், வக்கீல்கள், வணிகர்கள் இல்லாமல் இருக்க முடியும். ஆனால் விவசாயி இல்லாமல் இருக்க முடியாது.. விவசாயம் இல்லாத தமிழ்நாட்டை ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர்.
மனிதன் மட்டுமல்ல சமூகமும் இரண்டு கால்களில் நடக்க வேண்டும்..ஒரு காலில் நடத்ததன் விளைவு பேரிடரில் கடந்த ஆண்டு சென்னை மாநகரம்  மூழ்கி  போனது…

உலகமயமாக்கலுக்கு முன் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் நீரை சேமிக்க பல தொழில்நுட்பங்களை தங்கள் கூட்டுஅனுபவம், கூட்டு சிந்தனை-அறிவு, கூட்டு உழைப்பால் உருவாக்கினர். ஆனால் 21 நூற்றாண்டில் அணு உலைகள், அணுகுண்டுகள், ராக்க்கெட்டுகள், ஏவுகணைகள் …புல்லட் ரயில் என்று புல்லட வேகத்தில் பறக்கும் ஆட்சியாளர்கல் இந்த ம்ழையில் வீணாக (..?) கடலில் கலந்த 370 டி.எம்.சி நன்னீரில் ஏன் சில டி.எம்.சிக்களை கூட சேமிக்க முடியவில்லை..? இவர்களின் அதிவேகஅறிவியல், பிரமாண்டமான தொழில்நுட்பம் ஏன் தோற்றது..?
மக்களுக்கு சேவை செய்கின்ற உன்னதமான பணிக்காக சமூகத்தின் அரசியல் பொருளாதார முடிவுகளை எடுப்பதாக மத்திய-மாநில ஆட்சியாளர்களும், அரசு இயந்திரமும் காட்டிக்கொள்கின்றன. ஆனாலும் அவை ஆளும் வர்க்கங்களான கார்ப்பரேட்கள், தரகு முதலாளிகள், உள்நாட்டு பெருமுதலாளிகள் மற்றும் உள்ளூர் ஆதிக்க சாதிகளின் மேல்மட்டத்தினரின்   பொருளாதார நலன்களுக்காகவே எப்போதும் சேவை செய்து செயல்பட்டு வருகிறதுஅவ்வகையில் வேகமான தொழில் மயமாக்க பொருளாதாரத்தை நோக்கிய பெருமுதலாளிய வர்க்கங்களின் ஆர்வமும் அவர்களின் வளர்ச்சியுமே இன்று அரசின் வளர்ச்சி மாதிரியாக காட்டப்படுகிறது. இதன் காரணமாக தொழில்துறை உற்பத்தி மற்றும் சேவைத் துறைக்கு வழங்குகிற முன்னுரிமையை வேளாண்மைக்கு அரசு வழங்குவதில்லை. அதற்க்காக எந்த தார்மீக பொறுப்பும் இன்றி இயற்கையை அழித்து சூறையாடுகின்றனர்.
 இதன் விளைவு, சென்னை, கோவை போன்ற நகரங்களில் மேலும் மேலும் மூலதனக் குவிப்பு, கிராமங்களிருந்து நகரங்களுக்கு விவசாயிகள் கூலித் தொழிலாளிகளாக இடப்பெயர்வு,வேகமான நகர்மயமாக்கல் என சங்கிலித்தொடர் நிகழ்வுகள் நடக்கின்றன. இச்சூழலில் வேளாண்மைக்கு பிரதானமாக உள்ள நிலப் பயன்பாடும், நீர் மேலாண்மையும், தொழில் மயமாக்க பொருளாதாரத்தால் கேள்விக்குட்படுத்தப்பட்டன. ஆக்கிரமிக்கப்பட்டன. அனைத்து நன்னீர் ஏரிகளும் ஆக்கிரமிக்கப்பட்டன. இரசாயன கழிவுகளாக்கப்பட்டன. தொழிற் பேட்டைகள்,சிறப்பு தொழிற் பூங்காக்களின் எழுச்சி, அதையொட்டிய மக்களின் இடப்பெயர்வுகள் தமிழகத்தின் நிலப்பயன்பாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.  தமிழகத்தில் 42% விழுக்காடு நகரமயமாகியுள்ளது என 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு இவ்வுண்மையை உறுதி செய்கிறது. இப்பெரும் நிலப்பயன்பாடு மாற்றங்கள் , அதிவேக வளர்ச்சி பொருளாதாரம். நீர்வழிகளை திட்டமிடாத சென்னை பெருநகர திட்டவரைவு – I & II…போன்றவற்றால்தான் சென்னை-கடலூர் பேரிடர் –பேரழிவு..
சென்னை பெருநகர குடிநீர் தாகத்திற்க்கான தீர்வும் செம்பரம்பாக்கம் ஏரியை இணைந்த வலைப்பின்னல் ஏரிகளும்..
மக்கள் நல பொதுபணித்துறை பொறியாளரான ஜெய்சங்கர், எந்த நீர்தேக்க திட்டங்களும் அந்தந்த பகுதியில், அருகாமையில் உள்ள மூலவளங்களை பயன்படுத்துவதாகவும், மையப்படுத்தப்பட்டதாக இல்லாமல் பல்வேறு பகுதிகளை சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறார். மத்திய, மாநில அரசுகள் உதவியில் நடைபெறும் நீரியல், சூழலியல் கருத்தரங்களில் பல ஆண்டுகளாக இதைத்தான் விரிவாக விளக்கி வருகிறார்கள். 
சிதலமடைந்துள்ள பிள்ளைப்பாக்கம் ஏரி

தெற்காசிய நீர்வள ஆதராங்கள் கல்விநிறுவனத்தின் தலைவரான ஜனகராஜன்  தொலைகாட்சி பேட்டி ஒன்றில்,
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் 1300மி.மீட்டர் மழை பெய்யற இடம். வடிகால் அமைப்பை நாம ஏற்கனவே பாழ்படுத்திட்டோம். 1971 topography படி திருவள்ளுர், காஞ்சிபுரம் வடிகால் திட்டத்தை நான் பார்த்தேன். அவ்வளவு நெருக்கமான, துல்லியமான ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்து நெருக்கமான அமைப்பு. அவ்வளவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் நகரம் உருவாக்கப்படும்போது முதலில் நீர் மட்டம், வடிகால் தன்மை, சுற்றுச்சூழல் ஆகியவை முதலில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அங்கு நீர்நிலைகளுக்குத்தான் முதலில் முக்கியத்துவம் கொடுப்பர்.
நம் சென்னை நகரத்தை எடுத்துக்கொண்டால் விரிவாக்கம் நடந்து கொண்டே இருக்கிறது. 171 சதுரகி.மீ, 471.கி.மீட்டர், 1171 பின்பு 8ஆயிரம் .கிமீ எனுமளவிற்கு காஞ்சிபுரம், திருவள்ளுர், அரக்கோணம் தாலுகா அனைத்தையும் உள்ளடக்கிய சிஎம்டிஏ திட்டம் உள்ளது. அப்படியென்றால் இங்கு கண்மூடித்தனமான விரிவாக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அப்படி நடக்கும்போது அத்திட்டத்தில் இயற்கை வளங்களை காப்பதற்கும், நீர்நிலைகளை காப்பதற்கும் ஏதேனும் திட்டங்கள் உள்ளதா என்பதை பார்த்தால் எதுவுமில்லை. சிஎம்டிஏ மாஸ்டர் ப்ளான் 2- எடுத்துப் பார்த்தால், அதில் நீர்நிலைகளை பாதுகாக்கக்கூடிய திட்டங்களே இல்லை. நிலப்பயன்பாடு பற்றி மட்டுமே பேசுகிறார்கள். கமர்ஷியல் கட்டுமானங்கள், இன்டஸ்ட்ரியல் ஏரியான்னு  மார்க்கெட் பண்றாங்களே தவிர, நீர்நிலைகளை காப்பதற்கான எந்த ஆலோசனைகளும் கிடையாது. ஒரு நாள் 35 செ.மீட்டர், 40செ.மீட்டர் பெய்யுதுன்னு குறை சொல்லாதீங்க. இது வடகிழக்கு பருவமழை அப்படித்தான் இருக்கும். நமக்கு தெரிந்ததுதான். நாம இயற்கையை சூறையாடிட்டு, தவறா பயன்படுத்திட்டு மழையை குறை சொல்லக்கூடாது. இதற்கெல்லாம் விலை கொடுப்பது மக்கள்தான் .
இனிமேல் இருக்கின்ற நீர்நிலைகளையாவது பாதுகாத்தால், அடையாறு இனியும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாமல் தடுத்தால், கூவம், பக்கிங்ஹாம் கால்வாய்களை பாதுகாத்தால் மட்டுமே வெள்ள அபாயத்திலிருந்து நாம் தப்பிக்கமுடியும். சென்னை நீர்த்தாகம் அதிகமுள்ள நகரம்னு சொல்றாங்க. இவ்வளவு மழை பெய்யிற இடம் நீர்த்தாகம் உள்ள நகரம இருக்கமுடியாது. அது தவறு. இது மனிதர்களால் உருவான சிக்கல்…”

“..ஸ்மார்ட் சிட்டி, சேட்டிலைட் சிட்டி உருவாக்கம் என்றால் ஒரு பெரிய மேம்பாலமோ, கட்டுமானமோ ஸ்மார்ட் சிட்டியாகிவிடாது. தலையை சுத்தமாக வைத்துக்கொண்டு, கீழ்ப்பகுதியை அசுத்தமாக வைத்துக்கொள்வது போல் செய்யக்கூடாது. முதலில் மக்களுக்கு அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும். சுத்தமான குடிநீர் கொடுக்கமுடியுமா…? மழை நீர் வடிகால், வெள்ளம் வராத ஒரு நல்ல அமைப்பு, சரியான குப்பை அகற்றும் முறை, திடக்கழிவு மேலாண்மை, E-waste management இதெல்லாமும் தான் ஒரு நகரத்தின் அடிப்படையான தேவைகளாக இருக்கமுடியும்…. என்கிறார். ஜனகராஜன்
காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்கள் முழுவதும் நகரமயமாகி .. இல்லை  நரகமாகி..விட்டது.. எந்த அடிப்படையான நீண்டகால திட்டங்களும், நிலைத்த வளர்ச்சிக்கான கட்டமைப்புகளும் , கொள்கைகளும் இல்லாமல்  கார்ப்பரேட் கம்பெனிகள், பெருமுதலாளிகளின் நலன்களில் இருந்து  எந்த வரையறை இல்லாமல், பல நூற்றாண்டுகள் பயன்பாட்டில் இருந்த செழிப்பான நீர்நிலை ஆதார அமைப்புகள் சூறையாடப்பட்டு வருகின்றன. இதற்கு மத்திய- மாநில ஆட்சியாளர்களும் இந்த ஆட்சி அதிகாரத்தில் இருந்த அதிமுக, திமுக, காங்கிரஸ், பி.ஜே.பி கட்சிகள் தான் முதன்மையான காரணமாகும்
.
சென்னை பெருநகர, காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்களின் குடிநீர்தேவைக்கான மாற்று தீர்வு..   
   
தண்ணீர் வணிகப் பொருள் அல்ல. ஆனால் அதிமுக, திமுக, காங்கிரஸ், பி.ஜே.பி கட்சிகள் நீரை வணிகமயமாக்கும் உலகமயமாக்கல் கொள்கைக்கு ஆதரவளித்து ஆதாயம் அடைகின்ற கட்சிகளாகும். காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்கள் நீர்நிலைகள் நிறைந்த பகுதி. இதில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியுடன் ஒவ்வொன்றும் 1500 ஏக்கர்கள் மேல்பரப்புள்ள திருபெருமந்தூர்  ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரி, நேமம் ஏரி  நேரிடையாக இணைப்பு கால்வாய்களால் இணைக்கப்பட்டு உள்ளன.  பேரம்பாக்கம், கூடைப்பாக்கம், கொண்டஞ்சேரி, வெள்ளேரிதாங்கல், பாப்பரம்பாக்கம், புட்லூர், பாக்குப்பேட்டை, , சத்திரை, மப்பேடு போன்ற திருவள்ளுர் மாவட்டத்தின் மேடான ஊர்களிலுள்ள ஏரிகள் அனைத்தும் நேமம் ஏரியுடன் இணைக்கப்பட்டுள்ளன.

பிள்ளைப்பாக்கம் ஏரியுடன் பூந்தூர் ஏரி, மாம்பாக்கம் ஏரி, கடுவஞ்சேரி ஏரி, பெரிய சத்திரம் ஏரி, காரணை ஏரி என பல ஏரிகள் இணைந்துள்ளன. இதே போல் திருபெருமந்தூர் ஏரியுடன் பல ஏரிகளும் பாலாற்றுடன் கம்ப கால்வாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. சோமங்கலம் ஏரி, நந்தம்பாக்கம் ஏரி, நெல்லூர் ஏரி, அமரம்பேடு ஏரி, வெங்காடு ஏரி போன்ற ஏரிகள் சவுத்திரி கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியுடன் நேரிடையாக இணைந்துள்ளன. இந்த ஏரிகளில் பாசனப்பகுதிகள் சிப்காட்டுகளாக மாற்றப்பட்டதால், இவற்றின் நீர்வளம் எந்த பயனும் இல்லாமல் வீணாகின்றன. இந்த ஏரிகளில் 10 டி.எம்.சி அளவிற்கு மேல் நன்னீரை சேமிக்கும் கொள்ளளவு உடையன. எட்டாம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட மணிமங்கலம் ஏரி, மலைப்பட்டு ஏரி, அத்தனம்சேரி ஏரி, ஆதனூர் ஏரி இன்னும் பல ஏரிகளின் நீரை பயன்படுத்தி தாம்பரம் நகராட்சிக்கும், தென் சென்னைக்கும்  அதைச்சுற்று உள்ள பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்க முடியும்ம். பாலாற்றில் இருந்து நிலத்தடிநீரை கொண்டுவருவதை  இதனால் தவிர்க்க இயலும்..இந்த ஏரிகளை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தினால் சென்னைக்கு பெருவெள்ளம் வராமல் தடுக்கப்படுவதுடன் , சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கும் போதுமான நன்னீர் கிடைத்துவிடும். இதற்கு உலக வங்கியிடம் கடன் வாங்க தேவையில்லை. சில கோடிகள் செலவு செய்தால் போதும். மேலும் தூர்வாரும் பொழுது கிடைக்கும் மண் ஒரு லாரி 1000 ரூபாய் (இரண்டு யூனிட்கள்) விலை போகும்..இதன் மூலம் பல நூறு கோடிகள் பணம் திரட்ட முடியும். இந்த பணத்தின் மூலமே இத்திட்டத்தை நடைமுறை படுத்த முடியும்.
மேலும், இந்த ஏரிகளின் நீரை இயற்கையான புவி ஈர்ப்பு விசையின் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கோ, சென்னைக்கோ எந்தவிதமான செயற்கை எந்திர விசை இல்லாமல் கொண்டுவர முடியும். இதற்க்கான எந்த தனியான செலவும் ஒவ்வொரு ஆண்டுதோறும் இருக்காது. இந்த ஏரிகளைப் பாதுகாப்பதன் விளைவாக பல்லுயிர்கள் பெருக்கமடைந்து சுற்றுபுறச சூழல் செழிப்படையும். இப்பகுதிகளில் கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கம் குறையும். தூய்மையான காற்று சென்னை, அதை சுற்றியுள்ள பகுதிகளில் வீசும்.  இரண்டு கோடி மக்களின் ஆரோக்கிய வாழ்வு மேம்படும்.
நீண்டகால தேவைக்கான திட்டமாக இதுதான் இருக்க முடியும். மற்ற அனைத்தும்  நீரை வணிகமாக்க பயன்படும் திட்டங்களாகவே,  பெருமுதலாளிகளின் – ஊழல்பெருச்சாளிகளின் பணப்பைகளை நிரப்புவதில்தான்  முடியும்.!!
தமிழக நீர்நிலை வரலாற்றில் இருந்து பதிலை தேடுவோம்.. ! தேடாமல், விவாதிக்காமல், வரலாற்றை மீளாய்வு செய்யாமல், இயற்கையை நேசிக்காமல் விடை நமக்கு கிடைக்காது..!!
..வானின்று பொழியும் அமிழ்தான தண்ணீர் வணிக பொருள் அல்ல..!!
வேறு பூமியைத் தேடுங்கள்!
நிலமெல்லாம் விற்று தீர்த்த பின்
என்ன செய்யப் போகிறீர்கள்?
மண​லெல்லாம் விற்று தீர்த்த பின்
என்ன செய்யப் போகிறீர்கள்?
கனிமங்க​ளெல்லாம் விற்று தீர்த்த பின்
என்ன செய்யப் போகிறீரக்ள?
மரங்க​ளெல்லாம் வெட்டி தீர்த்த பின்
என்ன செய்யப் போகிறீர்கள்?
நீ​ரெல்லாம் விற்று தீர்த்த பின்
என்ன செய்யப் போகிறீர்கள்?
காற்​றெல்லாம் விற்று தீர்த்த பின்
என்ன செய்யப் போகிறீர்கள்?
போய்த் தேடுங்கள்
எங்​கேனும் இந்த அண்ட​வெளியில்
எம்​மைப் போல
எதற்கும் வாய் பேசாது
அழியக் காத்திருக்கும்
மானுடச் சமுத்திரம்
நி​றைந்த 
இன்​னொரு பூமி
இருக்கிறதா என்று!
காடுகள் அழிந்த இந்த பூமி​யை
ஆறுகள் தூர்த்த இந்த பூமி​யை
நீரற்றுப் போன இந்த பூமி​யை
காற்​றை இழந்த இந்த பூமி​யை
கனிமங்கள் தீர்ந்த இந்த பூமி​யை
க​தைக்குதவாத இந்த பூமி​யை
எங்களிடம் விட்டுச் செல்லுங்கள்
எப்​பொழு​தேனும் நீங்கள்
திரும்பி வர நேர்ந்தால்
மீண்டும் நீங்கள் களவாட
ஏ​தேனும் புதிதாய் 
செய்து வைத்திருப்​போம்!
                 *கிருஷ்ணன்

   கி.நடராசன்
தொடர்புக்கு: 9840855078,
 kanavu1917@gmail.com
உதவிய நூல்கள், கட்டுரைகள்::...... 
1.பி.தயாளன்-சூழல்பேண் புதுப்பொருளாதார ஒழுங்கும் இயற்கை வேளாண்மையும் கட்டுரை.
2.முனைவர் பழ.கோமதிநாயகம் – தமிழக பாசன வரலாறு நூல்,
3.பேராசிரியர் இரா.சிவசந்திரன்  கட்டுரை,
4.தமிழ் வளர்ச்சிக் கழகம் அறிவியல்:
 தொழில்நுட்ப நூல் வரிசை தமிழக நீர்வளம் தொகுதி-2