Friday, October 21, 2011

சிறுகதை - மாற்றப்பட்ட பயோடேட்டா


        மாற்றப்பட்ட பயோடேட்டா
                                   

எந்த மனிதனின்  வாழ்க்கையையும் இரண்டு விதமான டைரிக் குறிப்புகளாக எழுத முடியும். சுரண்டுபவன் நோக்கில் இருந்தும், சுரண்டப்படுபவன்  நோக்கில் இருந்தும் எழுதலாம். அவரவர்க்கான நியாயங்களை அதில் அவரவர்கள் கற்ப்பிக்கலாம். உண்மை என்பதோ ஒன்றுதான்.  அந்த உண்மையை புரிந்து கொள்ள எனது இந்த பயடேட்டா பயன்படலாம்.


முதல் ஆண்டு கல்லூரி சேர்ந்தது முதல் பல பயோடேட்டாகளை பல வேலைகளுகாக, படிப்புகளுக்காக நான் தயாரித்து இருக்கிறேன். இது எல்லாவற்றிலும் வேறுப்பட்டது.  இப்படிம் ஒரு பயோடேட்டாவை நானும் அவர்களும் சேர்ந்து  கூட்டாகத் தயாரிப்போம் என நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

காவல்காரர் அனுமதி அளித்ததும், பதற்றத்துடன் அறைக்குள் நுழைந்தேன். அடுத்து என்ன நிகழும் என்று என் மனதில் தோன்றிய அச்சம் உடல் முழுவதும் நாடி நரம்பெல்லாம் பரவி நிறைந்தது.
விசலாமான அறை….. அந்த அறையின் தோற்றம் அதன் அசாதாரண அமைதிமின்விசிறி சுழலும் சப்தம்.. மொழுக்மொழுக் என்று மூன்று அதிகாரிகள் உட்காந்து இருந்தார்கள். கோட்டும் சூட்டும் அணிந்து வாட்டம் சாட்டமாக அமர்ந்திருந்தனர். மேசையின் அருகில் போய் நின்றேன். நாற்காலி போடப்பட்டு இருந்தது. உட்காரலாமா வேண்டாமா என்று விவாதம், சிந்தனை  ஒடிக்கொண்டிருந்தது

நான் என்ன யோசிக்கிறேன்.. எப்படிப்பட்டவன்.. எனது திறமை.. தகுதிகள்.. மனதிடம் எல்லாவற்றையும் எடைப் போட அந்த ஆறு கண்களும் முயன்று கொண்டிருந்தன. கரகரப்பான தடித்த குரல்

 உட்கார்

 பெயரென்ன

  சண்முகம்”

 அப்பா பேரு

 கிருட்டிணன்

  அம்மா பேரு

  விசாலாட்சி

 வயது

முப்பது”

எந்த ஊர்

 செம்பரம்பாக்கம்

அப்பாவுக்கு என்ன தொழில்

உழவு தொழில்”

எத்தனை ஏக்கர்”

ஐந்து

கூட பொறந்தவங்க

நாலுபேர். இரண்டு பையன் இரண்டு பெண்ணு

அவங்க இன்னவேலை பண்றாங்க

ஒரு அண்ணன் விவசாயம் பார்க்கிறான்

இன்னொரு அண்ணன் டபுல் எஸ் கம்பெனியில் வேலை. இரண்டு பெண்ணுங்களுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது
இரண்டாவது அதிகாரி அதிகாரத் தொனியுடன் ஆரம்பித்தார்.

என்ன படிப்பு

பி. எஸ். சி கணிதம்

என்ன வேலை பார்க்கிற

கம்பெனியில் அக்கெளண்டண்டு”

என்ன சம்பளம்

முவாயிரம்

இந்த சம்பளம் போதுமா

ம் போதாது

வேற வேலை டிரைப்பண்ணலியா

நாலைந்து சர்வீஸ் கமிஷன் எழுதுனென். வேலை தான் கிடைக்கல

மூன்றாமவர் ஆரம்பித்தார்.

பொழுது போக்கு என்ன?”

கால்பந்து விளையாடுவது.. புத்தகம் படிப்பது

என்ன புத்தகம்  படிப்ப

சிறுகதை கவிதைகள்

யாருடையதை படிப்ப”

புதுமைபித்தன்,  சூரியதீபன், பூமணி, காசிஆனந்தன், மார்க்சிம்கார்க்கி,  இன்குலாப் ...சேரன்………….”

அவர் மற்ற அதிகாரிகளை ஏதோ புதியதாக தெரிந்து கொண்டது போல் பார்த்தார்புன்னகைத்தார். மெதுவாக எழுந்து என்னருகில் வந்தார். வன்மத்துடன் நாராசமாய் வெடித்தன சொற்கள்….

தெவுடியா பையா.. உக்......பொரம்போக்கு....பிடுங்கி.. இப்படி ஆரம்பித்து தமிழன்.பேச்சு வழக்கில் புழங்கும் ஒருவரை கோவபடுத்த, அசிங்கபடுத்த, அவமானபடுத்த உள்ள வசைவுகள் சரளமா மடைதிறந்த சாக்கடை அருவியாக கொட்டின..

அவமானத்தாலும் அசிங்கத்தாலும் எனது மனசு துடித்தது. பந்து நிமிடங்கள் மாற்றி மாற்றி போலிஸ் அதிகாரிகள் சாக்கடை சொற்களை அர்ச்சனைச் செய்து கொண்டிருந்தனர். எனது தாய், தங்கை, அக்கா, அண்ணி, ஆயா….  என்று எனது உறவுகள் யாரையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. சகட்டுமேனிக்கு சரளமாக படித்த இவர்கள் இப்படி கெட்ட கெட்ட வார்த்தைகளை திட்ட முடிகின்றது என்று நான் நொந்து நூலாகி போனேன். குழாயடி சண்டையில் ஈடுபடும் பெண்கள் கூட ஒரிரண்டு வார்த்தைகள் மேல் கோபத்தில் பேச மாட்டார்கள். படித்த கோட்டு சூட்டும் போட்ட கொழுகொழு ஆசாமிகள் இப்படி  என்று கூனி குறுகி போனேன்.

எங்கடா உங்க தோழர்கள்
உங்க தலைவன் யாருடா?”

இப்ப தான் எனக்கு ஏதோ புரிகிற மாதிரி இருந்தது.

அதற்குள் மடார் மடார் என்று கன்னத்தில் இடிபோல் அறைகள் இறங்கின.

கையை இழுத்த தொலைச்சிடுவேன் . பெரிய லட்டியை மேசைக்கு அடியிலிருந்து உருவிய இன்னொரு போலிஸ் அதிகாரி விரல் மணிகட்டுகளில் கண் இமைக்கும் நேரத்தில் மாட்டை அடிப்பது போல மடார் மடார் விலாசி தள்ளினார்..
வலியால் உயிர் போய் உயிர் வந்தது  கைவிரல்களில்  புசு புசுவென வீங்கி தொங்கின.

தனி நாடா வேணும்  இந்தாடா
ஈழமா வேணும் இந்தாடா நான் தரேன்.
மாவோஸ்டை சப்போட்டா செய்யற….”

பளிச்சென மின்னல் வெட்டியது போல் எல்லாம் புரிந்தது. ஈழததமிழர்களை கொன்று குவிந்து, விடுதலை புலிகளை ஓழித்து கட்டிய ராஜபக்சேயை பாராட்டி தாம்பரம் விமானப்படை மைதானத்தில் பெரும் பாராட்டு விழாவை மைய-மாநில அரசுகள் செவில் ஏற்பாடு செய்யப்பட்டது இருந்தது. மத்திய உள்துறை அமைச்சரும், தமிழக தலைமை அமைச்சரும், முப்படை தளபதிகளும் கலந்து கொள்ள இருந்தனர்.  வெந்த புண்ணில் வேல் பாய்வதை போன்ற இந்த செயல். தமிழகம் எங்கும் கொந்தளிப்பையே ஏற்படுத்தன.  

இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் இணைந்த ஒருங்கணைப்பு குழு  சார்பில் போராட ஏற்பாடுகள்  நடந்தன.

ஈழத்தமிழரை கொத்து கொத்தாய் கொலைகள் செய்தது எனக்குள் கோபத்தையும் நியாய உணர்வை தூண்டியது. சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாகக்கண்டு மனம் இறங்காதவன் மனிதனா என்று  நினைத்தேன்.  பேருந்து நிலையத்தில் துண்டறிக்கை கொடுத்தவர்களிடம் ஆதரவாக சில நாட்கள் பேசி எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் முகவரி கேட்டனர். கம்பெனி முகவரியையும் எனது அலைபேசி எண்ணையும் தந்தேன்.

இந்தியா முழுக்க கலவரம் ஏற்படுத்திருங்களாடா. விடுதலை புலியாடா நீ.., மாவோஸ்டா ஆபிசை மூடிட்டு எங்கடா ஒடி ஒளிச்சிங்க..”
 காக்கிச்சட்டை ஆபிசின் பூட்டை உடைத்து தேடிய பொழுது கிடைத்த முகவரியில் எனதும் ஒன்று என்று எனது மண்டைக்குள்  பளிரென எறியது.

முகவரி கொடுத்தற்கே இவ்வளவு சிக்கலா என்று மலைத்தேன். மணிகட்டுகளில் வின் வின் என்று தெறித்தன.

எனக்கான பயோடேட்டாவை அவர்கள் எழுதிக்கொண்டிருந்தனர்!

கவிதை எழுதியிருக்கிறாயா....

ஆமாம்வலியில் முனகினேன்.

டேய் நாயே... கத்தி சொல்லுடா எதை பத்தி எழுதியிருக்க

காதல் ...நட்பு...வேலையின்மை......

புத்தகம் போட்டிறகியா

இல்லை

ஒரு கவிதயை சொல்லுடா”

மூளையை கசக்கினேன். பதட்டத்தில் கவிதை வர மறுத்தது

”நான் நின்ற நிலம் நழுவிப் போக வேண்டும்
நான் எரிமலை வாயினுள் தீய்ந்து கருகனும்
எனக்கு உச்சபட்ச தண்டனைக் கோருகிறேன்
என்னை நீங்கள் மன்னிக்கவே கூடாது
நான் என்றால் நான் அல்ல

ஊருக்கே சோறுபோட்ட தாயை பிச்சைக்காரியாய்
திருவோடு ஏந்த வைத்தவன் எவன் அவன்

தங்கைகளின் உடல்கள் சிதைக்கப்பட்டு
மார்பகங்கள் கூறுபோட்டு விற்ற பொழுது
தோலுக்கு மயிருக்கும் நோகாமல்  போராடியவன் எவன்

சுற்றமும் நட்பும் மரண வளையத்தில்
கூக்குரலிட்டு அலறி ஆற்றிய போதினில்
கும்மாளமிட்டு தேர்தல் திருவிழாவை நடத்தியவன் எவன்

பத்து இருபது லட்சம் எம்மக்கள் பிணங்களை
ஒன்று இரண்டு மூன்று சீட்டு பேரங்களில் மறைத்து
நாற்காலிக்கு நாயாய் அலைந்தவன் எவன் அவன்

பாரதமாதாவிற்கு பசிக்கும் பொழுதெல்லாம்
பாலும் தெளிதேனும் தின்னத் தந்ததொடு
மனித ரத்தமும்,  மக்களின் தசையையும்
மலைமலையாய் தந்து களித்தவன் எவன் அவன்

மவுனம் சம்மதமென போதித்த மடையர்களின் தேசத்தில்
எனது மவுனத்தில் தங்கைகளின் தாலியறுத்தவன் எவன்

என்னை நீங்கள் ஒருபொழுதும் மன்னிக்க கூடாது
நான் என்றால்  நான் அல்ல அல்ல.”

மன்னிக்க மாட்டேன் என்று கிண்டல் பண்ணிக் கொண்டே கைவிரல்களை பிடித்து பின்பக்கமாக ஒரு போலிஸ்காரன் மடக்கினான். விரல்கள் மளக் என்று ஒடைந்தது. வலியில் அலறி துடித்தேன்
.
”களித்தவன்  எவன்”
  
நக்கலடித்தான் அந்த  போலிஸ்காரன்.

எங்காடா உங்க தோழர்கள்.....தொப்புள் கொடி உறவுகள்..”

நான் யாரை சொல்வது என்று புரியவில்லைமௌமாய் இருந்தேன்.

உன் கம்பெனி முதலாளிக்கு சொல்லியாச்சு. இனி அடுத்த வேலைக்கு நாயாய் அலைய வேண்டியுது தான் நீ”

இந்த கம்பெனியில் கொஞ்சம் நல்ல சம்பளம். எனவே நிரந்தரமாகி விடும் என்று நினைத்தேன். அந்த நினைப்பில் மண்ணைவாரி  போலிஸ்அதிகாரி போட்டான். நட்புகள், படித்த கல்லூரி, உறவினர்கள் என்று  எனது பயோடேட்டாவை மிக மிக விரிவாக விசாரித்து  பதிவு செய்தனர். கடைசியாக என்னை வித விதமாக போஸில் போட்டோ எடுத்து தள்ளினர்.

 பயோடேட்டாவில் ஒட்ட வேண்டும். அதற்குத்தான் என்று நான் புன்னைகை பூத்ததை கண்டு நாயை அடிப்பது போல் அடித்தனர் சட்டத்தின் காவலர்கள்.

இழுத்து கொண்டு போய் இன்னொரு அறையில் தள்ளினர். அங்கே சிறு கூட்டமே  இருந்து, என்னை வரவேற்றனர்.
.
வாங்க தோழர்ர்…”

தோழமையுடன் புன் முறுவல் பூத்தனர்.   துன்பம் வரும் போது சிரிக்கனும் என்று முப்பாட்டன் சொன்னது இதற்குதான் போல.  எனக்காவது கொஞ்சமாகத்தான் அடி.ங்கு சிலபேர் இருக்கும் நிலைமையைப் பார்க்கும் போது நாம்ம நிலைமை  எவ்வளவோ தேவலாம் போல இருந்தது. நானும் பதிலுக்கு புன்னகைத்தேன்.

அந்த தோழமை உறவுக் கூட்டத்தில் சிறிது சிறிதாக இணைய மனசு தயராகி கொண்டிருந்தது.

சில மணி நேரம் கழித்து......

ஏட்டய்யாக் கூடப்பிடராறு
என்னை இழத்து அழைத்து சென்றனர்.  நீண்ட விரிவான  பயோடேட்டாயை  அவர்கள் தயார் பண்ணிவிட்டார்கள்

தேச துரோகி…. 124 செக்சன்..”

எனது அடையாளத்தை மாற்றி எழுதினர்.
எனக்கு புதிய பெயரைச் சூட்டினர்.
எனக்கு புதிய பட்டம் கொடுத்தனர்.
தலைஎழுத்தையே புதியதாக கிறுக்கினர்.

 அதில் கையொழுத்திடப் பணித்தனர். பேனாவை தேடினேன்.

ஏட்டு எனது கையை பிடித்து இழுத்து கட்டை விரலை கறுப்பு மையில் தோய்த்து அந்த பயோடேட்டாவின் அழுத்தி பதிய வைத்தார்.

 அவர் அழுத்திய அழுத்தில் வீங்கி காயப்பட்டிருந்த விரலில் இருந்து இரத்தம்  சிவப்பாய் துளித்துளியாய் அந்த வெள்ளை தாளில் புதிய பயோடேட்டாவில் தெறித்தது.
                                            **************

Saturday, October 1, 2011

மார்க்சிய வரலாற்றாசிரியர்
ஆர் . எஸ் . சர்மா (1919 / 2011)  மறைவு
இரங்கல் கூட்டம்

  நாள் : 09 .10 .2011, ஞாயிறு
நேரம் : மாலை 05 .30
 இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
                (DISCOVERY BOOK PALACE)
               6,  மஹாவீர் காம்ப்ளக்ஸ்
              முதல் தளம் , முனுசாமி சாலை,
               மேற்கு கே.கே.நகர், சென்னை. 78
                (பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்)

                                            நிகழ்ச்சி நிரல் 

வரவேற்புரை :வழக்குரைஞர் நடராசன்

 தலைமை :தோழர் பெ. அண்ணாதுரை
                          விரிவுரையாளர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

கருத்துரை:தோழர் தேவ.பேரின்பன்,   
                          நிர்வாக ஆசிரியர், “சமூக விஞ்ஞானம்”, 

                         தோழர் ர. பூங்குன்றன்,
                          துணை இயக்குனர்(ஒய்வு), தொல்லியல் துறை,

                         தோழர் துரைசிங்கவேல்,
                          செயலர், பொதுமை பரப்புரை மனறம்.

நன்றியுரை:தோழர் க.இளங்கோ,
                           நிர்வாகி,  “சமூக விஞ்ஞானம்”, காலாண்டு இதழ்,
                                     

நிகழ்ச்சி ஏற்பாடு:      சென்னை வாசகர் வட்டம்.                 











                                   
                                               

Friday, August 19, 2011

மரண தண்டனைக்கு எதிரான பைக் பயணம் - சில படங்கள்.............மகிழ்ச்சி என்பது போராட்டம் என்பார் மாமேதை. இளஞர்களுடன் வேலூர் பைக் பயணம் எனக்கு அந்த அனுபவத்தை தந்தது. சனநாயக, உரிமைக்கான போராட்டத்தில் நாள் முழுக்க ஈடுபட்டது மனஎழுச்சியை, உற்சாகத்தை தந்தது.

மரண தண்டனை முறை ஏன் இருக்கக்கூடாது? -கார்ல் மார்க்ஸ்.
“தனது நாகரிகத்தைப் பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஒரு சமுதாயத்தில், எந்தவொரு கோட்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு மரண தண்டனை என்பது நீதியானது என்றோ, பொருத்த மானது என்றோ நிறுவுவது மிகக் கடினமானது - அது முற்றிலும் சாத்தியமற்றது எனச் சொல்ல முடியாது என்றாலும். தண்டனை என்பது அச்சுறுத்துவதற்கோ, சீர்படுத்துவதற்கோ பயன்படும் வழிமுறைகளிலொன்று எனப் பொதுவாக அதற்குச் சார்பாகப் பேசப்படுகிறது. ஆனால், மற்றவர்களைச் சீர்படுத்தவோ அச்சுறுத்தவோ என்னைத் தண்டிப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? தவிரவும், காயீன் காலத்திலிருந்து (கடவுளால் படைக்கப்பட்ட முதல் ஆணான ஆதாமுக்கும் முதல் பெண்ணான ஏவாளுக்கும் பிறந்த காயீன், தனது இளைய சகோதரன் ஆபெல் மீது பொறாமை கொண்டு அவனைக் கொலை செய்ததாக விவிலியம் கூறுகிறது -எஸ்.வி.ஆர்.), இன்றுவரை உலகம் தண்டனையின் காரணமாகச் சீர்திருத்தப்பட வில்லை, அச்சுறுத்தப்படவுமில்லை என்பதை வரலாறு- புள்ளிவிவரங்கள் எனச் சொல்லப்படும் ஒரு விடயம் - முற்றுமுடிவான சான்றுடன் மெய்ப்பிக்கின்றது... தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்குத் துக்கிலிடுப வனைத் தவிர வேறு சிறந்த கருவி எதனையும் அறிந்திராத, தனது கொடூரத்தனத்தை சாசுவதமான சட்டம் என ‘உலகின் முன்னணிப் பத்திரிகை'யின் (இலண்டனிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘டைம்ஸ்' நாளேடு - எஸ்.வி.ஆர்.) மூலம் அறிவிக்கின்ற ஒரு சமுதாயத்தின் கதிதான் என்ன...? புதிய குற்றவாளி களின் வருகைக்கான இடத்தை ஏற்பாடு செய்வதற்காக ஏராளமான குற்றவாளிகளைத் தூக்கில் போடுபவனைப் புகழ்வதற்குப் பதிலாக, இந்தக் குற்றங்களைத் தோற்று விக்கும் சமுதாய அமைப்பை மாற்றுவதைக் குறித்து ஆழ்ந்து சிந்திப்பதற்கான அவசியம் இல்லையா?”
தோழர் எஸ்.வி.ஆர் எழுதிய புத்தகத்திலிருந்து














Monday, August 15, 2011

கவிதை.


தள்ளுபடி விற்பனை......


சுதந்திரம்
சனநாயகம்
இறையான்மை
ச்மூகநீதி
தேசபக்தி
மனித உயிர்
இனநலன்
குடிஉரிமை
மக்கள் நலன்....


ஒன்று வாங்கினால்
இரண்டு இலவசம்
சில அய்ட்டங்களுக்கு
50% முதல் 99% வரை
சிறப்பு தள்ளுபடி


கதர் குல்லாய், காவி உடை
கொண்டு வந்தால்
முழு தள்ளுபடியும் உண்டு


இன்று .......
இன்று மட்டுமே


ஆகஸ்டு 15



Sunday, August 7, 2011

சிறுகதை


குட்டிப்பையனின் பொம்மை

மாமா நாளைக்கு பிள்ளை வீட்டுகாரர்கள் கை நனைக்க வருகிறார்கள் நீங்க நிச்சயம் வரனும்
மச்சானின் இந்த அழைப்பிற்கு பின், என் முகத்தில் தோன்றி மறைந்த தயக்கம் அவனுக்கு புரிந்தது விட்டது.
நீங்கதான் மாமா முன்னின்று செய்ய வேணும். நம்ப குடும்பத்தில் நீங்க தான் பெரியவங்க.. நீங்க கட்டாயம் வரனும்... நீங்க தான் முன்னின்று நடத்தனும்
மச்சானின் உறுதியான அழைப்பை தட்டி கழிக்க முடியவில்லை. இப்பத்தானே அந்த பெண்ணிற்கு சடங்கு என்ற பெயரில் ஏதோ நடந்தது. இதற்குள்ளாகவா திருமணம் என்று எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.
அதை அவனிடம் சொன்னாலும், எல்லாம் கைமீறி போய் விட்டதை உணர்ந்தேன். அதட்டலாக சொன்னால் இருக்கின்ற கொஞ்சம் உறவும் அறுந்து போகும் என்பதால் தலையாட்டி வைத்தேன்.
பூப்பெய்தல் விழா அல்லது வீட்டு இட்டு கொள்ளும் சடங்கு அழைப்பிதழை வீட்டில் பார்த்தால் எனக்கு எரிச்சல் தான் பற்றிக் கொண்டு வருகிறது.
இயல்பாக உடலில் ஏற்படும் மாற்றத்தை ஊதிப்பெருக்கி, சின்ன பசங்களை பெரிய பொம்பளையாக காட்டும் நிகழ்ச்சி என்பதால் தான் அந்த கோபம். பொம்மை வைத்து விளையாடும் வயதில் பெண் பிள்ளைகளை பொம்மைகளாக்குவது உடன் பாடில்லாமல் இருந்தது.
வேறு வழியின்றி மறுநாள் மச்சான் வீட்டிற்கு சென்றேன். எனக்கு முன்னே நாலு பெரிசுகள் வெள்ளை வேட்டி,வெள்ளை சட்டை சகிதம் அங்கு கூடி இருந்தனர். திருநீறு பொட்டு வைத்து பெரிசு ஒன்றும் அதில் அடக்கம். எனக்கு பிடித்த கட்டம் போட்ட நீலகலர் சட்டையுடனும், கருப்பு முழுகால் ஆடையுடன் தான் சென்று இருந்தேன்.
 மாப்பிள்ளை வீட்டாரிடம் நகை எவ்வளவு போடுவது என்று பேசி முடித்து விட வேண்டும் என்றார்கள். பட்டு புடவை, இதர சீர்வரிசைகள் பற்றி பேச வேண்டும் என்றனர்.
இதில் என்ன பேசவதற்கு இருக்கின்றது என்பதுதான் எனக்கு புரியவில்லை.
இருக்கின்ற சொத்தை எல்லா பிள்ளைகளுக்கு சமமாக பிரித்து கொடுத்து விட வேண்டும், இது எனது விருப்பம் மட்டுமல்ல, சட்டமும் அதைத்தான் கட்டளை இடுகின்றது. பெண்ணுக்கும், ஆணுக்கும் சொத்தை சமமாமாக பங்கு பிரிப்பது தான் தற்காலத்தின் உலக நியாயம்.
இப்படி இருக்கையில், நகை,சீர்வரிசைகளுடன் மட்டும் பெண்களுக்கு தரவேண்டியதை முடக்குவது சிரியில்லை என்று தோன்றினாலும், என்னால் எதுவும் இது அதைப் பற்றி பேச முடியவில்லை.
பன்னிரண்டு மணியளவில் மாப்பிள்ளை வீட்டார் காரில் வந்து இறங்கினர்.
வந்து இறங்கிய ஒரு பெரிசு இன்னொரு பெரிசை பார்த்தவுடன் கட்டி பிடித்து குசலம் விசரித்தது கொஞ்சி கூத்தாடியது.
ஆம்! மூன்றாம் கால்வழி ....நாலாம் கால்வழி...அந்த கோத்தரம்....இந்த குலம் என்று சுற்றி சுற்றி சுற்றி வந்து உறவுமுறை, சொந்தபந்தம் வருவதை இரண்டு பெரிசுகளும் பேசிப் பேசி உறுதி செய்துகொண்டன. எனக்கு தான் தலை சுற்றியது.
இவர்கள் எப்படிதான் இப்படி உறவு முறைகள் கட்டி அமைக்கிறார்கள். இதற்கான ஊற்றுக்கண் எங்குள்ளது என்று மட்டும் விளங்கவில்லை.
இப்பொழுது நமது கதையின் மையத்திற்கு வருவோம். பெண்ணின் உறவுகாரப்பெண் அனைவருக்கும் தேநீர் அளித்தாள்.  அதற்குள் வேகமாக ஆகட்டும் பெண்ணை கூப்பிடுங்கள் என்ற குரல் ஒங்கி கேட்டது.
நாணி கோணி தண்ணீர் டம்பளர்களுடன் பெண் வந்தாள். பார்த்தவுடன் பகீர் என்றது.
அந்த சின்ன பெண்ணை பொம்மையுடன் பார்த்த ஞபாகம் மறையாமல் நினைவில் நிழலாடியது. தன் சக தோழிகள், சிறுமிகளுடன் ஒன்று சேர்ந்தது பொம்மையுடன், சொப்புகளையும் வைத்து விளையாடியக்கொண்டிருந்தது பசு¬மாக நினைவில் வந்தது.
அந்த சிறுமி பொம்மைக்கு கலர் கலர் துண்டு துணிகளை கொண்டு புடவை கட்டிக்கொண்டு இருந்தாள், இன்று அந்த சின்ன பெண்ணிடமிருந்து பொம்மை பிடுக்கப்பட்டது. பளபளக்கும் பட்டு புடவையை அந்த சின்ன பெண்ணிற்கு கட்டிக் கொண்டு வந்திருந்தார்கள். பொம்மைக்கு வண்ணதுணியைச் சுற்றி வந்ததாகவே அது இருந்தது.
இப்படி உட்காரும்மா பாப்பா
பாப்பாவை உட்காரவைத்து விட்டு பெரிசுகள் தங்கள் வேலையை துவங்கின. நகை ,நட்டு ,சீர் வரிசைகளை பற்றி பேச்சு ஆரம்பித்தது.
மாமா நீங்க சொல்லுங்க...
என்னை பார்த்து விழுந்த கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்தேன்.
அதற்குள் பெரிசு ஒன்று பெண்ணுக்கு இவ்வளவு போடறோம், பிள்ளைக்கு இவ்வளவு போடுறோம் என்று ஆரம்பித்தது.
உங்க பொண்ணுக்கு நீங்க செய்ய போறீங்க என்று மாப்பிள்ளை வீட்டுகாரம்மா ராகம் பாடியது.சவரன் கணக்குகள் ஏற்றம் இறக்கங்கள் சரிபார்க்கப்பட்டு இறுதி முடிவாகியது.
எல்லாம் முடிந்த மகிழ்ச்சியில் அனைவரும் ஒன்றுக்குள் ஒன்றாகி விட்டதை பேசி பேசிப் பிரிந்தனர்.
மாமா வந்ததால் எல்லர்ம் நல்லபடியாக முடிந்தது
இந்த சம்பிரதாய பேச்சு... சடங்குகளில் ஊமையாய் வாய்மவுனி போனேன்.
மீண்டும் என்னை பொம்மையாக்கி இந்த பெரிசுகள் உருட்டி விளையாடுகின்றதோ என்ற கவலை ரேகைகள் நெற்றியில் ஒடியது.
மறக்க முடியுமா அந்த நினைவுகளை!  பெரிசு ஒன்றால் குட்டிபையனின் கையிலிருந்த பொம்மை பிடுங்கப்பட்டகாட்சி என் மண்டைக்குள் வலியாய் புதைந்து கிடந்தது. அந்த வலியின் நோவு இன்றும் தெறிகின்றது.
அப்பா ஆசையாய் கேட்டார்  என்று அம்மா அன்று மெதுவடை காலையில் செய்தார். எனக்கு நான்கு வயது இருக்கும். சுடும்பொழுதே மெதுவடையை லபக் லபக் என்று சுட சுட  சாப்பிட்டு கொண்டிருந்தேன்.
இட்லியை சாப்பிடாமல் மெதுவடையாய் முழுங்கி கொண்டிருக்க... பார்த்துடா ....உளுத்த வடை ரொம்ப சாப்பிட்டா, வயிறு உப்பிடும்
அம்மாவின் எச்சரிக்கையை மீறி அன்று காலை உணவு மெதுவடை மட்டும் தான் என்று ஆனது. எனது அம்மா கையில் மெதுவடை சாப்பிடுவது இது தான் கடைசியாக இருக்கும் என்று தெரியாது. அதற்குள் பக்கத்து வீட்டு அண்ணன் பள்ளிக் கிளம்புவதை பார்த்தேன். அப்பா வாங்கி தந்த சிலேட்டை எடுத்துக் கொண்டு நானும் அண்ணனுடன் கிளம்பினேன். அம்மா சிரித்த முகத்துடன் வழி அனுப்பினாள்.
பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் அண்ணனுடன் மூன்றாம் வகுப்பில் பாடம் கேட்டேன். விளையாட்டு நேரம் வந்தது. நண்பகலில் அண்ணனின் வகுப்பு நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டு மாமா வேக வேகமாய் என்னிடம் வந்தார். என் கையை பிடித்து இழுத்து வீட்டிற்கு அழைத்தார்.
வரமாட்டேன் போ....அண்ணாவோடதா வருவேன்
 திடுமென அவர் கண்களில் கண்ணீர் வழிந்ததை பார்த்தேன்.
குட்டி பையா உங்கப்பா லாரியில் அடிப்பட்டு செத்துட்டாருடா...வாடா  போகலாம்
செத்துப் போவது என்பதின் அர்த்தம்   அப்பொழுது விளங்கவில்லை. ஏதோ தீமை நேர்ந்திருக்கிறது என்று மனம் கூறியது. அவருடன் வீட்டிற்கு புறப்பட்டேன்,
எங்கள் வீட்டை சுற்றி சனங்கள் கும்பலாக கூடியிருந்தனர். அழுகையும் அலறலும் கேட்டது. தலைவிரிகோலமாய் அம்மா அழுது அலறியது கண்டு வீல் என்று அலறினேன்.
என்று அலறி அழுதேன் எவ்வளவு நேரம் அழுத்தேன் என்று தெரியாது. கண்ணீரும் நாக்கும் வறண்டு போனது. சாவுமேளம் கொட்டத் தொடங்கியது
டர்ணக்டர்ணக் கா...டர்ணக்கடர்ர்ர்க்க........இந்த தாளம் எப்பொழுது கேட்டாலும்  துள்ளி குதித்து எனக்கு நானே ஆடுவேன். அந்த தாளம் என் உடம்பில் சப்தநாடிகளையும் தட்டி எழுப்பும். இன்று என் உடம்பின் சப்தநாடிகளும் ஒடுங்கி கிடந்தால் அந்த தாளம் எரிச்சலை ஏற்படுத்தியது.
கம்பகாலன் அண்ணன் வந்தார். என்னை கட்டிபிடித்து கதறி அழுதார். டேய் உங்கப்பனை முழுங்கிட்டயாடா... இந்த வயசிலேயே அப்பனை வாரி கொடுத்துட்டு கொல்லி போடுறயடா என்றார்.
முதலில் ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. ஆனால் அப்பா இறந்ததையும் ,என்னையும் இணைத்து ஏதோ சொல்கிறார் என்று புரிந்தது. அதன் பின்
வந்து போன பெரிசுகள் எல்லாம் ஆம்பளை பொம்பளை வித்தியாசம் இல்லாமல் அனைத்தும் இதேச்  சொற்களை உதித்தன. என்னை அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள் என்று மெல்ல புரிந்து, அதிர்த்து போனேன். குட்டி பையனின் மனதிற்க்குள் இரத்தம் கசிந்தது.
இரண்டு கிழவிகள் என்னை இழுத்து சென்று குழாயடியில் வைத்து குடம் குடமாய் தண்ணிரை கவித்தனர். .படக்கென்று டவுசரை உருவி ஏறிந்தனர் துண்டை இடுப்பில் சுற்றி சொறுகினர்.
தலைச்சம் பிள்ளை நான் என்பதால் அனைத்து சடங்களும் என்னை முன்னிறுத்தியே செய்தனர். தீசட்டியுடன் சுடுகாட்டில் அப்பாவை அழுகையுடன் சுற்றி வந்தேன்.
டேய் தம்பி தங்கச்சிகளையும், அம்மாவையும் நீ தாண்டா காப்பாத்தனும்
பெரிசு ஒன்று இப்படி என் தலையில் பேரிடியை இறக்கியது.
கொல்லி வைத்தப்பின் திரும்பி பார்க்காமல் இருக்கும்படி கூறி என்னை   தூக்கி சென்றனர்.
திரும்பி பார்க்காமல் இருக்க முடியவில்லை. திகு திகுவென  அப்பா தீச்சுவாலையாய் எரிந்து கொண்டிருந்தனர். எனது அப்பா மட்டும் அல்ல எனது குழந்தை பருவமும் அந்த தீயில் பொசுங்கி போனது.
பல விழுதுகள் விட்டு பரந்த விரிந்த ஆலமரம் அந்த குளக்கரையில் இருந்தது நானும், தம்பி தங்கையும், இன்னும் சில பொடிசுகளும் விழுதுகளை பிடித்து தொங்கியபடி ஊஞ்சலாடிக் கொண்டிருந்தோம். தங்கை விழுது வழுக்கியதால் தொப் தொப்பெனவிழுந்து கொண்டிருந்தாள். அவளை விழுதைகொட்டியாக அணைத்துப் பிடிக்கும்படிச் சொல்லிக் கொண்டிருந்தேன்.
பங்களிகள் அனைவருக்கும் முடிதிருத்துனர் மீசை தாடிகளை எடுத்து விட்டு கொண்டிருந்தார். விழுதில் தொங்கி கொண்டிருந்த எனனை . இங்கென்னாடா விளையாட்டு
என்று என்னை இழுத்துக்கொண்டு போய்  அவரிடம்  விட்டனர். குட்டி பையனுக்கு மீசையா,தாடியா இருக்கும் எடுப்பதற்கு என்று நான் நினைப்பதற்குள் எனக்கு மொட்டை போட்டு விட்டார்!
குளத்தில் என்னை நாலு தடவை முக்கி எடுத்து வெள்ளை துண்டை வேட்டியாய் கட்டினர். அந்த வேட்டி இடுப்பில் நிற்காமல் அடிக்கடி அவிழ்த்து கொண்டது. பெரிசுகள் கிண்டல்... பண்ணி சிரித்தது, என்னை என்னமோ பண்ணியது. பிரமணை போல் துண்டை சுருட்டி இடுப்புடன் இறுக்கிக் கொண்டேன்.
வாங்க நாயக்கரே.... மனையில் குந்துங்க
 அய்யர் என்னை மனையில் ஒருகாலை மடித்து குந்த வைத்தார். பூணுலை மாட்டி விட்டு தர்ப்பபுல் மோதிரத்தை விரலில் மாட்டினார்.
குலம் கோத்திரம், பாட்டான்,முப்பாட்டன், கொள்ளுபாட்டன் என்று சொல்லி சொல்லி அய்யர், “நாம்மியா நாம்மியா என்று புரியாத சொற்களை மந்திரங்களாக உதிர்த்து கொண்டு இருந்தார்.
இறுதியில் பங்களாளிகள் அனைவரும் புதுவேட்டி, துண்டு, தலைபாகை அணிந்து கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர்.
எனக்கும் வேட்டி, துண்டுதலைபாகை அணிவித்தனர். அப்படி சொல்ல இயலாது. அதற்குள் என்னை புதைத்தனர். குழந்தைகள் பெரியவர்களின் ஆடைகளை,செருப்பை, கண்ணாடியை, கைதடி அணிந்து அதைப்போல் செய்ய முயலுவது அவர்களுக்குக்கொரு தன் மகிழ்வை கொடுக்கும். அதுவே சம்பிரதாயமாக வலுகட்டாயமாக வேட்டி, துண்டு, தலைபாகை அணிவித்ததுபெரும் சுமையாக அழுத்தியது.
குளக்கரைக்கு வந்தவுடன் வெண்ணிறத்தில் பளபளவென்று  என்னை கவரும் பொருளாக முதலில் இருந்த அதை எடுத்து பார்த்தேன். அதையெல்லாம் தொடக்கூடாது என்று என்னிடமிருந்த சங்கை பண்செட்டியான் பிடிங்கி கொண்டார்.
அந்த கருமாதி ஊர்வலத்திற்கு என்னை தலைமை தாங்கி நடக்க விட்டனர். அந்த பெரியவர்களுக்கான ஆடையணிந்து நடப்பது சிரமத்தை கொடுத்தது. அப்பா இல்லாதப் பிள்ளை என்றால் இதையெல்லாம் அனுபவிக்க வேண்டும் என்பது ஊர்காரர்களின் பார்வையாக இருந்தது. அந்த வெண்சங்கை வாயில் வைத்து கண்ணம் புடைக்க ஊதிய பொழுது எழுந்த சங்கோசையும் மணிஓலியும் எனது குழந்தை பருவத்திற்கு வேட்டு வைப்பதாக இருந்ததை சில மாதங்களில் என்னால் உணர முடிந்தது. விளையாட்டு, பள்ளி, கடை, திருவிழா என்று எங்கு சொன்றாலும் எங்களை கிராமத்தினர் வித்தியாசமாக பார்த்தனர்.
அப்பன் இல்லாத பிள்ளைகள்.. தலைசன் பிள்ளைதான் எல்லாத்தையும் பார்த்துக்கனும்
அம்மா. தம்பி, தங்கையை நீ தாண்டா காப்பாற்றனும்
இப்படியான அறிவுரைகள், அனுதாப வார்ததைகள் சகஜமாக வந்து விழுந்தன.
குண்டி கழுவுவதற்கே இப்பத்தான் அம்மா கத்து கொடுத்தார்கள். இதில் நான் எப்படி எங்கம்மாவை காப்பத்திகிறது என்று யோசனையில் ஆழ்ந்தேன். இன்றுவரையில் யோசனையில் ஆழ்ந்து கிடக்கிறேன்.
சில மாதங்களுக்கு பிறகு பங்காளியின் மகனுக்கு திருமணம் நடந்தது குடும்பத்துடன் அப்பா இல்லாமல் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி. குட்டி பையன்களுக்கு ஒரே கொண்டாட்டம். கல்யாண வீடு கலை கட்டுவது இவர்களால் தான்.
நாற்காலிகள், மணவறை, பூத்தோரணம் என்று அனைத்தும் எங்கள் விளையாட்டு பொருள்களாக இருந்தது.
நானும், தம்பி தங்கையும் மாற்றி மாற்றி வருவோர் போவோர் மீது எல்லாம் பன்னீர் தெளித்தோம்.
வருகின்றவர்கள் வேண்டாம் என்றாலும் நாங்கள் விடுவதாகயில்லை.
பன்னீரில் குளிப்பாட்டி,ரோசா பூவை கொடுத்து அனுப்பாமல் நாங்கள் யாரையும் விடுவதாக இல்லை.
அம்மா கல்யாண மண்டபத்தின் ஒருமுலையில்  சங்கடப்பட்டு கொண்டு உட்கார்ந்து கொண்டு இருந்தார். அப்பா இருக்கும் பொழுது பட்டுபுடவை சகிதம் மல்லிகை மணத்துடன் புன்னகை பூக்க ஒடியாடி அனைவரையும் கவனிக்கும் அம்மாவை இப்பொழுதுபார்க்க முடியவில்லை.
டேய் கண்ணா ரொம்ம ஆட்டம் போடாதடா.. யாராவது தப்பா சொல்ல போறாங்கடா
அம்மா என்னை அடிக்கடி அழைத்து தலையை கோதி எச்சரித்தாள். அதன் அர்த்தம்தான் எனக்கு புரியவில்லை.
டும் டும் முடிந்து மருசடங்கு தொடங்கியது. சீர்வரிசைகளுடன் ஆம்பிளை , பொம்பளை என்று எல்லா பெரிசுகளும் உட்கார்ந்து கொண்டு எதையே செய்து கொண்டு இருந்தன, கல்யாண சாப்பாடு கொடுத்த தொப்பு எங்களை இன்னும் நன்றாக ஆட்டம் போட வைத்தது.
டேய் நாய் க்கரே இங்க வாடா
பெரிசு ஒன்று என்னை இப்படி கூப்பிட்டது. வேறு யாரையோ கூப்பிடுகின்றார் என்று திரும்பி திரும்பி பார்த்தேன். அன்றைக்கு கருமாதியில் அய்யர் சொன்னதை இன்று  கல்யாணத்தில் பெரிசு வழிமொழிந்தது.
குட்டிபையா, கண்ணு, செல்லம், வாண்டு.... என்று தான் அழைப்பார்கள். நான் எப்படி நாயக்கரானேன் எனக்கு புரியவில்லை.
உன்னைத்தாண்டா ..... அப்பனை வாரி முழுங்கிட்டு ஒன்னும் தெரியாதமாறி
முழிக்கிறதபாரு.. நீ தான் எல்லாத்தையும் முன்னின்று செய்யனும் டா
சொல்லிக்கொண்டே அந்த பெரிசு குட்டி பையனான என்னிடம் இருந்த பொம்மையை பிடுங்கி வீசி ஏறிந்தது. என்னை தரதரவென்று இழுத்து கொண்டு கொண்டுபோய் சபை நடுவில் உட்காரவைத்தது.
வெள்ளை துண்டை எடுத்து தலைபாகையாக என் தலையில் சுற்றியது அந்த பெரிய தலைபாகையினுள் குட்டி பையனின் முகம் முழுவதும் புதைந்து போனது.
வேட்டி, துண்டுடன் வெற்றிலை பாக்குடன் எனக்கு தாம்பூலம் வழங்கப்பட்டது. மலங்க மலங்க விழிந்து கொண்டு குருவி தலையில் பனைங்காய் வைத்த அந்த பெரிசுகள் மத்தியில் குட்டி பையனான நான் அமர்ந்து கொண்டிருந்தேன்.
எங்களை சுற்றி குட்டி பசங்கள்  குதுகலமாக ஆடிபாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏக்கத்துடன் அவர்களின் விளையாட்டையும், கீழே கிடந்த பொம்மையும் பார்த்து கொண்டிருந்தேன்.
தூரத்தில் அம்மா பெருமூச்சுடன் சோகமாக என்னை கவனித்ததைக் கண்டேன். அவர்கள் கண்ணில் துளிர்த்த கண்ணீரை முந்தானையால் துடைத்தார்கள்.
( நன்றி.--WWW.THADAGAM.COM. மின் இதழ்)





   

Wednesday, August 3, 2011

கடாமீசை ---சிறுகதை

                                   
                                            
மாபெரும் போட்டி இறுதிக் கட்டத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் முன்னேறியது. நாட்டின் பல இடங்களில் இருந்து வந்த இலட்சக்கணக்கான விண்ணப்பங்களை வடிகட்டி, ஆயிரக்கணக்கானவர்கள் தோந்தெடுக்கப்பட்டு பல முனைகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டு, இறுதி சுற்றுக்கு மூன்று பேர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆவாரம்சூரப்பன், பக்கீரன் ஆகிய மூவரும் தான் அவர்கள் என்பதை நமது கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடிக்கு அறிவிப்பது அவசியமாக  படவில்லை! மூன்று பேரும் கடா மீசைகளைத் தடவி தடவி கொண்டு ஒவ்வொருவரையும் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தனர்!
மீசையின் முனையில் சாத்துக்குடியை எவ்வளவு நிமிடங்கள் வைத்திருப்பது, கடாமீசையில் கயிறு கட்டி மனைவியை இழுப்பது எனப் பலபல போட்டிகள் நடந்து முடிந்து, மூவரும் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
இந்த மீசைப் போட்டியில் வெற்றி பெற்றால் உலக ஆண்மகன் பட்டம் கிடைக்கும் என்னும் மயக்கத்தில் இப்படியும் அப்படியும் திரும்பி ஆவாரம் அலப்பரைச் செய்தார்!
இறுதி போட்டி ஆரம்பமானது. பக்கீரன் டம்பளரில் இருந்த வடிகட்டாத டீயை எடுத்து அடர்ந்த தனது மீசையில் ஊற்றி வடிகட்டினார்! சூரப்பன் பாலை எடுத்து மீசையில் சிறு ஏடு கூட இல்லாமல் வடிகட்டி காட்டினார் !!
 சனங்கள் ஆரவாரம் செய்தனர். தொலைகாட்சிகளில் நேரடி ஒளிபரப்பில் பார்த்து கொண்டிருந்த தமிழ்மக்கள் பேச மறந்து சிலிர்த்து போயிருந்தனர்.
ஆவாரம் அலட்சியமாக சூரப்பன்பக்கீரனையும் பார்த்து சிரித்தார். சூரப்பன்னையும் கடா மீசையை முறுக்கினார். பதிலுக்கு ஆவாரம் நன்றாக இன்னும் மீசையை முறுக்கி தொலைகாட்சி காமாராக்களில் இப்படியும்   அப்படியும் காட்டி காட்டி போஸ் கொடுத்தார்! மக்கள் பொறுமையை இழந்தனர். இந்த ஆள் போஸ் கொடுப்பதை எப்பொழுது தான் நிறுத்துவார் என்று சலிப்பின் உச்சத்திற்கு மக்கள்  சென்றனர்.
இதை எதிர்ப்பார்த்த ஆவாரம் பாலை எடுத்து கடா மீசையில் வடிகட்டி கொண்டே பக் பக் கென்று கெக்கெலியிட்டு சிரித்தார். அடர்ந்த மீசையில் கீழே பால் வரவில்லை. பால் தண்ணீராக வடிக்கட்டப்பட்டு வழிந்தது.  பால் மீசையின் மேலே ஒட்டிக் கொண்டது. தொலைகாட்சிக் காமிரா மீசையின் அருகே சென்று துல்லியமாக  காட்டியது. தண்ணீர் மட்டும்  மீசையில் வடித்தே தவிர பாலை  காணவில்லை. அப்பொழுது எழுந்த ஆரவாரம் அடங்கவே இல்லை. மாவீரன் ஆவாரம் நடுவர் அறிவிக்கும் முன்பே பரிசை எடுத்து கடாமீசையில் வைத்து அப்படியும் இப்படியும் தொலைகாட்சிக்குப் போஸ் கொடுத்தார்.
                                                         2
அதிசயபயங்கர கனவை கண்டு சாமிநாதன் திடுக்கிட்டு அலறி எழுந்தான். முகத்தை தடவினான். மீசையில்லாமல் முகம் மழு  மழுவென இருந்தது!
மீசை இல்லாமல் இருப்பது ஒன்றும் தலை மூழ்கி போகும் விசயம் இல்லை தான்! போலிஸ் வேலையில் சேர்ந்த பிறகு, மீசை இல்லாமல் இருப்பது உலகமாக குற்றமாகியது.
தங்க பதக்கம், வால்டர் வெற்றிவேல், கேப்டன். காக்கி சட்டை இன்ன பிற தமிழ் சினிமாக்களை பார்த்து பார்த்து சாமிநாதன் வாழ்க்கை இலட்சியமே போலிஸ்காரனவது என்று ஆனாது.
அவனது அப்பா நன்றாகப் படித்தால்  நல்ல வேலைக்கு போகலாம் என்று ஆலோசனைகளை வழங்கினார். சாமியின் நாட்டம் போலிஸ் வேலையிலேயே குறியாக இருந்தது. படிப்பில் கவனம் செல்லவில்லை.
போலிஸ் துறைக்கு உடலை தயார் செய்வது அவனது முழுநேர பணியானது.
வாரத்தில் மூன்று நாட்கள் பத்து முட்டைகள்,   இறைச்சி, காலையில் முளை கட்டிய   கறுப்பு மூக்கடலை,,,, என சாமியின் உணவுப்பட்டில் நீண்டது. தள்ளு வண்டியில், சிறுகடைகளில் சாப்பிடும் பீப் பிரியாணி, பீப் சூப் இந்த கணக்கில்  சேரவில்லை.      
ஜிம்மில் சேர்ந்து தொடர்ந்து பயிற்சிகளின் உடலை மூலம் முறுக்கேற்றினான். ஐந்து பேக், ஆறு பேக், ஏழு பேக் என்று ஆரம்பித்து உடம்பில் பேக் எண்ணிக்கை  ஏறி கொண்டே சென்றது! செல்லமாக கட்டுவிரியன் என்று அழைக்க ஆரம்பித்தனர்.
தினமும் காலையில் ஒட்டப்பயிற்சி செய்தான், கொஞ்சம் கொஞ்சமாக அவன் ஒட்டம் அதிகரித்தது. இளைய தளபதி விஜய் ஸ்டைலில் லாரியுடன் ஒடினான்.... ஒடினான். ஒரு கட்டத்தில் உண்மையாகவே லாரியை ஒடிகடந்து டிரைவருக்கு கை காட்டினான்! சினிமாவில் டிரைவர் கை காட்டியது போல் டாடா காட்டுவார் என எதிர்ப்பார்த்தான்,
‘’டேய சாவு கிராக்கி நீ ஒடி வந்து விழுவதற்க்கு ஏ வண்டியாடா கெடைச்சது. சாவு கிராக்கி சாவு கிராக்கி”  என்று லாரி டிரைவர் திட்டியது அவன் முதல் தோல்வி!
பதினெட்டு வயது நிறைவடைந்ததும் போலிஸ் வேலைக்கு ஆள் சேர்க்கும் வைபோகத்திற்கு சாமிநாதன் சென்றான். அங்கு கூடியிருந்த கூட்டத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனான். கடல் அலையென இளைஞர்களும், இளைஞிகளும் அங்கு குவிந்திருந்தனர். நாட்டிற்கு சேவை செய்யும் ஆர்வத்தில் இவர்கள் வரவில்லை என்பதை அங்கு நடந்த உரையாடல்கள் அவனுக்கு உண்ர்த்தியது. அவன் முகம் சுண்டி போனது.
 எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றான். கடைசியாக உயரத்தை அளப்பதற்கான வரிசையில் நின்றான். உயரும் அளக்கும் பலகையில் ஏறி நின்றான்.
எம்பி நிக்காதடா .... சரியா நில்லு
போலிஸ்காரர் எரிந்து விழுந்தார். அவன் சாதாரணமாதான் நின்றான். டப் டப் பென்று மேலே உள்ள அளவு மட்ட பலகையால் அவன் தலையில் ஒங்கி ஒங்கி இரண்டு தடவைகள் அந்த போலிஸ்காரர் அடித்தார். வலியில் சாமிநாதன் சிறிது குனிந்தான். அதனால் மூன்று சென்டி மீட்டர் உயரம் குறைந்தது. அவன் வேலைக்கு தேர்வாக வில்லை.
அதன் பிறகு மீண்டும் மீண்டும் போலிஸ் வேலைக்காக மூன்று ஆண்டுகள் படையெடுப்புகளை அவன் நிகழ்த்தினான். படாதபாடு பட்டப் பிறகே வெற்றிகனி அவன் கையில் கிடைத்தது.
பயிற்சி முடித்து வேலையில் சேர்ந்தான். நல்ல படியாக நகர்ந்து கொண்டிருந்தது. அரசல் புரசலாக குசு குசுவென அவனை பார்த்து சிரித்ததைக் கண்டான். அந்த இன்ஸ்பெக்டர் இவனை பார்க்கும் பொழுதெல்லாம் முறுக்கு மீசையைத் திருகினார்.
கத்தை மீசை வைத்திருந்த சக போலிஸ்காரர் சாமிநாதனைக் கேட்டு விட்டார்.
தம்பி மீசைதான் போலிஸ்காரனுக்கு அழகு. மீசையை கத்தையா வளர்க்கனும்
இப்படி தான் மீசை விவகாரம் ஆரம்பித்தது.
மப்டியில் நாலைந்து போலிஸ் காரர்கள் சேர்ந்து சாராய ரெய்டு சென்றனர். அங்கிருந்த மக்களிடம் கள்ளசாராயம்  விற்பதை கேட்டனர். ஒருவர் அவர்கள் யார் என்று கேட்டார்.
எங்க மீசையை பார்த்த தெரியலையா....
என்று மீசைகளைத் தடவி போலிஸ்காரர்கள் என்று சொல்லாமல் சொன்னார்கள். அப்பொழுது அவர்கள் சாமிநாதனை நக்கலாக பார்த்து சிரித்தனர்.
அவனுக்கு அவமானமாக போய் விட்டது. இந்த வேலைக்கு ஏன் சேர்ந்தோம் என்று நினைத்தான்.
மீசை இல்லாமல் ஒம்பது மாதிரி இருக்க
 ஒரு மேலதிகாரி நேரடியாக சொல்லிவிட்டார். ஒவ்வொரு போலிஸ்காரர்களுக்கும் ஒரு நம்பர் இருக்கும். சாமிநாதனுக்கு நம்பர் 1327. ஆனால் அவனை நேரில் பார்க்கும் பொழுது தான் இந்த எண்னை பயன்படுத்தினர். அவன் இல்லாத பொழுது அவனுக்கு சக போலிஸ்காரர்கள் வைத்த நம்பர் 9. 
மீசை பற்றி சாமி இப்பொழுதொல்லாம் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.
சாதாரண கான்ஸ்டேபிளில் இருந்து ஜ.ஜி வரை மீசை வளர்க்க கணிசமாக நேரம் செலவிட்டனர். அதற்கான சிறப்பு திரவியங்களை பயன் படுத்தினர். தங்கள் மீசையை ஒதுக்குவதற்கு சிறப்பு முடிதிருத்துவரையும் அவரவர் சக்திவசதிக்கேற்ப ஏற்பாடு செய்து வைத்திருந்தனர். வீரம், தைரியம், உறுதி, கம்பீரம் இவைகளின் சின்னமாக மீசை இருந்தது. எல்லாற்றுக்கும் மேலாக ஆண்மை =கடா மீசை=போலிஸ் என்பது போலிஸ்துறையின் கணித சமன்பாடாக விளங்கியது!  இதற்கு முன்னர் மீசை வளர்ப்பதற்கு சிறப்பு அலவன்ஸ் தந்ததாக கூட கேள்விப்பட்டான்.
உடல்வலிமைமனதிண்மைநுண்ணறிவு ஆகியவைகளை பயிற்சிகள் செய்து வளர்ந்து கொண்ட சாமிநாதனுக்கு, மீசை பற்றி தெரியாமல் போனது பற்றி, அவனுக்கே ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையை அளித்தது.
மீசையை வளர்ப்பதற்கு கடும் முயற்சிகள் செய்தான். முப்பது நாளில் வழுக்கை மண்டையில் கரு கருமுடி வளரும் தைலம், அமோசான் -ஆப்பிரிக்க காடுகளில் வளரும் அரிய வகை மூலிகை தைலம்...... என்று பலதையும் சாமி வாங்கி தடவி பார்த்தான். முகத்தை அலங்கோலம் படுத்திக் கொண்டது தான் மிச்சம் மேலுதட்டில் மீசையென சில பூனை முடிகள் அசிங்கமாய் வளர்ந்தது.
மீசை பற்றிய கட்டுரைகள், கவிதைகளை படித்தான். தமிழ் நாட்டிற்கு வெளியே மீசை பற்றி இவ்வளவு காத்திரம் இருக்கவில்லை. இந்தி, ஆங்கில படங்களில் பெரும்பாலான கதாநாயகர்களுக்கு மீசை இருப்பதில்லை. மா-சே-துங் முதல் ஜார்ஜ புஷ்வரை தலைவர்கள்  பலருக்கும் மீசை இல்லை. மாவீரன் அலெக்சாண்டர் என்ன முறுக்கு மீசையா வைத்து இருந்தார்இந்த கேள்விகள் சாமியின் நெஞ்சை துளைத்தன.
                  “ மீசை முளைத்தோரெல்லாம்
         பாரதி என்றால்
         எனக்கும் ஆசை
         கவிதை வடித்திட
         இப்படிக்கு
         கரப்பான் பூச்சி

என்ற கவிதை சாமியின் நினைவில் அவ்வப்பொழுது நிழலாடியது.ஆறுதல் படுத்தியது. இதெல்லாம் அவன் பிரச்சனையைத் தீர்க்க உதவவில்லை. ஒரு கட்டத்தில் மீசை இல்லாமல் போலிஸ் உத்தியோகம் செய்ய முடியாது என்ற எல்லைக்கே அவன் தள்ளப்பட்டான்.
டெங்கு காய்ச்சல் என்று  மருத்துவமனையில் படுத்த படுக்கையாகினன். கலர் கலர் மாத்திரைகளை விழுங்கி நோய் தீர ஒரு மாதமானது. மீசை பற்றி மறந்தே போனான்.
மீண்டும் வேலைக்கு போகவேண்டிய சூழல் வந்ததும், மீசையை பற்றி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான். அருமையான யோசனை உதித்தது. அவ்வை சண்முகிக்கு ஒரு நாகேஷ் மாதிரி இவனுக்கு நண்பன் ஒருவன் கிடைத்தான். கரு கருவென்ற ஒட்டு கடா மீசையுடன் வேலைக்கு சென்றான்.
தடித்த மீசையைப் பார்தத போலிஸ்காரர்களுக்கு சந்தேகம் வந்தது.
கண்ட  கண்ட வைட்டமின் மாத்திரைகளை விழுங்கிதால் இப்படி மீசை அசுர வளர்ச்சி அடைந்து விட்டது.என்று கதை விட்டான்.
வேறு வழியின்றி எல்லாரும் நம்பினர். சிலர் லேசாக இழுத்தும் பார்த்தனர். மீசை நன்றாக ஒட்டி கொண்டதால் இவன் மானம் கப்பல் ஏறவில்லை.
அடிக்கடி தனது கடா மீசையை தடவி சாமிநாதன், மற்ற போலிஸ்காரர்களை கிண்டல் தொனியில் பார்த்தான். தன்னை ஆண்மையை இப்படி சாமி நிருபித்தான் .
ஆனால் அதற்கு இவ்வளவு சீக்கிரத்தில் சோதனை வரும் என்று எதிர்ப்பார்க்கவில்லை.
சுதந்திரதின அணி வகுப்பு காவல் துறை சார்பில் மெரினாவில் நடந்தது. அணி வகுப்பின் முன்னணி வரிசையில் சாமிநாதன் இருந்தான்.   கையில் துப்பாக்கியுடன் அணி வகுத்துச்  சென்றான்.
குண்டம்மா முதலமைச்சர் மேடையில் நின்று அணிவகுப்பை கறுப்பு பூனைகள் புடை சூழ பார்வையிட்டு கொண்டிருந்தார். போலிஸ் அணி வகுப்பு முதல்வர் மேடையருகே வந்தது.
படார் படார் ....டமார் டமார் என்று பூட்ஸ் கால்கள் சத்தம் காதை கிழித்தது. சாமிநாதன் தூப்பாக்கியை நேராக நீட்டி, மடக்கி தரையில் அடித்து, நேராக நிமிர்த்தி சல்யூட் அடிக்க தூப்பாக்கியை உயர்த்திய பொழுது, கை பிசகி பயடெட் கத்தி முகத்தில் உராசி, கத்தி முனையில் பெரிய ஓட்டு கடாமீசை  ஒட்டி கொண்டு கீழே விழ்ந்தது. இக்காட்சி கண்டு அனைவரும் அலறினார். குண்டம்மா பயத்தில் வீல் என அலறினாள்.
உடனே பட பட வென்று கறுப்பு பூனைகளின் இயந்திர துப்பாக்கிகள் வெடிக்க சாமிநாதன் உடல் சல்லடையாக குண்டுகளால் துளைக்கப்பட்டது. கடாமீசை தூரத்தில் மண்ணில் வீழ்ந்தது. அது அவனை போல் துடிக்காமல் வீழ்ந்து கிடந்தது.
மறு நாள் அனைத்து தினசரிகளிலும் நாலுபத்தித் தலைப்பு செய்திகள் வந்தன.
மாறுவேடத்தில் கடாமீசையுடன் வந்த
 தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டான்.
 மயிரிழையில் முதல்வர் தப்பினார்.
                                                                  3                        
சமர்ப்பணம் : பொய் வழக்கில் கைது செய்ய மப்டியில் இரு போலிஸ்காரர்கள் எனது அறைக்கு வந்தனர். நீங்கள் யார் என்று கேட்டேன். மீசையை பார்த்தா தெரியவில்லையா என்று புகழ் பெற்ற வாசகத்தை எனது மரமண்டையில் ஆணி போல் அடித்து ஏற்றிய அந்த இரு போலிஸ்காரர்களுக்கு அடியேனின் சிறுகாணிக்கை.