Friday, October 27, 2017

உலகம் அறிந்திராத வியக்கத் தக்க சோவியத் புரட்சியின் சாதனைகள்


உலகம் அறிந்திராத வியக்கத் தக்க சோவியத் சாதனைகள்: -Bhim Prabha Gandhi 


***********************************************
சோவியத் யூனியன் ஸ்தாபிக்கப் பட்ட பின்னர், உலகில் வேறெந்த நாட்டிலும் வாழும் மக்கள் அறிந்திருக்காத வசதி வாய்ப்புகள், சோவியத் பிரஜைகளுக்கு வழங்கப் பட்டன. மேற்கத்திய நாடுகளில் கூட, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தான் அவை நடைமுறைக்கு வந்தன. அந்த வகையில், இன்றைக்கு மேற்குலகில் வாழும் மக்கள் அனுபவிக்கும் சலுகைகளை, சோவியத் யூனியன் தான் முதன் முதலாக அறிமுகப் படுத்தியது.
சோவியத் மக்கள் அனுபவிக்கும் வாழ்க்கை வசதிகளைப் பற்றிக் கேள்விப்படும் தமது மக்கள், புரட்சி மூலம் ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்கள் என்று மேற்குலக அரசுகள் அஞ்சின. அதனால் தான், எதிர்காலப் புரட்சியை தடுக்கும் நோக்கில், தாமும் அதே மாதிரியான வசதிகளை தமது மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்தனர். மனித சமுதாயம் முழுவதற்கும் சோவியத் யூனியன் வழங்கிய நன்கொடைகளின் விபரம்:
1. உலக வரலாற்றில் முதல் தடவையாக, சோவியத் யூனியனில் மட்டும் தான், எட்டு மணி நேர வேலை நடைமுறைக்கு கொண்டு வரப் பட்டது.
2. வேலை செய்யும் அனைவருக்கும், வருடத்திற்கு ஒரு தடவை ஒரு மாத விடுமுறை வழங்கப் பட்டமை இன்னொரு சாதனை ஆகும். சில தொழிற்துறைகளில் ஒரு மாதத்திற்கும் மேற்பட்ட விடுமுறை கிடைத்தது. அது மட்டுமல்ல, விடுமுறைக் காலம் முழுவதும் முழுச் சம்பளம் வழங்கப் பட்டது. இதுவும் உலக வரலாற்றில் முதல் தடவை என்பது குறிப்பிடத் தக்கது.
3. ஒவ்வொரு தொழிற்துறைக்கும் ஏதாவதொரு தொழிற்சங்கம் பொறுப்பாக இருக்கும். அதில் அங்கத்தவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், தொழிற்சங்கப் பாதுகாப்பு கிடைத்து வந்தது. உதாரணத்திற்கு, தொழிற்சங்கத்தை கலந்தாலோசிக்காமல் எந்த நிறுவனமும் தமது ஊழியரை பணி நீக்கம் செய்ய முடியாது.
4. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படித்து முடித்த ஒவ்வொரு பட்டதாரிக்கும், வேலை தேடிக் கொடுக்கும் பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டது. அனைவருக்கும் வேலை வாய்ப்பு உறுதிப் படுத்தப் பட்டது.
5. பாடசாலைக் கல்வியில் திறமைச் சித்தி பெற்ற அனைவரும், தாம் விரும்பிய கல்லூரிக்கோ, அல்லது பல்கலைக்கழகத்திற்கோ செல்ல முடிந்தது. தரப்படுத்தல் கிடையாது. கல்விக் கட்டணமும் அறவிடப் பட மாட்டாது.
6. பாலர் பாடசாலை தொடங்கி, ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரையில், முற்றிலும் இலவசமாக வழங்கப் பட்டது. உலகிலேயே இலவசக் கல்வியை அறிமுகப் படுத்திய முதல் நாடு சோவியத் யூனியன் தான்.
7. உலகிலேயே முதல் தடவையாக, சோவியத் குடிமக்கள் தான் இலவச மருத்துவ வசதியை அனுபவித்தனர். மருத்துவ ஆலோசனை முதல் சத்திர சிகிச்சை வரையில் அனைத்தும் இலவசம். எங்கேயும், எப்போதும், காலவரையறை இன்றி இலவச மருத்துவ வசதி வழங்கப் பட்டது. எந்த மருத்துவமனையிலும் நோயாளிகள் வரிசையில் காத்திருக்கவில்லை. காலந் தாமதித்து சிகிச்சை வழங்கவில்லை. ஒவ்வொரு நகரத்திலும் பத்துக்கும் குறையாத மருத்துவ மையங்கள் (poliklinikas) இருந்தன. அந்த இடங்களுக்கு எவரும் சென்று வைத்திய ஆலோசனை பெறலாம். எக்ஸ் ரே படம் பிடித்தல், பற்களை கட்டுதல் அனைத்தும் இலவசம்.
8. ஒவ்வொரு உழைப்பாளியும், தனது நிறுவனத்தை சேர்ந்த முகாமையாளரிடம் சுற்றுலா பயணம் கோரி விண்ணப்பிக்க முடிந்தது. கடற்கரைக்கோ அல்லது வேறெந்த விரும்பிய சுற்றுலா ஸ்தலத்திற்கோ சென்று வர அனுமதி கோர முடிந்தது. ஒவ்வொரு வருடமும், தமது தொழிலாளரின் சுற்றுலா செலவுகளை, அந்த நிறுவனம் முழுமையாக பொறுப்பெடுத்தது. அதாவது, தொலைதூர பிரதேசத்திற்கான சுற்றுலா பயணமும் முற்றிலும் இலவசம்.
9. உலக வரலாற்றில் முதல் தடவையாக, ஒவ்வொரு சோவியத் பிரஜையும் இலவச வீட்டுக்கு உரிமை உடையவராக இருந்தார். வீட்டு வாடகை கிடையாது. முற்றிலும் இலவசம். உங்களது பெயரில் வீடு எழுதித் தரப் படும். அதை நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம். உங்களுக்குப் பின்னர் உங்களது பிள்ளைகள் அங்கே வசிக்கலாம். வீடு கிடைப்பதற்காக காத்திருக்க வேண்டி இருந்தமை உண்மை தான். ஆனால், ஒவ்வொரு மாதமும் நாடு முழுவதும் ஆயிரக் கணக்கானோருக்கு புது வீடுகள் வழங்கப் பட்டன. இன்றும் கூட, ரஷ்யாவிலும், முன்னாள் சோவியத் குடியரசுகளிலும் பெரும்பான்மையான மக்கள் சொந்த வீடுகளில் வாழ்கிறார்கள் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது.
10. ஒவ்வொரு சோவியத் பிரஜையும், தங்கியுள்ள இடத்தில் இருந்து வேலை செய்யும் இடத்திற்கு சென்று வர இலவச பயணச் சீட்டு வழங்கப் பட்டது. பஸ், மெட்ரோ, ரயில் எதுவாக இருந்தாலும், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு இலவச பயணச் சீட்டுகள் கொடுத்தனர். இதுவும் உலகிலேயே முதல் தடவை.
11. தாயாகப் போகும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மூன்று வருட மகப்பேற்று விடுமுறை வழங்கப் பட்டது. ஆமாம், மூன்று வருடங்கள்! முதலாவது வருடம், அவர் சம்பாதித்த அதே சம்பளம் வழங்கப் பட்டது. இரண்டாவது, மூன்றாவது வருடங்கள் அரசு உதவித் தொகை கொடுக்கப் பட்டது. அது மட்டுமல்ல, மூன்று வருடங்கள் முடிந்ததும், அவர் முன்பு செய்த அதே வேலையை திரும்பவும் பெற்றுக் கொள்ள முடிந்தது.
12. ஒவ்வொரு தாய்க்கும் குழந்தைகளுக்கான பால் அல்லது பால்மா இலவசமாக வழங்கப் பட்டது. பிறந்த குழந்தை ஒவ்வொன்றும் மூன்று வயதாகும் வரையில் இலவசப் பால் கிடைத்தது. இதற்காக, ஒவ்வொரு ஊரிலும் பால் நிலையங்கள் இருந்தன. பெற்றோர்கள் எந்த நேரத்திலும் அங்கே சென்று, தமது குழந்தைகளுக்கான பாலை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆதாரம்: http://englishrussia.com/…/12-awesome-things-soviet-union-…/
====================================
தொழிலாளர்களுக்கான ஆடம்பர சுற்றுலா, கம்யூனிச நாடுகளின் உயர்தர வாழ்க்கை:
பிரமாண்டமான உல்லாசப் பிரயாணக் கப்பலில் வெளிநாடுகளுக்கு சுற்றுலாப் பயணம். மலைப் பகுதிகளில் இளைப்பாறுவதற்கு ஆடம்பரமான தங்குவிடுதிகள். சாதாரண அடித்தட்டு தொழிலாளர்கள் கூட விடுமுறையில் பொழுதுபோக்குவதற்கு ஏற்படுத்தப் பட்ட உயர்தரமான வசதிகள். இந்த சுகபோக வாழ்க்கையை எண்ணி, நம் நாட்டு தொழிலாளர்கள் கனவு மட்டுமே காண முடியும். ஆனால், கிழக்கு ஐரோப்பாவிலிருந்த முன்னாள் சோஷலிச நாடுகளில் அது நடைமுறையில் இருந்தது. மிக மிக குறைந்த செலவில், அனைத்து பிரஜைகளும் சுற்றுலா செல்வதற்கான வசதிகளை, கம்யூனிச அரசுக்கள் மக்களுக்கு செய்து கொடுத்திருந்தன.
தமிழ் பேசும் மத்தியதர வர்க்கத்தினர் பலர், எந்தக் காரணமும் இல்லாமல் கம்யூனிசத்தை, அல்லது இடதுசாரியத்தை எதிர்க்கவில்லை. அவர்கள் ஜனநாயகவாதிகளோ அல்லது மனிதநேயவாதிகளோ அல்ல. அவர்களது அச்சம் எல்லாம், தமது சொந்த தமிழ் இனத்தை சேர்ந்த அடித்தட்டு தொழிலாளர்கள், தமது "அந்தஸ்தை" எட்டிப் பிடித்து விடுவார்கள் என்பது பற்றியது தான்.
மேட்டுக்குடி மக்கள், வாழ்க்கையில் தாம் அனுபவிக்கும் சுகபோகத்தில், நூறில் ஒரு பங்கை கூட, அடித்தட்டு வர்க்க மக்கள் அனுபவிப்பதை விரும்பவில்லை. இன்றைக்கும், அவர்களைப் பொருத்தவரையில், வர்க்க சமத்துவம் ஒரு கெட்ட கனவாகவே உள்ளது. இலங்கையிலும், இந்தியாவிலும், வசதியான மத்தியதர வர்க்கத்தினர் மட்டுமே சுற்றுலா செல்கிறார்கள். விடுமுறைக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிட்டியவர்கள் கூட, உல்லாசக் கப்பலில் செல்வது மிகக் குறைவு.
இப்படி ஒரு நிகழ்வை கற்பனை பண்ணிப் பார்ப்போம். தமிழ் நாட்டில், தொழிற்சாலை ஒன்றில் கடின வேலை செய்யும் தொழிலாளி, ஒரு மாத விடுமுறையில், குடும்பத்தோடு கோவா சென்று, கடற்கரையில் உல்லாசமாக பொழுது போக்குகிறார். யாழ்ப்பாணத்தில் புகையிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் கூலித் தொழிலாளி, ஒரு வார விடுமுறையில், குடும்பத்துடன் உல்லாசக் கப்பலில் பயணம் செய்து, தாய்லாந்து, சிங்கப்பூர் என்று நாடு பார்த்து விட்டு ஊர் திரும்புகிறார்.
"பகல் கனவு காணாதீர்கள். இன்னும் நூறு வருடங்கள் சென்றாலும், எமது நாட்டில் இப்படி எல்லாம் நடக்காது." என்று பலர் நினைக்கலாம். ஒருவேளை, இந்தியாவும், இலங்கையும், கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஆளப்படும் சோஷலிச நாடுகளாக இருந்திருந்தால்? அது என்றோ ஒரு நாள் நடைமுறைச் சாத்தியமாகி இருக்கும் என்று நம்பிக்கையோடு எதிர்பார்க்கலாம். ஏனென்றால், வளர்ச்சி அடைந்த சோஷலிச நாடுகளில், "தொழிலாளர்களுக்கான உல்லாசப் பிரயாணம்" நடைமுறையில் இருந்துள்ளது.
சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பாவில் இருந்த சோஷலிச நாடுகளிலும், அனைத்துப் பிரஜைகளும் விடுமுறைக்கு உல்லாசமாக பொழுதுபோக்கும் வசதிகள் செய்து கொடுக்கப் பட்டன. சோவியத் யூனியன், உலகிலேயே மிகப் பெரிய நாடாக இருந்தது. பல்வேறு மொழிகளைப் பேசும், பல்வேறு பட்ட கலாச்சாரங்களை பின்பற்றும், பல்லின மக்களின் தேசமாக இருந்தது. அதனால், சோவியத் யூனியனுக்குள் சுற்றுலா சென்றாலே, உலகின் அரைவாசியைப் பார்த்தது போன்ற அனுபவம் ஏற்படும்.
உலகில் எல்லா நாடுகளிலும் இருப்பதைப் போன்று, பெரும்பான்மையான சோவியத் மக்கள் விடுமுறையில் கடற்கரையொன்றில் உல்லாசமாகப் பொழுது போக்குவதற்கு தான் ஆசைப் படுவார்கள். குறிப்பாக மாஸ்கோ போன்ற குளிர்வலையப் பிரதேசத்தில் வாழும் மக்கள், கொளுத்தும் வெயிலில் இளைப்பாற விரும்புவார்கள். அதனால், கருங்கடலில் உள்ள கிரீமியா கடற்கரைகள், விடுமுறைக் காலத்தில் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிந்தன.
அநேகமாக, அன்று ஐரோப்பாவில் இருந்த எல்லா சோஷலிச நாடுகளிலும் சுற்றுலாத் திட்டம் கிட்டத்தட்ட ஒரே மாதிரி நடைமுறையில் இருந்தது. எமக்கு அந்த நாடுகளின் மொழிகள் தெரியாத படியால், அது தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை. (தெரிந்திருந்தாலும் மத்தியதர வர்க்க வலதுசாரி- அறிவுஜீவிகள் அவற்றை மறைத்திருப்பார்கள்.) இந்தக் கட்டுரைக்கு ஆதாரம் கேட்பார்கள் என்பதற்காக, நானும் எனக்குத் தெரிந்த ஜெர்மன் மொழி பேசும், கிழக்கு ஜெர்மனி பற்றித் தான் எழுத வேண்டியுள்ளது.
பொதுவாக, இன்றைக்கும் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் இருப்பதைப் போன்று, கோடை காலமான ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் தான், சோஷலிச நாடுகளிலும் விடுமுறைக் காலமாக இருந்தது. கிழக்கு ஜெர்மனியில் இருந்த மிகப் பெரிய தொழிற்சங்கமான FDGB (Freier Deutscer Gewerkschaftbund), சுற்றுலாத் துறையையும் நிர்வகித்தது. அனைத்து தொழிலாளர்களும் விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு தொழிற்சாலைக்கு தனித்தனியாக சுற்றுலா ஒழுங்குபடுத்தப் பட்டது.
இதிலே குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அனைத்துப் பிரஜைகளும், செய்யும் தொழிலில் பேதமின்றி, சுற்றுலா செல்லும் வகையில் வசதி செய்து கொடுக்கப் பட்டது. அதற்காக அவர்கள் மிகச் சிறிய தொகையை கட்டணமாக செலுத்தினார்கள். சுற்றுலா செல்வதற்கான செலவு மிகவும் குறைவாக இருந்தது மட்டுமல்ல, எத்தனை வருடங்கள் சென்றாலும், விலை மாறப் போவதில்லை.
FDGB க்கு சொந்தமான ஹோட்டல்கள், நாடு முழுவதும் இருந்தன. அவை "Ferienheime" (விடுமுறை இல்லம்) என்று அழைக்கப் பட்டன. பெரும்பாலும் கிழக்கு ஜெர்மனியின் வடக்கே இருந்த, கிழக்குக் கடல் தான் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமாக இருந்தது. பெரும்பான்மையான மக்கள் கடற்கரையை தெரிவு செய்த படியால், அங்கே தான் அதிகமான தங்குவிடுதிகள் காணப் பட்டன.
கோடை காலத்தில், கடற்கரைகள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும். சுருக்கமாக சொல்வதென்றால், இந்தியாவில் கோவா கடற்கரைகள், அல்லது தென்னிலங்கை கடற்கரைகள் போன்று காட்சி தரும். ஆனால், ஒரு வித்தியாசம் என்னவென்றால், அங்கே வருவோரில் பெரும்பான்மையானோர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள். ஆனால், கிழக்கு ஜெர்மன் கடற்கரையில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆக்கிரமித்திருந்தனர்.
ஒவ்வொரு வருடமும், விடுமுறையை கழிப்பதற்கு கடற்கரைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. குளிர்காலத்தில் பனிச்சறுக்கல் விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு, மலைப் பகுதிகளிலும் விடுமுறைத் ஸ்தலங்கள் இருந்தன. அதுவும் வேண்டாமென்றால், ஓர் ஏரிக்கரையில், அல்லது புல்வெளியில் கூடாரம் அடித்து தங்கிக் கொள்ளலாம்.
கிழக்கு ஜெர்மன் பிரஜைகள் வெளிநாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளாக செல்ல முடியுமா? ஆம்! மேற்கத்திய நாடுகளுக்கு பயணம் செய்வது தடுக்கப் பட்டது உண்மை தான். ஆனால், அவை மட்டுமே உலகம் அல்லவே? சகோதர சோஷலிச நாடுகளுக்கு எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யும் சுதந்திரம் இருந்தது.
சோவியத் யூனியன் மட்டுமல்லாது, ஹங்கேரி, செக்கோஸ்லாவாக்கியா, யூகோஸ்லாவாக்கியா போன்ற பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு, கிழக்கு ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள் சென்றனர். அது மட்டுமல்ல, சிறந்த நட்புறவு பேணப்பட்ட, அல்ஜீரியா, லிபியா போன்ற வட ஆப்பிரிக்க நாடுகளுக்கும், சுற்றுலா செல்ல முடிந்தது. கியூபாவுக்கு செல்வது மிகுந்த செலவு பிடிக்கும் விடயமாகையால், அரசுத் தலைவர்கள், இராஜதந்திரிகள் தவிர வேறு யாரும் செல்லவில்லை.
FDGB, இரண்டு உல்லாசப் பயணக் கப்பல்களை வைத்திருந்தது. Cruise Ship எனப்படும் பிரமாண்டமான ஆடம்பரக் கப்பல்கள், இன்றைக்கும் பணக்காரர்கள் மட்டுமே பயணம் செய்யக் கூடியதாக உள்ளது. ஆனால், கிழக்கு ஜெர்மனியில் இருந்த ஆடம்பரக் கப்பல்களில், சாதாரண தொழிலாளர்களும் பயணம் செய்தனர் என்று சொன்னால் நம்புவீர்களா?
Arkona, Völkerfreundschaft ஆகிய இரண்டு ஆடம்பரக் கப்பல்களில், இடப்பற்றாக்குறை காரணமாக, குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப் பட்டது. திறமையாக வேலை செய்து, அதிகமாக உற்பத்தி செய்து சாதனை செய்த தொழிலாளர்களுக்கு எப்போதுமே முன்னுரிமை உண்டு. அது அவர்களை ஊக்குவிக்கும் பரிசாக வழங்கப் பட்டது. அதற்கு அடுத்த படியாக, நிறைய பிள்ளைகளை கொண்ட, பெரிய குடும்பங்களுக்கு இடம் ஒதுக்கப் பட்டது. சிலநேரம், மக்களுடன் சேர்ந்து, ஆளும் கட்சி அரசியல் தலைவர்களும் பயணம் செய்தனர்.
உல்லாசக் கப்பல் என்றால், உள்நாட்டுக் கடலுக்குள் சுற்றிக் கொண்டிருக்க முடியுமா? வெளிநாடுகளுக்கு போக வேண்டாமா? ஆமாம், அந்தக் கப்பல்கள் வெளிநாடுகளில் இருந்த கடற்கரைப் பட்டினங்களை நோக்கிப் பயணம் செய்தன. கப்பல் பயணிகள் அந்த நாடுகளையும் சுற்றிப் பார்த்து விட்டு ஊர் திரும்புவார்கள். Völkerfreundschaft கப்பல், எந்தெந்த நகரங்களுக்கு செல்கின்றது என்ற விபரம் பொறிக்கப் பட்ட பீங்கான் தட்டு, கப்பல் பயணிகளுக்கு விநியோகிக்கப் பட்டது. அவற்றை இன்றைக்கும் பல கிழக்கு ஜெர்மன் மக்கள், நினைவுப் பரிசாக வீடுகளில் வைத்திருக்கிறார்கள்.
Völkerfreundschaft கப்பல் பயணம் செய்த வெளிநாட்டு நகரங்களின் விபரம்:
Algier (அல்ஜீரியா)
Tripolis (லிபியா)
Dubrovnik (யூகோஸ்லேவியா, தற்போது குரோவாசியா)
Constanta (ருமேனியா)
Batumi (சோவியத் யூனியன், தற்போது ஜோர்ஜியா)
Varna (பல்கேரியா)
மேலதிக தகவல்களுக்கு:
Fascinatie DDR, Friso de Zeeuw
Völkerfreundschaft https://de.wikipedia.org/wiki/Völkerfreundschaft
Tourismus in der DDR https://de.wikipedia.org/wiki/Tourismus_in_der_DDR
https://youtu.be/TsK0UTew8wQ
====================================
கம்யூனிசத்தை எதிர்க்கும் சமூக விரோதிகளின் கவனத்திற்கு...
ஒரு முதலாளித்துவ நாட்டில் மனிதர்கள் வேலை தேடுவார்கள். ஆனால், ஒரு சோஷலிச நாட்டில் வேலை மனிதர்களை தேடும்.
முன்னாள் சோஷலிச நாடுகளில், "மக்களை வருத்திய, கம்யூனிச சர்வாதிகார ஆட்சியின் கொடுங்கோன்மைகள்" இவை:
ஆரம்ப பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை, அனைவருக்கும் இலவச கல்வி. தொழிலாளர்கள், விவசாயிகளுக்கும் வாரத்தில் ஒரு நாள் தொழிற்கல்வி.
சாதாரண காய்ச்சல் முதல் சத்திர சிகிச்சை வரையில், அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி.
வேலைக்கு செல்லும் பெற்றோரின் பிள்ளைகளுக்கான இலவச பராமரிப்பு நிலையங்கள்.
மிகக் குறைந்த கட்டணத்தில் பொதுப் போக்குவரத்து வசதி. ஒரு ரூபாயில் ஒரு நகரத்தை சுற்றி வரலாம்.
ஆலைத் தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும், சம்பளத்துடன் ஒரு மாத விடுமுறை. அரசு செலவில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சுற்றுலாப் பயணம்.
ஊழியர்களின் சம்பளத்திற்கு வருமான வரி கிடையாது. வேறெந்த மறைமுகமான வரிகளும் அறவிடப் பட மாட்டாது.
அனைவருக்கும் இலவச வீட்டு வசதி அல்லது வீட்டு வாடகை மிக மிகக் குறைவு. மின்சார, எரிவாயு செலவினங்களும் மிக மிகக் குறைவு. அதனால், மாத முடிவில் சம்பளத்தில் பெருந்தொகை பணம் மிச்சம் பிடிக்கலாம்.
சொந்த வீடு, சொந்த வாகனம் வாங்க விரும்புவோர், அதற்காக பெருந்தொகைப் பணம் கடன் வாங்கி, அதற்கு வட்டி கட்டி அவதிப் படத் தேவையில்லை. அரசாங்கமே செலவை பொறுப்பேற்கும்.
இதைப் பற்றி கேள்விப் பட்ட பிறகும், ஒருவர் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் செய்கிறார் என்றால், நிச்சயமாக அவர் ஒரு சமூக விரோதியாகத் தான் இருப்பார்.
ஒரு சந்தேகம். மக்கள் வரிப்பணம் இருந்தால்தான் அரசை இயக்க முடியும். அது இல்லாமல் எப்படி மேல் கூறியவற்றை இலவசமாக வழங்க. முடியும் அரசுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கும்?
ஒரு முதலாளித்துவ நாட்டில், உற்பத்தி சாதனங்கள் யாவும் முதலாளிகளின் சொந்தமாக இருக்கும். பொருளாதாரத்தில் அரசு தலையிடக் கூடாது என்பது அவர்களது கொள்கை. முதலாளிகள் இலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்படுவார்கள். மக்களுக்காக எதுவும் செய்ய மாட்டார்கள். அதனால், முதலாளித்துவ பொருளாதாரம் நிலவும் எல்லா நாடுகளிலும், அரசு வரி அறவிடுகிறது. அனைத்துப் பிரஜைகளிடமும், நேரடியாகவும், மறைமுகமாகவும் வரி எடுக்கிறது.
ஆனால், சோஷலிச நாடுகளின் பொருளாதாரம் வேறு விதமாக இயங்குகின்றது. அங்கே முதலாளிகளின் ஆதிக்கம் கிடையாது. சோஷலிச நாட்டில் பெரும்பான்மை பொருளாதார உற்பத்தி, அரசுடமையாக இருக்கும். அதை விட கூட்டுறவு அமைப்பு பொருளாதாரமும் இருக்கும். அரசு நிறுவனமாக இருந்தாலும், கூட்டுறவு நிறுவனமாக இருந்தாலும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. ஒரு சராசரி நிறுவனம், தனது உற்பத்திப் பொருட்களை சந்தைப் படுத்திய பின்னர் கிடைக்கும் இலாபத்தை பொதுவாக இரண்டாகப் பிரிக்கும். ஒரு பகுதி அரசு செலவினங்களுக்காக கொடுக்கப் படும். மறு பகுதி மீள முதலீடு செய்வதற்கு அல்லது தொழிலாளர் நலத் திட்டங்களுக்கு செலவிடப் படும்.
உதாரணத்திற்கு, தொழிலாளர்களின் கல்வி, குழந்தைகள் பராமரிப்பு, ஓய்வூதியம், விடுமுறையில் சுற்றுலா ஸ்தலங்களில் தங்குவதற்கான செலவுகள் போன்றவற்றை சம்பந்தப் பட்ட நிறுவனம் பொறுப்பெடுக்கும். நாட்டில் உள்ள அனைத்துப் பிரஜைகளும் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்து, பொது மருத்துவம், பொதுக் கல்வி போன்ற செலவுகள் அரசின் பொறுப்பு. முதலாளித்துவ நாடுகளில் ஒரு நிறுவனம் சம்பாதிக்கும் இலாபத்தின் பெரும் பகுதி முதலாளிகளின் சுகபோக வாழ்வுக்கு செலவிடப் படுகின்றது. ஆனால், சோஷலிச நாடுகளில், அந்தப் பணம் மக்களின் நன்மைக்காக செலவிடப் படுகின்றது.
அவை எந்தெந்த நாடுகள். அந்த நாடுகளின் இன்றைய நிலைமை என்ன?
முன்னாள் சோவியத் யூனியன் உட்பட, பல ஐரோப்பிய சோஷலிச நாடுகளில் சிறந்த பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. இதை நான் சொல்லவில்லை. உலகவங்கி, IMF அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேற்கத்திய நாடுகள் அளவு இல்லா விட்டாலும், அவற்றை எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இருந்த படியால் அவை இரண்டாம் உலக நாடுகள் என்று அழைக்கப் பட்டன. (மேற்கத்திய நாடுகளின் மூலதன திரட்சியை மறந்து விடலாகாது.) ஆனால், மூன்றாமுலக நாடுகளில் இருந்த சோஷலிச நாடுகள் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளாக கருதப் பட்டன.
ஐரோப்பாவில் இருந்த முன்னாள் சோஷலிச நாடுகளின் பொருளாதாரம், தொண்ணூறுகளுக்கு பிறகு முதலாளித்துவத்திற்கு மாற்றப் பட்டது. தேசம் முழுவதும் விற்பனைக்காக திறந்து விடப் பட்டது. உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகள் தாம் விரும்பிய நிறுவனத்தை விலை கொடுத்து வாங்கினார்கள். அனேகமாக அடி மாட்டு விலை என்பது போல, பெறுமதிக்கு குறைவாக பணம் கொடுத்தார்கள். குறைந்தளவு தொழிலாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றவர்களை வீட்டிற்கு அனுப்பினார்கள். அதனால், ஒரே காலத்தில் ஆயிரக் கணக்கானோர் வேலை இழந்தனர்.
அது மட்டுமல்ல, எந்த முதலாளியும் வாங்க விரும்பாத நிறுவனங்கள் பல கை விடப் பட்டன. அவற்றின் உற்பத்தி நின்று போனது. இயந்திரங்கள் துருப் பிடித்தன. அங்கே வேலை செய்து வந்தவர்களும், வேலை இழந்து வீட்டில் தங்க வேண்டிய நிலைமை. வேலையில்லாதவர்களுக்கு எந்த வருமானமும் கிடைக்கவில்லை. முதலாளித்துவ அரசு அவர்களைப் பொறுப்பெடுக்கவில்லை. இதனால் நாட்டில் வறுமை அதிகரித்தது.

Sunday, October 15, 2017

மெட்ராஸ் திரைப்படம் பற்றிய விமர்சனம் அல்ல...

மெட்ராஸ் திரைப்படம் பற்றிய விமர்சனம் அல்ல...
***************************************************************************
"சாதிய ஆதிக்கத்தை முழுமுற்றாக துடைத்தெறிய வேண்டுமெனில் அங்கு தாழ்த்தப்பட்ட மக்களில் சாதிய மனநிலை அடிப்படை விசையாக அமைய முடியும்.."
மறைந்த மார்க்சிய அறிஞர் கோ.கேசவன்

மெட்ராஸ் திரைப்படம் சில நாட்களுக்கு முன் பார்த்த உடன் எனக்கு நினைவுக்கு வந்தது கே.கே.நகர் இராணி அண்ணா நகரும், அதிலிருந்து முன்னோடி அலுவலகம், அதில் 90 களின் ஆரம்பத்தில் நான்கைந்து ஆண்டுகள் அதில் வசித்த அனுபங்கள் தான். சென்னை புறநகர் கிராமவாசியான என்னால் சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை ஜீரணிக்க இன்றுவரை முடியவில்லை.
20க்கு 15அடிகள் உள்ள ஒரு அறை, அதை ஒட்டி சிறிய சமையல் கூடம்.. அந்த சமையல் கூடத்தை ஒட்டிய மிகச்சிறிய கக்கூஸ்-குளியல் அறை. இதுதான் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீட்டின் அமைப்பு. இந்த சமையல் கூடத்தை ஒட்டிய மிகச்சிறிய கக்கூஸ் அறை இன்றுவரை ஒத்துப்போகவில்லை என்பது கிராமவாசிக்குரிய மனநிலையாக இருந்தாலும், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகள் மனித உறவின் மாண்புகளை சிதைப்பவைகளாகவே எனக்கு பட்டது. இந்த வீட்டில் ஆண்-பெண் இருவர் மட்டும் குழந்தை குட்டி இல்லாமல் வாழ தகுதி படைத்தது. (இது பற்றி விரிவான கட்டுரை பல ஆண்டுகளுக்கு முன் இதழ் ஒன்றில் வந்துள்ளது). ஆனால் குடும்பம் குடும்பமாக சென்னையின் ஏழை-கீழ்த்தட்டு உழைக்கும் மக்கள் பெரும்பாலும் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசிக்கிறார்கள். வாழ்கிறார்கள். இங்குள்ள மக்களில் தலித்துக்கள் மிக அதிகமாகவும், பிற இடைச்சாதிகளைச் சேர்ந்த ஏழை உழைக்கும் மக்கள் கணிசமாகவும் இருக்கிறார்கள் என்பது யதார்த்தமான உண்மை.
சாதி வேறுபாடுகள் இவர்களிடம் இருந்தாலும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மக்களிடம் அவர்கள் வாழ்நிலையை ஒட்டி ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். இதே நிலைமை சென்னை குடிசைப்பகுதிகளுக்கும் பொருந்தும்.
மெட்ராஸ் திரைப்படம் இந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மக்களின் வாழ்க்கையை, உறவுகளை, காதலை, நட்பை, விளையாட்டை, அன்பு. மேரி, ஜானி பாத்திரப்படைப்புகள் ஊடாக இயக்குனர் ரஞ்சித் காட்சி மொழியில் திரையில் உலாவ விட்டுள்ளார். காளி ஆரம்ப காட்சிகள் காளி ஒ.கே..பிற்பகுதி வணிக சமரசம் அல்லது கார்த்தி சமரம். குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் இரவு காட்சிகள்… ஏரியல் & லாக் ஷாட்கள் குறிப்பட தகுந்தவைகள். வேறு பல சினிமாக்களில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு காட்சிகள் வருகின்றன. ஆனால் அவற்றில் உயிர்ப்புகள் இல்லை.அல்லது குற்றுயிராய் பதியப்பட்டுள்ளன.
கடைசியாக…
ஒரு வன்னிய நண்பர் கார்த்தி தனது காதலிக்கு இரவில் ஏதோ சுவரோரம் முத்தமிடுவதை கொச்சையாய் விமர்சித்திருந்தார். குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் காதலர்களுக்கு வேறு யதார்த்தம் இல்லை. பல நாட்களில் தோழர்களுடன் இரவுகளில் நீளும் விவாதங்கள், தேநீர்-பீடி கடைகளை தேடி அலையும் பொழுது இக்காட்சிகள் மிகச்சில நேரங்களில் கண்ணில் படுவது தவிர்க்க இயலாது. கணவன் – மனைவி, அம்மா – மகள் , நண்பர்கள்- குடும்பம் இந்த உறவுகளை அதிக பட்ச கண்ணியத்துடன் இயக்குனர் ரஞ்சித் காட்சிப் படுத்தி இருக்கிறார். நம்முடைய விமர்சனம் மனித உறவுகளின் நாகரிகத்திற்கு கேலிக்குரியதாக்கும் இந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகளையும் அதை வடிவமைந்த இந்த அரசாங்கத்தின் –அதிகாரிகளின் மீதுதான் இருக்க வேண்டும். ஏனெனில் விருந்தோம்பு தமிழ்பண்பாட்டிற்கு எதிரானது இந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகள் கட்டமைப்பு. விருந்தினர் வரக்கூடாது என்பதே இங்குள்ள வீடுகள் கட்டமைப்பு அங்குள்ள மக்களிடம் திணித்துள்ள பண்பு..
அப்புட்டுதான்…

Friday, August 25, 2017

தோழர் பாலனின் "சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் விமர்சனம்


        சுதந்திரத்திற்க்கான  மரணப் போராட்டங்கள் நிகழ்ந்த களங்களை சந்திக்க வேண்டுமா…? கிரைம் ஸ்டோரி படிக்க வேண்டுமா..? விடுதலை வேட்கைக்கான படைப்பை வாசிக்க வேண்டுமா..?  ஓடுக்கப்பட்ட மனித மனங்களின் ஓலங்களை கேட்க வேண்டுமா..? அதிகாரத்துவத்தின் ஆணவத்தை,  திமிரை, கொடுமையான அத்துமீறல்களால் நேர்ந்த வேதனைகளால் துடிக்க வேண்டுமா..? தோழர் பாலன் எழுதிய 112 பக்கங்கள் கொண்ட சிறிய நூலான சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்படிக்கும் பொழுது இந்த உணர்வுகளை நமக்குள்  எழுதுவது தவிர்க்க இயலாது.

தமிழீழ விடுதலைக்கு, ஈழத்தமிழர்களுக்கு பல்வேறு கோரிக்கைகள் உள்ளன. சிங்கள பாசிச இலங்கை அரசின் மீது போர் குற்ற விசாரணை, இனப்படுகொலையாளன் ராஜ பக்‌ஷ்வை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிப்பது, தமிழீழ விடுதலைக்கு பொதுசனவாக்கெடுப்பு நடத்துவது,  போரில் காணாமல் போனவர்களை பற்றிய விசாரணை ..என்று பல கோரிக்கைகளை முன்நிறுத்தி ஈழத்தமிழர்களும்,  தமிழக தமிழர்களும் போராடி வருகிறார்கள். இவைகளில் தமிழக தமிழர்கள், தமிழ்நாட்டை, இந்தியாவை பொறுத்தமட்டில் பிரதானமானதும், முதன்மையானதும் ஏது?

தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதிகள் கோரிக்கைகள்தான்  அவை!
அவைகள்
1.சிறப்பு அகதிகள் முகாமை(இப்பொழுது திருச்சியில் மட்டும்) என்னும் சிறப்பு சித்ரவதை சிறைச்சாலை முகாம்களை இழுத்து மூடு!! 
2.குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு (2 முதல் 5 ஆண்டுகள் ) மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கு!
அல்லது
ஈழ அகதிகளுக்கு  இரட்டை குடியுரிமை வழங்கு!!
அல்லது
தமிழீழ ஏதிலியர் கூட்டமைப்பு முன் வைத்துள்ள தமிழீழ ஏதிலியர் அனைவருக்கும் இடைக்கால குடியுரிமை வழங்கு !!
போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியவர்கள் இலங்கை அரசோ, உலக நாடுகளோ, அய்.நா சபையோ கிடையாது. இந்திய அரசும், தமிழக அரசும்தான்!

இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிப்பதை என்பார்கள். தமிழக மக்களின் ஈழத்தமிழருக்கான பல கோரிக்கைகள் இலங்கை அரசை, அய்.நா.சபையை, பன்னாட்டு நீதிமன்றத்தை.. நோக்கியதாகவே இருக்கின்றது. ஆனால் தமிழக மக்கள்  தாங்கள் வாழும் எல்லை பரப்பின் இந்திய அரசை, தமிழக அரசை நோக்கியும், இந்த அதிகாரத்தின் – ஆட்சியின் பங்குதாரர்களான திமுக – அதிமுக கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் ஈழ விடுதலைப் போரினால் இங்கு அகதிகளாக வந்துள்ள சில இலட்சங்கள் ஈழத்தமிழர்களை எப்படி நடத்துகின்றன என்பதுதான் முதன்மையானது. தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு இயக்கங்கள், கட்சிகளின் முதன்மையானதாக இங்குள்ள ஈழ அகதிகளை இந்திய அரசு எப்படி நடத்துகின்றது என்பதை பற்றியதாக இருக்க வேண்டும்.. ஆனால் இதில் போதுமான கவனம் செலுத்தவில்லை என்பது மட்டுமல்ல..இன்னும் மிக தொடக்க நிலையிலேயே  அகதிகள் பிரச்சனை தமிழகத்தில்,இந்தியாவில் இருக்கின்றது.

இந்த நூல் இதை பற்றிய தமிழகத்தில், இந்தியாவில் உள்ள ஈழ ஆதரவு இயக்கங்கள், கட்சிகள், தமிழக மக்கள், இந்திய மக்களின்  கவனத்தை கோருக்கின்றது. கடுமையாக விமர்சிக்கின்றது.

நான்கு பகுதிகளாக உள்ள இந்த நூலில்…
முதல் பகுதி ஈழ அகதிகள், சிறப்பு அகதிகள் முகாம்கள், பற்றிய விரிவான தகவல்களை, வரலாற்றை, இன்றைய நிலையை கேள்வி – பதில் மூலம் தெளிவாக விளக்குகின்றது. இந்திய அரசு  யாரையும் அகதிகளாக கடந்த  69 ஆண்டுகளில் அங்கீகாரம் செய்தது கிடையாது. 1946 ஆம் ஆண்டு வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ்தான் எல்லா அகதிகளும் நடத்தப்படுகின்றனர்.  இந்திய அரசு அய்க்கிய நாடுகள் சபையின் அகதிகள் சட்டத்தில் இன்றுவரை கையெழுத்திட வில்லை. இந்தியாவில் டூரிஸ்ட் விசாவில் வரும் வெளிநாட்டவரும் , போர், இயற்கை பேரிடர், அரசுகளின் பழிவாங்கல் போன்ற காரணங்களுக்காக வரும் வேறு நாட்டினரும் ஒன்றாகவே இந்திய அரசும், தமிழக அரசும் நடத்துகின்றன. இந்த நிலையில் தனது ஆட்சியை தக்கவைக்க கருணாநிதி ஆட்சியில் தொடக்கப்பட்டது சிறப்பு முகாம் என்ற சித்ரவதை முகாம்கள்.. தங்களுக்கு  இசட் பிரிவு பாதுகாப்பு வேண்டும் என்ற குறுகிய சுயநலத்திற்காக இன்றுவரை கருணாநிதி, ஜெயலலிதாவும் மாற்றி மாற்றி இதை நீடித்து வருகின்ற அவலம், அநீதி தொடர்கிறது…இதை விரிவாக புள்ளிவிவரங்களுடன் இந்த பகுதி அலசுகின்றது.

இரண்டாவது பகுதியும், நான்காம் பகுதியும்  சிறப்பு முகாம்களில் அடைக்கபட்டு இருந்த விடுதலை புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிவா என்பவரும், இந்த நூலின் எழுதிய மா-லெ இயக்கத்தினை சேர்ந்த தோழர் பாலனும் நீதிமன்றங்களில் அளித்த வாக்கு மூலங்களாகும். மூன்றாவது பகுதி தாயகம் திரும்பிய மலையகத் தமிழர் இரா.சிவலிங்கம் அவர்களின் சித்ரவதை சிறப்பு முகாம் சிறைக்குறிப்புகளாக எழுதிய கட்டுரைத் தொடர்.
கொடூரமான சிறைகளை விட மோசமான சிறப்பு முகாம்களில் வதைக்கப்பட்ட ஈழ அகதிகளின் இரத்த கண்ணீரை, பெரு வேதனைகளையும் இந்த பகுதிகள் விவரிக்கின்றன.

தமிழக நிர்வாகத் துறையின் கீழ் இந்த சிறப்பு அகதிகள் முகாம்கள் வருகின்றன. ஆனால் முழு கட்டுப்பாடும் கியு பிரிவு உளவு காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ்தான் இந்த சிறப்பு அகதிகள் முகாம்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.  பெயரளவிற்கு சட்ட விதிகள் என்று நீதி மன்றங்கள் கூறுவதைக்கூட இந்த அகதிகள் முகாம்களில் பின்பற்றப்பட்டுவது இல்லை. இயற்கை நீதிக்கு எதிராக எல்லா விதி மீறல்களும் இங்கு சர்வசாதாரணமாக நடைபெறுகின்றன.

 வெங்கடேஷ்வரி, சோமு, ராஜன், முனியம்மா, பலீல், சிவா, இரா.சிவலிங்கம், தோழர் பாலன்…இன்னும் பலரின் மனிதாபிமானமற்ற ஒடுக்குமுறை, மனவலிகளை, ஆறாத காயங்களை இந்த நூலில் விவரிப்பதை படிக்கும் பொழுது நாம்  வாழும் சமூகம் இத்தகைய  கொடூரமானதா என்று உறைந்து விடுவோம்.. நீங்களே படியுங்கள்!!

ஆயுத போராட்டங்களில் ஈடுப்பட்ட, சந்தேகப்படும் ஈழப்போராளிகளை தனிமைபடுத்த ஏற்படுத்தப்பட்ட இந்த சிறப்பு அகதிகள் முகாம்களில் தமிழக தமிழர்கள் (வெங்கடேஷ்வரி, சோமு..), தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்கள் ( இரா.சிவலிங்கம்..),  அப்பாவி ஈழ அகதிகள் என்று பலரையும் கியு பிரிவு காவல்துறை பொய்வழக்குகள், காரணங்களை சொல்லி இங்கு அடைத்து மாதங்கள், ஆண்டுகளாக சித்ரவதை செய்துள்ளதை இந்நூல் அம்பலப்படுத்துகின்றன.  பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் இங்கு சர்வசதாரணமாக நடைபெறுவதை ஆதாரங்களுடன் இந்த நூல் அம்பலப்படுத்துகின்றது

இன்னும் விரிவாக தோழர் பாலன் இந்த நூலை எழுதி இருக்கலாம் குறிப்பாக அய்ரோப்பா நாடுகள், கனடா, ஆஸ்திரேலியாவில் அகதிகள் குறிப்பாக ஈழ அகதிகள் நடத்தப்படும், குடியுரிமைகள் வழங்கப்படுவதை விவரித்து இருக்க வேண்டும். அய்க்கிய நாடுகள் சபையின் அகதிகள் சட்டம் இந்தியாவில் பின்பற்றபடுகிறதா என்று எழதப்பட வேண்டும். அப்பொழுதுதான்  ஒப்பிட்டுப்பார்த்து இந்திய அரசின், தமிழக அரசின் அநீதிகளை புரிந்து கொள்ள முடியும். மேலும் ஆங்கிலத்தில் மொழியாக்க செய்து வெளியிட்டால் பிற மொழி நண்பர்கள் புரிந்து அவர்களும்  நமது போராட்டங்களில் கரம்கோர்க்க முடியும்.


கைதியுமில்லை.. வழக்கு இல்லை.. தண்டனை இல்லை… கால எல்லைகள் எதுவும் இல்லை..  ஆனால் காலவரையறை யின்றி சிறையை விட கொடும் சிறைக்குள் இந்த ஈழ அகதிகள்..!
இப்பொழுது சொல்லுங்கள்  தமிழீழ தமிழர்கள் கோரிக்கைகளில் தமிழக தமிழரின் முதன்மையான கோரிக்கை எது..?
வெளியீடு:தோழர் பதிப்பகம். விலை உரு.50 
தொடர்புக்கு 00447753465573, tholar2003@hotmail.com

பிற்பகல் .


     நேற்று ஆரம்பித்த கன மழை  இன்று பிற்பகலிலும் லேசாக தூறி கொண்டிருந்தது…
மகன்  சாலை விபத்தில்  மரணம் அடைந்த செய்தியை ஐ-போன்  பதறிக் அறிவித்தது.  தந்தை பெருந்துயர் தொண்டையை அடைக்க துடிதுடித்தார்.  சம்பவ இடத்தை ஆடி காரில் விரைந்து அடைந்தார்.

       விபத்து நடந்த இடத்தை சுற்றி போலிஸ்காரர்கள் அடையாளம் வரைந்து  அதைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.  குட்டை போல் சாலையின் நடுவில் நீர் தேங்கி இருந்த பள்ளம் தெரியாமல் அதற்குள்  படுவேகமாய் வந்த புல்லட் வண்டி சக்கரம் மாட்டி கொண்டதால் தூக்கி எறியப்பட்டு  கருங்கல் சரளையில் பின்மண்டை  மோதி பிளந்து இறந்தாக போலிஸ்காரர் கூறினார். 
      அவரின் செல்பேசியில்,  “..காசு மேல … காசு வந்து  … கொட்டுகிற நேரம் ம்மிது”  என்று ரிங் டோன் ஒலித்தது.
      “ சார்.. (மகிழ்ச்சிக் குரல்) கைலாசம் நகர் ஏரியா பேட்ச் ஒர்க் கன்ராக்ட் பணம் ரெடியாகிடிச்சு…  அதோட..இந்த ஆண்டு மழை அதிகமாக இருக்கிறதால இன்னும் நூலு  ஏரிய  சாலை காண்ட்ராக்ட் அதிகம் எக்ஸ்ட்ராவா கிடைக்கும் என்று பெரியவாள் சொல்ல சொன்னார் “ என்றார் அவரின் ஏஜண்ட்.
“ச்ச்சீ..”
     நொந்து போன அந்த கான்ராக்டர் நிமிர்ந்த பொழுது கைலாசம் நகர் சாலை பள்ளங்களில் வாகனங்கள் சர்க்க்ஸ்  செய்து கொண்டிருந்தது கண்ணில் பட்டது.
 “     பிற்பகலில் கைலாசம் நகரில் நடந்த சாலை விபத்தில் தொழில் அதிபர் மகன் மரணம்..என்று செய்தி தொலைகாட்சிகளில் ஓடி கொண்டிருந்தது….  சாலை கான்டிராக்டில் ஒன்றுக்கு பத்தாய் சம்பாதித்து மகனுக்கு வாங்கித் தந்த அந்த புது BMW 1600விலை உயர்ந்த பைக் சிதைந்து கிடப்பதை  தொலைகாட்சி காட்டி கொண்டிருந்ததை அழுகையினுடாக கான்ராக்டர் பார்க்க நேரிட்டது.. அந்த சிதைந்த குழியில் இருந்த இரத்தம் சாலை முழுவதும் பரவி அங்காங்கே  உடைந்து கிடைந்த குழிகளில் இருந்த மழைநீரை சிவப்பாய் மாற்றி இருந்தது.

Saturday, August 12, 2017

அறச் சீற்றம் - 80களில் அதிமுக ஆட்சியில் கொல்லப்பட்ட புரட்சியாளர்கள் நினைவாக. இந்த சிறுகதை.


இன்று முதல் பிரிவு வகுப்பு கல்லூரி முதல்வருடையது. அவர் நன்றாக. பாடம் நடத்துவார் என்பதையும் தாட்டி கட்டணச் சலுகை, நடத்தை. சான்றிதழ்… இன்ன பல விசயங்களுக்கு அவரிடம்தான் போக வேண்டும் என்ற பயம்  அதனினும் முக்கியமானது. ஒரு சில மாணவர்கள் தவிர, இறுதி ஆண்டு சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரியின்  குற்றவியல் பிரிவு வகுப்பின் மாணவர்கள் அனைவரும் வகுப்பில் இருந்தனர்.

காலை வகுப்புகள் அமைதியாகத்தான் நடக்கும். சுற்றுலும் உள்ள  படர்ந்து விரிந்த. மஞ்சள் கொன்றை மரங்கள், தூங்குமூஞ்சி மரங்களின் பசுமை போர்த்திய இலைகள் குளுமையான நிழலில்  பறவைகள் தங்கள் இன்னிசை   கச்சேரியை நடத்திக் கொண்டு இருந்தன. ஆங்கிலேயர் பாணியில் கட்டப்பட்ட கல்லூரியின் இந்த வகுப்பறையில் குண்டூசி விழுந்தாலும் கேட்கும் அமைதி அங்கு நிலவியது.  நீரோடை போன்ற சலசலக்கும் ஒலிகள் அந்த அமைதியை கலைத்தன. அவை மாணவர் முழக்கங்களாய் மாறி மெல்ல மெல்ல நெருங்கியது..உயர்ந்த கட்டடிங்களின் முகடுகளை தொட்டு எதிரொலித்த அந்த முழக்கங்கள் சீறின.

“அமைதி படையா…… அரக்கர் படையா…?”
“கொலைகார இந்திய படையே.. ஈழமக்களை கொல்லாதே… கொல்லாதே”
“ஈழத்தமிழர் சிந்திய இரத்தம் எங்கள் இரத்தம்.. எங்கள் இரத்தம்.”

வகுப்பில் கல்லூரி  முதல்வரை பார்த்ததும் அந்த மாணவர் கூட்டம் ஒரடி பின் வாங்கி சிறிது அமைதியானது. நாங்கள் அனைவரும் வகுப்பு புறக்கணிப்பில் கலந்து கொள்ள தயாராக இருந்தோம். சிவபெருமான் நெற்றி கண்ணைத் திறந்து சுட்டெரிப்பது போல எங்களை முதல்வர் பார்த்தார். வெளியே போகத் தயாராக புத்தங்களை கையில் எடுத்த நாங்கள் அதை மேசை மேல் வைத்துவிட்டோம் முதல்வரின் சந்தனப் கீற்றிற்கு இடையில் உள்ள சிவந்த குங்குமப் பொட்டு அடுத்ததாக போராடும் மாணவர்களைச் சுட்டெரிக்க தயாரானது.

அந்த சில வினாடிகள் மிக முக்கியமானதாகும். எங்கள் நெஞ்சு கூடுகளின் படபடப்பு ஒலிகள் எங்களுக்கு தெளிவாக கேட்டது!

தலையில் அடிப்பட்ட பெரிய காயத்திற்கு கட்டு போட்டிருந்த மாணவன் அந்த போராடும் மாணவர்களிடம் இருந்து வந்தான். சராசரிக்கும் குறைவான உருவமைப்புக் கொண்டதாக தோன்றும் அந்த மாணவன் என்னுடைய வகுப்புத் தோழன்தான். எங்கள் வகுப்பு மாணவர்கள் நான்கு நட்பு வட்டங்களும், சில உதிரிகளும் சேர்ந்தக் கலவையாகும்.. முதல் பெஞ்சு.  நடு பெஞ்சு., கடைசி  பெஞ்சு. மற்றும் மரத்தடி பெஞ்சு. என்றும் இதை பிரிக்க்கலாம். அந்த மாணவன் நடு பெஞ்சுக்காரன். அது அரட்டை அடிக்கும் பொழுது வகுப்பை கலகலப்பாகும். படிப்பு என்று வந்தால் அதிலும் சில நேரங்களில் அந்த  பெஞ்சு. முன்னணியில் இருக்க்கும்.. இந்த மாணவன் நடு பெஞ்சுக்காரன்..  இவன் எப்படி, எப்பொழுது மாணவர் தலைவனான் என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்.
தீர்க்கமான நான்கு அடிகளை உறுதியாக முன்கால் எடுத்து வைத்த அவன் நெஞ்சுப் படபடப்பை இன்னும் அதிகமாக்கினான். சிறிது உயரமான இடத்தில் நின்றிருந்த முதல்வரை கண்களை நேருக்கு நேர் பார்த்தான். அப்பொழுது தான் அந்த கண்களை நான் கவனித்தேன்..

“சார்… இந்திய அமைதி படை தமிழர்களை கொல்வதை எதிர்த்து  ஊர்வலம் போன அனைத்துக் கல்லூரி மாணவர்களை போலிஸ்க்காரர்கள் கடுமையாக தாக்கி மண்டைகளை பிளந்து விட்டனர். அதை கண்டித்து  நம்ம கல்லூரி மாணவர்களும் வகுப்பை புறக்ககணிக்க போகிறோம்..” என்ற தீர்க்கமான வரிகள் தெளிவான என் காதில் விழுந்தன. நேற்று நடந்த ஊர்வலத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

“மாணவர்களுக்கு புறக்கணிக்க விருப்பம் இல்ல… நீங்க அராஜகம் செய்து பயமுறுத்துரீங்க..” என்று கோபப்பட்டார் முதல்வர்
“இல்ல …. நாங்கள் எங்க கோரிக்கைகளை சொல்றோம்.. மாணவர்கள் மீதான அடக்குமுறைக்கு சக  மாணவர்கள் குரல் கொடுப்பது தார்மீக கடமை.. எல்லாரும்  விரும்பிதான் போராடுகிறார்கள்..” என்றான் அந்த மாணவன்.

“நீங்க பேசுங்க… அவங்களுக்கு விரும்ப இருந்தால் வெளியே  போகட்டும்… ஆனா..அவங்களை பயமுறுத்தி கலைக்க கூடாது …” என்று முதல்வர் செக் பாயிண்ட் வைத்து விட்டு, வகுப்பில் மாணவர்களை சுட்டு விடுகின்ற மாதிரி நெற்றி கண்ணால் பார்த்தார்.  அவர் கண்பார்வை மிரட்டலுக்கு மீறி எதுவும் நடந்துவிட முடியாது என்பது அவர் நம்பிக்கை. அது அடுத்த விநாடியே தகர்ந்து போனது. அவர் திரும்பி பார்கையில் அந்த மாணவன் அங்கு இல்லை. மாறாக முதல்வரின் விரிவுரை மேசைக்கு அருகில் வந்து நின்றான்! முதல்வர் ஆச்சிரியத்துடன் பார்த்து கொண்டிருந்தர்! எல்லாம் அவர் கைமீறிப் போய்கொண்டிருந்தது.

மேடையிலிருந்து கையை ஆட்டி ஆவேசமாய், அழுத்தமாய், மழையாய் அவன் பொழிந்தான். ஒரே சமயத்தில் அவன் கண்கள் அங்கிருத்தவர்கள் அனைவரையும் ஊடுருவி சென்றது.. சத்தியத்தின் ஆவேசம் அந்த கண்களில் சுடர் விட்டு பிரகாசித்தன. அவர்களைத் தன் வயப்படுத்தியது.
“நண்பர்களே…சொந்த சகோதரர்கள்… துன்பத்தில் வாடக் கண்டு சிந்தனை இறங்காத சடங்களா நாம்… 
ஈழத்தில் நமது சகோதரிகளும், தாய்மார்களும் கற்பழிக்கப் படுகிறார்கள்..தமிழர்கள் காக்காய் குருவி போல சுட்டு கொல்லபடுகிறாங்க.. அமைதி படைக்கு எதிராகவும், மாணவர்களுக்கு மீதான அடக்குமுறைக்கு எதிராகவும் கிளர்ந்தெழுவோம்…. “ என்று சீற்றமிகுச் சொற்களின் உண்மை அனைவரையும் சுட்டது. அவன் அவேசம் அவன் போட்டிருந்த

“கொலைவாளினை எடடா….. மிகு கொடியோர் செயல் அறவே..” என்று முழங்கி கொண்டே அவன் இறங்கி நடந்தான். ஒருத்தர்..இருவர்..நான்கு..ஒட்டுமொத்தமாய் அனைத்து மாணவர்களும் எழுந்து  அவன் பின் சென்றனர்…வகுப்புகளை புறக்கணித்தனர்.
“மாணவர் போராட்டம் வெல்க…. மாணவர் ஒற்றுமை ஒங்குக..”
என்று மாணவர்கள் முழக்கமிட்டபடியே ஒவ்வொரு வகுப்பறையாய் ஊர்வலமாகச் சென்றனர்.  ஒரு வகுப்பு.. இரண்டு வகுப்புகள்….. … எல்லா வகுப்பு மாணவர்களும் திரள் திரளாக முழக்கமிட்டவாறு வெளியேறினர். அந்த மாணவன் பின்னர் சென்ற முதல்வர் செய்வதறியாது தனது நம்பிக்கை பொய்யானது ஏன் பொய்யானது என்று புரியாமல்  அந்த மாணவர் திரளுடன் சிறிது தூரம் சென்றப் பின் திகைப்புடன் சிலையாய் சமைந்தார்.

அதன் பிறகு அவன்..அவர்களானார்கள்.. அவர்கள் மாணவர் திரள்களானார்கள். அந்த மாணவர் குழாமின் (Student Struggle Committee For Tamil Eelam) தலைமையில் பாரிமுனையை மாணவர்கள் அடுத்த சில மணி நேரங்கள் ஸ்தம்பிக்க வைத்தனர்.  வட்டம்.. வட்டங்களாய் கைகோர்த்து குறளகம்-உயர்நீதிமன்றம்-பிராட்வே சாலைகள் கூடும் முச்சந்தில்  அமர்ந்தனர். காட்டாற்று வெள்ளமென போராட்டத்திற்க்காக திரண்ட . மாணவர்களை சுழலும் கண்பார்வைகளிலும், அதிரவைக்கும் முழக்கங்களாலும் தலைமையேற்ற மாணவர்கள் திறம்பட நெறிப்படுத்தினர்.

அந்த நேரங்களில் நான் அவர்கள் கண்களை மட்டுமே பார்த்தகொண்டிருந்தேன்.
ஏன்  நான் அவர்கள்…அவன் கண்களை கவனித்து கொண்டிருக்கிறேன் என்று புரியவில்லை என் வகுப்பு தோழன் என்பதால் இரண்டு மூண்றாண்டுகளாய் அவனை நன்றாகத் தெரியும். வகுப்பில் இயல்பான சராசரியான மாணவன்தான் அவன். அப்படித்தான் மாணவர்களுக்கிடையில் அவன் வலம் வந்தான். இன்று அவனை எது இப்படி மாற்றியது. அதன் பின்னனி இரகசியம் என்ன என்ற சிந்தனை என்னை முழுமையாக ஆரம்பித்துகொண்டது.

அன்று மாலை நீண்ட நேரமானப் பிறகு தான் வீடு போய் சேர முடிந்தது. அங்கு எனக்கு ஒர் ஆச்சிரியம் காத்திருந்தது. திருப்பத்தூர் சரக சப்-இன்ஸ்பெக்டர் மாமாவின் மனைவி தனது குட்டிப் பையனுடள் வீட்டில் இருந்தார்.

“என்ன தீடீர் விஜயம்……”
“உங்க மாமாவிற்கு… மாணவர் போராட்டத்திற்காக சென்னையில் ஸ்பெஷல் டூட்டி  போட்டு விட்டாங்க…அவர் கிளம்பினார்.. நானும் அவர் கூடவே தொத்திக் கொண்டு வந்து விட்டேன்
“மாமா எங்கே-?”
“டூட்டிக்கு போயிட்டார்…..”

மாமாவின் குட்டி பையனுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். அந்த மாணவன் கண்களின் இரகசியம் இப்பொழுது நினைவில்  வந்து எனக்கு உரைத்தது
அது போலிஸ் மாமா சொன்ன கதை…  ஆனால் கதையல்ல… போலிஸ் மாமா பெருமாள் ஏ.ஐ.ஆர் டியூட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டு கான்ஸ்டேபிளாக டி எஸ் பி அலுவலகத்தில் பணி அமர்ந்தப்பட்டார். கொள்ளைக்காரர்களை, திருடர்களை விரட்டி பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் பெருமாள் உடம்பினை பயிற்சிகள் மூலம் முறுக்கேற்றி வைத்திருந்தார். அந்த உடம்பை பார்த்து அவரை டி எஸ் பி “ஸ்பெஷல் டீம்” மில் இணைத்து கொள்ளப்பட்டார்.

இன்ஸ்பெக்டர், ஏட்டு உள்ளிட்ட ஏழுபேர் கொண்ட அந்த டீம் காலையில் டி ஸ் பி அலுவலகத்தில் கூடியது. எல்லாரும் துப்பாக்கிகளுடன் அணி வகுத்து நின்றனர்
“ரெடி….  …..” என்று பட்ட். ….   டப்..பட்…டென தனது துப்பாக்கியை நீட்டி மடித்து தட்டி சத்தங்களை எழுப்பினார் காவலாளி.
டி எஸ் பி வந்து நின்றார். எல்லாரும் விறைப்பாக சல்யூட் அடித்தனர்.
“பாய்ஸ்… முக்கியமான சீக்ரெட் டியூட்டி…. ..இன்ஸ்பெக்டர் லீட் பண்ணுவார்… ஸ்டிரிலி பாலோ இம்…” என்று ஆணை இட்டு, ..இன்ஸ்பெக்டரிடம் சில நிமிடங்கள் பேசி விட்டு ஜீப்பில் ஏறி பறந்தார்.

ஸ்பெஷல் டீம் போலிசாரிடம் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.
“பெருமாள்…  நீ போய் ரூமில் இருக்கிற கடப்பாரை, மம்முட்டி, பாண்டு… எது நன்றாக உள்ளதோ அதெல்லத்தையும் எடுத்து வேனில் வை…”  என்றார் இன்ஸ்பெக்டர்.
பெருமாளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. போலிஸ் வேலை செய்ய போகின்றோமா கொத்தானார் வேலைக்கு போகப்போகின்றோமா என்று புரியாமல் விழித்தான். அந்த ஸ்டோர் ரூமில்  இருந்து தேறியது ஒரு கடப்பாரையும், ஒரு மண்வெட்டியும் தான்.
சிறிய வெள்ளை வேன் காவல் நிலையத்தில் இருந்து கிளம்பியது.  இன்ஸ்பெக்டர் வேனை  ஹார்டுவேர் கடையில் நிறுத்த சொன்னார். அங்கு மேலும் இரண்டு மண்வெட்டிகளும், ஒரு கடப்பாரையும் , மூன்று பாண்டுகளையும் வாங்கினர்.
“என்ன…. போலிஸ்காரங்கெல்லாம் கிணத்து வேலைக்கு… இல்ல கொளுத்து வேலைக்கு டிரான்ஸ்பர் பண்ணச் சொல்லிட்டாங்களா..?” என்று பெருமாள் பக்கத்தில் அமர்ந்திருந்த ஏட்டுவிடம் கிசுகிசுத்தார். அவரோ ஆ.. ஆஹா  என்று பலமாக சிரித்து விட்டார். எல்லாரும் என்னவென்று தெரியாமல் முழித்தனர். இன்ஸ்பெக்டர் முறைத்தார்.
சந்தை கேட் வழியாக வண்டி சென்று வானாந்தரமாய்ய் விரிந்த காட்டு பகுதியை நோக்கி பறந்தது. பெருமாள் வேலைக்கு சேர்ந்த புதியதில் ரவுடிகளிடம், கந்துவட்டிகாரர்களிடம் மாமூல் வாங்க அந்தச் சந்தை கேட்டிற்கு அனுப்புவார்கள். யாரை கைது செய்து கேஸ் போட்டு சிறைக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களிடம் கையேந்துவது ஆரம்பத்தில் கூச்சமாக இருந்தது… அதுவே பின்பு பழக்கிமாகி விட்டது. கந்துவட்டிக்காரர்கள் அட்டூழியம் நாளும் பெருகி வந்தது. மாடாய் உழைத்தாலும் கால்வயிற்றுக்குதான் கஞ்சி கிடைத்தன  மக்களுக்கு, கந்துவட்டிகாரர்களுக்கோ தட்டின இடமெல்லாம் தங்கமாய் கொட்டியது.

திடீரென ஒரு நாள் சந்தை கேட்டில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அதற்கு மறுநாள் சந்தை கேட் ரவுடிக்கு மருத்துவ மனையில் சேரும் அளவிற்கு அடி உதைகள் விழுந்தது.  நக்சர்பாரிகள் தான் அடித்தாக மக்கள் பரவலாக பேசிக் கொண்டிருந்தனர். ஆனாலும்  அடிவாங்கிய ரவுடி  அதைப் பற்றி வாயை திற்ந்து புகார் ஏதும் சொல்லவில்லை. இப்படி அங்காங்கே நடந்தன. கட்டப்பஞ்சாயத்து கும்பல்கள் காணமால் போயின. கந்துவட்டிகாரர்களை எங்கு ஒளிந்தார்கள் என்று தெரியவில்லை. சாதி மறுப்பு காதல் திருமணங்களை முன்னிறுத்தி சாதி சண்டைகள் மூளாமல் அவை இயல்பாக மாறின. காவல்துறைக்கு வேலை குறைந்து போயின! ஓட்டு கட்சி கரைவேஷ்டிகள் சலசலப்புகள் குறைந்தன. சில ஆண்டுகள்தான் இந்த நிலைமை நீடித்தன.
இப்பொழுது ஆறுமாதங்களில் எல்லாம் தலைகீழாகி விட்டது. நாளோடுகளில் “நக்சலைட்டுகளுடன் போலிஸ் மோதல்….”,  “இரண்டு நக்சல்லைட்டுகள் சுட்டு கொலை…”  என்ற செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

இன்ஸ்பெக்டர் ஜீப் முட்புதர் காடுகளை நோக்கி பயணித்தது. வெள்ளைவேன் அத்துடன் ஒட்டிகொண்டு விரைந்தது.
தார்ச்சாலை மண் சாலையாய் மாறி மாட்டு வண்டி தடமாய் சுருங்கியது. அந்த தடத்தில் இறுதியில் வேன் நின்றது
காட்டிற்குள் போலிஸ் குழு சூடேறி பறந்த மண்ணில் காலடி வைத்தது.  கல்குருவி சோடி தரையிலிருந்து பறந்து சென்றது. கானங்கோழி ஒன்று இவர்களை கண்டு புதருக்குள் மறைந்தது. காட்டிற்குள் இரண்டு பார்லாங்குகள் உள்ளே சென்றனர்.
பெருமாள் ஜீப்பில் அருகில் இருந்து அவர்களை கவனித்துக் கொண்டிருந்தான். இதற்குள் அவனுக்கு எந்த காரியத்திற்க்காக இந்த டீம் வந்திருக்கிறது என்று தெரிந்திருந்தது. அவன் எண்ணங்கள் போலிஸ்காரர்கள் செய்யப் போகும் கொலையைப் பற்றிய வட்டமிட்டு கொண்டிருக்கிறது.

ஒயர்லெஸ் கருவியிலிருந்து….. ஒவர்….ஒவர்… ,  கொர்…கொர்ரரவ்….கொர்… என்ற கரகரப்பான சத்தம் கேட்டது.
“ஆப்ரேசன் ரெட் ரோசஸ் ரெட் ரோசஸ் வேலை முடிந்ததா …ஒவர்..” என்று ஒரு குரல் கேட்டது. அவன் அந்த அலைவரிசைக்கு குமிழை திருகினான்.
“ஆப்ரேசன்  ரெட்ரோஸ் ஒர்க் கோயிங் ஆன்ன் ….சார் ஒவர் ..”என்றான் பெருமாள். அவருக்க அளிக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்றினான். அதில் அவன் கருத்திற்கு   இடமில்லை. கொடுக்கும் சம்பளத்திற்கு அதிகாரத்திற்கு கீழ் பணிய வேண்டியது அவன் கடமை என்று பழக்கப்பட்டிருந்தான். ஒவ்வொரு அரை நேரத்திற்கு இவ்வாறு பதிலளித்தான்.

மதியம் இன்ஸ்பெக்டரும் இரண்டு காவலர்களுடன் வந்தார். மற்றவர்கள் வர வில்லை. அவர்கள் சட்டைகள் மீது மண் புழுதிகள் ஒட்டி கிடந்தன.
“பெருமாள்….ரெட்ரோஸ் ஒர்க் எப்டி இருக்கிறது கெட்டால்   ரெடியாச்சுன்னு சொல்லு…” என்று இன்ஸ்பெக்டர் கூறி விட்டு ஒரு காவலருடன் மதிய சாப்பாடு வாங்கி வர சென்றார். இன்னொரு காவலர் பெருமாளுடன் இருந்தார்.  அவன் பேச்சு துணை ஆள் கிடைத்தது என்று ஆசுவாசப்பட்டான்.
மாலை ஐந்து மணி நெருங்கி கொண்டிருந்தது. பறவைகளின் இன்னிசை குறிப்புகள் உரையாடல் தொகுப்புகள் எங்கும் காட்டில் பரவ தொடங்கின.  இன்ஸ்பெக்டர் வேனுக்குள் லேசாக கண்ணயர்ந்து கிடந்தார். ஒயர்லெஸ் கருவியிலிருந்து அவ்வவ்பொழுது கர்ர்..கர்..சத்தங்கள் எழுந்து நின்றன.
திடுமென வயர்வெஸ் அதிகமாகக் கத்த ஆரம்பித்தது.
“பி அல்ர்ட்…… ரெட்ரோஸ் ஆப்ரேசன்…   ஸ் டு ஸ்டார்ட்…” என்று கரகரப்பான குரலில் ஒயர்லெஸ் கருவி கத்தியது.

காவலர்கள்  நெஞ்சை நிமிர்த்தி ஆங்காங்கே நின்றனர். இன்ஸ்பெக்டர் விழித்து கொண்டுத் தயாரானார்.
“எவனை கொண்டு வரப்போகிறார்கள்…?” என்று பெருமாள் முணுமுணுத்தார் “யாருக்கு தெரியும்… ஆனா வரவன் முக்கியப்புள்ளி… இவனை போட்டா நக்சலைட் கதை ஒவர்.. எல்லாம் இங்கு முடிந்தா போலதான்…..” என்றார் அந்த காவலர்.
அதற்குள் ஒரு பெரிய வெள்ளை வேன் அங்கு வந்தது நின்றது.
டி எஸ் பி வேனின் முன்பகுதியில் இருந்து இறங்கி வந்தார். அனைவரும் அவருக்கு சல்யூட் வைத்தினர்.
“எல்லாம்…  ரெடியா….”
“எஸ் சார்..” என்றார் இன்ஸ்பெக்டர்.
“டோரை ஒபன் பண்ணுங்க…”

வேனின் பின் பக்கம் திறக்கப் பட்டது. நவீன ஆயுதங்களுடன் நக்சலைட் ஒழிப்பு படை பிரிவினர் அதில் இருந்தனர். அவர்கள் காலடியில்  நசுக்கப்பட்டு குண்டு கட்டாக ஒருவர் படுத்திருப்பது தெரிந்தது. பன்றியை சாகடிப்பதற்க்காக அதன் கால்களைக்  கட்டி  துடிக்காமல் இருப்பதற்க்காக  மீன்பாடி வண்டியில் போட்டு அதன் மீது நான்கைந்து நபர்கள் கால்களால் அழுத்திப் பிடித்து கொண்டிருப்பதை அந்த காட்சி நினைவூட்டின.
நாலைந்து போலிசார்கள் கீழே தொப் ..தொப்.. என்று குதித்தனர். அங்காங்கே நடந்து சென்று வட்டமாய் அந்த காவலர்கள் நின்றனர்..  அவரை கதவருகில் பன்றியை  போல இழுந்து வந்தனர்.

 “பொணமா போகிறவன்.. பொணம் கனம் கனக்கிறான்டா” என்றவாறு நக்சல் ஒழிப்பு காவலர் ஒருவர் தோழரை பூட்ஸ் காலால் எட்டி உதைந்து  தள்ளினர்.
சித்திரவதை செய்யப்பட்டு மோசமான நிலையில் தளர்வாய் ஒரு மூட்டையைப் அந்த உடல் கீழே சரிந்து விழுந்தது. தரையில்  உடல் மோதியதும் அடிப்பட்டு  இரணமான உடல் பகுதியின் வலி வேதனை தாங்காமல் துடித்தார். அப்படி துடிக்கும்பொழுது எதேச்சையாக அவரின் கால்கள்  தொட்டதும் டி.எஸ்.பியை மோதியது. டி.எஸ்.பி தடுமாறி விழ பார்த்தார். சமாளித்து நின்ற அவர்  முகம் அஷ்ட கோணலாகியது..
அடுத்த விநாடி காவலர்களின் பூட்ஸ்கால்கள் அந்த தோழரை மிதிமிதியென்று மிதித்து துவைத்தன. தோழர் பலமாக அலறி கத்தினார். இயல்பாக இருந்த அனைவரின் முகத்திலும் பரபரப்பும் சிறிது அச்சமும் பரவிக் கிடந்தன..

“இவ்வளவு பண்ணியும் இவன் திமிரு அடங்கிலேயே…” என்று டி எஸ் பி பக்கத்தில் இருந்த காவலர் கையிலிருந்து  துப்பாக்கியை வாங்கி பின்புறக்கட்டையால்   பலமாய் தோழரின் முகத்தில் குத்தினர்.

ஏற்கனவே வீங்கி கிடந்த முகத்தில் இரத்தம் பீறிட்டு மண்ணில் சிதறியது. இப்பொழுதும் தோழர் அலற வில்லை. மண்ணின் கருவறையில் கைகால்களை குறுக்கி  படுத்து கொண்டார். போலிஸ் லாக்கப் அறையின் கும்மட்டல் எடுக்கும் நாற்றத்தை விட இந்த மண்ணின் கதகதப்பு அவரின் வீங்கங்களுக்கு ஒத்தடம் கொடுப்பது போல் இருந்தது
“இன்னும் எவ்வள தூரம் போகணும்… நடக்க மட்டான் போல ….பன்னிய தூக்கிர மாதிரி கம்பு கட்டி தூக்கிகொண்டு போகலாமா… …”
தோழர் அசைந்து மெல்ல எழுந்தார்.

“இல்ல.. நா…நடந்து வரேன்..”என்று வலியில் பல்லைக் கடித்து கொண்டு எழுந்தார்.ஆனால் தடுமாறி கீழே விழுந்தார். மீண்டும் எழ முயற்சித்து விழுந்தார்.. சிறுகுழந்தையைப் போல மீண்டும் மீண்டும் முயற்சித்தார். தனது மரணம் இழிவாக்கப்படக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருப்பதாக தெரிந்தது.

பெருமாள் உள்ளிட்ட நாலு காவலர்கள் அவரை சூழ்ந்து நின்றனர். தோழர் ஒரே ஒரு அடி கூட எடுத்து வைக்கவே சிரமப்பட்டார். “லாடம் கட்டி” அடித்து இருப்பததால் அவர் பாதங்கள் சிதைக்கப்பட்டு இரத்தம் கசிந்து வீங்கி கிடந்தன.

“தோளை பிடிச்சிங்கோ…” என்று பெருமாளும் இன்னொருவரும் சொன்னார்கள் அவரால் தோளை வலுவாக பிடிக்க முடியவில்லை..அவைகளும் வீங்கி கிடந்தன..ஆளுகொரு பக்கம் பிடித்து கொண்டு தோழரை நடத்திச் சென்றனர் இல்லை… இழுத்து சென்றனர்.
தோழரின் உடலில் வீசிய இரத்த கவுச்சி வடை பெருமாளை என்னமோ செய்தது.
“எதற்காக இவனுங்க… இப்படி சித்ரவதையை தாங்கிறான்கள்..” என்பதாக பெருமாள் சிந்தனை ஒடியது

சிறு விவசாயியாக உள்ள பெருமாளின் தூரத்து உறவினர்கள் சிலர் இந்த நக்சல்பரி இயக்கத்தில் இருப்பது பெருமாளுக்கு தெரியும்.
அவர்களின் பேச்சுகளின் நியாயம் தர்மம் இருந்தன.. இருந்தாலும் தோழர்களால் பிரமாண்டமான் போலிஸ்…. இராணுவம், நீதிமன்றம்…அதிகாரிகள்… அரசாங்கத்தை என்ன செய்ய முடியும்? தலையை மலையால் மோதி உடைப்பது போல இருந்தது.
அதற்குள் அந்த விசாலமாய் பரந்த முள் உடைமரம் வந்து விட்டது. அந்த பெரிய மரத்தில் நிழலில்தான் அந்த பத்துக்கு பத்து குழி வாயை விழுங்க காத்து கிடந்தது. அதன் அருகே கிடத்தப்பட்டார் தோழர்.
“என்னடா.  .உங் கத முடிய போது.. உன் கடைசி ஆசை இன்னா… உங்கலால் எங்கல  அரசாங்கத்தை ஒரு மயிரும் புடுங்க முடியாது..” என்று எகத்தாலமாய் டி எஸ் பி கேட்டார்.
“தண்ணி…  தண்ணீர் வேணும்..” என்று  தோழர் கேட்டார்.  அங்கு இருந்த முதுகில் பையுடன் இருந்த நக்சல் ஒழிப்பு படை காவலர் ஒருவரை டி.எஸ்.பி பார்த்தார்.
அவர் தண்ணிர் பாட்டிலை எடுத்துப்  பெருமாளிடம் தந்தார்.  அதை வாங்கி மூடியை கழட்டி தோழரிடம் கொடுத்தார். வீங்கிய கைகளால் அதை அழுத்திப் பிடிக்க முடியாமல் முகத்தை வலியில் சுருக்கினார். பின் ஒருவழியாக பிடித்து நீரை பருகினார்.
“தேங்ஸ் ..” என்று அந்த தோழரின் முகத்தில் சிறிது தெம்பு வந்தததை பெருமாள் கவனித்தார்.
எல்லாரும் கவனிக்கும் பொழுதே தோழர் புதிய தெம்புடன் எழுந்து நின்றார் அத்தனை வலிகள் அத்துணை இரணங்களையும் மீறி கம்பீரமாய் நிமிர்ந்து நின்றார். அவருக்க நாற்பது வயது இருக்கலாம் வீங்கி கிடந்தஅவரின் வீங்கிய முகத்தில் ஒரு அலட்சிமான புன்னகை பரவியது. அந்த தோழரின் கண்கள் கோபத்தையும் கக்கின.
“தூ..போடா.. மசுறு… சுடுரா..இப்ப சுடுரா.. “ என்று அலட்சிமாயானதொரு கோபத்துடன் தோழர் நெஞ்சை நிமிர்ந்தி கர்ஜனை செய்தார்..  அஞ்சதா போர் வீரன் போல் அவர் ஜொலித்தார் புரட்சி ஒங்குக… புரட்சி ஒங்குக என்று அந்த காடு அதிர முழங்கங்களை எழுப்பினார்.. புதர் மறைவில் இருந்த ஓணான் தலையை தூக்கி எட்டி பார்த்தது.  பனங்காடை  ஒன்று உற்று கவனித்தது.
அங்கிருந்தவர்  அனைவரின் முகங்களில் ஆச்சிரியமும் அச்சமும் மாறி மாறி காண்பித்தன. டிஎஸ்பி முகம் சிறுத்து கருத்தது. கைதி பயந்து கெஞ்சுவான் என அவர் எதிர்பார்ப்பு தோல்வி கண்டது.. எல்லா காவலர்களும்  ஏதோ புதிய மனிதனை கண்டதை போல பார்ப்பதை கண்டு எரிச்சல் அடைந்தார்.
 “அவன சுடு..ங்…” என்று கத்தினார்.
துப்பாக்கி வேட்டுகள் கேட்டன. அதைக் கேட்ட பறவைகள், சிறிய உயிர்கள் அலறிக் கொண்டு பறந்தன…ஒடின. இரண்டு அக்ககக்கா குருவிகள் வானில் பறந்து அங்கு நடந்ததை உலகுக்கு அறிவிக்கும்படியாக விதவிதமான ஒலிகளில் பறந்தவாறு கீழ்திசை நோக்கி பறந்தன.     தோழர் சரிந்து விழுந்தார். அவர் உயிர்  உடனே போகாவில்லை. துடித்துக் கொண்டிருந்தது. சதாரண மனிதர்களின் ஆவி கூட எதோ ஆசையால் பல காலம் துடிக்கிறது.  பொன்னுலகு போராசை கொண்ட அந்த தோழன் உயிர் எளிதில் அடங்குமா என்ன?
பெருமாள் இன்னொரு போலிஸ்காரரும் தோழர்  அருகில் சென்று உயிர் போய் விட்டதா என்று பார்த்தனர். ஏதோ ஒன்றை தோழர்  விட்டு விட்டு  முணுமுணுத்துக் கொண்டிருந்தார். பெருமாளின் முகம் பேயறைந்த மாதிரி மாறியது.
அவரை காவலர் ஒருவர் குழியில் தள்ளினார்.  கீழே விழுந்த உடல் கடைசியாய் எம்பி துடித்து. தோழரின் உயிர் அடங்கியது. அவரின் நிலை குத்திய கண்களில் ஜீவ ஒளி கோகிநூர் வைரத்தை காட்டிலும் மின்னின. அவர் உதடுகளில் மண் ஒட்டிக்கிடந்தது. அவர் மண்ணை சாப்பிட்டு இருப்பாரோ?....
பெருமாள்  உறவினர்கள்…  நண்பர்கள்… பலரிடம்…. இந்த கண்களை… மரணத்தின் வாசலில் தோழன் எப்படி நடந்தான் என்பது பற்றி சொன்னார்.   என்னிடமும் வியப்புடன் கூறினார். காலையில் மாணவன் போராட்டம் தலைவனின் கண்கள் அவைகளில் மின்னிய சீற்றம் ஏனோ அந்த தோழனின் உயிரிப்பை பிரதிலிப்பதாவே எனக்கு பட்டது.
துறுதுறுவென இங்கும் அங்கும் தாவி குதித்து கொண்டிருந்தத பெருமாளின் குட்டிப் பையனுடம் விளையாடுவதில் என் கவனம் சிதறியது.
இரவு பத்து மணிக்கு பெருமாள் வந்தார். என்னுடன் விளையாடிக் கொண்டிருந்த குட்டை பையன் ஓடு  சென்று அப்பாவின் கழுத்தில் எம்பி குதித்து தொங்கிளான்.
அவர் அவனை வானில் தூக்கி போட்டு கொஞ்சினார். குட்டி பையனை  அவர் வேறு ஒரு பெயரில் அழைத்தார். மகிழ்ந்தார்.
“என்ன… மாமா… இரண்டு பேரா… எல்லாரும் ஒரு பெயரைக் கூப்பிடுகின்றனர் நீங்க இன்னொரு பெயரை வைத்திங்க போல..” என்று  கேட்டேன்
“அவருக்கு எல்லாம் விளையாட்டுதான் … அது யாரோ  ஒரு நக்சலைட்டின் பெயராம் பயமறியா வீரனாம்… அதனால் அந்த பெயரைதான் எல்லாரும் கூப்பிடனும் சொல்லிகிறாரு உங்க மாமா…” என்றாள் மாமி..
தோழர் உயிர் பிரியும் கடைசி கணத்தில் உச்சரித்தை  அந்த வார்த்தை அவருக்கு மட்டும்தானே தெரியும்
“எனக்கு மரணம் கிடையாது ..
நான் மரிப்பதில்லை …
நான்….. நா…  ….  ……
நான் என்றால் நானல்ல.”






Sunday, July 23, 2017

வரி கொள்கை பற்றி காரல் மார்க்ஸ்

GST கொள்ளை வரியையும் அதனால் வரப்போகும் பெரும் நெருக்கடியையும் என்பதை மாமேதை காரல் மார்க்ஸ்சின் வார்த்தைகளில், கருத்தோட்டத்தில் புரிந்து கொள்வது எப்படி??
********************************
"நவீன கால அரசின் நிர்வாக அமைப்பானது, ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் பொது விவகாரங்களை நிர்வகிப்பதற்கான ஒரு குழுவே அன்றி வேறல்ல.
முதலாளித்துவ வர்க்கம் வரலாற்று ரீதியாக, மிகவும் புரட்சிகரமான பாத்திரம் வகித்துள்ளது.
எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் மேலாதிக்கம் பெற்றதோ, அங்கெல்லாம் அது அனைத்து நிலப்பிரபுத்துவ உறவுகளுக்கும், தந்தைவழிச் சமுதாய உறவுகளுக்கும், பழம் மரபுவழி உறவுகளுக்கும் முடிவு கட்டியது. ”இயற்கையாகவே தன்னைவிட மேலானவர்களிடம்” மனிதன் கட்டுண்டு கிடக்கும்படி செய்த, வெவ்வேறு வகைப்பட்ட நிலப்பிரபுத்துவத் தளைகளை ஈவிரக்கமின்றி அறுத்தெறிந்தது. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அப்பட்டமான சுயநலம் தவிர, பரிவு உணர்ச்சியற்ற ”பணப் பட்டுவாடா” தவிர, வேறெந்த உறவும் இல்லாமல் செய்துவிட்டது. மத உணர்ச்சி வேகம், பேராண்மையின் வீராவேசம், போலிப் பண்புவாதிகளின் (philistines) உணர்ச்சிவயம் ஆகியவற்றால் ஏற்படும் அதி தெய்வீக ஆனந்தப் பரவசங்களைத் தன்னகங்காரக் கணக்கீடு என்னும் உறைபனி நீரில் மூழ்க்கடித்துவிட்டது. மனித மாண்பினைப் பரிவர்த்தனை மதிப்பாக மாற்றிவிட்டது. துறக்கவொண்ணாத, எழுதி வைக்கப்பட்ட, எண்ணற்ற சுதந்திரங்களுக்குப் பதிலாகச் சுதந்திரமான வணிகம் என்னும் ஒரேவொரு நியாயமற்ற சுதந்திரத்தை உருவாக்கி வைத்துள்ளது. சுருங்கச் சொல்லின், முதலாளித்துவ வர்க்கம், மதம் மற்றும் அரசியல் பிரமைகளால் திரையிட்டு மறைக்கப்பட்டிருந்த சுரண்டலுக்குப் பதிலாக, அப்பட்டமான, வெட்கமற்ற, நேரடியான, கொடூரமான சுரண்டலை ஏற்படுத்தியுள்ளது.
இதுநாள் வரையில், மரியாதைக்கு உரியதாக இருந்த, பயபக்தியுடன் பார்க்கப்பட்டு வந்த, வாழ்க்கைத் தொழில் ஒவ்வொன்றையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துவிட்டது. அது, மருத்துவரையும் வழக்குரைஞரையும், மதகுருவையும் கவிஞரையும், விஞ்ஞானியையும் தன்னிடம் ஊதியம் பெறும் கூலி-உழைப்பாளர்களாக ஆக்கிவிட்டது. முதலாளித்துவ வர்க்கம், குடும்பத்திடமிருந்து அதன் உணர்ச்சிபூர்வ உறவுத்திரையைக் கிழித்தெறிந்துவிட்டது. குடும்ப உறவை வெறும் பண உறவாகக் குறுக்கிவிட்டது.
பிற்போக்காளர்கள் போற்றிப் பாராட்டும் மத்திய காலத்துச் செயல்வீரப் பகட்டுத்தனம், எவ்வாறு சோம்பல் நிறைந்த செயலின்மையை உற்ற துணையாக்கி உறவாடிக் கிடந்தது என்பதை முதலாளித்துவ வர்க்கம் அம்பலப்படுத்திவிட்டது. மனிதனின் செயல்பாடு என்னவெல்லாம் சாதிக்க வல்லது என்பதை முதன்முதலாக எடுத்துக் காட்டியது முதலாளித்துவ வர்க்கம்தான். எகிப்தியப் பிரமிடுகளையும், ரோமானிய மூடுகால்வாய்களையும், கோதிக் தேவாலயங்களையும் பெரிதும் மிஞ்சக்கூடிய அதிசயங்களை அது சாதித்துக் காட்டியுள்ளது. முற்காலத்தில் நிகழ்ந்த தேசங்களின் பெருந்திரளான குடிபெயர்ப்புகளையும், சிலுவைப் போர்களையும்[35] மிகச் சாதாரணமாகத் தோன்றச் செய்யும் மாபெரும் படையெடுப்புகளை அது நிகழ்த்தியுள்ளது.
உற்பத்திக் கருவிகளையும், அதன்மூலம் உற்பத்தி உறவுகளையும், அவற்றோடு கூடவே ஒட்டுமொத்த சமுதாய உறவுகளையும் இடையறாது புரட்சிகரமாக மாற்றி அமைத்திடாமல் முதலாளித்துவ வர்க்கம் உயிர்வாழ முடியாது. இதற்கு மாறாக, பழைய உற்பத்தி முறைகளை மாற்றமில்லா வடிவில் அப்படியே பாதுகாத்துக் கொள்வதுதான் முந்தைய தொழில்துறை வர்க்கங்கள் அனைத்துக்கும் வாழ்வுக்குரிய முதல் நிபந்தனையாக இருந்தது. உற்பத்தியை இடையறாது புரட்சிகரமாக மாற்றியமைத்தலும், சமூக நிலைமைகள் அனைத்திலும் இடையறாத குழப்பமும், முடிவே இல்லாத நிச்சயமற்ற நிலைமையும், கொந்தளிப்புமே முதலாளித்துவ சகாப்தத்தை அதற்கு முந்தைய சகாப்தங்கள் அனைத்திலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. நிலைத்த, இறுகிப்போன எல்லா உறவுகளும், அவற்றுடன் இணைந்துள்ள பயபக்தி மிக்க பண்டைய தப்பெண்ணங்களும் கருத்துகளும் துடைத்தெறியப்படுகின்றன. புதிதாக உருவானவை அனைத்தும் நிலைத்துக் கெட்டியாகும் முன்பே காலாவதி ஆகிவிடுகின்றன. கட்டியானவை அனைத்தும் கரைந்து காற்றிலே கலக்கின்றன, புனிதமானவை யாவும் புனிதம் கெடுக்கப்படுகின்றன. இறுதியாக, மனிதன் தனது வாழ்க்கையின் எதார்த்த நிலைமைகளையும், சக மனிதர்களுடன் தனக்குள்ள உறவுகளையும் தெளிந்த அறிவுடன் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறான்.
முதலாளித்துவத்தின் உற்பத்திப் பொருள்களுக்குத் தொடர்ந்து விரிவடைந்து செல்லும் சந்தை தேவைப்படுகிறது. இத்தேவை முதலாளித்துவ வர்க்கத்தைப் புவியின் பரப்பு முழுவதும் விரட்டியடிக்கிறது. அது எல்லா இடங்களுக்கும் சென்று கூடு கட்டிக்கொள்ள வேண்டும்; எல்லா இடங்களிலும் குடியேற வேண்டும்; எல்லா இடங்களிலும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டே ஆக வேண்டும்.
உலகச் சந்தையை நன்கு பயன்படுத்திக் கொள்வதன்மூலம் முதலாளித்துவ வர்க்கம் ஒவ்வொரு நாட்டிலும் பொருள் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் ஓர் உலகத் தன்மையை (cosmopolitan character) அளித்துள்ளது. பிற்போக்காளர்கள் கடுங்கோபம் கொள்ளும் வகையில், [ஒவ்வொரு நாட்டிலும்] தொழில்துறை எழும்பி நின்றுள்ள அதன் தேசிய அடித்தளத்தை அகற்றிவிட்டது. நெடுங்காலமாக நிலைபெற்றிருந்த தேசியத் தொழில்கள் யாவும் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகின்றன. புதிய தொழில்களால் அவை ஒழித்துக்கட்டப்படுகின்றன. இந்தப் புதிய தொழில்களை நிறுவுவது, நாகரிகமடைந்த நாடுகள் அனைத்துக்கும் வாழ்வா சாவா என்னும் பிரச்சினையாகி விடுகிறது. இந்தப் புதிய தொழில்கள் முந்தைய தொழில்களைப்போல் உள்நாட்டு மூலப் பொருள்களைப் பயன்படுத்துவதில்லை. இவற்றுக்கான மூலப் பொருள்கள் தொலைதூரப் பிரதேசங்களிலிருந்து தருவிக்கப்படுகின்றன. இவற்றின் உற்பத்திப் பொருள்கள் உள்நாட்டில் மட்டுமன்றி, உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நுகரப்படுகின்றன. உள்நாட்டு உற்பத்திப் பொருள்களால் நிறைவு செய்யப்பட்ட பழைய தேவைகளின் இடத்தில் புதிய தேவைகள் எழுந்துள்ளதைக் காண்கிறோம். அவற்றை நிறைவு செய்யத் தொலைதூர நாடுகளிலும் பிரதேசங்களிலும் உற்பத்தியாகும் பொருள்கள் தேவைப்படுகின்றன. தேசங்களும் வட்டாரங்களும் தனித்தொதுங்கி நின்றும், தன்னிறைவு கண்டும் இருந்த நிலை மாறி, ஒவ்வொரு திசையிலும் பரஸ்பரப் பிணைப்பும், தேசங்களுக்கிடையே ஒன்றையொன்று சார்ந்து நிற்கும் உலகளாவிய சார்புத் தன்மையும் நிலவக் காண்கிறோம். நுகர்பொருள் உற்பத்தியில் எப்படியோ அறிவுத்துறை உற்பத்தியிலும் அதே நிலைதான். தனித்தனி நாடுகளின் அறிவுசார் படைப்பாக்கங்கள் அனைத்து நாடுகளின் பொதுச் சொத்தாகின்றன. தேசிய ஒருதலைப்பட்சப் பார்வையும் குறுகிய மனப்பான்மையும் மேலும் மேலும் சாத்தியமின்றிப் போகின்றன. எண்ணற்ற தேசிய, வட்டார இலக்கியங்களிலிருந்து ஓர் உலக இலக்கியம் உதயமாகிறது.
அனைத்து உற்பத்திக் கருவிகளின் அதிவேக மேம்பாட்டின் மூலமும், தகவல் தொடர்பு சாதனங்களின் பிரம்மாண்ட முன்னேற்றத்தின் மூலமும் முதலாளித்துவ வர்க்கம் அனைத்துத் தேசங்களையும், மிகவும் அநாகரிகக் கட்டத்தில் இருக்கும் தேசங்களையும்கூட, நாகரிக வட்டத்துக்குள் இழுக்கிறது. முதலாளித்துவ வர்க்கம் தன்னுடைய பண்டங்களின் மலிவான விலைகள் என்னும் வலிமை மிக்க பீரங்கிகளைக் கொண்டு, சீன மதிலையொத்த தடைச்சுவர்களை எல்லாம் தகர்த்தெறிகின்றது; அதன்மூலம், அநாகரிக மக்களுக்கு அந்நியர்பால் உள்ள முரட்டுப் பிடிவாதமான வெறுப்பைக் கைவிட்டுப் பணிந்துபோகக் கட்டாயப்படுத்துகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையை ஏற்காவிடில் அழிய நேருமென்ற அச்சத்தின் காரணமாக அனைத்துத் தேசங்களும் அம்முறையைத் தழுவிட நிர்ப்பந்திக்கிறது. அனைத்து தேசங்களையும் நாகரிகம் என்று தான் கருதுவதை ஏற்கும்படி, அதாவது, அவை தாமாகவே முதலாளித்துவமாக மாறக் கட்டாயப்படுத்துகிறது. சுருங்கக் கூறின், தன்னுடைய பிரதிபிம்பமான ஓர் உலகைப் படைக்கிறது.
முதலாளித்துவ வர்க்கம் நாட்டுப்புறத்தை நகரங்களின் ஆட்சிக்கு உட்படுத்திவிட்டது. மாபெரும் நகரங்களை உருவாக்கியுள்ளது. நாட்டுப்புற மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் நகர்ப்புற மக்கள் தொகையைப் பெருமளவு அதிகரிக்கச் செய்துள்ளது. இவ்வாறாக, மக்கள் தொகையில் கணிசமான ஒரு பகுதியினரைக் கிராம வாழ்க்கையின் மடமையிலிருந்து மீட்டுள்ளது. நாட்டுப்புறம் நகரங்களைச் சார்ந்திருக்குமாறு செய்துள்ளதைப் போன்றே, அநாகரிக நிலையிலும் அரை-நாகரிக நிலையிலுமுள்ள நாடுகள் நாகரிக நாடுகளைச் சார்ந்திருக்குமாறும், விவசாயிகளின் நாடுகள் முதலாளித்துவ நாடுகளைச் சார்ந்திருக்குமாறும், கிழக்கு நாடுகள் மேற்கு நாடுகளைச் சார்ந்திருக்குமாறும் செய்துள்ளது.
மக்கள் தொகையும், உற்பத்திச் சாதனங்களும், சொத்துகளும் சிதறுண்டு கிடக்கும் நிலையை முதலாளித்துவ வர்க்கம் மேலும் மேலும் ஒழித்துக்கொண்டே வருகிறது. மக்கள் தொகையை ஆங்காங்கே குவித்து வைத்துள்ளது. உற்பத்திச் சாதனங்களை மையப்படுத்தியுள்ளது. சொத்துகளை ஒருசிலர் கையில் குவிய வைத்துள்ளது. இதன் தவிர்க்கவியலாத விளைவு அரசியல் அதிகாரம் மையப்படுதலாகும்.
தமக்கென தனியான நலன்கள், சட்டங்கள், அரசாங்கங்கள், வரிவிதிப்பு முறைகளைக் கொண்ட, சுயேச்சையான அல்லது தளர்ந்த இணைப்புக் கொண்டிருந்த மாநிலங்கள், ஒரே அரசாங்கம், ஒரே சட்டத் தொகுப்பு, ஒரே தேசிய வர்க்க நலன், ஒரே தேச எல்லை, ஒரே சுங்கவரி முறைகொண்ட ஒரே தேசமாக ஒன்றிணைந்துவிட்டன.
முதலாளித்துவ வர்க்கம் நூறாண்டுகள்கூட ஆகாத அதன் ஆட்சிக் காலத்தில், இதற்கு முந்தைய தலைமுறைகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கியவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில் மிகப் பிரம்மாண்டமான உற்பத்தி சக்திகளை உருவாக்கி வைத்துள்ளது. இயற்கையின் சக்திகளை மனிதனுக்கு அடிபணியச் செய்தல், எந்திர சாதனங்கள், தொழில்துறைக்கும் விவசாயத்துக்கும் இரசாயனத்தைப் பயன்படுத்தல், நீராவிப் கப்பல் போக்குவரத்து, ரயில் பாதைகள், மின்சாரத் தந்தி, கண்டங்கள் முழுவதையும் திருத்திச் சாகுபடிக்குத் தகவமைத்தல், கால்வாய்கள் வெட்டி நதிகளைப் பயன்படுத்தல், மனிதனின் காலடி படாத இடங்களிலும் மாயவித்தைபோல் பெருந்திரளான மக்களைக் குடியேற்றுவித்தல் – இத்தகைய உற்பத்தி சக்திகள் சமூக உழைப்பின் மடியில் துயில் கொண்டிருக்குமென இதற்கு முந்தைய நூற்றாண்டு கற்பனையாவது செய்திருக்குமா?
ஆக நாம் காண்பது என்னவெனில்: முதலாளித்துவ வர்க்கம் தன்னைக் கட்டி அமைத்துக்கொள்ள அடித்தளமாக இருந்த உற்பத்திச் சாதனங்களும், பரிவர்த்தனைச் சாதனங்களும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் உருவாக்கப்பட்டவை. இந்த உற்பத்தி மற்றும் பரிவர்த்தனைச் சாதனங்களுடைய வளர்ச்சியின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில், நிலப்பிரபுத்துவ சமுதாயம் எத்தகைய சமூக நிலைமைகளின்கீழ் உற்பத்தியும் பரிவர்த்தனையும் செய்து வந்ததோ அந்தச் சமூக நிலைமைகளும், விவசாயம், பட்டறைத் தொழில் ஆகியவற்றில் நிலவிய நிலப்பிரபுத்துவ ஒழுங்கமைப்பும், சுருங்கக் கூறின், நிலப்பிரபுத்துவச் சொத்துடைமை உறவுகள், ஏற்கெனவே வளர்ச்சிபெற்றுவிட்ட உற்பத்திச் சக்திகளுக்கு இனிமேலும் ஒவ்வாதவை ஆயின. அவை, [உற்பத்தியைக் கட்டிப்போடும்] கால் விலங்குகளாக மாறின. அந்த விலங்குகளை உடைத்தெறிய வேண்டியிருந்தது; அவை உடைத்தெறியப்பட்டன.
அவற்றின் இடத்தில் தடையற்ற போட்டியும், அதனுடன் கூடவே அதற்கு ஏற்றாற் போன்ற சமூக, அரசியல் அமைப்புச் சட்டமும், முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார, அரசியல் ஆதிக்கமும் வந்து அமர்ந்து கொண்டன.
இதேபோன்ற ஓர் இயக்கம் [இப்போது] நம் கண்ணெதிரே நடைபெற்று வருகிறது. தனக்கே உரிய உற்பத்தி உறவுகளையும், பரிவர்த்தனை உறவுகளையும் சொத்துடைமை உறவுகளையும் கொண்டுள்ள நவீன முதலாளித்துவ சமுதாயம் - இவ்வளவு பிரம்மாண்ட உற்பத்திச் சாதனங்களையும் பரிவர்த்தனைச் சாதனங்களையும் மாயவித்தைபோல் தோற்றுவித்துள்ள இந்த முதலாளித்துவ சமுதாயம் – தனது மந்திரத்தின் வலிமையால் பாதாள உலகிலிருந்து தட்டியெழுப்பி வந்த சக்திகளை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் மந்திரவாதியின் நிலையில் இருக்கிறது. கடந்த சில பத்தாண்டுகளது தொழில்துறை, வணிகம் ஆகியவற்றின் வரலாறானது, நவீன உற்பத்தி உறவுகளுக்கு எதிராகவும், முதலாளித்துவ வர்க்கமும் அதன் ஆட்சியதிகாரமும் நிலவுதற்கு அடிப்படையாக விளங்கும் சொத்துடைமை உறவுகளுக்கு எதிராகவும், நவீன உற்பத்தி சக்திகள் நடத்தும் கலகத்தின் வரலாறே ஆகும். இதனை உறுதிப்படுத்த, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் வணிக நெருக்கடிகளைக் குறிப்பிட்டாலே போதும். இந்த நெருக்கடிகள் ஒவ்வொரு முறை வரும்போதும் முன்னைவிட அச்சமூட்டும் வகையில், ஒட்டுமொத்த முதலாளித்துவ சமுதாயத்தின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்குகின்றன. இந்த நெருக்கடிகளின்போது, இருப்பிலுள்ள உற்பத்திப் பொருள்களின் பெரும்பகுதி மட்டுமன்றி, ஏற்கெனவே உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகளில் ஒரு பெரும்பகுதியும் தொடர்ந்து அழிக்கப்படுகிறது. இதற்கு முந்தைய சகாப்தங்கள் அனைத்திலும் அபத்தமானதாகக் கருதப்பட்டிருக்கும் ஒரு கொள்ளை நோய் – தேவைக்கு அதிகமான உற்பத்தி என்னும் கொள்ளை நோய் - இந்த நெருக்கடிகளின்போது தொற்றுகிறது. சமுதாயம், தான் திடீரெனெத் தற்காலிக அநாகரிக நிலைக்குப் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளதைக் காண்கிறது. ஏதோ ஒரு பெரும் பஞ்சம் அல்லது உலகளாவிய ஒரு சர்வநாசப் போர் ஏற்பட்டு வாழ்வாதாரப் பொருள்கள் அனைத்தின் வினியோகமும் நிறுத்தப்பட்டதுபோல் தோன்றுகிறது; தொழிலும் வணிகமும் அழிக்கப்பட்டுவிட்டதாகத் தோன்றுகிறது; ஏன் இப்படி? காரணம், இங்கே மிதமிஞ்சிய நாகரிகம், மிதமிஞ்சிய வாழ்வாதாரப் பொருள்கள், மிதமிஞ்சிய தொழில்கள், மிதமிஞ்சிய வணிகம் இருப்பதுதான். சமுதாயத்தின் வசமுள்ள உற்பத்தி சக்திகள், முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல இனிமேலும் உதவப் போவதில்லை. மாறாக, அந்த உறவுகளை மீறி உற்பத்தி சக்திகள் வலிமை மிக்கவை ஆகிவிட்டன. முதலாளித்துவ உடைமை உறவுகள், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்குத் தளைகளாகிவிட்டன. உற்பத்தி சக்திகள் இந்தத் தளைகளைக் தகர்த்தெறியத் தொடங்கியதுமே அவை முதலாளித்துவ சமுதாயம் முழுமையிலும் குழப்பம் விளைவிக்கின்றன; முதலாளித்துவச் சொத்துடைமை நிலவுதற்கே ஆபத்தை ஏற்படுத்துகின்றன. தாம் உற்பத்தி செய்யும் செல்வத்தைத் தம்முள் இருத்தி வைக்க இடம் போதாத அளவுக்கு, முதலாளித்துவ சமுதாய உறவுகள் மிகவும் குறுகலாக இருக்கின்றன. முதலாளித்துவ வர்க்கம் இந்த நெருக்கடிகளை எவ்வாறு சமாளிக்கிறது? ஒருபுறம், உற்பத்தி சக்திகளில் பெரும்பகுதியை வலிந்து அழிப்பதன் மூலமும், மறுபுறம் புதிய சந்தைகளை வென்றெடுப்பதன் மூலமும், பழைய சந்தைகளை இன்னும் ஒட்டச் சுரண்டுவதன் மூலமும் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கிறது. அதாவது மேலும் விரிவான, மேலும் நாசகரமான நெருக்கடிகளுக்கு வழி வகுப்பதன் மூலமும், நெருக்கடிகளை முன்தடுப்பதற்கான வழிமுறைகளைக் குறைப்பதன் மூலமும் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கிறது.
எந்த ஆயுதங்களைக் கொண்டு முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தித் தரைமட்டம் ஆக்கியதோ, அதே ஆயுதங்கள் இப்போது முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகத் திருப்பப்படுகின்றன. ஆனால், முதலாளித்துவ வர்க்கம் தனக்கே அழிவைத் தரப்போகும் ஆயுதங்களை மட்டும் வார்த்தெடுக்கவில்லை; அந்த ஆயுதங்களைக் கையாளப்போகும் மனிதர்களையும், அதாவது நவீனத் தொழிலாளி வர்க்கமாகிய பட்டாளிகளையும் உருவாக்கி உலவவிட்டுள்ளது."

Wednesday, May 17, 2017

Workers are not Beggars- தொழிலாளர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல

ஏன் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தத்தை ஆதரிக்க வேண்டும்?
......................................................................
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 7000 கோடிகள் சம்பளம், பென்சன் கொடுக்காமல் 20 ஆண்டுகளாக தமிழக அரசு இழுத்தடித்து வருகின்றது. உழைப்பர் உழைப்பின் வியர்வை காயும் முன்பு அதற்க்கான கூலி வழங்க வேண்டும் என்கிறார்கள் நபிகள் உள்ளிட்ட பல பெரியோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Govt must be Model Employer (அரசாங்கம் என்பது முன்மாதிரியான முதலாளியாக இருக்க வேண்டும்) என்கின்ற அறத்தை உச்சநீதி மன்றம் தொடர்ந்து தனது தீர்ப்புகளில் எடுத்து காட்டி உள்ளது. இதை ஜெயாவின் அதிமுக ஆட்சி கடைபிடிக்காமல் போக்குவரத்து தொழிலாளர்களை ஏமாற்றி வருகிறது.
30 ஆண்டுகள் ஒயாது உழைத்த வயதான தொழிலாளிக்கு வழங்க வேண்டிய ரிட்டையர்மெட் பணம், மாதம் வழங்க வேண்டிய பென்சன் பணத்தை வழங்காமல் கோடிகணக்கில் நிலுவையாக வைத்துள்ளது. வயதான பல்லாயிரம் தொழிலாளிகள் பென்சன் இல்லாமல் எப்படி வாழ்வது? பென்சன் இல்லாமல் பலர் உயிரிழந்து உள்ளனர். உணவு இல்லாமல் நரக வாழ்க்கை வாழ்கின்றனர்.
செத்துப்போன போக்குவரத்து 5000 தொழிலாளி
மனைவிமார்கள், குழந்தைகளுக்கு
இன்சூரன்ஸ் பணம் கிடைக்க வில்லை..அவர்களிடம்.பிடித்த பணத்தை அரசு
LICக்கு இன்னும் கட்ட வில்லை. தமிழக அரசின் பச்சை துரோகம் செய்துள்ளது.
ஒவ்வொருவரும் சிந்தித்து பார்க்க வேண்டும். பென்சன் வழங்காத அதிமுக ஆட்சியை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது அறத்தின் பால் உள்ள சமூகத்த்தின் முன் உள்ள அனைவரின் கடமை.
புதிய நியமனமின்மை ஆளுங்கட்சி ஊழியர் பணியிடம் திடீரென வேலைக்கு வரமுடியாதோர் பணியிடம் ஓவர் டைம் என்று பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் பணிச்சுமை சொல்லிமாளாது.80முதல் 100பயணிகள் ஏறும்போது பேருந்தின் பயண வேகம் குறையும்.ஆந்த நேரத்தில் பயணிகள் பேசுகிற அவ்வளவு வசவுகளையும் பொறுத்துக் கொண்டு ஓட்டுநரும் நடத்துநரும் எதிர்கொள்ளும் மன உலைச்சல் கொஞ்ச நஞ்மில்லை
நூறு பயணிகள் இருக்கும்போது டிக்கெட்போட நடத்துநர் படும்பாடு அய்யய்யோ என்ன கொடுமை?

பேச்சுவார்த்தைகளை தொழிற்சங்கங்களுடன் நடத்தி வாக்குறுதிகளை அளிக்கும் ஜெயா-எடப்பாடி ஆட்சிகள் அதை மயிருக்கு கூட கடைபிடிக்கவில்லை. போக்குவரத்து அதிகாரிகள், அமைச்சர்கள், ஆளும் கட்சியினர் தொடர் ஊழல்களில் ஈடுபட்டு போக்குவரத்து துறையில் நட்டத்தில் இயக்க காரணமாக உள்ளனர்.
இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்ததை அறிவித்தனர். பலசுற்று பேச்சு வார்த்தைகள் நடத்தினர். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 7000 கோடிகள் சம்பளம், பென்சன் தராமல் மமதையும், திமிருடனும் எடபாடி ஆட்சி நடந்து கொண்டுள்ளது. அத்துடன் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்ததை எளிதாக உடைத்து விடுவோம், ஆளும் கட்சி ஆதரவு தொழிற்சங்கங்கள், துரோக-கைக்கூலி எடுபிடி காங்கிரஸ்-பிஜேபி தொழிற்சங்கங்கள், தற்காலிக தொழிலாளர்களை பணியில் அமர்த்தி வேலைநிறுத்தமே நடைபெறாமல் செய்வதில் அதிகாரிகள், ஆட்சிகள் கொழுப்பெடுத்து அறிவித்து கொண்டிருக்கின்றனர். அதிகமாக ரயில்களை இயக்குவோம் என்று போராடு ம் தொழிலாளிக்கு எதிராக இன்னொரு தொழிலாளியை ஏவும் கயமையை ஆட்சியாளர்கள் செய்கின்றனர்.
தொடர்ச்சியாக இதை பார்த்த, உணர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் தன்னிச்சையாக முன்கூட்டியே ஸ்டிரைக்கை ஆரம்பித்தனர். தங்கள் கூட்டு சக்தியை வெளிப்படுத்தி உள்ளனர். இதில் சிறிது பாதுப்பு பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது உண்மை. ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வேறு வழியில்லை.
இந்த போராட்டம் வெற்றி பெற செய்ய வைப்பது அனைத்து தமிழக மக்களின் தார்மீக கடமை.
போக்குவரத்து தொழிலாளி வேலைநிறுத்தம்  சுயநலன் சார்ந்து அல்ல என்பதை  நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
1-போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகை (பி.எப்./எல் ஐ சி./ஆர் டி/கடன் சொசைட்டி)இப்படி எந்த பணமும் அந்தந்த நிறுவனங்களுக்கு பலவருடங்களாக நிர்வாகங்கள் செலுத்தவில்லை.
2-அரசு அறிவித்த சலுகைககள்(இலவச பயண அட்டைகள்.எம் எல் ஏ.எம் பி.மாற்றுத்திறனாளி.நோயாளிகள்)காரணமாக ஏற்படும் வருவாய் இழப்பு அரசு கழகங்களுக்கு வழங்கவில்லை.
3-பள்ளிகுழந்தைகளுக்கு அரசு அறிவித்த இலவசபஸ் பயணத்திற்கான செலவில் போக்குவரத்துகழகங்கள் ஏற்றுக்கொண்ட தொகைபோக மீதி தொகை வழங்கப்படவில்லை.
4-பணிஓய்வு பெற்று செல்லும் தொழிலாளர்ளுக்கு அவர்களுக்கு சட்டப்படி சேரவேண்டிய கிராஜிவிட்டி(பணிக்கொடை)பிஎப்;விடுப்பு ஒப்படைப்பு சம்பளம்;மருத்துவ தொழிற்நுட்ப கல்லூரிகளுக்கு தொழிலாளி செலுத்திய பங்குதொகை எதுவும் வழங்காத நிலை.
5-தொழிலாளர்களுக்கு தொழிலாளர்நீதி மன்றம் வழங்கும் தீர்ப்புகள் காரணமாக கிடைக்கவேண்டிய நிலுவை தொகைகள்.
6-நிர்வாக தண்டனைகள் மற்றும் பே-அனாமலியால் ஏற்படும் பணபலன்கள்.
7-வருடாந்திர ஊதிய உயர்வு ;ஆய்வுபலன்(ரிவியூ)போன்றவற்றால் வரும் பணபயன் நிலுவைகள்.
8-இதற்கெல்லாம் மேலாக விலைவாசி உயர்வை தொழிலாளர்கள் தாங்கமுடியாத நிலையில் அதை ஓரளவாவவது
ஈடுசெய்யும் நோக்கில் வழங்கப்படும் பஞ்சப்படி(D.A )உட்பட பணபலன்கள் வழங்கப்படவில்லை.
9-மத்தியஅரசு பின்பற்றிவரும் நாசகர பொருளாதார கொள்கைககள் காரணமாக கட்டுபாடின்றி ஏறிவரும் டீசல் விலைஉயர்வை ஈடுகட்ட அரசு உதவி மறுக்கப்படுகிறது.
10-அரசு சேவைத்துறை நிறுவனமான போக்குவரத்து கழகம் சுங்கசாவடிக்கு (டோல்கேட்)கட்டணம் செலுத்தவேண்டியுள்ளது.
11-போக்குவரத்துக்கழக பேருந்துகள் காப்பீடு (இன்சூரன்ஸ்)செய்யப்படாததால் கோடிகணக்கான ரூபாய் விபத்து இழப்பீடு வழங்கும் நிலை.
12-அரசு விழாக்களுக்காக தேவையற்றவகையில் திட்டமிடல் ஏதுமின்றி ஒரேநேரத்தில் ஒரேகழகத்தில் நூற்றுக்கணக்கான பேருந்துகளை இயக்குவதால் ஏற்படக்கூடிய தேவையற்ற செலவீனங்கள்.
.13-தகுதிசான்று(FC)என்ற பெயரில் வசூலிக்கப்படும் தொகை.
14-அனுமதி இல்லாத ஆம்னி பேருந்து மற்றும் தடம்மாறி இயக்கும் மினிப்பேருந்துகளால் ஏற்படுத்தப்படும் இழப்பு.
15-எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வெருநாளும் வரவுக்கும் -செலவுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தால் ஏற்படும் 5-கோடி இழப்பு...
16. வெள்ளம் வந்த பொழுது இலவசமாக போருந்து இயக்க அதிமுக ஆட்சி செய்தது. அதற்க்கான கோடிக்கணக்கான பணத்தை இன்று வரை தரவில்லை
இன்னும் சொல்லமுடியும் இப்படி எதுகுறித்தும் கவலைபடாத அரசுகளால் ஏற்படுத்தப்படும் நஷ்டத்திற்கு இரவும் பகலும் பாராமல் உழைக்கும் தொழிலாளி எப்படி பொறுப்பாக முடியும்.
பணிஓய்வு பெற்றுசெல்லும் நிலையில் தொழிலாளிக்கு சேரவேண்டிய தொகைககளை முடக்கிவைத்து அதைகொண்டு கழக அன்றாட செலவுகளைசெய்வோம் எனசொல்லும் அரசுகளின் நடவடிக்கை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்.
பொறுமையாக பேசிப்பேசி பலகட்ட போராட்டங்களுக்கு பிறகே வேலைநிறுத்தம் ஒன்றே தீர்வு என்ற முடிவுக்கு தொழிலாளி வந்துள்ளான்.
இப்போராட்டத்தை இருகரம் நீட்டி வரவேற்று வெற்றிபெறச்செய்வது என்பது நாம் பெற்ற சுதந்திரத்தை பேணிபாதுகாப்பதாகும்.
இது பொதுச்சொத்து மக்கள்சொத்து யாரும் இதை அளிக்கவிடோம்.
மக்கள் மத்தியில் அதிர்ப்த்தியை உருவாக்கி தனியார்மயத்திற்கு தூபம் போடும் அரசுகளின் நடவடிக்கையை தொழிலாளர்களும் பொதுமக்களும் இணைந்து முறியடிப்போம்.
இது சலுகைகேட்கும் போராட்டமல்ல தேசம் காக்கும் போராட்டமே.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு திடீர் ஸ்டிரைக் நி
யாமானது.
அனைவரும் அதை ஆதரிக்க வேண்டும்.
குறிப்பாக முகநூல் நண்பர்கள் இதனை தங்கள் கடமையாக நினைத்து எழுத வேண்டும்.
இந்த தொழிலாளர் போராட்டம் தோற்றால் மக்கள்விரோத ஆட்சியாளர்கள், எதிரிகள் கும்மாளமிடுவார்கள். ஊழல் கொள்ளைகளை துணிந்து செய்வார்கள்.
Workers are not Beggars-
தொழிலாளர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல.
ஸ்டிரைக்கை வாழ்த்துவோம். ஆதரிப்போம்..அணியமாவோம்@! .#TransportWorkersStrike #CITU#BusStrike