Monday, June 23, 2014

தோழர் மாவோ

தோழர் மாவோவை படித்ததில் பிடித்தது:

புரட்சியின் நோக்கத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய தவறு செய்த தலைமையை எந்த நிபந்தனையும் இன்றி ஏற்கக் கூடாது, மாறாக அதை தீர்மானமாக நிராகரிக்க வேண்டும்,,
தோழர் மாவோ 01-01.1967

................

சனநாயகம் சிலசமயம் அதுவே முடிவு என்பது போலத் தோற்றம் தரும்: ஆனால் உண்மை என்னவெனில் சனநாயகம் என்பது ஒரு முடிவுக்கு இட்டுச் செல்லும் வழிமுறை மட்டுமே

தோழர் மாவோ 01-01.1967
...............................
லியு - ஷாவோ -சி எழுதிய " ஒரு நல்ல கம்யூனிஸ்ட்டாக விளங்குவது எப்படி ?" ( How to be a good communist..?) என்ற படைப்பைப் பலமுறை வாசித்துள்ளேன்.. அது மார்க்சிய - லெனினியத்துக்கு எதிராவன ஒன்று.. தோழர் மாவோ ..தொகுதி 9 பக் 464

................................
'புறநிலை யதார்த்தங்களை பரிசீலித்து படிப்பதுமான நிலையில் இல்லாதவர்களாக நாம் இருக்கிறோம். கண்ணைக் கட்டிவிட்டுக் கரிக்குருவி பிடிப்பதுபோல, அல்லது குருடன் மீனைத் தேடுவதுபோல நடந்து கொள்வது, தாறுமாறாகவும கவனமற்றும் இருப்பது வெறும் வார்த்தை ஜாலங்களில் ஈடுபடுவது மேலோட்டமான அறிவோடு திருப்தி அடைவது, இது நமது கட்சித் தோழர்கள் பலரிடம் இன்னும் உள்ள மிக மிக மோசமான வேலைநடை.

இந்தநடை மார்க்சிய லெனினியத்தின அடிப்படை உணர்வுக்கு முற்றிலும் விரோதமானது.
நிலைமைகளை உணர்வுபூர்வமாக ஆராய வேண்டும் என்றும் அக நிலை விருப்பங்களிலிருந்து தொடங்காமல் புறநிலை யதார்த்தங்களிலிருந்து தொடங்க வேண்டுமென்றும் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர் நமக்கு போதித்துள்ளனர்.
நமது தோழர்கள் பலர் இந்த உண்மைக்கு நேர் விரோதமாக செயல்படுகின்றனர்.'
-மா சே துங்


“ஒரு நபரின் செயலைப் பற்றிய ஒரு அடிப்படையான மதிப்பீட்டை நாம் பெற்றிருக்க வேண்டும். அவருடைய சாதனை 30 சதவீதமாகவும், அவருடைய தவறுகள் 70 சதவீதமாகவும் இருக்கிறதா என்பதை நிறுவ வேண்டும். அவருடைய சாதனைகள் மொத்தத்தில் 70 சதவீதமாக இருந்தால் அப்பொழுது அவருடைய செயல் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட வேண்டும். சாதனைகள் பிரதானமாக உள்ள செயலை தவறுகள் பிரதானமாக உள்ள செயலாக விவரிப்பது முற்றிலும் தவறாகும்…”
தோழர் மாவோ (கட்சி குழுக்களின் செயல்முறை)
மக்களின் குறைபாடுகளை விமர்சனம் செய்வது தேவையானது.... ஆனால், அப்படிச் செய்யும் போது, நாம் மக்க்களின் நிலைப்பாட்டில் உண்மையாக நின்று அவர்களைப் பாதுகாத்து, பயிற்றுவிக்கும் உளப்பூர்வமான ஆர்வத்துடன் பேச வேண்டும். தோழர்களை எதிரிகள் போல நடத்துவது எதிரியின் நிலைப்பாட்டை எடுப்பதற்குச் சமமாகும்.. மாவோ

"ஏனா கலை இலக்கிய கருத்தரங்கு உரை" ( மே , 1942..)

கம்யூனிஸ்டுகள் முன் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன.. மக்கள்மீது பொதுவுடமையாளர்கள்  நம்பிக்கை வைக்கா விட்டால், பொது மக்களின், தொண்டர்களின்  மனவெழுச்சியைத் துண்டா விட்டால்  இந்தப் பிரச்சனைகளை வெல்வது சாத்தியமல்ல. நிலைமையை மக்களுக்கும் தொண்டர்களுக்கும் பொதுவுடமையாளர்கள் விளங்கவில்லையென்றால், அவர்களிடம் மனம் திறக்காவிட்டால், அவர்களின் கருத்துக்களைக் கூற அனுமதிக்காவிட்டால், அவர்கள் பேச துணியாமல், பொதுவுடமையாளர்கள் பார்த்து மக்கள் அஞ்சியபடியே இருந்தால் அவர்களின் மனவெழுச்சியைத் தூண்டுவது சாத்தியமல்ல.  “மத்தியத்துவம் ஜனநாயகம் என இரண்டும் உள்ள, கட்டுப்பாடு சுதந்திரம் என இரண்டும் உள்ள, எண்ண ஒற்றுமை, தனிப்பட்ட மனசாந்தி மற்றும் கிளர்ச்சி என இரண்டும் உள்ள ஒரு அரசியல் சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும் என்று நான் 1957/ல் கூறினேன்.” இத்தகைய அரசியல் சூழ்நிலையை கம்யூனிஸ்டுகள் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் உருவாக்கவேண்டும் இல்லாவிட்டால் மக்களின் மனவெழுச்சியைத் தூண்டுவது சாத்தியமல்ல. ஜனநாயகம் இல்லாமல் பிரச்சனைகளை வெல்ல முடியாது. மேலும் மத்தியத்துவம் இல்லாமல் இப்படிச் செய்வதும் கூட சாத்திமில்லாததுதான், ஆனால் ஜனநாயகம் இல்லையென்றால் மத்தியத்துவமும் இருக்காது. 
சனவர் 30,1962


நமது(கம்யூனிஸ்டுகள்) அணுகுமுறை உண்மையை ஏற்றுகொள்ளவதும் தவறுகளைத் திருத்திகொள்ளத்தயாராய் இருப்பதும்.எது சரி எது தவறு எது சரியானது எதுசரியில்லாதது என்ற கேள்வி நமது (கம்யூனிஸ்டுகள்) வேலையில் மக்களுடனான மாறுபாடுகளைப் பழிதூற்றுவதாலோ முஷ்டிகளாலோ போக்க இயலாது. கத்திகளாலும்  துப்பாக்கிகளாலும் கூட சரிசெய்ய இயலாது. இவற்றுக்கு விவாதம்  மற்றும் சீர்தூக்கிப்பார்ப்பதன் மூலமும், விமர்சனம் மற்றும் சுயவிமர்சனம் மூலமுமே தீர்வு காண முடியும். சுருங்கச்  சொன்னால், இவற்றுக்கு சனநாயக முறையால மட்டுமே, மக்களை மனம் திறந்து பேச அனுமதிப்பதால் மட்டுமே தீர்வு காண முடியும்.
 சனவர் 30,1962



புரட்சிக்கு முதல் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியே யார் நமது எதிர்கள் ? யார் நமது நண்பர்கள்? என்பதாகும். முந்தைய அனைத்து புரட்சிகரப் போராட்டங்களிலும் மிகச் சிறிய அளவே சாதிக்கப்பட்டதற்கான அடிப்படைப் காரணம். உண்மையான எதிரிகளைத் தாக்குவதற்கேற்ற உண்மையான நண்பர்களுடன் தம்மை ஒன்றிணைத்துக் கொள்ளத் தவறியதே ஆகும். புரட்சிகர கட்சி ஒன்றே மக்கள் திரளுக்கு வழிகாட்டி. அந்த புரட்சிகர கட்சி அவர்களுக்குத் தவறதாக வழிகாட்டும் போது எந்தப் புரட்சியும் எப்போதும் வெற்றி பெறுவதில்லை வெற்றியடைய, மக்கள் திரளைத் தவறாக வழி நடத்தாமல், நமது உண்மையான எதிர்களை தாக்குவதற்கு, நமது உண்மையான நண்பர்களுடன் ஒன்றிணைவதற்கு நாம் அவசியம் கவனம் செலுத்துவது என்பதன் மூலம் நமது புரட்சியில் வெற்றியைத் திட்டவட்டமாகச் சாதிப்போம். உண்மையான எதிரிகளிடமிருந்து நண்பர்களை பிரித்தறிய சமூகத்திலுள்ள பல்வேறு வர்க்கங்களின் பொருளாதாரநிலையும், புரட்சி குறித்து அவைகளின் மனப்பான்மைகளையும் நாம் பொதுப் பகுப்பாய்வு செய்வது அவசியம்.
..1926 மார்ச்


சனநாயகம் சிலசமயம் அதுவே முடிவு என்பதுபோல் தோற்றம் தரும்; ஆனால் உண்மை என்னவெனில் சனநாயகம் என்பது ஒரு முடிவுக்கு இட்டு செல்லும் வழிமுறை மட்டுமே..!

ஒரு கம்யூனிஸ்ட் ஆனவன் அதிகார வர்க்க நபர் போல மக்களிடமிருந்து தனிமைப்பட்டோ மக்களை விட உயர்ந்தனாகவோ ஒருபோதும் இருக்கக் கூடாது. ஒரு கம்யூனிஸ்ட் என்பவன் மக்களிடையே உள்ள ஒரு சாதாரணத் தொழிலாளிபோல அவர்களுடனேயே இணைந்து இருக்கவும் அவர்களில் ஒருவனாகவே இருக்கவும் ஆனவன். ...
20.08.1966 


மூத்த தோழர்கள் கடந்த காலத்தில் தங்கள் பங்களிப்புகளைச் செய்துள்ளார்கள் என்பது உண்மைதான்.. ஆனால் அதையே 'மூலதனமாக'க் கொண்டு காலம் தள்ள முடியாது. அவர்கள் தம்மை சீர்படுத்திக்கொண்டு புரட்சிக்கு புதிதாக தமது பங்களிப்பைச் செலுத்த வேண்டும் ..! 
  01.06.1967 

கம்யுனிஸ்ட்டுகளாகிய நமக்கு அரசுப் பதவிகள் தேவை இல்லை. நமக்குத் தேவை புரட்சி. முழுமையான புரட்சிகர உணர்வு நமக்குத் தேவை, ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு மணி நேரமும் மக்களுடன் இருப்போம். நாம் மக்களுடன் இருக்கின்றவரை வெற்றி எப்பொழுதும் நமக்கே..
 04.07.1967

என்னை (மாவோ) இரவு பகலாக விமர்சனம் செய்யுங்கள்.. . பின்னர் நான் உட்கார்ந்து இது பற்றி அமைதியாக சிந்திப்பேன். இரண்டு அல்லது மூன்று இரவுகள் தூக்கம் போய்விடும். முழுமையாக சிந்தித்தப்பின் அதனைப் புரிந்துகொண்டபின் நேர்மையுடன் சுய விமர்சனத்தை எழுதுவேன். இதுதான் வழி அல்லவா..? சுருங்கச் சொன்னால், நீங்கள் மற்றவர்களை மனம்திறந்து பேசவிட்டால் வானம் இடிந்து வீழ்ந்து விடாது..கம்யுனிஸ்ட் கட்சி மாநாடு நடக்கும் விதம், சனநாயக மத்தியத்துவ முறை, மக்களின் வழிமுறை: முதலில் சனநாயகம் பிறகு மத்தியத்துவம்; மக்களிடம் இருந்து மக்களுக்கு; தலைமையை மக்களுடன் ஒருங்கிணைப்பது.....என்பது பற்றி தோழர் மாவோவின் உரையை சனவர் 30,1962-யை மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளில் பக்கம் 450-485 வரை விரிவாக அலசுகிறார்... அதில் கடைசி பத்தி இது..!!

கவிதை என்பது சொல்லவருவதை படிமம் மூலமே சொல்வது. உரைநடையைப் போல நேரடியாக சொல்வது அல்ல. எனவே உவமையையும், உருவகத்தையும், பீடிகையும் கவிதையில் தவிர்க்க இயலாது....

நவீன கவிதை எழுத வேண்டுமெனில், வர்க்கப் போராட்டத்தை, உற்பத்திக்கான போராட்டம் ஆகியனவற்றை பிரதிபலிக்கும் பொழுது சொல்லவரும் கருத்தைப் படிமம் மூலமாக சொல்ல வேண்டும்.செவ்வியல் செறியைக் கண்டிப்பாகப் பின்பற்றக் கூடாது..........எதிர்காலத்தில் கவிதையின் போக்கு இப்படியிருக்க அதிகம் சாத்தியம் உள்ளது -நாட்டுபுற பாடல்களிலிருந்து வடிவத்தையும் சாரத்தையும் எடுத்துக் கொண்டு ஒரு புதிய பாணி வடிவத்தில் வளரும்.. சாமான்யரும் வாசிக்கத்தக்க வகையில் ஈர்ப்பைக் கொண்டிருக்கும்...  1965  தேர்ந்தெடுக்கப்பட்ட    படைப்புகள் பாகம் 8, 9 களில் இருந்து




//ச்சாங்ஷா
1925
தனியே நிற்கிறேன் வீழ்கால குளிர் உறைக்க.
ஷியாங் ஆறு வடதிசை ஏகுமிடத்தின்
செம்மஞ்சள் தீவு முனையில்;
செவ்வழலாய் நிறம்பற்றியெரியும் மரங்கள்
படர்ந்துவிரிந்த கானக மலைகள்
ஆயிரமாயிரம் காண்கிறேன்.
நீல நீர்களில் நூறு படகுகள்
பாய்ந்துச்செல்வதைப் பார்க்கிறேன்
விண் பிளக்கும் கழுகுகள்.
நீரடியில் சீறும் கயல்கள்.
உறைந்து நிற்கும் வானின் கீழே,
சுதந்தரம் நாடி போரிடும் உயிர்கள்.
வேதனைபடரக் கேட்கிறேன்,
பாரொடு விண்ணாய் பரந்த இப்புவியில்
மூழ்கவோ மிதக்கவோ, விதிப்பவர் யாரோ?
நூறு தோழரும் முன்பொருநாள்.
இணைந்து வந்தோம்-
அற்றைத் திங்கள், அந்த ஆண்டு,
மறத்தல் இல்லை, நிறைவான நாட்கள்.
துடிக்கும் இளையர், பள்ளி மாணவர்,
கொள்கையில் நேர்மை, பிறழாத வழிகள்.
உணர்ச்சிப் பிழம்பு, தடை தளை தகர்ப்பு...
மலை நதி சுட்டி, திசைவழி காட்டி,
சொல்தீ வளர்த்து மக்களை எழுப்பினோம்.
நினைவில் நிற்குமோ இன்றும்,
அன்று
நீர்மிசை பரந்து நீண்டு சென்றதும்
பாய்ந்தப் படகினை நீரலை தடுத்ததும்?
-
உணர்ச்சிப் பிழம்பான, லட்சியவாத, செவ்வியற் படிமங்களால் நிறைந்த ஒரு கவிதை இது. ச்சாங்ஷா என்கிற இக்கவிதை மாவோ ஒரு கவிஞராக உருவெடுத்த தொடக்க காலத்தினுடைய வெளிப்பாடு. தன் வாழ்வின் முப்பதுகளின் தொடக்கத்தில், பல்கலைக்கழக ஆண்டுகளைக் கடந்தபின், 1925 இல் இதை எழுதினார் மாவோ. தென்-மத்திய சீனப் பகுதியிலுள்ள ஹூனான் மாகாணத்தின் தலைநகரமான ச்சாங்ஷாவில் இருந்தபோதுதான் மாவோ ஒரு கம்யூனிஸ்ட்டாக ஆனார்..ஆசி செந்தில் நாதன்//

2 comments:

  1. ஒரு பூ மகரந்தச் சேர்க்கை அடைவது போல
    அந்த பச்சைக்கிளி தன் குஞ்சுகளுடன் கிலீச்சிட்டு பறப்பதைப்போல
    அன்பான என்னவள் ஒரு அழகு மகவைக்காட்டி மகிழ்வதுபோல
    புரட்சி வரும்.வரவேண்டும். காகிதத்தில் கரைகட்ட முடியாது.

    விதைத்த நாளிலிருந்து முளைத்ததா என்று நோண்டுவது
    வலியோடு வருபவன் வலிபற்றி நூலில்பதிவு உள்ளதா என்று கவலைப்படமாட்டான்.என்ன வலி என்று ஆய்வு செய்து
    புரிய முயற்சி செய்ய வேண்டாமா?

    எல்லாம் தெரிந்தது போன்ற உங்களிடம் இருந்து என்ன புரிகிறது.
    ஒரு விதையை முளைக்க வைக்க உங்களால் முடியவில்லை
    ஒரு மரத்தின் ,பறவையின், விலங்கின் மகிழ்வு எட்டியதேயில்லை
    எத்தனை ஆயிரம் சகோதரர்கள் மடிகிறார்கள் கண்முன்னே
    இவர்களின் வாழ்வும் சாவும் உங்களுக்கு உறைக்கவில்லை.

    மாவோவின் நிலத்தை ஆக்கிரமித்து மாற்றார்கள்கொடிகட்டிவிட்டார்கள் .எப்படி?
    மீண்டும் ஒரு புத்தகத்தில் புதைந்து போங்கள்.
    மானுடம் வெல்லட்டும்.

    ReplyDelete
  2. அருமை ,மேலும் அமைப்பு சன நாயகம் மத்தியத்துவம் குறித்த மாவோ, மற்ற தோழர்களின் படைப்புளை pdf வடிவத்தில் வெளியிட்டாள் சிறப்பாக இருக்கும் .தோழமையுடன்.நன்றி

    ReplyDelete