Saturday, September 13, 2014

ஒரு குட்டி சிறுகதை..


முனுசாமிக்கும் முனியசாமிக்கும் இடையிலான நட்பு கைக்கடிகாரம் கட்டுவதில் இருந்து தான் ஆரம்பித்தது.
பீப்… பீய்ப்ப்… பீய்ப்ப்பப…… பீப்… பீய்ய்ப்ப்… பீய்ய்ப்ப்பப…… என்ற இசை அந்த குட்டிப்பையன் இதுவரை கேட்டிராத  ஒர் இசை. எங்கிருந்து வருகிறது என்று தேடுகிறான்.
புழக்கடையில் இருந்து வருவதை குட்டிப்பையன் முனுசாமி கேட்டான். குயில் கூவி இருக்கிறது. காகம் கரைந்திருக்கிறது. வண்டுகள் ரீங்காரம் இசைத்திருக்கிறது. குருவிகள் கீறிச்சிட்டிருக்கிறது. ஆனால் இந்த இசைக் குறிப்புகள் புதியன…. இன்றுதான்  அந்த குட்டி பையன் கேட்கிறான். ஆச்சரியம் மேலிட புழக்கடைக்கு ஒடுகிறான்.
அங்கே இரண்டு தென்னை மரங்களில் இருந்து பச்சை ஒலை வெட்டி தடுக்கு ஒலைகளாக முனுசாமியின் அப்பாவும், முனியசாமி அப்பாவும் பின்னிக் கொண்டிருந்தனர். பச்சை ஒலையால் பின்னப்பட்ட கைக்கடிகாரம் கட்டி, பச்சை ஒலையிலான பெல்ட்டை அணிந்து, பச்சை  ஒலையிலான கீரிடம் சூடி, பச்சை ஒலையிலான அம்பையை ஏந்தி, பச்சை ஒலையில் செய்யப்பட்ட பீப்பியை ஒரு குட்டிபையன் ஊதிக் கொண்டிருந்தான். தென்னை ராஜா போல் அவன் காட்சி அளித்தான்.
முனுசாமி பார்க்கும் பொழுதே  குட்டி பையன் முனியசாமி நீளமான பச்சை ஒலையின் அடிப்பகுதியின் ஈர்க்குச்சியை விட்டு கீற்று ஒலையில் சிறிதாக பாதியைக் கிழித்து சர்ரென அடிவரை வேகமாக இழுக்கிறான். அந்த ஒலை ராக்கெட் போல சீறி மேல் பாய்ந்து தென்னை மரத்தின் உச்சி வரை பாய்ந்தது. அங்கிருந்து ஒலை காற்றில் ஆடி அசைந்து பறந்து மெல்ல முனுசாமியின் காலில் விழுந்தது. கண்களில் ஆசையும், ஆச்சரியமுமாக முனுசாமி முனியசாமியை பார்த்தான்.
“இங்க வா …. வாட்ச் வேணுமா….” என்று குட்டிபையன் முனியசாமி கேட்டான்.
“அப்பா… இவனுக்கு வாட்ச் செய்யுப்பா…” என்று தனது அப்பாவிடம் கேட்டான்..
பச்சை தென்னை ஒலையில் ஈர்க்குச்சியை நீக்கி விட்டு நளினமாக மடித்து   கைக்கடிகாரம் ஒன்றை அவர் செய்து தந்தார். முனியசாமி முனுசாமியின் மணிக்கட்டில் அதைக் கட்டினான். இருவரும் மாற்றி மாற்றி பீப்பியை ஊதி ஊதி இசைத்தார்கள்.  பின் ஒன்று, இரண்டு, மூன்று நான்கு என்று குட்டி பையன்கள் ஒவ்வொரு கைகளிலும் பல கைக்கடிகாரங்களை செய்து கட்டிக் கொண்டார்கள் தென்னை ஒலை ராக்கெட்டுகள் சர்ர்….சார்ர்ர்ர்…ர்ர்..என்று போட்டி போட்டு வானில் குட்பையன்கள் தாறுமாறாய் பறக்க விட்டு கொண்டிருந்தாரகள்.
பஞ்சாயத்து அரசு பள்ளியில் குட்டிபையன்கள் சேர்ந்தனர். முனுசாமி முனுயசாமியை நோக்கினான். முனுசாமியும் முனியசாமியை நோக்கினான். அன்பும் நட்பும் சுடராய் ஒளிர்ந்தது.
சில நாட்கள் கழித்து பள்ளி விட்டதும் மாணவர்கள் சிட்டுக்களாக பறக்க தொடங்கினர்.
சல் சல் சலல்… ஜில்….. ஜில் … ஜில்….
சல் சல் சலல்… ஜில்….. ஜில் … ஜில்….
தடித்த மூங்கில் மீதுள்ள பொம்மை குட்டி பாப்பா கையில் உள்ள தாளங்களைத் தட்டித்தட்டி குழந்தைகளை அழைத்து கொண்டிருந்தது. மிட்டாய்காரன் கால் விரல்களும், கைவிரல்களும் இணைந்து கலைநயத்தால்  இழைத்து  சிறார்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.
கைக்கடிகாரம், வளையல், கம்மல் தோடுகள், நெக்லஸ், தேள், பாம்பு, மாடு…. என்று விதவிதமான வடிவங்களில் மூங்கிலில் அப்பி கிடந்த வண்ணங்கள் குழைத்த மிட்டாயை இழுத்து இழுத்து சிறுவர், சிறுமிகளின் கைகளில். மாட்டிக் கொண்டிருந்தான். கொசுறு கேட்ட சிறுமியின் மூக்கில் பசக் என்று மிட்டாய் துணுக்கை மிட்டாய்காரன் ஒட்ட வைத்தான்.  அந்த சிறுமி வெட்கபட்டு ஓடினாள்.
முனுசாமியும், முனியசாமியும் ஆசை பொங்கிய பார்வையால் ஒருவரை ஒருவர் பார்த்தனர். வீட்டிற்கு  அவர்கள் ஓடினார்கள்… இல்லை..இல்லை பறந்தார்கள்.
காசுகளுடன்  திரும்பி வந்தார்கள். ஆனால் மிட்டாய்காரனை அங்கு காணவில்லை. ஏமாற்றம் கண்களில் தெரிந்தது.சுற்றும் முற்றும் ஓடி தேடினர்
சல்… சல்….சல்… ஜல்…ஜல்….ஜல்…
சல் சல் சலல்… ஜில்….. ஜில் … ஜில்….
பொம்மை பாப்பா அழைப்பது எங்கிருந்தோ கேட்டது.. ஒடினார்கள். தேடினார்கள்
மிட்டாய்காரன் முன்பு மூச்சிரைக்க இரு குட்டி பையன்கள் போய் நின்றனர். இருவரும் கைகளை ஒரு சேர நீட்டினார்கள்.
சிவப்பு, மஞ்சள், வெள்ளை வண்ணக் கலவை கோடுகளாலான மிட்டாயை சவ்வாய் இழுஇழுவென இழுத்தார். ஆளுக்கொரு மிட்டாய் கைக்கடிகாரத்தை அவர் கட்டினார். சின்னமுள் , பெரியமுள் கூட கைக்கடிகாரத்தில் இருந்தன மகிழ்ச்சியில் சிறுவர்கள் நட்புடன் சிரித்தனர். பொம்மை பாப்பா கை கொட்டி சிரித்து வாழ்த்தினார்.
போகாமல் தயங்கி முயங்கி இரு குட்டி பையன்களும் நின்றனர்.
பசக்… பசக்… என்று மிட்டாய்காரன் மிட்டாயை இழுத்து துண்டு மிட்டாயை முனுசாமி கன்னத்திலும் முனியசாமி கன்னத்திலும் குறும்புடன் ஒட்டினார். வெட்கத்துடன் சிறுவர்கள் மகிழ்ந்து சிரித்தனர். கன்னங்களில் ஒட்டியிருந்த மிட்டாய் துண்டுகளை வாயில் போட்டனர் தொண்டையை தாண்டியும்  அந்த துண்டு மிட்டாய்களில் ஒட்டி இருந்த அன்பு இனித்தது.
முனுசாமி குடும்பத்திற்கும் , முனியசாமி குடும்பத்திற்கும் சொத்துபத்து என்று பெரியதாக சொல்லிக் கொள்வது மாதிரி கிடையாது. தலா அரைகாணி நிலம் மட்டும் அக்குடும்பங்களுக்கு சொந்தமாய் இருந்தன. முனுசாமி அப்பாவிற்கு நேஞ்சான் காளை மாடுகளும் வண்டியும் கூடுதலாக இருந்தது
பெரிய அய்யா..சின்ன அய்யாமார்கள் செங்கத்சூளையில் பச்சை சூளைக்கற்களை ஏற்றி இறங்க இந்த மாட்டு வண்டி பயன்பட்டது. முனுசாமி அப்பாவும்,முனியசாமி அப்பாவும் சேர்ந்து  அந்த வண்டியுடன் உழைத்தனர்.   சில நேரங்கள் குடும்பமாயும் பெண்களும் உழைத்தனர்.  அதில் வரும் வருமானத்தைப் பிரித்துக் கொண்டர்.. வறுமை இல்லாமல் நல்ல சோற்றை இந்த குடும்பங்கள் நின்றன. வாழுவும் உழைப்பும் சாவும் அவர்களுக்கு ஒன்று போலத்தான் இருந்தன. சாதி அடைத்தைத் தவிர்…
பள்ளி இறுதி தேர்வில் அதிக மதிப்பெண்னை  அந்தச் சிறுவர்கள் பெற்றனர் தன் மகன் முனுசாமிக்கு  கைக்கடிகாரம் ஒன்றை பரிசளித்தார். முனுசாமி எல்லாரிடமும் கட்டி மகிழ்ந்தான்.
ஏக்கத்துடன் தன் மகன் பார்ப்பதை முனியசாமி உண்ர்ந்து கொண்டார். முனியசாமி  தன் நண்பனை விட  ஒரு மதிப்பெண் அதிகமாக பெற்று இருந்தான்..  பிள்ளை மனசுக்கு ஆசை இருக்கத்தானே செய்யும்…உடனடியாக கைக்கடிகாரம் வாங்க அவரிடம் பணம் இல்லை.. சிறுக சிறுக  உண்டியில் பணம் சேர்ந்தார்.
ஆறுமாதங்களுக்கு பிறகு முனியசாமி கையிலும்  ஒரு கைக்கடிகாரம் மின்னியது. எல்லாரிடமும்  ஆசையுடன் காட்டினான். பெருமையும், மகிழ்ச்சியையும்  நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டான்
வீசும் காற்றில் விசத்தை ஒரு சில விசமிகள் தங்கள் சுயநலத்திற்காக கலந்துக் கொண்டிருந்தனர். சிறுவர்கள் நட்பும், அவர்கள் இருவர் கைகளில் மின்னிய கடிகாரங்களும் சில கண்களை உறுத்தின
மறுநாள் முனியசாமி பள்ளிக்க வரவில்லை. அடுத்த நாள்  வந்த முனியசாமியின்  மணிக்கட்டில் கைக்கடிகாரம் இல்லை.. கத்தியால் கிழக்கப்பட்ட காயத்துடன் மணிக்கட்டில் கட்டு போட்டு முனியசாமி வந்தான்.
முனுசாமி தன் கையில் இருந்த கைக்கடிகாரத்தைப்  பார்த்தான். சின்னமுள். பெரிய முள், நொடி முள் என்று எல்லாமும் சேர்ந்துதான் நேரத்தைக் காட்டின.
தன்னை நோக்கிய முனியசாமி பார்வை முனுசாமி என்னவே  செய்தது. தன் மணிக்கட்டில் இருந்த கைக்கடிகாரம் நெருப்பு வளையமாய் அவனைச் சுட்டது.
காயமற்ற கையும் , கைக்கடிகார அணித்த கையும் பிரிந்து இருந்தாலும், அந்த  இருநண்பர்கள் மற்ற கைகள் இறுக்கமாகவே பின்னிஇருந்தது. …

.

 ,

.



No comments:

Post a Comment