Saturday, January 3, 2015

நம்மாழ்வார்கள்



                          நம்மாழ்வார்கள்                 சிறுகதை

பூக்களும், பிஞ்சுகளும், கிளைகளுமாக பரப்பி பூதராஜா கொல்லையில் வானளாவிக் கிடந்த  அடர்ந்த வேப்பமரம் வேரோடு சாய்க்கப்பட்டு கிடந்தது. அதன் அருகே ஆறடி நீளமான மனைப்பாம்பு நசுக்கப்பட்டு மல்லாக்காய் புரட்டப்பட்டுச் செத்து கிடந்தது. இவைகளை பார்த்த கண்ணுசாமி பேயறைந்தது போன்று அலறினார். அவரின் மனைவி கைத்தாங்கலாக சேர்த்து அணைத்து மெதுவாக நடத்திக் கொண்டு வந்து வீட்டில் படுக்க வைத்தார். அவர் உடம்பு அனலாய் கொதித்தது. அவர் வாய் எதைஎதையோ தன்னிச்சையாய் பிதற்றிக் கொண்டிருந்தது.
கண்ணுசாமியின் பங்காளி அதாவது சித்தப்பா மகன் தயாளன். இருவரும் நண்பர்களும் கூட.. ஒத்தவயது வகுப்பு தோழர்களுமாய் வாழ்ந்தவர்கள். மறுநாள் காலையில் கண்ணுசாமியை நலம் விசாரிக்க, உதவ தயாளன் வந்தார்.

“போச்சே.. எல்லாம் போச்ச்சே.. போச்ச்சே. ” என்று கண்ணுசாமி உளறிக் கொண்டு இருந்தார். நண்பன் குரல் கேட்டு கண் திறந்து பார்த்தார். அந்த கண்களில் எதிர்காலவாழ்க்கைப் பற்றிய பயம்…  சோகம் ..கேள்விகள்… அப்பட்டமாய் தெரிந்தன.

“டேய்… உனக்கு யென்னடா… பேங்கில லட்சக்கணக்கில பணம் போட்டு வைச்சிருக்க… ராஜா மாதிரி ஜாலியா இருடா..” என்றார் தயாளன்.
சில நாட்களில் உடல்நலம் தேறிய கண்ணுசாமி உண்மையில் ‘ராஜாமாதிரி’ வெட்டியாய் மாறத் தொடங்கினார். வெள்ளை வேட்டி, சட்டையுமாய் கிராமத்தில் வலம் வந்தார். காலை வேளைகளில் தேநீர்கடைகளில் பெஞ்சுகளை தேய்த்தவாறு பேசிக் கொண்டிருந்த ஊர்கதைகளினுள் அய்க்கியமானான். மதியநேரங்களில் பெண்டாட்டி இரசித்து பார்த்து கொண்டிருந்த பல சீரியல்களில் ஒன்று இரண்டை கண்டு தமிழ்கூறும் ஊடக நல்லுலகுடன் இணைந்து கண்ணயர்ந்தார். 
அந்திமாலை டாஸ்மார்க் கடை சாலையில் போவோர் வருவார் எல்லாரையும் அன்புடன்  கூவி அழைத்து கொண்டிருந்தது. அந்த அழைப்பை நண்பர்கள் சுட்டிக்காட்டி சிலாகித்தனர். எப்பொழுதோ ஒருநாள் இருந்த கண்ணுசாமியின் இந்தபழக்கம் அவரின் வெறுமையை தினம்தினம் போக்கும் அருமருந்தானது. இப்படியான மாலை டாஸ்மார்க் ஜமாவில் நண்பரின் வேண்டுகோளைத் தட்டமுடியாமல் ஒரிருநாட்கள் தயாளன் சென்றார்.

மாலை சில மாதங்களில் மதியமாக கண்ணுசாமி மாறிப் போனது. உடல்திடகாந்திரமாக இருந்தாலும் முதுமை எட்டிப்பார்க்கும் வயதில் தொழிலை மாற்றமுடியாமல் வீட்டில் முடங்கிபோவதற்கு மாற்றாக டாஸ்மார்க் ஆறுதல் அளித்தது.

விளைநிலத்தை விற்று வங்கியில் போடப்பட்டு இருந்த பணம் தண்ணீரில் நீராய் கரையத் தொடங்கியது.

நாளடைவில் காலையில் எழுந்து வாய்கொப்பளித்ததும் டாஸ்மார்க்சரக்கு உள்ளே போனால்தான் கைகால் நடுக்கங்கள் கண்ணுசாமிக்கு நின்றது. கண்ணுசாமி மனைவி தன்மகளை-மருமகனை பார்த்து வருவதற்க்கு பெருநகரத்துக்கு சென்றார். காலையில் எழுந்த உடன் குடிக்க ஆரம்பித்த கண்ணுசாமியாரும் இல்லாத்தால் அளவிற்கு அதிகமாக குடித்தார். அடிக்கடி சிக்கரெட் குடிக்கும் பழக்கமுடைய அவருக்கு சட்டென்று மாரடைப்பு ஏற்பட்டது. அந்தவலியை சதாரண உடம்பு வலி, அசதி சோர்வு என்று மயக்கத்தில் நினைத்து இன்னும் குடித்தார். போதைமயக்கத்தில் கண்ணுசாமி மரணமடைந்தார்.

குடியில் நாக்கு வரண்டு போய் கண்ணுசாமி செத்து விட்டதாக சொந்தக்காரர்கள் அவர் மனைவியை குறைப்பட்டுக் குற்றம் சொல்லிக் கொண்டிருந்தனர். தன் நண்பனின் அகலாமரணம் தயாளனை நிலைகுலைய வைத்தது.

ஏர்ஓட்ட, அண்டை வெட்ட, நீர் பாய்க்க, பரம்பு அடிக்க, நாத்து வளாவ, உரம் போட, எரு அடிக்க, பூச்சிமருந்து தெளிக்க, அறுப்பு அறுக்க, சுமை தூக்க, பிணை ஓட்ட, நெல்லை விற்க, அரிசியை ஆலைக் கொண்டு செல்ல ஒருத்தருக்கு ஒருவர் உதவியாக இவர்கள் இருந்தவர்கள். வலது கை உடைந்த நிலையாக தயாளன் உணர்ந்தார்.

ஒருநாள் புலர்காலையில் கதவு டொக்..டொக்..டொக்டொக்..என்று வேகமாக கதவு தட்டப்படும் ஒசைக்கேட்டது. தயாளன் மனைவி கதவை திறந்தார். தூரத்து உறவுக்காரர், மாமாமுறை வரும். இளசன் நல்லசேதி கொண்டு வந்திருக்கிறேன் என்று கூறிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான். கழனியில் காலையில் உடனடியாக வேலைஇல்லாததால் தயாளன் படுக்கையை விட்டு சுணக்கமாகவே எழுந்தார்.

“வாங்க… எப்படி இருக்கீங்க..”

“.நல்ல சேதி கொண்டு வந்திருக்கேன் மாமா.. ஐஸ்வரியம் வீடு தேடு வருது மாமா” என்று துதிபாடிக்கொண்டு அந்த வாலிபன்  வந்தான்.
என்ன…. என்பது போல் ஆச்சரியமாக நெற்றியைக் கேள்வியாய் சுருக்கி தயாளன் பார்த்தார்.

“உங்க நிலத்துக்கு நல்ல விலை கூடி வந்திருக்கு மாமா.. பெரிய பார்ட்டி வந்து வாங்க வருகிறார்கள்.. அதிஷ்டசாலி தாங்கள்…” என்று புகழ்ந்து தள்ளி கொண்டு அந்த வாலிபன் சென்றான்.

சட்டென்று தலைக்கு மேல் கோபம் பற்றி கொண்டு எரிந்தது தயாளனுக்கு….

அதற்குபின் தயாளன் போட்ட அறச்சீற்றத்தில்  எரிந்து சாம்பலாகி போனான் அந்த புரோக்கர்.

இப்படியாக  நொய்….ய்…நொய்ய். யென்று ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் சில ஆண்டுகளாக அலைந்து தயாளனை நோகடித்துக் கொண்டிருந்தனர். அதோடு சகதோழனின் இறப்பும் தயாளனை மேலும் கவலையை, தனிமையைக் கொள்ள வைத்தது.

 அறுப்பு அறுத்தபின்பு தாளடியாக கிடைக்கும் தனது நான்கு ஏக்கர் நிலத்தை வெறித்த பார்த்து கொண்டிருந்தார்.  நொடிகள்.. நிமிடங்கள்… மணிகள் போய் கொண்டிருந்தது. தாளடியுடன் தாளடியாய்  நசித்து கிடந்த தயாளனின் தோளை பரிவுடன் ஒரு கை தொட்டது.

அன்பு தோழன்.. தொழிற்சங்கதொண்டன்.. சேரிக்கு சொந்த காரன்...தபால்துறையில் ஈ.டி.யாக சேர்ந்து, நான்காதர வகுப்பு ஊழியனாகி பின்பு மூன்றாம் வகுப்பு ஊழியனாக உழைப்பாள் உயர்ந்தவன்.

“என்ன… இப்படி கல்லாக சமைச்சு நிக்கிற…” என்று கிண்டல் செய்தார்.

“கல்லா போனாக் கூட பரவயில்லை மண்ணா போயிடுவென்னு பயமாயிருக்கு..”  என்று தயாளன் சோகமாய் புன்னகைத்தார்.

பின்பு சகஜநிலைமை திரும்பி..நீண்ட நேரம் பழைய சம்பவங்களை புதிய நிகழ்வுகளைப் பேசிக் கொண்டிருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன் தான் வாங்கி போட்ட ஒர் ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்ய போவதாகவும், அதற்க்காக மூன்று நாள்கள் நம்மாழ்வாரிடம் பயிற்சிக்காக  வானகம் செல்ல போவதாகவும் கூறினார்.

தயாளனும் வானகம் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்..
திக்கு தெரியாமல் தவித்த கொண்டிருந்த தயாளன் எதோ போகின்ற போக்கில் தலையை ஆட்டி வைத்தான்.

அந்த மூன்று நாட்களும் வந்தது.
வேளாண் அறிவியலாளர் நம்மாழ்வார் அவரின் குழுவினருடன் மூன்று நாட்கள் வானகத்தில் நடந்த உரையாடல், பயிற்சி  தயாளன் வாழ்க்கையை மீண்டும் அர்த்தம் உள்ளதாக மாற்றியது. இயல்பான அவருடைய கடந்த கால வாழ்க்கையில் இருந்ததை மீண்டும் புதியதொரு உள்ளடக்கத்தை இந்த முகாம் அளித்தது

வட்டவடிவமாய் கட்டப்பட்டு இருந்த கட்டடிடத்தில் குளிர்ந்த காற்று அங்கு கூடியிருந்த மனிதர்களிடம் இயல்பாய் புகுந்து விளாயாடியது முழு நிலவு வெளிச்சம் அங்கிருந்தவர்களை குளிப்பாட்டி கொண்டிருந்தது.
“..என்ஜினியர்  இல்லாமல் மனிதன் இருக்கலாம், மருத்துவர் இல்லாமல் இருக்கலாம்.. அரசாங்கங்கள் கூட இல்லாமல் மனித சமூகம் இருக்க முடியும்… ஆனால்…  உணவு இல்லாமல்… அந்த உணவை தரும் உழவு தொழில் இல்லாமல் இருக்க முடியாது… சுழன்உம்  ஒர் பின்னது உலகம்….” என்று தொடர்ந்து கொண்டிருந்த  நம்மாழ்வாரின் கடைசிநாளில் உணர்ச்சிப் பெருக்கான பேருரை அவரை என்னமோ செய்தது.
புதியதோர் மனிதர்களாக மாற்றி, .

தயாளன் கண்களில் தானாய் மெல்ல கண்ணீர் கசிந்து.. பின் சுரந்து வடிந்து கொண்டிருந்தது. தாழ்வு மனப்பான்மை… சுய பரிதாபம்… அதில் கரைந்து வெளியேறி வானகத்தின் மண்தரையில் ஆவியாகி போனது.
விடைபெறுவதற்க்காக பெரியவரிடம் புதிய இளைஞர்கள் பலரும் கைகளை குலுங்கி கொண்டிருந்தனர். தயாளன் உணர்ச்சி பெருக்கில் சட்டென நம்மாழ்வாரை சட்டென இழுத்து மார்புடன் அணைந்து தழுவினார். மண்ணின் மணத்துடன் உழைப்பை உழவை கற்று தந்த அவர் தந்தையின் கதகதப்பை, கடந்த கால மண்ணின் சுவாசத்தை, வியர்வைகளின் நறுமணத்தை அந்த சில நொடிகளில் அவர் அனுபவித்தார்.

குழகுழைந்த நாற்று நடவு சேற்றைப் போன்ற நம்மாழ்வாரின் குழந்தைதனமான சிரிப்பு தயாளனுக்கு  இடம் மாறியது.
தனது மூன்று ஏக்கர் நிலத்தை முழுமையாக இயற்கை விவசாயத்திற்கு மாற்ற திட்டமிட்டார். மண் புழு உரம், தயாரிக்க வேலைகளை செய்தார். தயாளனும், அவர் மனைவியும் தொடர்ந்து உழைப்பில், விவசாயத்தில் தன் முனைப்புடன் இருந்தால் இவைகள் விசயமாக தெரியவில்லை. பிள்ளைகளைத்தான் விவசாயத்தில் ஈடுபடுத்த முடியாமல் போனது!
சிறிது வளர்ந்த கொம்புகளை கொண்ட ‘வடகத்தியான்’ எருது ஜோடியும், நாட்டு பசுமாடும் அவரிடம் ஏற்கனவே..இருந்ததால் ‘பஞ்சக்காவியா’ தயாரிப்பது சுலபமாக இருந்தது.

வாழைத் தோப்பும், பப்பாளி மரங்களும், நெற்பயிரும் ஒவ்வொரு ஏக்கரில் நடவு செய்தார்.

வாழையில் வரும்  நூற் புழு, வேர் அழுகல் நோய்களுக்கு “கார்போபியுரான்” 
போன்ற கொடிய இரசாயன விஷத்தை   அடிக்கிழங்குகளில் தோய்த்து நடவு செய்யும் பழக்கம் இருந்தது. அதற்கு மாற்றாக “சூடோ மோனாஸ்” என்ற இயற்கை நூண்ணுயிர் கலவையை நீரில் கரைத்து வாழை அடிக்கிழங்குகளை அதில் தோய்த்து ஊறவைத்து தயாளன் நட்டார்.
பப்பாளி, வாழை தோட்டங்களில் ஊடுபயிராக 80 நாட்களில்  பலன் தரும் உளுந்து, பாசி பயிறை விதைத்தார். அவைகள் பலனை மட்டுமல்லாமல், மண்ணில் தனது இலட்சக்கணக்கான வேர் முண்டுகளில் உயிர்ப்பை, நைட்ரஜன் சத்தை தேங்கி வளமாக்கின.
பப்பாளி மரங்கள் செழிப்புடன் வேகவேகமாக வளர்ந்தன. மற்ற மரங்கள் பல ஆண்டுகள் வளரும் உயரத்தை சில மாதங்களில் வளர்ந்தன. பப்பாளி மரங்களின் அகன்ற பச்சைப் பசேலென்ர இலைகள் படர்ந்து நிலம் முழுவதும் பசுமையை போர்த்தி குளிர்ச்சியை பரப்பியது.
ஆறு மாதத்தில் பெண் பப்பாளி மரங்கள் குட்டி குட்டி வெள்ளை ரோஜா மலர்களைப் போல் வரிசையாய் பூத்தன. ஆண் மரங்களில் கொத்து கொத்தாய் கொடி மல்லியாய் பூக்கள் நீண்ட காம்புகளின் நுனிகளில் அடர்ந்து காணப்பட்டன. வயலுக்கு தூரத்தில் வரும் பொழுது பப்பாளிப் பூக்களின் நறுமணம் காற்றில் பரவி இருப்பதை அனைவரும் உணர முடிந்தது.
குளிர் அடர்ந்த மரங்களில் இடையில்  நுழைந்தும் தேனீக்களும், வண்டுகளும் பூக்களின் தேனை பருகி ரீங்காரிக்கும் சிம்பொனிஇசை கூட்டை தெளிவாக தயாளன் உணர்ந்தார். வண்ண வண்ண தேன்சிட்டுக்கள் சிறகை விரிந்து மடிந்து பாடி திரிந்து கொண்டிருந்தன. அவை இசை நாடகங்கள் மூலைக்கு மூலை பப்பாளி தோட்டத்தில் அரங்கேறி பறவைகள் மகிழ் நடனத்துடன் ஆடுவதாக இருந்தது.
சில நாட்கள் கழித்த பிறகு கூட்டமாய் கறுப்பு கட்டெறும்புகள் மரங்களிலும், தரையிலும் சாரை சாரையாய் ஊர்ந்து கொண்டிருந்தன பப்பாளி காய்களில் திட்டு திட்டாய் வெள்ளைகள் தோன்றின. அது என்ன என்று தயாளன் புரிந்து கொள்வதற்குள் … ஒரிரு நாட்களுக்களில் இலைகள், காய்கள் மழுவதும் வெள்ளை பூச்சிகள் பல்கி பெருகி விட்டன தோட்டம் மழுவதும் குன்றி போய் விட்டது.
 ஊர்ந்து செல்லும் தன்மை கொண்ட இந்த மாவு வெள்ளை பூச்சிகள் இனிப்பானதொரு மெழுகு போன்ற பசை திரவத்தை தனது உடலில் சுரக்கின்றன. இந்த இனிப்பிற்காக ஈர்க்கப்படும் கட்டெறும்புகளின் உடலில் சின்ன சின்ன அந்த பூச்சிகள் ஒட்டிக் கொண்டு ஓரிடத்தில் ,இருந்து ஒரிடத்திற்கு, ஒரு மரத்தில் இருந்த இன்னொரு மரத்திற்கு வேகமான பரவி கொண்டிருந்தது.
வெள்ளை பூச்சிகள் காய்களில்.. இலைகளில் ஒட்டிக் கொண்டு சாற்றை உறிஞ்சி கறுத்து போக செய்து விட்டன. மெல்ல ஊர்ந்து வளர்ந்து பரவும் இந வெள்ளைப் பூச்சிகள் அதை வேகமாக பரப்பும் கட்டெறும்புகளும் கனமழை வந்தால் அடித்து கொண்டு காணாமல் போய் விடும் என்று சில விவசாயிக்ள தயாளனிடம் கூறினார்கள்.
மழை வருவது மகேசனுக்கே தெரியாத பொழுது  உழவனான தயாளனுக்கு தெரியுமா என்ன? மழை காலம் வருவதற்கு இன்னும் சில மாதங்களாகும். உரக்கடைக்களுக்கு சென்றால் கொடிய இராசயன நஞ்சு பூச்சிக்கொல்லிகளை பரிந்துரைக்கின்றார்.
மீண்டும் பழையபடி முழுமையாக இராசயன விவசாயத்திற்கு மாறுவதா என்று குழப்பத்துடன் தயாளன் வீடு வந்து சேர்ந்தார்.  வரித்து கொண்ட இலட்சியம் போய் விடுமே என்ற அச்சம்  அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
நண்பன் தான் மீண்டும் கை கொடுத்தார்.  அவன் பரிந்துரைத்த இயற்கை உயிர் உரங்கள், இயற்கை பூச்சிக் கொல்லிகள், நோய் தடுப்பு தயாரிக்கும் சிறிய தொழிற்கூடத்திற்கு சென்றார்.  மிகவும் கெட்டியான பசையை  5 கிலோ வாங்கி ஒவ்வொரு பப்பாளி மரத்தின் தண்டினைச் சுற்றி நான்கு விரல் அளவிற்கு  பசை வளையத்தை தயாளனும் அவர்  மனைவியும் உருவாக்கினர்.  கட்டெறும்புகள் அந்த பசையில் சிக்க செத்தொழிந்தன.
மாவு வெள்ளை பூச்சிகளை உண்ணும் இயற்கை ஒட்டுண்ணி திரவத்தை பால், வேப்பண்ணைய், தண்ணீர் கலந்து விசைத்தெளிப்பான் மூலம் பப்பாளி இலைகள், காய்கள் நனையும் அளவிற்கு தயாளன் தெளித்தார்.
படிப்படியாக சில நாட்களுக்குள் வெள்ளை பூச்சிகள் கட்டுக்குள் வந்தன.  பப்பாளி தோட்டம் மீண்டும் இசை நாடக மேடைகள்  ஆர்ப்பரித்தன.
வாழை குலை தள்ள தொடங்கின. பப்பாளி காய்கள் முற்றி இலேசான பசுமை கலந்த இளமஞ்சள் நிறமாக மாறின. செங்காய் பருவத்தில் இருந்த பப்பாளியை பறிந்து குலதெய்வத்திற்கும்,  முன்னோர்களுக்கும்  சர்க்கரை பொங்கல் வைத்து படையல் போட்டார்.
மறுநாள் கூடை நிறைய செங்காய்களை பறித்தார். அவரது  டிவிஎஸ் சூப்பர் எக்ஸ்.எல் வண்டியின் பின்புற சீட்டு எடுக்கப்பட்டு அதற்க்கு மாறாக  கூடை வைப்பதற்க்கான வசதி செய்யப்பட்டு இருந்தது.
இரண்டு கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள பேருராட்சி நகரத்திற்கு மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார்.  அங்குள்ள பல காய்கறி, பழக்  கடைகள் தயாளனுக்கு பழக்கானமானவைகள். கத்தரிக்காய், மிளகாய், பீர்க்கங்காய், சுரக்காய், பலவகை கீரைகள் … என்று  தயாளன் கிராமம் பயிரிடும் பொழுது  அங்குள்ள வியாபாரிகள் சைக்களிலும், தலைசுமையாகவும் வந்து வாங்கி சென்ற காலம் ஒன்று இருந்தது. இன்று டெம்போவில் மொத்த காய்கறி மார்க்கெட்டில் இருந்து வந்து இறங்கி விடுகிறது. அதனால் விவசாயிகள்தான் சில்லறை வியாபாரி, மொத்த வியாபாரிக்கு கொண்டு சென்று தாங்கள் விளைவித்த விளை பொருள்களை கொண்டு சேர்க்க வேண்டி உள்ளது.
தயாளன் அந்த காய்கறி கடையின் வண்டியை நிறுத்தினார். நடுத்தர வயதை தாண்டிய அந்த காய்கறி விற்பவள் தனது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதில் மும்முரமாக இருந்தார். அவள் கழுத்தில் தொங்கிய தாலிகயிற்றின் முழுவதும் கோர்க்கப்பட்டிருந்த தங்க நாணக்குழாய்கள் தயாளன் கண்ணை உறுத்தின. பல ஆண்டுகளுக்கு அவளும் அவள் கணவனும் அதிகாலையில் நடந்து வந்து தங்களது தோட்டத்தில் கத்திரிக்காய் பறித்து சுமந்து சென்றது நினைவில் வந்து தொலைத்தது. வியாபாரிகள் வசதியாகதான் இருக்கிறார்கள்.
“பப்பாளி பழம் வாங்கிக்கிறீயம்மா..” என்று இரண்டு பப்பாளி பழங்களை நீட்டினார்.
அந்த அம்மாள் பழத்தை கையில் வாங்க கூடவில்லை..
“இன்னா ..இது காய யடுத்தாந்து பயம் ங்கிறீங்களே..”
“இது பழந்தாம்மா..  அறுத்துபாரு..”
அந்த அம்மா அதை அறுத்து பார்த்தார்.  அப்படி ஒரு சிகப்பு நிறத்தில் அறுத்த பப்பாளி பழம் ஜொலித்தது.
“ தேனாட்டும் தித்திக்..கும்மா..” என்றார் தயாளன்.
“ ஆமா…..சர்க்கைர யாட்டும் கரயுதே..  ஆனா..” என்று இழுத்தார்.
“ மஞ்சளாக கலர் கலரா பழம இருந்தாதா ..பப்பாளி வாங்குவாங்குவாங்க ..இதை வாங்க மாட்டாங்க…இதோ பாரு எப்படி மஞ்சளா இருக்கு ” என்று அங்கு மஞ்சளாக குவித்து வைக்கப்பட்டிருந்த பப்பாளி பழங்களில் ஒன்றை தூக்கி காண்பித்தார் அந்த வியாபாரி.
“மஞ்சளாவா…! “
“உள்ளே சிகப்பாக தித்திப்பா இருக்குதம்மா.. வெளியே எப்படி இருந்தா இன்னா..?”
“உள்ளே யாரு பாக்கிறாங்க…. பார்க்க மஞ்சளாவா இருக்கனும் அப்பத்தான் வாங்குவாங்க..இல்லாடி விக்காது..” என்றார் அந்த வியாபாரி.
“மஞ்சளுக்கு நா எங்க போவது..” என்று முணுமுணுத்துக் கொண்டே தயாளன அடுத்த வியாபாரியிடம் சென்றார்.
ஒன்று..இரண்டு…  .. … … பத்து பன்னிரண்டு வியாபாரிகளிடம் சென்று பழங்களை காட்டினார். எல்லாரும் ஒரே பல்லவியை பாடினார்கள்.
இது என்ன மனநிலை என்று தயாளன் குழம்பினார்.. பக்கத்தில் இருந்த இன்னொரு சிறு நகருக்கும் சென்றார்.  அங்கு பார்ப்பனர்கள், மேல்தட்டு வர்க்கத்தினர் அதிகமாக இருந்ததால் பப்பாளி பழம் இரண்டு மடங்கு விலை விற்றது.
அதிஷ்டம் நம் பக்கம் இருக்கிறது என்ற நினைப்போடு தயாளன்  அங்கிருந்த சில பழமுதிர்சோலை பழ அங்காடிகளை அணுகினார்.. எல்லாரும் வாங்கி கொள்கிறேன். ஆனால் பப்பாளி பழங்கள் மஞ்சளாக ..கலராக இருக்க வேண்டும் என்றார்கள்.
என்ன செய்வது என்று புரியாமல் திரும்பும்பொழுத… ஒரு நடைபாதை வியாபாரி ‘மஞ்சள் மகிமை’ மர்மத்தினை தயாளனுக்கு புரிய வைத்தார்.
“மாங்காய கல்லு போட்டு பழுக்க வெக்கிற மாதிரி செஞ்சா. இந்த மாதிரி கலர் வரும்…” என்றார்..
மாங்காய்களை  செங்காயாக பறிக்காமல், அதற்கு முன்னரே பறித்து கார்பைடு கல்  வைத்து பழுக்க வைப்பதால் பளப்பான மஞ்சள் மாம்பழம் கிடைக்கும். ஆனால் இப்படி செய்வது மனிதர்களுக்கு பல உடல்நலக் கோளாறுகளை வரவழைக்கும் என்று தயாளன் உட்பட எல்லாருக்கும் தெரிந்த இரகசியம்தான்.
“பப்பாளிய  காய் வாட்டம் பறித்து கல்லு மூட்டம் போடுங்க  மஞ்சள் வந்துடும்..” என்று அறிவுரை சொன்னார்.
பலரும் இதையே தயாளனுக்கு சொன்னார்கள்.  ஒருசிலர் எத்தீலின் கரைசலை நிறைய தெளித்தால் கலர் கிடைக்கும் என்றனர். கார்பைடு கல் மாதிரி இதில் பெரும் தீங்கு இல்லை என்று ஆலோசனை அள்ளி விட்டனர்.
தயாளனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அவருக்கு இராசயனங்களை கொண்டு பளப்பள மஞ்சள் கலர் உருவாக்க மனம் ஒப்பவில்லை.. செங்காயாக இல்லாமல் பறிக்கப்படும் பப்பாளி பழுத்தால் கூட இனிப்பாக இல்லாமல் சல்லென்று  சுவை அற்று இருப்பதை கண்டான்.
மறுநாள் கூடை நிறைய இலேசான பசும்மஞ்சளான செங்காய்களை  கூடை நிறைய  பறித்து கொண்டு போய் மீண்டும் வியாபாரிகளை அணுகினார்.
வியாபாரிகள் மீண்டும் மீண்டும் வாங்க மறுத்தனர். பளபள மஞ்சள் கலர் பழங்களைத்தான் மக்கள் வாங்குகிறார்கள் என்று கூறினர்.
இங்கேயும் அங்கேயும் அலைந்து  நொந்து விட்டு கடைசியில் அவர் கிராமத்தில் இருந்து வந்து கீரை விற்க்கும்  அம்மாளிடம் ஸ்கூட்டரில் இருந்த கூடையை இறக்கி வைத்தார்.
அவரும்கூட வாங்க மறுத்தார். வேண்டாத வேலை என்று தயாளனை அந்த அம்மாள் மேலும் கீழும் அலட்சியமாகப் பார்த்தது. தலையை தாழ்த்திய வாரே..
“ஏதோ கொடுக்கிறத… கொடு…ம்ம்மா..” என்று தாழ்ந்த குரலில் கூறிவிட்டு கூடையை கூட வாங்கமல் வருத்தத்துடன் திரும்பினார்.
சோர்வு தயாளனை அழுத்தின. ஒர் ஆண்டாக அவரும் அவர் மனைவியும் பட்ட பலன் வீணாகி விடுமே என்ற மனக்குழப்பம் வாட்டின.
இயற்கையை விட இராசயன கல் வைத்த பளபள மஞ்சள் கலர்தான் விற்கும் என்றால் என்னதான் செய்வது..?
வீட்டிலேயே படுத்து கிடந்த தயாளன் மறுநாள் மாலைதான் எழுந்து காலாற பப்பாளி தோட்டம் பக்கம் போனான்.
மாலை மங்கி கொண்டிருந்தது. தோட்டத்தில் நுழைந்தான். சடசடவென பலவித பறவைகள் குரல்கள் எழுப்பி மரத்திற்கு மரம் பறந்தன. அணில்கள் கீறீச்சிட்டன. அவற்றில் ஆனந்தம் பொங்கி வழிந்ததை அவரால் உணர முடிந்தது.  இவைகள் தின்று மீதியாய் தொங்கி கிடந்த பழங்களின் இரம்மியமானதொரு மணம் புதியதொரு உயிர்ப்பை பரப்பிக்கொண்டிருந்தன. இந்த உயிர்ச்சூழலில் கரைந்து போனார்.
அந்த தொழிற்சங்க தோழன் பரப்பரப்பாக தயாளனை தேடிக்கொண்டிருந்தார். வீட்டிலும், வயலிலும் தேடியும் காணவில்லை. பக்கத்து டவுனுக்கு கணவன் மனைவியும் போய் உள்ளனர் என்று யாரோ சொல்ல விரைந்தார்.
கடைத்தெருவில் இருந்த ஒரு சந்தில் தயாளன் மனைவி  தரையில் கோணி சாக்கை விரிந்து அதில் தோட்டத்தில் விளைந்த பசுமையும் இளம் மஞ்சளும் கலந்த பாப்பாளி பழ்ங்கள் இருந்தன. பாதியாய் கத்தியால் அறியப்பட்ட இரண்டு பப்பாளி பழங்கள் எல்லா சிவப்பு நிறங்களையும் தோற்கடித்துக் கொண்டிருந்தன.
“எங்கம்மா தயாலன்..” என்றார்.”
“இரண்டு கூடை வித்துடுச்சிண்ணா…  தோட்டத்தில நேத்து செங்காய அறுத்து வேப்பதழைய போட்டு மூடி வைச்ச செங்காய எடுத்துவர போய் இருக்கிறான்னா…. “ என்றார். சில நிமிடங்கள் கழிந்தன. பலரும் தேடி வந்து கேட்டு  அந்த பப்பாளி பழங்களை வாங்கி கொண்டிருந்தனர்.
தயாளன் பழக்கூடையை டிவிஎஸ் வண்டியில் இருந்து இறக்கி வைத்து விட்டு வந்தார்.
 “மூணு நாளுக்கு ஒரு நாள் கடை விரித்தால் போதும்..எல்லாம் வித்து விடுது   வாடா டீ சாப்பிடலாம் ..” என்று நண்பனை மகிழ்ச்சி பொங்க தயாளன் அழைத்தார்.
நண்பனுக்கு எப்படி அந்த செய்தியை சொல்வது என்று அவருக்கு புரியவில்லை. கண்களில் கண்ணீர் துளிர்த்தன.
என்ன வென்று புரியாமல் தயாளன் விழிந்தான்.
“அய்யா ..நம்மாழ்வார் காலமாகி விட்டாருடா..”

சிறிது நேரம் கழித்து…….  …..   ….   ….
“சரி ..வானகம் போகலாம் .. கிளம்புடா..” என்ற தயாளன்  மனைவியை பார்த்தான். அதற்குள் பழங்கள் விற்று தீர்ந்துபோக காலியான கூடையில் கோணி சாக்கை திணித்து கொண்டிருந்தார்.

இயற்கை வேளாண்மையில் விளைந்த சிவந்த ரோஜா மலராக அறுக்கப்பட்ட துண்டு பப்பாளி பழம் புன்னகைத்தது. அந்த வாய் நிறைந்த புன்னகையை நினைவூட்டின..





,  


No comments:

Post a Comment